சட்டென்று தேங்கி நின்ற நான், அவள் முகத்தைப் பார்த்து “ஹா…ஹா…” வாய்விட்டு நகைத்தேன்.
எங்களை நெருங்கியிருந்தாள் குட்டி.
“என்னண்ணா இப்பிடிச் சிரிக்கிறீங்க?”
கல்யாணியையும் என்னையும் மாறி மாறிப் பார்த்தாள். காராஜின் முன்புறம் நின்றிருந்தவர்களும் திரும்பிப் பார்த்தார்கள். அவ்வளவு பெரிதாகச் சிரித்துவிட்டேன் தான்.
கல்யாணியின் முகம் இப்போது செவ்வானமாகி இருந்தது. இருந்தும் முறைக்கிறாளா? ஹே..ஹே…அதே பார்வையோடு நகர்ந்துவிட்டாள்.
அவள் செல்வதைப் பார்த்துவிட்டு, “என்னண்ணா?” விடாது கேட்டவள் தங்கைதான்.
“உங்களுக்குத்தான் இனிப்பே பிடிக்காதே!” பாதி கடித்தபடி என் கையிலிருந்த பூந்தி லட்டைக் காட்டிக் கேட்டாள்.
“வெறும் சீனி உருண்டை அப்பிடி இப்பிடிச் சொல்வீங்க!” முறைத்தாள்.
அவள் செய்து தருகையில் எல்லாம் அப்படிச் சொல்லி இருக்கிறேன். உண்மையாகவே அதிக சீனி சேர்த்த பதார்த்தங்களை நான் விரும்பியது இல்லை.
“ஆங்…அதுதான்மா. ‘பூந்தி லட்டு எடுங்கோ’ என்றதும் வேணாம் என்றேனா? ‘திறப்பு விழாக்கு வந்திட்டு ஒண்டும் சாப்பிடாமல் போகக் கூடாது’ என்று சொல்லித் தந்தா. ஏதோ நான் விருந்தாளி போல உபசரிப்பு. அதுக்குத்தான் சிரிச்சன்.” என்று நான் சமாளித்ததைத் தங்கச்சி நம்பாதமாதிரிப் பார்க்கையில், நான் வேறு கதையோடு நகர்ந்துவிட்டேன்.
அதன்பிறகு, நேருக்கு நேராகக் காண்கையில் பொதுவாகக் கதைத்துக் கொள்வோம். சிலவேளைகளில் வேலியால் உணவுப் பதார்த்தங்களும் கராஜுக்கு வரும். முன்னரும் வரும் தான். அது ஆன்ட்டி தருவது. இப்போதோ, தானே செய்தது என்று கல்யாணி தருவாள். அவ்வளவும் தான்.
அவ்வளவுதான் இல்லை, அதுக்கும் மேலே என்று புரிந்தது ஒரு வருடத்துக்கு பின் ஒருநாள்.
“அம்மா, நம்மட கல்யாணி நேர்சுக்குப் படிக்கப் போறாவாம்.” என்று வீட்டில் கதைத்தது காதுகளில் விழுந்ததுதான். அன்றைய திறப்பு விழாவுக்குப் பிறகு எங்கள் வீட்டுக்கும் அந்த வீட்டுக்குமிடையில் நல்ல போக்குவரத்து ஏற்பட்டிருந்தது.
அந்தநேரம் அதை நான் பெரிதாக எடுக்கவில்லை. அதே, அவள் தாதியர் பயிற்சிப் பள்ளியில் தங்கிப் படிக்கச் சென்ற பின்னரோ, அடிக்கடி அவளைக் காண முடியவில்லை. என்னையுமறியாது என் விழிகள் அவளைத் தேடியலைந்தன. காணவில்லை என்றதும் வெகுவாகவே சோர்ந்தும் போயின. அப்போதுதான், என்னுள்ளம் கொஞ்ச நாட்களாகவே அவளைத் தேடித் தேடி, கண்டுகொண்டதும் சமாதானம் கொண்டிருந்தது என்பதையே என்னால் உணரவே முடிந்தது.
பூந்தி லட்டுத் தட்டும், ‘சாரி’ என்ற கெஞ்சலுமாக என்னுள் உறைந்து நின்றாள் கல்யாணி. அதை உணர்ந்த நான் வியந்தே போனேன்.
‘அதெப்படி? எந்தவிதச் சைகையும் இன்றி இந்தப் பெண்ணால் என்னுள் நுழைய முடிந்தது?’ அதிசயம் தான். அதுதானோ காதல்!
