என் சோலைப் பூவே 3 – 1

அத்தியாயம்-3

 

மோட்டார் வண்டியில் சென்று கொண்டிருந்த ரஞ்சனின் மனம் குமுறிக் கொண்டிருந்தது. அப்படி என்ன பிழை செய்தான் என்று தகப்பனும் மகளுமாகச் சேர்ந்து அவனைத் தண்டித்தார்கள்? எவ்வளவு கேவலம்!

 

இதற்குக் காரணம் என்ன? அவர்களிடம் இருக்கும் பணபலமா? நம்மிடம் வேலை செய்பவன் தானே என்கிற இளக்காரமா? நாம் என்ன செய்தாலும் அவனால் நம்மை ஒன்றும் செய்ய முடியாது என்கிற அவனது தாழ்ந்த நிலையா? அவனைத் துச்சமாக நினைத்து நொடியில் தூக்கி எறிய வைத்தது எது?

 

அப்படி அவர்கள் தூக்கி எறிந்தும், அவன் வாய்மூடி நின்றதற்குக் காரணம் என்ன? அவனிடம் பணம் இல்லை, வசதி இல்லை என்பதுதானே? என்று நினைத்தவனின் மனம் எரிமலையாய்க் கொதித்துக் கொண்டிருந்தது.

 

அவளை அறையாமல் வந்துவிட்டோமே என்றிருந்தது. அதுதான் வேலையை விட்டே தூக்கிவிட்டார்களே. இனி எதற்காக கோபத்தை அடக்கவேண்டும். எதற்குப் பொறுமை காக்கவேண்டும்?

 

திரும்பிப் போய் அவளை அறைந்துவிட்டு வந்தால் என்ன என்றுகூடத் தோன்றியது. ஆனால், அதற்காகத் தன்னும் அந்தக் கடையை மிதிக்க அவனுக்குப் பிடிக்கவில்லை.

 

பார்க்கலாம், என்றாவது ஒருநாள் என்னிடம் வசமாக மாட்டுவாள் தானே! அப்போது ஒரு அறை என்ன, பல அறையே கொடுக்கிறேன் என்று கருவியது மனம்.

 

மனதில் இருந்த கொதிப்போடு வீட்டுக்குச் செல்லப் பிடிக்கவில்லை. அங்கே அவனைக் கண்டதும் அம்மாவின் முகத்தில் உண்டாகும் கேள்வி, குழப்பம், கலக்கம், வேலை போய்விட்டது என்று சொன்னதும் அவரிடம் உண்டாகும் கவலை இதையெல்லாம் பார்க்கும் நிலையில் இப்போது அவன் இல்லை.

 

அதோடு அவரிடம் என்னவென்று சொல்வது? எதைச் சொல்வது?

 

எனவே தன்னுடைய நண்பர்கள் வேலை செய்யும் ‘வொர்க் ஷாப்’க்கு வண்டியை விட்டான்.

 

அப்போதுதான் சந்தானத்திடமிருந்து அழைப்பு வந்தது. அதைப் பார்த்தவன் பொங்கிய கோபத்தோடு எடுக்காமல் விட்டுவிட்டான்.

 

கண்ணன் அழைத்தபோதும் எடுக்கவில்லை. என்ன, அவனுக்கு ஆறுதல் சொல்ல அழைத்திருப்பார். அதையெல்லாம் கேட்கும் மனநிலையிலும் அவன் இல்லை.

 

இவனைக் கண்டதும் ஜீவனும் சுகந்தனும் ஆச்சரியமாகப் பார்த்தனர்.

 

“என்னடா இந்த நேரத்தில் வந்திருக்கிறாய்? வேலை இல்லையா..?” என்று கேட்டான் ஜீவன்.

 

வண்டியை நிறுத்திவிட்டு, “ப்ச்!” என்ற சலிப்புடன், அங்கிருந்த பழைய டயர் ஒன்றில் அமர்ந்துகொண்டான் ரஞ்சன்.

 

அவன் முகத்தைப் பார்த்தே ஏதோ பிரச்சினை என்பதை ஊகித்த ஜீவன், “மூன்று பேருக்கும் டீ வாங்கிவாடா..” என்று சுகந்தனை அனுப்பிவிட்டு, கிரீஸ் அப்பியிருந்த கையைத் தன்னுடைய அழுக்கேறிய சட்டையிலேயே துடைத்தபடி இன்னொரு டயரில் அமர்ந்தான். “என்ன மச்சான் பிரச்சினை?”

 

பதில் சொல்ல முடியாமல் முகம் இறுகி நின்றவனிடம், “ஏதாவது பணம் தேவையாடா?” என்று கேட்டான் ஜீவன்.

 

முழங்கைகளைக் கால்களில் ஊன்றி, நெற்றியை இரண்டு கைகளிலும் தாங்கியபடி குனிந்திருந்தவனின் தலை மட்டும் இல்லை என்பதாக ஆடியது.

 

“அம்மாவுக்கு ஏதும்..? நித்திக்கு..”

 

“அவர்களுக்கு ஒன்றும் இல்லையடா..” என்றான் அலுபுற்ற குரலில்.

 

“பிறகு என்னடா?” என்ற கேள்விக்கும் பதிலில்லை. அவனின் பார்வை மட்டும் எங்கோ இலக்கின்றி வெறித்தது.

 

அதற்கு மேல் எதுவும் கேட்கவில்லை ஜீவன். ரஞ்சனை யோசனையோடு பார்த்தான்.

