Skip to content
வான் மகள் சற்றே வேகமாகப் பூத்தூவ ஆரம்பித்திருந்தாள். கார்க் கண்ணாடிகள் பஞ்சுப்பொதியாக வந்து விழுந்த பனித் துகல்களைத் தாங்கி வெண்போர்வைக்குள் ஒளிந்து கொண்டன. முன் பின் கண்ணாடிகளில் இந்த விளையாட்டுக்கு அனுமதியில்லை என்று வைப்பர்கள் கடும் முனைப்பில் இருந்த சத்தம் மட்டுமே அங்கு. அந்தளவுக்கு காருக்குள் கனத்த அமைதி நிலவியது.
முன்னாலிருந்த பாதையைப் பார்த்திருந்த ரவிக்குமார் மனத்தில் எப்படி உணர்கிறார் என்று வரையறுக்க முடியவில்லை. அவருக்குக் கவினியைப் பார்த்ததுமே பிடித்திருந்தது. மகன் தெரிவு சரியானதே என்ற எண்ணம் வந்திருந்தது. ஆனால், அந்தப் பிள்ளை இப்படிச் சொல்கிறாவே!
நான் விரும்புகிறேன், அவளுக்கும் விருப்பம் என்று அத்தனை உறுதியாக சொன்ன மகன், அவள் இவ்வளவு அருகில் வந்தும் சந்திக்க முனையவில்லை. தான் வரும் வரை காத்திருந்தான். கவினியிடமிருந்து இந்த மறுப்பு இலகுவில் வந்துவிட்டாலும் என்று தெரிந்துதான் ஒதுங்கி நின்றானோ!
சரி சரி காதலில் இதுவும் சந்திக்கத்தான் வேண்டும். நிதானமாகத் திரும்பி மகன் முகம் பார்த்தார். அங்கு எந்த மாற்றமும் இல்லை. நேர் பார்வையில் காரைச் செலுத்திக் கொண்டிருந்தான். கரங்கள் இரண்டும் இறுக்கமாக ஸ்டியரிங் வீலை பற்றியிருந்ததில்தான் அவன் மனம் தெரிந்தது.
“சொறி அங்கிள்!” திடமாகச் சொல்ல முயன்றாள், கவினி. வார்த்தைகள் கலக்கமாக வந்தன.
“இப்ப என்னத்துக்கு சொறியெல்லாம். நான் முதலே சொன்னதுதான்மா. நிவிக்கு, தான் பார்த்த பிள்ளைய இவர் கட்டேல்ல எண்டுறது தான் பெரிய கோவம். மற்றும் படி இப்ப இப்பிடியே உங்கள வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போகவும் நாங்கள் தயார். பிரச்சினை என்ன வரக்கிடக்கு? ம்ம்…” என்றவர், மகனைப் பார்த்துவிட்டு அவளைப் பார்க்கும்படி நன்றாகத் திரும்பினார்.
“நீங்க வாய்திறந்து விருப்பத்தச் சொல்லேல்ல எண்டு மகன் அப்பவே சொன்னவர்தான். ஆனா… விரும்பிறிங்கள் எண்டதில ஆளுக்கு அவ்வளவு உறுதி! நீங்க அப்பிடி இல்ல எண்டுறீங்க!ம்ம்ம்” யோசனையாகப் பார்த்தார்.
அவள்தான் அவர் பார்வையை எதிர்கொள்ள முடியாது தடுமாறினாள். தன்னையுமறியாதே ரியர்வியூவை வேறு பார்த்து வைத்தாள். அதில் சேந்தனின் இறுகிய முகமே தெரிந்தது.
“வேற ஆரையும் விரும்புறீங்களோம்மா? அப்பிடி இருந்தா இப்பிடியெல்லாம் கதைச்சுச் சங்கடப்படுத்திறது சரியில்ல. நீங்கதான் என்னை மன்னிக்கோணும்!” என்றிருந்தார்.
“ஐயோ அங்கிள் அப்பிடியெல்லாம் ஒண்ணுமில்ல. மன்னிப்பு எண்டு எல்லாம் என்ன அங்கிள்?” அவள் பதற்றமாகச் சொல்ல, மகனோ, தகப்பனை முறைத்துப்பார்த்தான்.
மகன் பார்வையை எதிர்கொள்ளவில்லை, ரவிக்குமார்.
“ம்ம்… எப்பிடியும் கட்டத்தான் வேணும் என்ன? வேணும் என்ன, கட்டுவீங்கள் தானே? சரி, என்ர மகனோட பழகிப் பாருங்களன். பிடிச்சிருந்தா கலியாணம் செய்யலாம். எப்பிடி என்ர ஐடியா?” முறுவலோடு சொன்னவர் அவளை தடுமாறித் தத்தளிக்க வைத்தார். நண்பர்களுள் கதைத்துக்கொள்ளும் இயல்பில் அவர் இப்படிச் சொல்ல நெளிந்தாள், கவினி.
“அப்பா!” உறுமினான், சேந்தன்.
“என்னய்யா, உங்களுக்கு ஓகேதானே ?” கண்சிமிட்டியபடி கேட்டு வைத்தவர், அவன் நெருப்புப் பார்வைக்குள் முறுவலோடு அம்பிட்டுக் கொண்டார்.
“நீங்க எனக்கு அப்பாதானே?”
“இதில கூட உங்களுக்குச் சந்தேகமா மகன்?” நக்கலாகக் கேட்டவர், “அப்பாவாத்தான் இருந்தனான். நீங்கதானே இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டிருக்கிறீங்க. என்ன செய்யிறது சொல்லுங்க? அப்பாக்கு மகன் குடும்பம் சந்தோசமா இருக்கோணும்.” என்றுவிட்டுக் கவினியிடம் திரும்பினார்.
“இங்க தானேம்மா இருக்கப் போறீங்கள். பிறகென்ன, ஒருத்தர் ஒருத்தர நல்லாப் பழகிப் பாருங்க.” என்றவர், “ இப்ப ஏன் தம்பி நீங்க முறைக்கிறீங்க? நல்ல ஃப்ரண்ட்சா பழகி ஒருத்தர் பற்றி மற்றவர் தெரிஞ்சு கொள்ளுங்க எண்டுறன். பிறகு பிடிச்சாக் கலியாணம் செய்யலாம் எல்லா?” என்றவர், தன்னை நக்கலடிக்கிறாரா இல்லை உண்மையில் சொல்கிறாரா என்றிருந்தது, அவளுக்கு.
எச்சிலைக் கூட்டி விழுங்கியவளுக்கு அவருக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.
“அப்பா உங்கட ஒஃபிஸ் வந்திட்டு. தயவு செய்து இறங்கிக் கவனமாப் போங்கோ! பின்னேரம் ஊபரில வீட்ட வாங்கோ. இல்லாட்டி கோல் பண்ணுங்க.” சிடுசிடுத்தான் மகன்.
“நல்லதுக்குக் காலம் இல்லை என்ன மருமகளே! அவருக்காகத்தானே கதைக்கிறன், பாருங்க என்ன முறைப்பு முறைக்கிறார், இவருக்கு நீங்கதான் சரியான ஆள்!” என்றபடி இறங்கினார். அந்த மருமகளில் அவ்வளவு அழுத்தம் .
“நீங்களும் இறங்குங்கோ மா!”
கவினி பட்டென்று இறங்கிவிட்டாள்.
error: Alert: Content selection is disabled!!