அத்தியாயம்-26
தூங்கிவிட்ட போதும் அயர்ந்து உறங்காத சித்ராவின் செவிகளில் பேச்சுக் குரல்கள் கேட்க, துயில் கலைந்து விழிகளைச் சுழற்றினாள்.
இருக்கும் இடம் பிடிபட, எழுந்து அமர்ந்தவளுக்கு கீழேயிருந்து வந்த பேச்சுக் குரல்கள் இராசமணியினதும் நித்தியினதும் என்று இனங்காண முடிந்தது. அதற்கு மேலும் அறையினுள் இருப்பது மரியாதை இல்லை என்று எண்ணியவள் முகம் கழுவித் தலைவாரிக்கொண்டு மெதுவாக அந்த அறையின் வாசலுக்குச் சென்றாள்.
தொலைக்காட்சியில் மூழ்கியிருந்த நித்தி, ஏதோ உள்ளுணர்வு உந்த மாடியைத் திரும்பிப் பார்த்தாள். அங்கு தமையனின் அறையின் கதவுநிலையில் சாய்ந்தபடி நின்ற சித்ராவைக் கண்டதும் முதலில் அதிர்ந்து பின் ஆத்திரத்துடன் அவளை முறைத்துவிட்டு, உச்சக்கட்டக் கோபத்தில், “அம்மா..!!” என்று பெருங்குரல் எடுத்துக் கத்தினாள்.
“என்ன நித்தி! ஏன் கத்துகிறாய்?” என்றபடி, பதறியடித்து ஓடிவந்தார் இராசமணி. அந்தளவுக்கு இருந்தது நித்தியின் அலறல்!
மாமியாரைக் கண்டுவிட்டுச் சித்ரா படியிறங்க, அவளைக் காட்டி, “அங்கே பாருங்கள்!” என்றாள் நித்யா.
மகள் காட்டிய திசையில் பார்த்த இராசமணியின் முகமும் ஆத்திரத்தில் கடுத்தது.
திருமணம் முடிந்ததும் இங்கேதான் வருவார்கள் என்பதை ஊகித்து, அவர்கள் வரும்போது தான் வீட்டில் இருக்கக் கூடாது என்று திட்டம் போட்டே மகளுடன் வெளியே சென்றுவிட்டு வந்தவருக்கு அவளைக் கண்டதும் கோபம் வந்தது.
கணவனின் ஆசைகளைக் குழி தோண்டிப் புதைத்தவளாகவே அவர் கண்ணுக்குச் சித்ரா தெரிந்தாள்.
“எவ்வளவு தைரியம் இருந்தால் என் முன்னால் வந்து நிற்பாய். நினைத்தபடி என் பிள்ளையின் கையால் தாலி வாங்கிவிட்ட திமிரா? என் குடும்பத்தை உருக்குலைக்க வந்த நீ நன்றாகவே இருக்கமாட்டாய். போ என் கண் முன்னால் நிற்காமல்!” என்றார் வெறுப்போடு.
மகன் தன் அறையை விட்டு வெளியே போ என்றான். அவன் தாயோ அவரின் கண்முன்னால் நிற்காதே என்கிறார். அப்படி எல்லோரும் உதாசீனம் செய்யும் அளவுக்குத் தான் இறங்கிவிட்டோமா என்று நினைக்கையிலேயே கண்ணைக் கரித்தது.
திருமணமான அன்றே ‘நீ நன்றாக இருக்கமாட்டாய்’ என்று சாபம் வழங்கிய மாமியாரை எதிர்த்துக் கதைக்கத் துடித்த உதடுகளை அழுந்த மூடிக்கொண்டு அப்படியே நின்றாள் சித்ரா.
இராசமணிக்கோ தான் சொன்னதற்குப் பதில் ஏதும் சொல்லாமல், துணிந்து தன் முன்னால் நின்றவளைப் பார்க்க அவளைக் கடித்துக் குதறும் ஆத்திரம் வந்தது. “உன் அப்பாவும் அம்மாவும் சனியன் தொலைந்தது என்று உன்னைத் துரத்திவிட்டு நிம்மதியாக இருக்கிறார்கள் போல. அந்தச் சனியன் இங்கே வந்து நிற்கிறது. ஆனால் கண்டவளும் வந்து தங்க இது ஒன்றும் சத்திரம் இல்லை. உன் வீட்டுக்கே போ!” என்றார் ஆங்காரமும் அதிகாரமுமாக.
