என் சோலைப் பூவே 21 – 1

அத்தியாயம்-21

 

லக்ஷ்மி அடங்காத ஆத்திரத்தோடு வெளியே சென்ற மகளின் வரவுக்காகக் காத்திருந்தார். தான் சொல்லச் சொல்லக் கேட்காமல் சென்றவளை நினைக்க, இவள் பட்டும் திருந்தவில்லையே என்றிருந்தது அவருக்கு.

 

எத்தனையோ அருமையான வரன்கள் எல்லாம் வந்திருந்ததில் மகளுக்கு யாரை மாப்பிள்ளை ஆக்குவது என்பதில் அவரே தடுமாறிப் போயிருந்தார், அப்படி இருந்த நிலை போய் இன்று எப்படி அவளைக் கரை சேர்க்கப் போகிறோம் என்கிற நிலை வந்துவிட்டதே என்று அவர் வருந்திக் கொண்டிருக்க, ஆட்டோவில் வந்திறங்கினாள் சித்ரா.

 

சோர்ந்த நடையில் தன் முகத்தை நிமிர்ந்து பாராது வரும் மகளை முறைத்தபடி “எங்கேடி போய்விட்டு வருகிறாய்?” என்று ஆத்திரத்தோடு கேட்டார்.

 

“ரஞ்சனின் கடைக்கு”

 

சொன்னதுதான் தாமதம், ‘பளார்’ என்று விழுந்தது அவள் கன்னத்தில் அறை. அதைத் தாங்க முடியாது தடுமாறியவள் தாயையே பற்றிக் கொண்டாள்.

 

“இன்னும் எதற்கடி அவன் கடைக்குப் போகிறாய். பட்ட அசிங்கம் போதாமல் இன்னும் படவா? எங்களுக்கு மட்டுமே தெரிந்த விஷயத்தை ஊருக்கே சொல்லப் போனாயா?”

 

வயிற்றில் பிள்ளையைக் கொடுத்துவிட்டு அவளைத் திருமணம் செய்யமாட்டேன் என்று சொன்ன கயவனின் கடைக்கு மகள் சென்று வந்திருக்கிறாள் என்பது பெரும் ஆவேசத்தைக் கொடுத்தது அவருக்கு.

 

“உனக்கு வெட்கமாக இல்லை? கொஞ்சமாவது சுயமரியாதை வேண்டாமா? அவன் உன்னை எச்சில் இலையாக்கித் தூக்கி எறிந்திருக்கிறான். அவனைப் போய்ப் பார்த்துவிட்டு வந்திருக்கிறாயே. வாழ்க்கைப் பிச்சை கொடு என்று கேட்கப் போனாயா?” என்று ஆத்திரத்தில் கத்தியவரை, விழி நீரை உள்ளுக்கு இழுத்தபடி பார்த்திருந்தாள் சித்ரா.

 

வாழ்க்கையை பிச்சையாகக் கேட்கும் நிலைக்கு வந்துவிட்டாளா அவள்?

 

“இனி நீ அவன் கடைக்குப் போகவும் கூடாது, அவனோடு கதைக்கவும் கூடாது! இந்த வீட்டுக்கு அந்த நன்றிகெட்டவன் மருமகனாக வரவேண்டாம். எங்களிடமே காசைக் கடனாக வாங்கிக் கடையைத் திறந்துவிட்டு, இன்று எங்களுகே வேலையைக் காட்டிவிட்டானே. அவனும் வேண்டாம். அவன் தந்த பிள்ளையும் வேண்டாம். அப்பா வரட்டும், வந்ததும் எல்லோருமாக லதாவிடம் சென்று இந்தப் பிள்ளையைக் கலைத்துவிடலாம்.” என்றவரின் பேச்சில், அதிர்ந்து, உறைந்து நின்றாள் சித்ரா.

 

அவள் செய்த பிழைக்கு அந்தச் சிசு எப்படிப் பொறுப்பாகும்?

 

“ஐயோ அம்மா! அப்படிச் சொல்லாதீர்கள். அது என் பிள்ளை, ஒரு உயிர். அதை அழிப்பது கொலைக்குச் சமம்.” என்று தன் வயிற்றைப் பிடித்துக்கொண்டு சொல்லும்போதே பதறியது சித்ராவின் உடல்.

 

அவன் அவளோடு எப்படிப் பழகினாலும், அவளும் அவளது நேசமும் உண்மையல்லவா! அந்த நேசத்தில் உருவான கருவை அழிப்பதா? நினைக்கவே நெஞ்சு நடுங்கியது.

 

“என்னடி கொலை அது இது என்கிறாய். ஆறுவாரக் கருதானே. இல்லாவிட்டாலும் அது பிறந்து அதன் வாழ்க்கையும் உன் வாழ்க்கையும் சீரழிவதற்கு இது எவ்வளவோ மேல். இனியாவது அம்மா சொல்வதைக் கேள்! கருவைக் கலைத்துவிட்டு வேறு ஒரு கல்யாணம் செய்து நல்லபடியாக வாழும் வழியைப் பார்!”

