என் சோலைப் பூவே 14 – 1

அத்தியாயம்-14

 

 

திடீரென்று ஸ்டோர் ரூமின் கதவுகள் அடைக்கப்படும் சத்தம் கேட்டு அவன் திரும்பவும், இரு மலர்க் கரங்கள் அவனை வேகமாக அணைக்கவும் சரியாக இருந்தது.

 

மனதில் புழுங்கிக் கொண்டிருந்தவனின் அத்தனை புழுக்கங்களும் வடிந்தே போயிற்று!

 

அந்த அணைப்பில் தன்னையே மறந்தவனின் கையில் இருந்த பெட்டி தன்னாலே நழுவிவிட, அவன் கரங்களும் அவளை வளைத்தன.

 

அவனது பரந்த மார்பில் முகத்தைப் புதைத்திருந்தவளின் கைகளின் இறுக்கம் அதிகரித்துக்கொண்டே செல்ல, சற்று நேரம் அதிலே அடங்கி நின்றவன், அவள் காதருகில் குனிந்து, “யாழி..” என்று மெல்ல அழைத்தான்.

 

“ம்..?”

 

“என்ன?”

 

அவள் தலை மட்டும் ஒன்றுமில்லை என்பதாக ஆடியது.

 

சற்றுப் பொறுத்து, “இப்படியே எவ்வளவு நேரம் நிற்கப் போகிறாய்?” என்று கேட்டான்.

 

அவனைக் கட்டியிருந்த கரங்களை விலக்காது, தலையை மட்டும் நிமிர்த்தி, “எவ்வளவு நேரம் என்றாலும்..” என்றாள் சித்ரா.

 

“கால் வலிக்காதா?” புன்னகையோடு கேட்டான் ரஞ்சன்.

 

“அப்படி வலித்தால் என்னை நீங்கள் தூக்க மாட்டீர்களா?”

 

ஒற்றைப் புருவத்தை மட்டும் உயர்த்தி, “தூக்கி?” என்று குறுஞ்சிரிப்புடன் கேட்டான் அவன்.

 

“தூக்கி என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்..” என்றாள் அவளும், அவனுக்குக் குறையாத குறும்புடன்.

 

“என்..ன வேண்டுமானாலும் செய்யலாமா?” உல்லாசக் குரலில் கேட்டபடி, அவளை நோக்கிக் குனிந்தான் அவன்.

 

“ஆசைதான்..” என்றபடி நகைத்தவள் அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டாள்.

 

அவளை அணைத்தபடி நின்றவனோ, இன்னும் அவளைத் தன்னோடு இறுக்கியபடி, “திடீரென்று வந்து கட்டியெல்லாம் பிடிக்கிறாய். அதுவும் முன்னேற்பாடாக கதவை எல்லாம் மூடிவிட்டு. இன்று என்னவாகிற்று உனக்கு?” என்று கேட்டான்.

 

லேசாக முகம் வாட, “அது.. உங்களைப் பார்த்து இரண்டு வாரம் ஆகிவிட்டதா.. அதுதான்.” என்றாள் உள்ளே போய்விட்ட குரலில்.

 

அப்போதுதான் அவனுக்கும் எல்லாம் நினைவுக்கு வந்தன. அப்படியே அவனது கோபமும் கூடவே வந்தது.

 

சட்டென்று அவளை விலக்கி நிறுத்தியவனின் கூரிய விழிகள் அவளைக் குற்றம் சாட்டின.

 

“ஏன் அப்படிச் செய்தாய்?”

 

எதைக் கேட்கிறான் என்று புரிந்ததில் ‘எப்படிச் செய்தேன்’ என்று அவள் கேட்கவில்லை.

 

சில வினாடிகள் ஒன்றுமே சொல்லாமல் நின்றவள், “அது ஏதோ குழப்பம்..” என்றாள் மெல்ல.

 

“என்ன குழப்பம்?” கூர்மையுடன் வந்தது கேள்வி.

 

“அதுதான் ஏதோ குழப்பம் என்றேனே இதயன். அதை விடுங்களேன். அதுதான் நீங்கள் சொன்னபடி ஸ்டோர் ரூமுக்கு வந்துவிட்டேனே..” என்று சமாளிக்கப் பார்த்தாள் அவள்.

 

“அன்று சொன்னதற்கு இன்று அதுவும் இரண்டு வாரங்கள் கழித்து, மிக வேகமாய் வந்திருக்கிறாய். அதுவரை நீ என்னுடன் கதைக்கவும் இல்லை. பார்க்கவும் இல்லை. என்ன, உன் பணக்காரத் திமிரைக் காட்டுகிறாயா?”

