என் சோலைப் பூவே 25 – 2

அந்த நன்றி எதற்காகச் சொல்லப்பட்டது?

 

அவள் செய்த பிழையைப் பொறுத்து அவளுக்காகப் பாடுபட்டாரே, அதற்கா?

 

அவனையே திருமணம் செய்யப் போகிறேன் என்று அவள் சொன்னபோதும், அவளுக்காக நின்றாரே, அதற்கா?

 

அல்லது, இப்போது ரஞ்சனின் எண்ணத்தை அவள் வாய்மொழியாகச் சொன்னபோது, அதை உணர்ந்து தூண்டித் துருவாமல் மகளுக்காக அனைத்தையும் விட்டுக் கொடுத்துவிட்டு நிற்கிறாரே, அதற்கா?

 

எதற்காக இருந்தாலும் அவரைப் போன்ற ஒரு தந்தை கிடைக்க அவள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அவருக்காகத் தன்னும் தான் அவனோடு மிக நன்றாக வாழ்ந்து காட்டவேண்டும் என்கிற லட்சியம் எழுந்தது அவள் மனதில்.

 

மகளின் கன்னங்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்து விட்டவர், “சந்தோசமாக இரடா..” என்றார் நெகிழ்ந்துவிட்ட குரலில்.

 

லக்ஷ்மிக்கோ சொல்லத் தேவையில்லை. கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. சேலை முந்தானையால் துடைக்கத் துடைக்கப் பெருகியது.

 

ஒரேயொரு செல்ல மகள் இன்று புகுந்த வீடு செல்கிறாள். ஊரே கூடி அவளை வாழ்த்தி அனுப்ப வேண்டிய நேரத்தில் இப்படித் தனியாகச் செல்கிறாளே என்று தவித்தார்.

 

அங்கே கோணேஸ்வரப் பெருமானுடன் சாந்தமே வடிவமாய் வீற்றிருந்த மாதுமை அம்பாளைப் பார்த்து, ‘என் மகளுக்கு மனம் நிறைந்த வாழ்க்கையைக் கொடு தாயே..’ என்று உருகி வேண்டியது அவர் உள்ளம்!

 

தாய் தந்தையரின் பாதம் பணிந்து வணங்கி எழுந்த சித்ரா, கண்ணனின் காலில் விழவும் தவறவில்லை.

 

கண்ணனோ அதை எதிர்பாராததில் திக்கு முக்காடிப் போனார். ஒரு வேலைக்காரனாக இல்லாமல் தன்னையும் சகோதரனாக மதித்தவளின் செயலில் அவர் கண்களும் கலங்கிவிட, அவசரமாகக் குனிந்து அவளைத் தூக்கிவிட்டவர், “சீரும் சிறப்புமாய் வாழவேண்டும் சித்து..” என்றார் நெகிழ்ந்துவிட்ட குரலில்.

 

இதழ்களில் புன்னகையும், விழிகளில் கண்ணீருமாக எல்லோரிடமும் தலையசைத்து விடைபெற்றவள், தன் கணவனாகி விட்டவனைப் பின் பற்றிச் சென்றாள்.

 

அவள் செல்லும் வரை அழுகையை அடக்கியபடி நின்ற லக்ஷ்மி அதற்கு மேலும் தாங்க முடியாமல் கணவரின் தோள் சாய்ந்து வெடித்து அழுதார். தொண்டைக்குழி அடைத்துவிட்டதில் வாய் வார்த்தையாகத் தேற்ற முடியாமல் மனைவியின் தோளை ஆதரவாக அணைத்துக்கொண்ட சந்தானத்தின் விழிகளும் கசிந்திருந்தன.

