என் சோலைப் பூவே 14 – 2

“இங்கே ஒரு குறையும் இல்லை அங்கிள். நீங்களும் எங்களை நல்லபடியாகத்தான் நடத்துகிறீர்கள்.” என்று அவசரமாகச் சொன்னவனை யோசனையோடு பார்த்தார் சந்தானம்.

 

“பிறகு என்ன? ஏன் வேறு கடைக்குப் போகிறேன் என்கிறாய்?” என்று நிதானித்த குரலில் கேட்டார்.

 

“அது அங்கிள்.. அவர்கள் என் நண்பர்கள். அதுதான்..”

 

“யார்..?” என்று கேட்டவரின் யோசனையாகச் சுருங்கிய புருவங்கள் சில நொடிகளிலேயே தம் இடத்துக்குத் திரும்பின.

 

“எது.. நாதனின் கடையை எடுத்திருக்கிறார்களே.. அவர்களா?” என்று உடனேயே விசயத்தைப் பிடித்தார் சந்தானம். பல வருடங்களாக அந்த டவுனிலேயே வியாபாரம் நடத்துபவர் இல்லையா.

 

“ஆமாம் அங்கிள்.”

 

“அப்போ.. என்னிடம் வாங்கிய பணமும் அவர்களுக்கு.. அந்தக் கடைக்குத்தானா?” என்று கேட்டவரின் புத்தி கூர்மையில் சற்றே அதிர்ந்துதான் போனான் ரஞ்சன்.

 

“ஆ..மாம் அங்கிள்.” என்றவனிடம், ஒன்றுமே சொல்லாது சற்று நேரம் பார்த்தார் சந்தானம்.

 

பிறகு தன் கதிரையில் இருந்து எழுந்து வந்தவர் அவன் தோள்களைப் பற்றி, “நண்பர்களாக ஆரம்பித்து இருக்கிறீர்கள் போல. நானும் கேள்விப் பட்டேன், உன் நண்பர்கள் மிகத் திறமையாக வியாபாரம் செய்வதாக. நீங்கள் இன்னுமின்னும் முன்னேற என்னுடைய வாழ்த்துக்கள் ரஞ்சன்.” என்று வாழ்த்தினார்.

 

அவரது பெருந்தன்மையான பேச்சில் பதில் பேச முடியாமல் வாயடைத்து நின்றான் ரஞ்சன்.

 

“கடின உழைப்பாளியான உன்னை வெளியே விட எனக்குக் கொஞ்சமும் விருப்பம் இல்லைதான். ஆனால்.. நீயும் முன்னேறத்தானே வேண்டும். அதனால் நீ அடுத்த மாதத்தில் இருந்து உங்கள் கடைக்கே போ..” என்றார்.

 

“நன்றி அங்கிள்..” என்றவனின் குரல் எழும்பவே இல்லை.

 

அவர் அதை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாக ஒரு புன்னகையுடன் தலையை அசைக்கவும், அதற்கு மேலும் அங்கு நிற்க முடியாமல் வேகமாக வெளியேறினான் ரஞ்சன்.

 

அடுத்த நாளே தந்தையின் மூலமாகக் கேள்விப்பட்ட சித்ரா, வேலையை விடப்போவதாக ஏன் என்னிடம் சொல்லவில்லை என்று கேட்டு அவனை ஒரு வாங்கு வாங்கிவிட்டாள்.

 

அவளைச் சமாளிப்பதற்குள் அவனுக்குத்தான் போதும் போதும் என்றாகிவிட்டது. இதற்கு இன்னும் பத்துச் சந்தானத்தைச் சமாளிக்கலாம் என்று தோன்றியது.

 

“அப்போ நான் இனி உங்களை எப்படிப் பார்ப்பது?”

 

“என்னைப் பார்த்து என்ன செய்யப் போகிறாய்? அதுதான் தினமும் கதைக்கிறாயே.”

 

“அதெல்லாம் முடியாது. வாரத்தில் ஒருநாள் நாம் சந்தித்தே ஆகவேண்டும். அதை எப்படி என்று மட்டும் சொல்லுங்கள்!” என்றாள் அந்த அடம் பிடித்தவள்!

 

“எங்குமே சந்திக்க முடியாது! இனி இப்படி என்னுடன் கதைப்பதையும் குறைத்துவிட்டுப் படிக்கும் வழியைப் பார்!” என்றான் ரஞ்சன் கடினப்பட்ட குரலில்.