 

‘பணக்காரத் திமிர்’ என்று அவன் சொன்னது சுள்ளென்று கோபத்தை வரவழைத்தபோதும், அவன் எதற்காகக் கோபப் படுகிறான் என்பதைப் புரிந்துகொண்டவள் அமைதியாகவே பதில் சொன்னாள்.

 

 

 

 

“அன்று ஏனோ எனக்கு மனது சரியில்லை இதயன். ஒருவிதக் குழப்பமும். பிறகு கல்லூரியில் பரீட்சைகள் இருந்தது. அதுதான்.. மற்றும்படி ஒரு திமிரும் இல்லை.” என்றவள், அவன் மீண்டும் வாயைத் திறக்கவும், “திரும்பவும் என்ன குழப்பம், ஏன் மனது சரியில்லை என்று கேட்காதீர்கள். அது எனக்கே தெரியாது.” என்றவளைக் கூர்ந்தான் அவன்.

 

அவள் சொல்வதை அவனால் நம்பமுடியவில்லை. என்னவோ நடந்திருக்கிறது. அவனிடம் அவள் அதை மறைப்பதும் விளங்கியது. என்றாலும், அதைத் தூண்டித் துருவ அவனும் விரும்பவில்லை. அதுவே அவனுக்கு எதிராக மாறிவிட்டால்?

 

அதோடு, எது மலிந்தாலும் சந்தைக்கு வரும்தானே? அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணிக் கொண்டான். சிந்தனை உள்ளே ஓடியபோதும் அவன் விழிகள் அவள் முகத்தில் இருந்து அகலவில்லை.

 

முகத்தில் குறும்பு மின்ன, புருவங்கள் இரண்டையும் உயர்த்தி என்னவென்பதாக அவள் கேட்கவும், அதைப் பார்த்திருந்தவனின் இதழ்களிலும் மெல்லமெல்லப் புன்னகை மலர்ந்தது.

 

“அப்பாடி! இந்தச் சிடுமூஞ்சியின் முகத்தில் சிரிப்பை வரவழைப்பதற்கு நான் படும் பாடு இருக்கே..” என்றாள் நகைத்தபடி.

 

அழகாய் விரிந்த அவள் அதரங்களின் அழகில் மயங்கி, அவளது கீழுதட்டைத் தன் கட்டை விரலாலும் ஆள்காட்டி விரலாலும் பற்றி இழுத்தவன் அதிலேயே பார்வையைப் பதித்து, “என்னடி? எப்போ பார்த்தாலும் சிடுமூஞ்சி என்கிறாய். அடிதான் வாங்கப் போகிறாய்..” என்றான், பொய் மிரட்டலாக.

 

அவன் பார்வையும் செயலும் அவளைச் செங்கொழுந்தாக மாற்ற, தன் கீழுதட்டைப் பற்றியிருந்த அவன் கையைத் தட்டிவிட்டபடி, “இத..யன்..!” என்று வெட்கத்தில் சிணுங்கினாள் சித்ரா.

 

பார்வை மாற அவளை நெருங்கினான் ரஞ்சன்.

 

ஆசைகொண்ட மனது அவனது அருகாமைக்காக ஏங்கித் துடித்தபோதும், அவன் நெஞ்சில் இரண்டு கைகளையும் வைத்துத் தள்ளினாள் சித்ரா. “அங்கேயே நின்று கதையுங்கள்.” என்றவளின் பேச்சிலும் செயலிலும் சட்டெனச் சிரித்துவிட்டான் ரஞ்சன்.

 

“இவ்வளவு பயப்படுகிறவள் எதுக்குடி தனியாக இருக்கும் என்னைத் தேடி வந்தாய்.”

 

“ம்.. இந்தச் சிடுமூஞ்சியைச் சிரிக்க வைக்கத்தான்.”

 

அதைக் கேட்டவனின் முகம் புன்னகையைத் தொலைத்தது.

 

நொடியில் அவனுடைய இயல்பையே மாற்றுகிறாளே! அவளின் அருகாமையில் அவனது உறுதி குலைந்து போகிறதே. என்ன செய்து கொண்டிருக்கிறான் அவன்?

 

அவளுடன் இனிக் கதைக்கவே கூடாது, அவளின் முகமே பார்க்கக் கூடாது என்றெல்லாம் எடுத்த முடிவுகள் என்னவாகிற்று? அவள் மேல் இருந்த கோபம் என்னவகிற்று? இப்படியே போனால், அவனைப் பலகீனப் படுத்தி மொத்தமாகச் சாய்த்து விடுவாளோ?