 

அவர்கள் அருகே வந்த ஜீவன், “ஆன்ட்டி! நல்ல நாளும் அதுவுமா அழாதீர்கள். சித்து சந்தோசமாக வாழ்வாள். ரஞ்சன் கட்டாயம் வாழ வைப்பான். அவனுக்கு அவன் அப்பா என்றால் உயிர். அதனால் தான் சில பைத்தியக்கார வேலைகளைச் செய்யப் பார்த்தான். மற்றும்படி அவன் மிக மிக நல்லவன் ஆன்ட்டி. அவனை எங்களுக்குச் சிறு வயதில் இருந்தே தெரியும். அங்கிளையும் கேட்டுப் பாருங்கள். அதைவிட சித்துவின் மனதுக்கு அவள் கட்டாயம் நன்றாக வாழ்வாள்.” என்றான், அவர்கள் இருவரையும் அறிந்தவனாக.

 

மெல்லக் கண்களைத் துடைத்துக்கொண்ட லக்ஷ்மி, “உன் வாய் முகூர்த்தம் பலிக்கட்டும் தம்பி. எங்களுக்கு ஒரேயொரு குழந்தை. நான் சும்மா அவள் முதுகில் தட்டினாலே இவர் கத்துவார். அங்கு போய் என்ன செய்யப் போகிறாளோ.. அவள் மாமியார் எப்படி நடத்துவாரோ.. ரஞ்சன் பாசமாக இருந்தாலாவது அவன்.. அவர் பார்த்துக் கொள்வார் என்று நினைக்கலாம். இங்கே அந்தத் தம்பியும் கோபமாக இருக்கிறதே.. என் பிள்ளை என்ன செய்யப் போகிறாளோ தெரியவில்லை..” என்று வேதனையோடு சொன்னவரின் கைகள், மகளின் நல்வாழ்க்கையை யாசகமாக ஏந்தின அந்தக் கோணேஸ்வரப் பெருமானைப் பார்த்து!

 

 

சித்ராவுடன் கோவிலை விட்டு வெளியே வந்த ரஞ்சன் வீதியில் வந்துகொண்டிருந்த ஒரு ஆட்டோவைக் கைகாட்டி மறித்தான். ஆட்டோ நிற்கவும் கழுத்தில் இருந்த மாலையைக் கழட்டி அருகில் நின்றவளின் கையில் திணித்தான்.

 

எதுவும் சொல்லாமல் வாங்கிக்கொண்டு தன்னுடையதையும் கழட்டி, ஒரு கையில் தொங்கப் போட்டவள் அவனோடு ஆட்டோவில் ஏறி அமர்ந்துகொண்டாள்.

 

ரஞ்சனின் வீடு வந்ததும் ஆட்டோவில் இருந்து இறங்கித் தான் வாழப் போகும் வீட்டை ஆவல் இன்றி ஆராய்ச்சியாகப் பார்த்தாள் சித்ரா.

 

ரஞ்சனோ ஆட்டோவுக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டு, அருகில் நின்றவளை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் விறுவிறு என்று உள்ளே நடந்தான்.

 

“ரஞ்சன்..!”

 

அவள் அழைப்பில் நின்றவன், நின்ற இடத்திலிருந்தே விழிகளில் எரிச்சல் தொக்க திரும்பிப் பார்த்தான்.

 

“எங்கே உங்கள் அம்மாவும் தங்கையும்..” என்று சித்ரா கேட்டு முடிக்க முதலே, “ஏன், அவர்கள் வந்து ஆராத்தி எடுத்தால் தான் உள்ளே வருவாயோ? உனக்கு அதெல்லாம் தேவையில்லை!” என்று பட்டென்று சொல்லிவிட்டு வேகமாக நடந்து சென்றான்.

 

அதைக் கேட்டவளுக்கு சட்டென நெஞ்சுக்குள் வலித்தது. ஏன், அவளுக்கு அதெல்லாம் தேவையில்லை? அவள் என்ன பின் கட்டு வழியாகவா வருகிறாள்? அவன் கையால் முறையாகத் தாலியை வாங்கி, அவன் மனைவியாகத்தானே வருகிறாள்?

