“உன்னால் என்னைப் புரிந்துகொள்ள முடியுமா தெரியவில்லை. பிறந்ததில் இருந்து இன்றுவரை உன்னைச் சீராட்டிப் பாராட்டி வளர்க்க உன் அம்மா அப்பா இருக்கிறார்கள். உனக்கு ஒரு அநீதி நடந்தபோது, அதைத் தட்டிக் கேட்கவும், உனக்குத் துணையாக நான் இருக்கிறேன் என்று சொல்வதற்கும் உன் அப்பா இருந்தார். ஆனால் எனக்கு?
“பதினெட்டு வயதுவரை நானும் உன்னைப் போலத்தான். நான்தான் மொத்தக் குடும்பத்தின் இளவரசன். ஆனால் அதன் பிறகு? திடீரென்று எல்லாமே என் தலையில் விழுந்தது போலிருந்தது. சொந்தம் என்று நம்பியவர்கள் எலோரும் அந்நியமாகிப் போனார்கள். அவர்கள் எனக்குச் செய்தது அனைத்தும் நம்பிக்கைத் துரோகம். அதோடு, அதுநாள் வரை என்னையே சுற்றிச் சுற்றி வந்த ஒருத்தி என்னைத் தூக்கி எறிந்தது என் சுயமரியாதைக்கும், தன்மானத்துக்கும விழுந்த பெரிய அடி. என்னை அவமானப் படுத்தியவளைக் கட்டியே தீரவேண்டும், என்னைத் தூக்கி எறிந்தவர்களை மீண்டும் என்னிடம் வரவைக்கவேண்டும் என்று அப்போதே முடிவு செய்தேன். அப்படி அவர்களை என்னிடம் வரவைக்க வேண்டுமானால் நான் முன்னேறவேண்டும். ” என்றவனின் முகம், அன்றைய நினைவுகளில் பாறையாக இறுகிப் போயிருந்தது.
“அப்படி முன்னேற என்ன செய்வது? ஒன்றுமே தெரியவில்லை. வழி காட்டவோ ஆலோசனை சொல்லவோ யாருமின்றி, ஏன் என் மனதில் உள்ளதைப் பகிரக்கூட எவருமின்றித் தவித்திருக்கிறேன். எல்லாவற்றையும் முட்டிமோதி நானாக வெளிவரவேண்டிய கட்டாயம். ஆசையாசையாக எடுத்துப் படித்த படிப்பைக் கூட விட்டேன். படிக்கத்தான் முடியவில்லை என்றால் ஒரு கௌரவமான வேலைகூட கிடைக்கவில்லை. ஒரு செருப்புக்கடையில் இன்னொருவரின் காலைப் பிடித்து செருப்பை மாட்டும்போது, கண்டவர்களினதும் காலைப் பிடிக்கும் அளவுக்குக் கேவலமாகப் போனோமா என்று மனதளவில் வெட்கி, வேதனைப்பட்டு கருகியே போனேன். செத்துவிடலாம் போல இருக்கும். அம்மாவையும் நித்தியையும் நினைத்துத்தான் எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டேன். எந்த வேலையானாலும் குறைந்தது இல்லைதான். ஆனால் அந்தப் பக்குவம் அப்போது இருக்கவில்லை. அவமானமாக இருந்தது. நான் மிகவும் கீழ்த்தரமாகப் போய்விட்டது போல் அசிங்கமாக இருந்தது. என்னோடு படித்த நண்பர்களின் முகத்தைக்கூடப் பார்க்க முடியாத அளவுக்குக் கேவலமாக உணர்ந்தேன். சிரிக்க மறந்து, பேச மறந்து, மற்றவர்களைப் போன்ற இயல்பான வாழ்க்கையை இழந்து மனதாலும் உடலாலும் இறுகிப்போய் இருந்தேன். அப்போதான் நீ எல்லோர் முன்னிலையிலும் என்னை அறைந்தாய்.” என்றவனை அதிர்ச்சியோடு பார்த்தாள் சித்ரா.
காரணம், அதுவரை நேரமும் வருத்தத்தோடு சொல்லிக்கொண்டு இருந்தவனின் முகம் இப்போது கோபத்தில் ஜொலித்தது. அந்தக் கோபம் அவள் மீதா?
