என் சோலைப் பூவே 21 – 3

அது தன் பேரக்குழந்தை என்று சித்ராவின் வாயால் கேட்கையில், பெரும் பயங்கரமாக இருந்தது.

 

அதற்கு மேல் முடியாமல் முகத்தை மூடிக்கொண்டு அழுதார் லக்ஷ்மி.

 

சந்தானத்துக்குமே விழிகள் கலங்கின. அவர் உள்ளமும் பிறக்க முதலே மரித்துப்போன அவர் சந்ததியை எண்ணித் துடித்தது.

 

“இப்போது எதற்கு அழுகிறாய். எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன், எதற்கும் அவசரப் படாதே என்று. அப்போதெல்லாம் கேட்காமல் இருந்துவிட்டு இப்போது என்ன? அழுவதை நிறுத்து!” என்றார் கடுமையான குரலில்.

 

சித்ரா தாயின் முகத்தை நிமிர்ந்தே பார்க்கவில்லை. அந்தளவுக்கு அவர்மேல் கோபமும் வேதனையும் கலந்து கிடந்தது. நேற்று அவர் அடித்தபோது கூட இவ்வளவு வலிக்கவில்லை.

 

கைகளால் வயிற்றைத் தடவிப் பார்த்தாள், அது வெறுமையாகக் கிடந்தது. பாவப்பட்ட அம்மாவுக்குப் பிள்ளையாகப் பிறக்க அது விரும்பவில்லையோ என்று எண்ணிய மாத்திரத்தில் அவள் உடல் அழுகையில் குலுங்கியது.

 

மகளின் அருகே அமர்ந்த சந்தானம், அவளின் தலைய மெல்லத் தடவினார்.

 

அவரைத் திரும்பிப் பார்த்தவள், “நான்தானே அப்பா பிழை செய்தேன். பிறகு ஏன்பா அம்மா இப்படிச் செய்தார்கள். அது என் பிள்ளைப்பா.” என்று கேட்டு விம்மினாள்.

 

என்ன பதில் சொல்ல முடியும் அவரால்?

 

“விடுடா சித்து. இதெல்லாம் நமக்கு நடக்கவேண்டும் என்று இருந்திருக்கிறது போலும். நடந்ததைப் பேசி ஒன்றையும் காணமாட்டோம். நீ அழாமல் தூங்கு!!” என்று தேறுதலாக மெல்லிய குரலில் பேசியபடி இருந்தவரின் கை மகளின் தலையை இதமாகத் தடவிக்கொடுக்கத் தவறவில்லை.

 

ஆனால், அவள் மனமோ விண்டு விண்டு வலித்தது. ஏன் இப்படி எல்லாம் எனக்கு மட்டும் நடக்கிறது? என்ன தப்புச் செய்தேன்? ரஞ்சனைக் காதலித்ததா?

 

அவனை நினைத்ததும் அவள் உள்ளம் தீயாகத் தகித்தது! கடலுக்கடியில் நிகழும் நில அதிர்வுபோன்று வெளிப்பார்வைக்குச் சோர்ந்து கிடந்தவளின் உள்ளம் உள்ளே எரிமலையாக வெடித்துச் சிதறிக் கொண்டிருந்தது.

 

கள்ளமில்லா மனதைப் பறிகொடுத்து, அவன் மேலிருந்த நம்பிக்கையில் உடலையும் கொடுத்து, இப்போது வயிற்றுச் சிசுவையும் பறிகொடுத்துவிட்டுக் கிடக்கிறாளே, அவன் மேல் கொண்ட காதலுக்கு அவளுக்குக் கிடைத்த பரிசு இதுதானா?

 

அவள் இங்கே வேதனையிலும் வலியிலும் துவண்டு கிடக்க, அவன் அங்கே புதுப் பெண்ணுடன் உல்லாசம் கொண்டாடப் போகிறானா? சாப்பிட்ட பிறகு தூக்கியெறியும் வாழையிலையைப் போன்று எறிந்துவிட்டானே, இப்போது அவள் என்ன செய்ய வேண்டும்? மூலையில் முடங்குவதா? எங்கிருந்தாலும் வாழ்க என்று அவனை வாழ்த்திவிட்டு ஒதுங்குவதா?

 

அல்லது அவன் அவளை ஏமாற்றியது போன்று இன்னொரு ஆணை அவள் ஏமாற்றித் திருமணம் செய்ய வேண்டுமா?

 

அதை நினைத்ததுமே அருவருப்பில் உடல் சிலிர்த்தது.

 

இல்லை! அப்படி விட்டுவிட முடியாது என்று அந்த வேதனையிலும் வெகுண்டெழுந்தது அவள் மனது!