பெற்றவர்களைப் பற்றிய அவரின் பேச்சில் அவளின் வாய்ப்பூட்டுத் தானாகக் கழன்றது. ஒழுக்கம் அற்ற மகனைப் பெற்றுவிட்டு இவ்வளவு திமிரா என்று வெகுண்டபோதும், “நான் எதற்கு வெளியே போகவேண்டும்? இது என் கணவனின் வீடு. இங்கிருந்து என்னை வெளியே போகச் சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது! சொன்னாலும் நான் போகமாட்டேன்!” என்றாள் நிமிர்ந்து.
அவளின் அழுத்தமான பேச்சு அவரை உசுப்பிவிட்டது. “என்னது? யாருக்கும் உரிமை இல்லையா? விட்டால் இந்த வீடே உன் வீடு என்று சொல்வாய் போலவே. இது என் கணவர் கட்டிய வீடு. இங்கே நான் வைத்ததுதான் சட்டம். நீ இங்கே இருக்கக் கூடாது. போ வெளியே!” என்று அவளை வெளியேற்றுவதிலேயே குறியாக நின்றார் அவர்.
“என்னை இங்கு அழைத்து வந்தது உங்கள் மகன். என்ன கதைப்பதாக இருந்தாலும் அவரோடு கதையுங்கள். ஆனால் ஒன்று, நான் வெளியே போவதாக இருந்தால் அவரையும் கூட்டிக்கொண்டுதான் போவேன். பரவாயில்லையா?”
அவருக்கு மரியாதை கொடுக்கத்தான் எண்ணினாள். ஆனால், அவளது அருமைப் பெற்றவர்களை அவமதிக்கும் விதமாக இருந்த அவரின் பேச்சு அவளின் நாவடக்கத்தைப் பறக்கச் செய்தது.
“என்ன, பயம் காட்டுகிறாயா? உனக்குத்தான் இப்படி ஆட்களை மிரட்டுவது, பயம் காட்டுவது எல்லாம் கைவந்த கலையாயிற்றே! என் மகனோடு ஊரைச் சுற்றிவிட்டு, அவனோடு சேர்ந்து எடுத்த போட்டோக்களை ஊருக்கே காட்டி, அவன் விரும்பிய பெண்ணை மணக்க விடாமல் செய்தவள் தானே நீ. பெண்ணை மிக லட்சணமாகத்தான் வளர்த்திருக்கிறாள் உன் அம்மா. ஊர் மேய்வதற்கு என்றே உன்னைப் பெற்று வளர்த்தாளோ?” என்று வார்த்தைகளை அளவில்லாமல் கொட்டினார்.
அதைக் கேட்டதும் எவ்வளவுதான் அடக்க முயன்றும் முடியாமல் சித்ராவின் கண்கள் கண்ணீரைப் பொழிந்தன.
அவர் மகனைக் கட்டிக்கொண்டு வந்தது அவள். அதற்கு எதற்கு அவளுடைய அம்மாவை இப்படிக் கேவலமாகக் கதைக்கவேண்டும்? அப்படி அவர் கதைக்கும் அளவுக்கு வைத்தது அவள்தானே என்று நெஞ்சு வெடித்த போதும், கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைக்கவும் மறந்து, “என் அம்மாவைப் பற்றி எதுவும் கதைக்காதீர்கள். அவர் நன்றாகத்தான் என்னை வளர்த்தார். நான் தான் நல்லவன் யார் கெட்டவன் யார் என்று தெரியாமல் உங்கள் மகனைக் காதலித்தேன். ஏமாற்றுக்காரனைப் பெற்ற உங்களுக்கு என் அம்மாவைப் பற்றிக் கதைக்கத் தகுதியில்லை.” என்றாள் ஆத்திரத்தில் குரல் நடுங்க.
அவளின் ‘உங்களுக்குத் தகுதியில்லை’ என்ற வார்த்தை அவரை வெகுவாகவே உசுப்பிவிட, “என் வீட்டிலேயே நின்றுகொண்டு என் மகனைப் பற்றி என்னிடமே குறை சொல்வாயா? எனக்குத் தகுதி இல்லை என்று சொல்ல உனக்கு எவ்வளவு தைரியம். இனி நீ இந்த வீட்டில் இருக்கக் கூடாது. போடி வெளியே!” என்றபடி, சித்ராவை வீட்டை விட்டு வெளியே தள்ளும் எண்ணத்துடன் அவளை நெருங்கினார் இராசமணி.
அதுவரை சித்ராவைத் தாய் திட்டுவதைக் கேட்டபடி நின்ற நித்யா, “அம்மா, முதலில் என் நைட்டியைக் கழட்டச் சொல்லுங்கள். கண்டவளும் அதைப் போட்டுக்கொண்டு இருப்பது எனக்குப் பிடிக்கவில்லை. என் நைட்டி எனக்கு வேண்டும்!” என்றாள் பிடிவாதமாக.