 

“அதென்ன இனி? எங்கள் கடையை விட்டுத்தானே போகிறீர்கள், என்னை விட்டு இல்லையே. அதோடு உங்களோடு இப்படி ஐந்து நிமிடம் கதைப்பதால் படிப்பு ஒன்றும் கெட்டுவிடாது. அப்படியே படித்து நானும் ஒன்றையும் கிழிக்கப் போவதில்லை. உங்களுக்கு மனைவியாகத் தானே வரப்போகிறேன். பிறகென்ன?” என்று அதட்டலாகவே கேட்டவள், “ஒவ்வொரு சனிக்கிழமையும் நான் உங்கள் கடைக்கு வருவேன்!” என்று அறிவித்துவிட்டு, அவன் பதிலை எதிர்பாராமல் கைபேசியை அணைத்தாள்.

 

எல்லாவற்றிலும் அவள் நினைத்ததுதானா? எதிலும் பிடிவாதம் என்று நினைத்தவனின் முகம் கடினப் பட்டது.

 

 

அன்று சித்ராவின் பிறந்தநாள்.

 

ஆமாம்.. ரஞ்சனின் கடை திறந்தும் கிட்டத்தட்ட ஒருவருடம் ஆயிற்று!

 

அவ்வளவு நாட்களும், எவ்வளவு முயன்றும் ரஞ்சனால் சித்ராவின் வருகையை நிறுத்த முடிந்ததே இல்லை. ஆனால், முடிந்தவரை அவளுடன் தனிமை நேராமல் கவனித்துக் கொண்டான். அது அவனுக்குச் சிரமாமாகவும் இருக்கவில்லை.

 

அதேபோல, அவளும் அவனுடன் தனிமையை ஏற்படுத்திக் கொள்ள முனையவும் இல்லை. அவனைப் பார்ப்பதும் அவனுடன் இரண்டு வார்த்தை கதைப்பதுமே அவளுக்குப் போதுமானதாக இருந்தது.

 

அன்று காலையிலேயே அவளுக்கு அழைத்தான் ரஞ்சன்.

 

தலைக்குக் குளித்துவிட்டு குளியலறையை விட்டு வெளியே வந்தவள், அழைப்பது தன் நண்பர்களில் யாரோ ஒருவராக்கும் என்று எண்ணியபடி கைபேசியை எடுத்துப்பார்க்க, ஆனந்தமாக அதிர்ந்தாள்.

 

அங்கே மின்னிக் கொண்டிருந்தது ரஞ்சனின் இலக்கங்கள். அவனிடம் பிறந்தநாள் என்று அவள் சொல்லவே இல்லை.

 

அப்படியிருந்தும் அவன் நினைவு வைத்து அழைக்கிறான் என்பதில் உள்ளே மனம் துள்ளியபோதும், அதற்குத்தான் அழைக்கிறானா என்கிற சந்தேகமும் கூடவே எழ, எதையும் காட்டாதிருக்க முயன்றபடி, “ஹலோ..” என்றாள்.

 

“பிறந்தநாள் வாழ்த்துக்கள் யாழி!!” என்றான் ரஞ்சன், தனக்கே உரிய கம்பீரமான குரலில் உற்சாகமாக.

 

“இதயன்…!” என்று சந்தோசத்தில் கூவியவளுக்கு, அடுத்துப் பேச்சே வரமறுத்தது.

 

போனவருடம் இதே நாளன்று சேலையில் சென்றவளை ரசித்தவனின் விழிகளின் பாவங்களை மீண்டும் காண எண்ணி, அன்றும் புதுச் சேலையில் அவன் முன்னால் சென்று நின்று ஆனந்த அதிர்ச்சி கொடுக்க எண்ணியிருந்தாள்.

 

இருந்தாலும், அவளது பிறந்தநாள் அவனுக்கு நினைவில் இருக்குமா? வாழ்த்துவானா? என்கிற கேள்விகளும் எதிர்பார்ப்பும் அவளிடம் இல்லாமல் இல்லை.

 

அப்படியிருக்க அவனாக அழைத்ததே அவளுக்கு மகிழ்ச்சி. இதில் அவளது பிறந்தநாளை நினைவில் வைத்து, வாழ்த்தியிருக்கிறான் என்பது ஆனந்த அதிர்ச்சியாக இருந்தது.

 

அவள் நிலையை அறியாத ரஞ்சன், “யாழி? லைனில் இருக்கிறாய் தானே..” என்று கேட்டான்.