தாதியர் பயிற்சிப் பள்ளியிலிருந்து விடுமுறைக்கு என்று வருகையில் ஆவலோடு எதிர்பார்த்திருந்து கதைத்து விடுவேன். சிறுசந்தர்ப்பம் கிடைதாலுமே பெரும் பாக்கியமாய் மகிழ்ந்து போவேன். இருந்தும், என்னுள் உள்ள நேசத்தை வெளிப்படையாக அவள் முன்னால் போட்டுடைக்க மட்டும் முடியவில்லை. எதுவோ ஒன்று தடுத்தது.
வேறு என்ன? எனக்கென்று உள்ள பொறுப்புகள் தான். என் தங்கைகள் இருவர் உள்ளார்களே! பெரிய தங்கைக்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறேன். அநேகமாகச் சரிவரும் போலிருந்தது. வெளிநாடுதான். என்றாலும் எங்களுக்கு நல்ல திருப்தி. அந்தக் கல்யாணம் முடிந்துவிட்டால் சின்னவள் குட்டி. அவளே கல்யாணியை விடவும் சில வயதுகள் பெரியவள். இந்த நிலையில் மனம் இழுபடும் போக்கில் என்னால் போகவும் முடியவில்லை.
‘ம்ம்…’ யோசித்தேன். இருந்தும், இறுதியில் நேசம் கொண்ட நெஞ்சமே வென்றது.
‘என்ர உள்ளத்திட தேவையை நிறைவேற்றுவதுக்கும் கடமை, பொறுப்புக்கும் என்ன சம்பந்தம்? அது தன்ர பாட்டில் ஒருபுறமும் இது மறுபுறமும் நடக்கட்டுமே!’ முடிவு செய்த மனம் மகிழ்வில் நிறைந்திட்டு!
ஒரு முடிவோடு, கல்யாணியின் ஆன்ட்டியை அணுகினேன். பெற்றோர் இல்லையென்றால் அவர்தானே எல்லாம். இத்தனை வருடங்களாக, பெற்ற மகன்களுக்கும் அவளுக்கும் வேறுபாடு காட்டியதை நாங்கள் கண்டதில்லை. எனவேதான் அவரை அணுகினேன்.
அதன்பிறகு தயக்கமும் இருக்கவில்லை. சொல்லி விட்டேன். கேட்டவர் சட்டென்று மகிழ்ந்தாரா? அதிர்ந்தாரா? அவரையே பார்த்திருந்த என்னுள் ஐயம் தோன்றியது. ஆனாலும் கண்கள் கலங்கினார். அதோடு, மனதுள் மிகையாய் உணர்ச்சி வசப்பட்டுவிட்டார் என்பதை அவர் முகம் வெளிச்சம் போட்டுக் காட்டியது.
“உங்கட விருப்பத்த அவளிட்ட சொல்லாம என்னட்ட வந்து சொல்லுறதிலயே உங்கட குணம் தெரியுது தம்பி! உங்கட நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதுதான் நடக்கும். ஆனாலும்…முதல்…அவளிட்டக் கதைச்சிப்போட்டுச் சொல்லுறனே!” என்றவேகத்தில், “உங்கட வீட்டில…” இழுத்தார்.
“அம்மா ஆக்களிட்ட இன்னும் சொல்லேல்ல ஆன்ட்டி. உங்களுக்கும் கல்யாணிக்கும் சம்மதம் எண்டா வீட்டில கதைக்கலாம் எண்டு நினைச்சன். என்ர விருப்பத்துக்கு வீட்டில யாரும் மறுப்புச் சொல்ல மாட்டீனம் எண்டு எனக்கு உறுதியாத் தெரியும்.” என, என் மட்டில் உறுதியும் அளித்தேன்.
ஆனால், அடுத்து வந்த ஒரு மாதமும் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தும் அவரிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. அது மட்டுமின்றி, இத்தனை நாட்களாக காணும் இடங்களில் நின்று கதைத்துச் செல்பவர் என்னைத் தவிர்த்தாரோ! எல்லாம் ஒரு சந்தேகம் தான்.
அப்படியிருக்கையில் அன்று ஒரு வெள்ளி. மாலையில் தான் தாதியர் பயிற்சிப் பள்ளியிலிருந்து வீடு வந்திருந்தாள் கல்யாணி. வந்ததும் வராததுமாக வேலியால் எட்டி, “ஹாய்…” சொன்னாள்.