என் சோலைப் பூவே 33 – 2

“சரி அண்ணா..” என்றபடி அவன் செல்லவும் வீட்டுக் கதவை அடைத்தான் ரஞ்சன்.

 

“ஏன் கீழே உணவை வைக்கச் சொன்னீர்கள்?” என்று கேட்டவளிடம்,

 

“எல்லாம் காரணமாகத்தான்..” என்றவன், கணவன் பார்வையுடன் மனைவியை நெருங்கினான்.

 

முகம் சிவக்கத் தடுமாற்றத்துடன் பின்னால் நகர்ந்தவள், “இ..இது கடை…” என்று மெல்ல முணுமுணுத்தாள்.

 

“கடை கீழே இருக்கிறது. இது வீடு.” என்றவன் மேலும் முன்னேறினான்.

 

“யா..ராவது..”

 

“வரமாட்டார்கள்..” என்று முடித்துவைத்தவன், அவளையும் தன் கைவளைவுக்குள் கொண்டுவந்தான்.

 

“சாப்பாடு வந்துவிடும்..”

 

“வரட்டும்..”

 

“சூடு ஆறிவிடப் போகிறது..” எதையாவது சொல்லிச் சமாளிக்க எண்ணி அவள் வாயை விட,

 

“அது ஆறினால் திரும்பச் சூடாக்கிக் கொள்ளலாம்..” என்றவன், அவளைத் தன் வசமாக்கிக் கொண்டான்.

 

அதன் பிறகான நாட்கள் எப்படிக் கடந்தன என்று தெரியாமலேயே கடந்தன. அந்தளவுக்கு சித்ராவுக்குச் சொர்க்கத்தையே காட்டினான் அவள் கணவன்!

 

கொஞ்சினான், கூடினான், குலாவினான், கட்டியணைத்தான். இந்த உலகையே அவளை மறக்க வைத்தான். அவனையே முழுவதுமாக அவள் சிந்தனையில் நிரப்ப வைத்தான். அவர்கள் மட்டுமே தனித்திருக்கும் ஒவ்வொரு தருணத்திலும் சற்றும் அவளை விட்டு விலகாது அவளைச் சுற்றிச் சுற்றியே வந்தான்.

 

என்னதான் அவன் உருகினாலும் அவள் மேல் உயிரையே வைத்திருப்பதாகக் காட்டினாலும் அவனுடைய அன்பில் லயிக்கவோ முற்றாக உருகவோ அவளால் முடியவில்லை.

 

மனதில் ஒரு பாரம், அழுத்தம் அவள் நெஞ்சை அடைத்துக்கொண்டே இருந்தது. அவள் ஒற்றைக் காலில் நின்று கட்டியிராவிட்டால் இதே வாழ்க்கையை அவன் இன்னொரு பெண்ணுடன் வாழ்ந்திருப்பானே! முதலே அவளை அவன் திருமணம் செய்திருக்க குழந்தை அவளை விட்டுப் போயிருக்காதே!

 

இன்று இவ்வளவு நேசம் காட்டுபவன் அன்று அவளை ஒதுக்கத்தானே நினைத்தான் என்கிற நினைவுகளை அவளால் ஒதுக்கவே முடியவில்லை.

 

அதையெல்லாம் மறந்துவிட்டு அவனுடன் உயிராக ஒன்றத்தான் அவளுமே பிரியப்பட்டாள். ஆனால், அது முடியாமல் நெஞ்சுக்குள் செல்லரிப்பது போன்று பானகத் துரும்பாய் இந்த நினைவுகள் அவளை அரித்துக் கொண்டிருந்தன.

 

சிலவேளைகளில், தன் வாழ்க்கையைப் பற்றிய சுயபரிசோதனையில் ஆழ்ந்திருப்பவளின் சுளித்திருக்கும் புருவங்களை நீவியபடி, “என்னமா?” என்று அவன் உருகிப்போய்க் கேட்கையில் அவளால் அவன் நெஞ்சுக் கூட்டுக்குள் ஒன்றத்தான் முடிந்ததே தவிர, மனதில் உள்ளதைச் சொல்ல முடிந்ததே இல்லை.