 

நெஞ்சம் துடிக்கத் தாயை நிமிர்ந்து பார்த்தாள் சித்ரா. “வேறு எது வேண்டுமானலும் சொல்லுங்கள் கேட்கிறேன். ஆனால் இதைச் செய்ய முடியாது. இது என் குழந்தை. அதைப் பெற்று நானே வளர்ப்பேன். அதேபோல இனிக் கல்யாணப் பேச்சும் பேசாதீர்கள். எனக்கு என் குழந்தை மட்டும் போதும்.” என்றவள், தன் அறைக்குள் சென்றுவிட்டாள்.

 

லக்ஷ்மி அதிர்ந்து நின்றார். அவளுக்கு அவள் குழந்தை போதும் என்றாலும், என் குழந்தைக்கு அது மட்டும் போதாதே என்றது அவரது தாய் மனது. இனிக் கல்யாணப் பேச்சை எடுக்கக் கூடாதா? அப்படியானால் அவளின் எதிர்காலம்?

 

கணவன் இல்லாமல் இந்தக் குழந்தையைக் கையில் வைத்துக்கொண்டு, ஊரார் சிரிக்க கௌரவம் அற்ற வாழ்க்கை அவள் வாழ்வதா? அதற்கா இவ்வளவு சொத்தையும் சுகத்தையும் சேர்த்துவைத்து மகளைக் கண்ணுக்குள் வைத்து வளர்த்தார்கள்.

 

நினைக்க நினைக்க அழுகைக்குப் பதிலாக ஆவேசம் தான் எழுந்தது. என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள் இவள்? எப்போதும் அவள் சொல்வதையே கேட்போம் என்றா?

 

இனியும் அவள் எண்ணப்படி நடக்க விடவே கூடாது என்று முடிவு செய்தார்.

 

அதுநாள் வரை கோபப்பட்டாலும் மகள் செய்ய நினைப்பவைகளை ஓரளவுக்கு மேல் அவரும் மறுத்ததில்லை. காரணம், அவள் மேல் இருந்த பாசமும், திருமணமாகும் வரைதானே இந்தச் சுதந்திரமும் என்கிற எண்ணமுமே.

 

அந்தச் சுதந்திரத்தினால் அவள் தன் வாழ்க்கையைக் கெடுத்துக் கொண்ட பிறகும் அமைதியாக இருக்க முடியவில்லை அவரால்.

 

கணவருக்கு மகளை ரஞ்சனுடன் இணைக்கும் எண்ணம் இருப்பதை அறிந்தாலும், அதற்காகத் தகுதி தராதரம் இல்லாதவனின் காலில் போய் விழுவதா? நன்றிகெட்டவன்!

 

இந்தக் கருவினால் தான் தன் கணவன் அவன் காலில் விழவேண்டிய நிலை என்றால், அந்தக் குழந்தையே தேவையில்லை!

 

அதேபோல, மகளின் நல்வாழ்க்கைக்கும் தடையாக இருக்கும் அது தேவையில்லை என்றே வாதிட்டது அவர் மனது!

 

கணவர் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வதாகச் சொல்லியிருந்தாலும், மனதில் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த கோபமும் அவசர புத்தியும் அவரை ஒரு முடிவை எடுக்க வைத்தது.

 

ஆத்திரம் அறிவை மழுங்கடிக்க என்ன செய்யவேண்டும் என்று ஒருநொடி சிந்தித்தவர், லதாவுக்கு அழைத்தார்.

 

சிலபல வாக்கு வாதங்களின் பின்னர், அவரின் வேண்டுதலுக்கும் பிடிவாதத்துக்கும் சம்மதித்தார் லதா.

 

அடுத்ததாக சித்ரா! அவளுக்குப் பாலைக் காய்ச்சி எடுத்துக்கொண்டு அவளின் அறைக்குச் சென்றார்.

 

அங்கே கட்டிலில் பிடுங்கி வீசப்பட்ட கொடியாக வாடிக் கிடந்தவளின் தோற்றம் நெஞ்சை அறுத்தபோதும், “இந்தா, இந்தப் பாலைக் குடி..” என்று நீட்டினார்.

 

இப்போது எதற்குத் தருகிறார் என்று தோன்றியபோதும் குடிக்க மனம் இல்லாததில், “வேண்டாம்மா..” என்றாள் சோர்ந்த குரலில்.

 

“இதிலாவது அம்மா சொல்வதைக் கேள். இதைக்குடி!”

 

அவர் சொன்னது நெஞ்சைச் சுட, வங்கிக் குடித்தாள் சித்ரா.

error: Alert: Content selection is disabled!!