 

சின்ன வயதில் இருந்தே அவர்கள் மூவரும் நல்ல நண்பர்கள். ஜீவனுக்கும் சுகந்தனுக்கும் படிப்பு ஏறவில்லை. சாதாரண தரத்தைத்(பிளஸ் வன்) தாண்டுவதே பெரும் பாடாக இருந்தது. அதோடே படிப்பை நிறுத்திவிட்டு ‘வொர்க் ஷாப்’பில் வேலைக்குச் சேர்ந்துவிட்டார்கள்.

 

அதே நிலை ரஞ்சனுக்கும் வந்தபோது, வேதனைப் பட மட்டுமே முடிந்தது அவர்களால். அவர்களுக்காவது படிப்பும் வரவில்லை. படிக்கவும் வசதியில்லை. ஆனால் ரஞ்சனுக்கு?

 

படிப்புத்தான் போனது என்றால், ஒரு பார்மசியில் கூட அவனுக்கு வேலை கிடைக்கவில்லையே! காரணம் என்ன?

 

தலைவிதி என்பதா?

 

அல்லது கடவுளால் அவனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு என்பதா?

 

எதுவோ ஒன்று! ஆனால், அவன் மனதளவில் பெரும் போராட்டத்துக்கு மத்தியில் தான் செருப்புக் கடையில் வேலை செய்கிறான் என்பது மட்டும் ஜீவனுக்குத் தெள்ளத்தெளிவு.

 

ஆனால் இதெல்லாம் நடந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டதே. இன்று இவனுக்கு என்ன ஆகிற்று?

 

இறுகிச் சிவந்து, கோபத்தில் தணல் போல் ஜொலிக்கும் அவன் முகத்தைப் பார்க்க விஷயம் பெரிது என்று மட்டும் புரிந்தது.

 

மற்றும்படி இந்த மூன்று வருடத்தில் உணர்வுகளைக் காட்டாமல் கல்லாகச் சமைந்து இருப்பதே ரஞ்சனின் வழமை என்றாகிவிட்ட நிலையில் இன்றைய அவனது கோபம்?

 

அவனாகச் சொல்லட்டும் என்று அமைதியாகி விட்டான் ஜீவன்.

 

இருவரும் அவரவர் நினைவில் இருக்க, “இந்தாங்கடா..” என்றபடி டீயை நீட்டினான் சுகந்தன்.

 

டீயோடு சேர்த்து ஒரு சிகரட்டையும் தீமூட்டி வாயில் பொருத்தினான் ஜீவன்.

 

அதைப் பார்த்த ரஞ்சன், “எனக்கும் ஒன்றைத் தாடா..?” என்றான் கையை நீட்டியபடி.

 

“என்னது?” அதிர்ச்சியோடு கேட்ட ஜீவனின் வாயில் இருந்த சிகரெட் நழுவிக் கீழே விழுந்தது.

 

பின்னே, அவர்கள் புகைப்பதற்கே திட்டும் அவன் இப்படிக் கேட்டால்?

 

தன்னைச் சமாளித்து, “உனக்குத்தான் இதெல்லாம் பிடிக்காதேடா..” என்றான்.

 

“எல்லாம் எனக்குப் பிடித்தா நடக்கிறது? தாடா நீ..” என்று சலித்தவனின் குரலில் இப்போது பிடிவாதம் வந்திருந்தது.

 

அதைக்கேட்டு சட்டென்று ஜீவனின் பார்வை சுகந்தனைப் பார்க்க, ‘குடு’ என்பதாகத் தலையை அசைத்த சுகந்தன், யோசனையோடு ரஞ்சனைப் பார்த்தான்.

 

ஜீவன் நீட்டிய சிகரட்டை வாங்கி வாயில் வைத்துத் தீமூட்டிப் புகையை இழுத்தான் ரஞ்சன். அதுவோ தலையின் மூலை முடுக்கெல்லாம் பரவியது போன்று சுவாசிக்கவே முடியாமல் பலமாக இருமியது அவனுக்கு. கண்கள் கலங்கத் தொடர்ந்து விடாமல் இருமியவனின் தலையில் தட்டினான் ஜீவன்.

 

“அது புதிதுக்கு அப்படித்தான்டா இருக்கும்..”

 

ஒரு வழியாக இருமி முடித்தவன், “இந்தக் கருமத்தையாடா இப்படிப் புகைத்துத் தள்ளுகிறீர்கள்?” என்றபடி அதனை எறியப் பார்த்தான்.

 

எறியவிடாது அதைப் பாய்ந்து பறித்தான் சுகந்தன். “விசரனாடா(லூசாடா) நீ? சிகரெட் விற்கிற விலைக்கு ஒரு முழு சிகரெட்டையே எறியப் பார்த்தாயே..” என்றவன், அதைத் தன் வாயில் வைத்துப் புகையை இழுத்தான்.

 

அவனை முறைத்தான் ரஞ்சன். “உடம்பையும் கெடுத்து, காசையும் கொடுத்து இதைக் கட்டாயம் புகைக்கத்தான் வேண்டுமாடா?”

 

“நாங்கள் அனுபவிக்கும் சந்தோசம் இது மட்டும்தான். இதையும் விட்டால் வாழ்க்கையே வெறுத்துவிடும்.” என்றான் சுகந்தன் புகையை இழுத்தபடி.

 

error: Alert: Content selection is disabled!!