 

“இங்கே பார் யாழி. நடந்ததை எல்லாம் முடிந்தவை என்று நினைத்து ஒதுக்கப் பழகு. இப்போது நாம் வாழும் வாழ்க்கைதான் நிஜம். அதை சந்தோசமாக வாழலாம். நாம் இருவருமே நிறையப் பட்டுவிட்டோம். அதுவே போதும்டா…” அவள் நடந்தவைகளை நினைத்து வருந்துகிறாளோ என்று எண்ணிச் சொன்னவன், தானும் அப்படியே நடந்துகொண்டான்.

 

அவன் இருக்கையில் அடங்கியிருக்கும் நினைவுகள் அனைத்தும் அவன் விலகிய நொடியில் விஸ்வரூபம் எடுத்து வந்து அவளை மிரட்டின!

 

ஆனாலும், அவன் ஆசையாக வந்து அணைக்கையில் அவளும் அவனுக்குள் கரைந்துதான் போனாள். அவனைத் தவிர்க்கவோ தடுக்கவோ அவளால் முடிந்ததே இல்லை.

 

சில நாட்களில் அவளுடன் கூடிவிட்டு அவன் பிரிகையில் இதற்காக மட்டுமா திருமணம் செய்துகொண்டோம் என்கிற வெறுப்புத் தோன்றிற்று!

 

சற்றும் உரிமை இல்லாத அன்று இணைகையில் சற்றேனும் முணுமுணுக்காத மனதோ இன்று அனைத்து உரிமைகள் இருந்து இணைந்தபோதும் தவியாய்த் தவித்தது.

 

அவனை விட்டு விலகவும் முடியாமல் அவனோடு முழுமனதாய் ஒன்றவும் முடியாமல் தன் மனதை அவனிடம் சொல்லி அவன் சந்தோசத்தைக் கெடுக்கவும் விரும்பாமல் தன்னோடு தானே போராடிப் போராடியே களைத்துப் போனாள் சித்ரா.

 

என்னதான் மனதில் சலிப்பு, வெறுப்பு, ஒட்டாமை, குறுகுறுப்பு இருந்தாலும் அவை எதையும் அவனிடம் காட்டவில்லை. காட்ட முடியவில்லை என்பதுதான் உண்மை!

 

அந்தளவுக்கு அவளையும் சந்தோசமாக வைத்துத் தானும் சந்தோசமாக இருந்தான் ரஞ்சன்.

 

இவ்வளவு நாட்களும் வேலை, வாழ்க்கையில் முன்னேறவேண்டும், கடமை என்று ஓடிய கணவன் இனியாவது மகிழ்ச்சியாக இருக்கட்டும் என்று எண்ணியவள், தன் உள்ளக் குமுறல்களை மறைத்துக் கொண்டாள்.

 

ஆனாலும், சிலவேளைகளில் அவன் அவளைக் கொஞ்சுகையில் இவன் நடிக்கிறானா அல்லது உண்மையாகப் பாசம் காட்டுகிறானா என்கிற எரிச்சலும் தோன்றியது.

 

அன்று கணவனும் மனைவியும் மதிய உணவை முடித்தவர்கள் சோபாவில் ஓய்வாக அமர்ந்திருந்தார்கள். ரஞ்சன் தொலைக்காட்சியில் மூழ்கியிருக்க, சித்ரா கணவனுக்காக ஆப்பிளைச் சிறுசிறு துண்டங்களாக வெட்டிக் கொண்டிருந்தாள்.

 

முழுக் கவனமும் அதில் இல்லாமல் தொலைக்காட்சியிலும் பார்வையைப் பதித்தபடி வெட்டிக் கொண்டிருந்தவளின் கையில் கத்தி இலேசாகக் கீறிவிடவே, “ஸ்ஸ்ஸ்..” என்றபடி கையை உதறினாள் சித்ரா.

 

“என்ன.. என்ன யாழி?” என்று பதறித் திரும்பியவனுக்கு, அவள் கையிலிருந்து கசிந்த இரத்தத்தைக் கண்டதும் கோபம் வந்தது.

 

“உன்னை யாருடி ஆப்பிளை வெட்டச் சொன்னது. நான் என்ன பல்லில்லாத கிழவனா? அப்படியே தந்திருக்கக் கடித்துச் சாப்பிட்டு இருப்பேனே..” அவளைக் கடிந்தவன், வெட்டுப்பட்ட அவள் விரலை சட்டென வாயில் வைத்து உறிஞ்சினான்.