“அப்படி நீ என்னை அடிப்பதற்குக் காரணம் என்ன? என்னுடைய ஏழ்மை தானே? உன் கடையில் நான் கூலிக்கு வேலை செய்பவன் என்கிற இளக்காரம் தானே? சாதனா என்னை ஒதுக்கக் காரணம் என்ன? இவனொரு பிச்சைக்காரப் பயல் என்கிற எண்ணம் தானே? என்னைப் பெற்ற அம்மா கூட என்னை நம்பவில்லை. அவரும் தன் கணவர், அவர் வீடு என்று சுயநலமாகத்தானே சிந்தித்தார். அப்படி இந்த உலகம் எனக்குக் கற்றுத் தந்ததே சுயநலத்தை மட்டும்தான். ஏழையாக இருந்தால் ஏறி நின்று மிதிப்போம் என்பதைத்தான்! அதனால் எனக்குள்ளேயே ஒரு வெறி. எப்படியாவது முன்னேறிக் காட்டவேண்டும் என்கிற வெறி. என் இலக்கை நோக்கி நான் ஓடத் தொடங்கியபோது, அதற்குத் தடையாக வரும் யாரையும், எதையும் தூக்கியெறியத் தயாராகத்தான் இருந்தேன். எனக்கு எதைப் பற்றியும் கவலையில்லை. யாராவது என்னைப் பற்றி என் மனதைப் பற்றி யோசித்தார்களா? நான் கஷ்டப் பட்டபோது உதவினார்களா? இல்லையே! பிறகு எதற்கு நான் யாரைப் பற்றியும் யோசிக்கவேண்டும் என்கிற கோபம்!” என்று ஆணித்தரமாகத் தன் பக்க நியாயத்தைச் சொன்னவனை அசந்துபோய்ப் பார்த்தாள் சித்ரா.
வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றி பெறவேண்டும் என்கிற துடிப்போடு போராடும் ஒரு வேங்கையாகவே அவள் கண்ணுக்குக் தெரிந்தான் அவன்.
“என்னை அவமதித்த அத்தனை போரையும், உன்னையும் சேர்த்துப் பழிவாங்க வேண்டும் என்கிற வன்மமே என் மனதில் எழுந்தது.” என்று நிமிர்ந்தே சொன்னவனை, அதிர்ச்சியில் விழிவிரியப் பார்த்தாள் சித்ரா.
“அப்போதுதான் கண்ணன் அண்ணா மூலம் அந்தக் கடை வந்தது. எனக்கு முன்னேறக் கிடைத்த ஒருவழியாக அதை எண்ணி, உன் அ..அப்பாவின் கடையில் கிட்டத்தட்டக் காசைக் க..களவெடுத்தேன்..” என்று சொல்லி முடிக்க முதலே அந்தக் கம்பீரமான ஆண்மகனின் தேகம் கூனிக்குறுகிப் போனது.
அவள் முகத்தைப் பார்க்கவே வெட்கி முகத்தைத் திருப்பிக் கொண்டான். விறைத்த தேகமும் இறுகிய கைகளும் அவன் அவமானக் குன்றலில் இருந்து தன்னைக் கட்டுப்படுத்தப் போராடுவது புரிந்தது.
அதுவரை தன் பக்க நியாயத்தை நிமிர்ந்து நின்றே சொன்னவனின் மனம் இப்போது என்ன பாடுபடும் என்பதை உணர்ந்தவள், “ரஞ்சன்..?” என்று அவன் பெயரை உச்சரித்தாள்.
அவளின் அனுதாபத்தையோ, இரக்கத்தையோ விரும்பாதவனின் தேகம் மீண்டும் நிமிர்ந்தது.
“ஆனால், எடுத்த பணத்தை அப்படியே திருப்பியும் போட்டேன். அதற்கான வட்டியை மா.. உன் அப்பாவிடம் கொடுக்க முடியாது என்பதால் தான் உனக்கு நகைகள் வாங்கித்தந்தேன். நீ மறுத்தாய்..” என்றவனிடம்,
“அது தெரிந்ததால்தான் நான் மறுத்தேன்.” என்றாள் சித்ரா.
அதிர்ச்சியோடு அவளைத் திரும்பிப் பார்த்தான் ரஞ்சன்.