 

ஆத்திரமும் அழுகையும் வந்தபோதும், இதையெல்லாம் அவள் யாரிடம்தான் கேட்க முடியும்?

 

கேட்டாலும் நியாயம் கிடைத்துவிடுமா என்ன?

 

தன் நிலையை எண்ணித் துன்பம் மனதை அரித்தபோதும், அவனோ அந்த வீட்டில் இருப்பவர்களோ அவளை ஆராத்தி எடுத்து அழைக்கப் போவதில்லை என்பதை மிக நன்றாகவே உணர்ந்தவள், வலது காலை எடுத்துவைத்து உள்ளே நுழைந்தாள்.

 

அந்த வீட்டை மேலோட்டமாகப் பார்த்தவள் சற்று ஆச்சர்யப் பட்டுத்தான் போனாள். அந்தளவுக்கு கலைநயத்துடன் கூடிய அழகான பெரிய வீடு. அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையின் சான்றாக நின்ற வீட்டுக்குள் மாமியாரையும் மச்சாளையும் தேடியது அவள் விழிகள்.

 

அவர்களைக் காணாவில்லை என்றதும், ரஞ்சன் சென்றதைக் கவனித்து வைத்திருந்தவள் மாடியேறி அவன் நுழைந்த அறைக்குள்ளேயே சென்றாள்.

 

வேட்டி சட்டையில் இருந்து ஜீன்ஸ் டி-ஷர்ட்க்கு மாறிக்கொண்டிருந்தான் அவன். அவளைக் கண்டதும் ஆத்திரத்தில் முகம் கடுக்க, “இங்கே எதற்கு வந்தாய்?” என்று கிட்டத்தட்ட உறுமினான்.

 

கையிலிருந்த மாலைகளை அங்கிருந்த மேசையில் வைத்துவிட்டு, “வேறு எங்கே போவது?” என்று எதிர்க்கேள்வி கேட்டாள் அவள்.

 

அவளின் நிதானம் அவனை இன்னும் சினம் கொள்ள வைக்க, “பக்கத்தில் இருக்கும் எந்த அறையிலாவது தங்கிக்கொள். இங்கே நீ வரக்கூடாது! இது என் அறை!” என்றான் முகத்தில் அடித்தாற்போல்.

 

முகம் கன்றிப்போனது சித்ராவுக்கு. அவள் இந்த வீட்டுக்கும் அவனுக்கும் அழையா விருந்தாளி அல்லவா. அதுதான் இவ்வளவு உதாசீனம்.

 

இதெல்லாம் அவள் எதிர்பார்த்ததுதான். ஆனால், அது இந்தளவுக்கு வலிக்கும் என்பதை எதிர்பார்க்கவில்லை.

 

ஆனாலும் நிமிர்ந்து, “இந்த வீடு கூடத்தான் உங்கள் வீடு. இங்கே எதற்கு என்னை அழைத்து வந்தீர்கள்? உங்கள் மனைவி என்பதால் தானே. உங்கள் மனைவி உங்கள் அறையில் இருக்காமல் வேறு எங்கே இருப்பது. நான் இங்கே தான் இருப்பேன்!” என்று அதிகாரமாகச் சொன்னவள், சட்டமாக அவன் கட்டிலில் அமர்ந்துகொண்டாள்.

 

அவளின் பேச்சும் செயலும் ஆத்திரமூட்ட, “ஆமாமாம்! இன்றுமுதல் நீ என் மனைவி இல்லையா! அதுவும் எதற்கும் துணிந்து, என்னென்னவோ திருகுதாளம் எல்லாம் செய்து, எந்தளவு தூரத்துக்கும்இறங்குவேன் என்று என்னை மிரட்டிய மனைவி அல்லவா நீ!” என்றான் நக்கலாக.

error: Alert: Content selection is disabled!!