 

சில நாட்களாகவே இனம் தெரியா உணர்வுகளால் மனதளவில் அலைக்கழிந்து கொண்டிருந்தவள், அவன் காட்டிய அக்கறையிலும் பாசத்திலும் திடீரென வெடித்தாள்.

 

தன் விரலை அவன் வாயிலிருந்து இழுத்துக் கொண்டு, “விடுங்கள்! போதும் உங்கள் நடிப்பு! இன்னும் எத்தனை நாட்களுக்குப் பாசம் காட்டுவதுபோல் நடிக்கப் போகிறீர்கள்?” என்று சீறிப் பாய்ந்தாள் சித்ரா.

 

முதலில் அதிர்ந்துபோய்ப் பார்த்த ரஞ்சனுக்கு அவள் சொன்னவை புரிய நெஞ்சுக்குள் வலித்தது.

 

“நடிப்பா? நானா? என்ன சொல்கிறாய் யாழி?”

 

“சும்மா சும்மா யாழி என்று கூப்பிடாதீர்கள். முதலும் இப்படிக் கூப்பிட்டுக் கூப்பிட்டுத்தானே என்னைக் காதலிப்பதுபோல் நடித்து ஏமாற்றினீர்கள். நானும் உங்களை நம்பினேனே. இப்போது எதற்கு பெரிய காதல் கணவன் போல் வேஷம் போடுகிறீர்கள்?”

 

நீண்ட நாள் மனக்குமுறலை அவள் கொட்டியபோது, ரஞ்சனோ பேசுவது அவள்தானா என்று நம்ப முடியாமல் அவளை வெறித்தான்.

 

சட்டென எழுந்தவன் ஒரு பிளாஸ்டரை எடுத்துவந்து அதை ஓட்டுவதற்காக அவள் கரத்தைப் பற்ற, “தேவையில்லை! என்னைப் பார்த்துக்கொள்ள எனக்குத் தெரியும்!” என்றாள் சித்ரா.

 

கோபத்தோடு ரஞ்சன் அவளை முறைக்கவும் அவள் கை தானாக நீண்டது. எதுவும் சொல்லாமல் விரலில் பிளாஸ்டரை ஒட்டி விட்டவனின் முகமோ பாறையென இறுகிப் போயிருந்தது.

 

அவளுக்கு எதிர் சோபாவில் அமர்ந்து, “சொல்லு, நீ இப்படிக் கோபப் படும் அளவுக்கு நான் என்ன செய்தேன்?” என்று கேட்டான்.

 

“ஏன்? நீங்கள் ஒன்றுமே செய்ததே இல்லையா? அவ்வளவு நல்லவரா?” என்று இடக்காகக் கேட்டாள்.

 

ஒருமுறை விழிகளை இறுக மூடித்திறந்தான் ரஞ்சன்.

 

“அதெல்லாம் முடிந்த கதை, பழையது என்று அன்று சொன்னேனே..”

 

“நீங்கள் சொன்னால் சரியா? உங்கள் துரோகத்தால் பாதிக்கப்பட்டவள் நான். என்னால் எப்படி அதையெல்லாம் ஒதுக்க முடியும்? அல்லது இலகுவாக ஒதுக்கும் எதையுமா நீங்கள் செய்தீர்கள்?”

 

“அப்போ.. அதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டுதான் நீ இவ்வளவு நாளும் என்னுடன் வாழ்ந்திருக்கிறாய். அதாவது நடித்திருக்கிறாய்.” என்று அவன் சொன்னபோது, சித்ரா வெகுண்டு எழுந்துவிட்டாள்.

 

“யாரைப் பார்த்து நடிக்கிறேன் என்கிறீர்கள்? என்னையா? அப்படிச் சொல்ல உங்களுக்கே நா கூசவில்லையா? நீங்கள்தான் நடிப்பவர். அன்று காதலனாக நடித்துவிட்டு என்னைக் கைகழுவ நினைத்தவர் இன்று கணவனாக வாழ்ந்துவிட்டு என்னை விட்டு ஓடமாட்டீர்கள் என்று என்ன நிச்சயம்?” என்று ஆவேசத்தோடு கேட்டவளை அதிர்ச்சியோடு பார்த்தான் ரஞ்சன்.

error: Alert: Content selection is disabled!!