 

அவள் சிந்தும் ஒற்றைப் புன்னகை போதுமே அவனை ஒன்றுமில்லாமல் ஆக்க!

 

இல்லை! கூடாது!

 

“இதயன்? என்ன? ஏன் ஒன்றுமே கதைக்காமல் நிற்கிறீர்கள்?” என்று அவன் தோள்களைப் பற்றிக் கேட்டாள் சித்ரா.

 

வேகமாக அவள் கரங்களைத் தன்னிடம் இருந்து அகற்றியவன், “ஒன்றுமில்லை. நீ போ.. யாராவது வந்துவிடப் போகிறார்கள்..” என்றான்.

 

அவள் மேலே வந்தும் நிறைய நேரம் என்பதால், “ம்.. சரி..” என்று தலையை ஆட்டியவள் கதவைத் திறந்துகொண்டு வெளியே சென்றாள்.

 

அவள் சென்றபிறகும் பல நிமிடங்கள் அப்படியே நின்றான் ரஞ்சன்.

 

 

அடுத்தடுத்த நாட்கள் அவனுக்கும் அவளுக்கும் வழமைக்குத் திரும்பின. அப்படியே காலச் சக்கரம் தன் பாட்டுக்கு ஓடவே, ரஞ்சனின் கடை திறந்து நான்கு மாதங்கள் ஆயிற்று!

 

சந்தானத்தின் பணம் இனித் தேவையில்லை என்கிற நிலைக்கு வந்ததும், வேலையை விட முடிவு செய்தான் ரஞ்சன்.

 

அவரிடம் கடனாக வாங்கிய ஒரு லட்சத்தில் இதுவரை மாதா மாதம் செலுத்திய தொகை போக மீதியை எடுத்துக்கொண்டு அவரிடம் சென்றான்.

 

“அங்கிள், உங்களிடம் வாங்கியதில் மீதிப்பணம்..” என்றபடி, அதை நீட்டினான்.

 

அவனையும் அவன் கையில் இருந்த பணத்தையும் ஒருமுறை பார்த்துவிட்டு, “எனக்கு அவசரம் ஒன்றும் இல்லை ரஞ்சன். நீ ஆறுதலாகவே தா.” என்றார் அவர்.

 

அவரின் அந்தப் பெருந்தன்மையான பேச்சில் அவனுக்கு லேசாக முகம் கன்றியது. “நன்றி அங்கிள். ஆனால், இதை வாங்கிக் கொள்ளுங்கள். அவசரத்துக்குத் தந்து உதவியதற்கு மிகவும் நன்றி அங்கிள். நீங்கள் செய்தது மிகப்பெரிய உதவி.” என்றான்.

 

“நான் ஒன்றும் பெரிதாகச் செய்து விடவில்லை ரஞ்சன். என்னால் முடிந்த ஒரு சின்ன உதவி.” பணத்தை வாங்கிக்கொண்டு சொன்னார்.

 

“உங்களுக்கு சிறு உதவியாகப் பட்டாலும் எனக்கு அது மிகப் பெரிய உதவிதான் அங்கிள்.” என்றான், மனதில் இருந்து.

 

“சரிதான் விடு! நீயும் வாங்கியதை நாணயமாகத் திருப்பித் தந்துவிட்டாயே.” என்றவர், “நீ போகும்போது அப்படியே முருகனிடம் எனக்கு ஒரு டீ வாங்கி வரச் சொல்லிவிடு ரஞ்சன்.” என்றார்.

 

“சரி அங்கிள், சொல்லிவிடுகிறேன்.” என்றவன், “அங்கிள்.. இன்னொரு விஷயம்…” என்றான்.

 

“என்னப்பா?”

 

“அது.. நான் அடுத்த மாதத்தில் இருந்து வேலையை விடுகிறேன் அங்கிள்.”

 

அதை எதிர்பாராதவரின் முகத்தில் மெல்லிய அதிர்ச்சி. “விட்டுவிட்டு? என்ன செய்யப் போகிறாய்..”

 

“வேறொரு கடைக்குப் போகப்..” என்றவனின் பேச்சை இடைமறித்தார் சந்தானம்.

 

“ஏன், இங்கே உனக்கு என்ன குறை ரஞ்சன்? சம்பளமும் மற்றக் கடைகளை விட உங்கள் எல்லோருக்கும் அதிகமாகத் தானே தருகிறேன்.” என்றவரின் குரலில் மெல்லிய கோபமும் இருந்தது.

error: Alert: Content selection is disabled!!