 

“கண்டதையும் நினைக்காமல் தூங்கு சித்து..” என்றார் தந்தை, அவள் தேகத்தில் ஓடிய நடுக்கத்தை உணர்ந்து.

 

தூக்கம் வரும் என்று அவளுக்குத் தோன்றாதபோதும் தந்தைக்காகக் விழிகளை மூடிக் கொண்டாள்.

 

உள்ளமோ விழித்துக்கிடந்தது கதறிக் கொண்டிருந்தது.

 

சற்று நேரம் கழித்து, அவள் உறங்கிவிட்டதாய் நினைத்து, “நீங்கள் காலையிலேயே எங்கே போனீர்கள்?” என்று மெல்லக் கேட்டார் லக்ஷ்மி.

 

வந்ததும் வராததுமாக கணவர் திட்டியதில் அதைப் பற்றியே பேசாதவர், இப்போது கேட்டார்.

 

மகளை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு, “ரஞ்சனைச் சந்திக்க..” என்றார் அவர்.

 

“என்னவாம்?” வெறுப்போடு கேட்டார்.

 

“அவன் கடைக்குப் போனேன், அவன் அங்கே இல்லை.”

 

“கடைக்குள் இருந்துகொண்டே இல்லை என்று சொல்லியிருப்பான்..”

 

அதே எண்ணம் அவருக்கும் இருந்ததில் மறுப்பாக ஏதும் சொல்லவில்லை. அமைதியாக இருந்தார்.

 

“ஆனால் இவ்வளவு நேரமும் என்ன செய்தீர்கள்?” என்று மேலும் துருவினார் லக்ஷ்மி. கணவர் மகளின் விசயத்தில் அதோடு நின்றிருப்பார் என்று அவருக்குத் தோன்றவில்லை.

 

“நாதன், ராஜன் எல்லோருடனும் கதைத்துவிட்டு வந்தேன்..” என்றவரிடம், “எதைப்பற்றி?” என்று உடனேயே கேட்டார் மனைவி.

 

மகளை மீண்டும் ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு, “சித்துவின் விஷயம் ஒன்றும் சொல்லவில்லை.” என்றவர், “ரஞ்சனின் இரண்டு கடைகளையும் நாமே வாங்கலாம் என்று இருக்கிறேன். அதோடு இனி அவன் கடைக்கு இந்த இலங்கையில் எந்த மூலையில் இருந்தும் செருப்புக்கள் வராது. நானாக மனம் வைத்தால் தான் உண்டு.” என்றார் அடக்கப்ப ஆத்திரத்துடன்.

 

“முடிந்தால் அவன் கடைகளை இழுத்து மூடுங்கள். இனிமேல் அவன் முன்னேறவே முடியாதபடி எதையாவது செய்யுங்கள். அதை விட்டுவிட்டு எதற்கு அந்தக் கடைகளை வாங்குகிறீர்கள். அதுவும் இந்த நேரத்தில்.”

 

மனைவியின் விழிகளையே பார்த்தார் சந்தானம். “நம் தொழிலைப் பெருக்கவோ அல்லது சம்பாதிக்கவோ அல்ல. அந்த ரஞ்சனை என்னிடம் வரவைக்கத்தான் இந்த ஏற்பாடு. என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் அவன்? என்னிடமே வேலை பழகி, என்னிடமே பணம் வாங்கி முன்னுக்கு வந்துவிட்டு, என் மகளையே ஏமாற்றுவான், அதையெல்லாம் நான் பார்த்துக் கொண்டிருப்பேன் என்றா? என் பிள்ளைக்கு ஒன்றைச் செய்துவிட்டு இந்த டவுனில் அவனால் வியாபாரம் செய்துவிட முடியுமா? மரியாதையாகப் பேசிப் பார்த்தேன். சம்மதிக்கவில்லை. நேராகப் போய்க் கதைக்கலாம் என்று நினைத்தேன் அதற்கும் அவன் இடம் தரவில்லை. இனி, எழ முடியாத அளவுக்கு அடித்தால் தான் அடங்குவான் என்றால், அதற்கான வழியைத்தான் செய்துவிட்டு வந்திருக்கிறேன். அவன் திறந்திருக்கும் கடைகளை வாங்கப் போகிறேன். செருப்புக்கள் இனி அவனுக்கு வராது. வங்கியிலும் இரண்டாவது கடை திறக்க அவன் வாங்கிய லோனையும் ரத்துச் செய்யக் கதைத்துவிட்டேன். இனி என் தயவில்லாமல் அவனால் ஒன்றுமே செய்ய இயலாது.” என்றார் கடுமையான குரலில்.

 

கண்களை மூடியிருந்தபோதும், இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சித்ராவின் விழியோரங்களில் கண்ணீர் வடிந்து காதுகளை நனைத்தது.

 

 

 

error: Alert: Content selection is disabled!!