 

“இருக்கிறேன் இருக்கிறேன்..” என்று அவசரமாகச் சொன்னவள், “எனக்கு எவ்வளவு சந்தோசமாக இருக்கிறது தெரியுமா? நீங்கள் இப்படி அழைத்து வாழ்த்துவீர்கள் என்று நினைக்கவே இல்லை. போனவருடம் நீங்கள் அடம்பிடித்ததை நான் இன்னும் மறக்கவில்லை..” என்று சொல்கையிலே அவளுக்குச் சிரிப்பும் வந்துவிட, கலகலத்துச் சிரித்தாள்.

 

அதைக்கேட்டவனுக்கும் அன்றைய நாளின் நினைவுகள் வந்தபோது, அன்றுபோல் கோபம் அன்றிச் சிரிப்புத்தான் வந்தது.

 

“அன்றுபோல் இன்றும் நீ அடம்பிடித்து வாழ்த்துக் கேட்க முதலே நானே வாழ்த்திவிட்டேன் பார்த்தாயா?” என்று கேட்டான் நகை இலங்கிய குரலில்.

 

“நீங்கள் வாழ்த்தா விட்டால் மட்டும் நான் விட்டுவிடுவேனா?”

 

“அதுதானே, நீ யார்? உன் வீரச் செயல்கள் எத்தனை.” என்றான் கிண்டலாக.

 

அதைக்கேட்டுச் சலங்கையென அவள் கலகலத்துச் சிரிக்க, அதை ரசித்தபடி, “இன்று உனக்கு வேறு ஏதும் அலுவல் இருக்கிறதா?” என்று கேட்டான் அவன்.

 

“இல்லையே.. எனக்கு ஒரு அலுவலும் இல்லையே..” என்று அவசரமாகச் சொன்னவள், “ஏன் இதயன் கேட்கிறீர்கள்?” என்று ஆவலோடு கேட்டாள்.

 

“அது.. வா வெளியே எங்கேயாவது போவோம்..”

 

அதைக் கேட்டு மீண்டும் ஸ்தம்பித்து நின்றவளுக்கு, கதைப்பது ரஞ்சன் தானா என்கிற சந்தேகமே எழுந்தது.

 

பின்னே, கடையில் வைத்தே ஒழுங்காகக் கதைக்காதவன் வெளியே அழைக்கிறான் என்பது.. அவள் கனவிலும் நினைக்காத ஒன்று.

 

அவன் குணத்தை அறிந்திருந்த சித்ராவும் அதற்கு ஆசைப்பட்டது இல்லை.

 

“இதயன்.. வெளியே மழை ஏதும் பெய்கிறதா?”

 

“இல்லையே.. இந்தக் காலையிலேயே வெய்யில் கொளுத்துகிறது.” என்றான் அவன் அவளது கேலி புரியாமல்.

 

“இல்லை.. நீங்கள் வெளியே போகக் கூப்பிடுகிறீர்கள். அதுதான் மழை கொட்டோ கொட்டென்று கொட்டப் போகிறதே என்று கேட்டேன்..” என்றவள், அவனோடு வெளியே செல்லும் சந்தோசமும் சேர்ந்துகொள்ள நன்றாகவே நகைத்தாள்.

 

“பிறந்தநாளுக்கு உனக்குப் பிடித்ததாக ஏதாவது செய்வோம் என்று பார்த்தால் என்னையே கேலி செய்கிறாயே?”

 

“பின்னே? நான் கடைக்கு வந்தால் கதைக்கவே மாட்டீர்கள். ஏதோ பெரிதாக வெட்டி முறிப்பது போலக் காட்டிக் கொள்வீர்கள். இப்போதானால் வெளியே போகக் கூப்பிடுகிறீர்கள். அதுதான்..” என்றவளின் பேச்சில் அந்தப் புறம் அமைதியானது.

 

“சரி.. அப்படியானால் நீ வரவேண்டாம்..”

 

மறுபடியும் முருங்கை மரமா?

 

“இல்லையில்லை.. நான் வருகிறேன். எங்கே, உங்கள் கடைக்கே வரவா?” என்று அவசரமாகக் கேட்டாள்.

 

அவனுடன் வெளியே செல்லக் கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விட அவளுக்கு விருப்பம் இல்லை.

 

“கடைக்கு வேண்டாம். நீ பஸ் ஸ்டான்ட் க்கு வா..” என்றவன், எத்தனை மணிக்கு என்ன ஏது என்று சொல்லிவிட்டு வைத்தான்.

 

 

 

error: Alert: Content selection is disabled!!