Skip to content
இருந்தும் வேந்தனுள் கோபத்தீ கனன்றது. இயல்பாகவிருக்க முடியவேயில்லை. “இருந்து சாப்பிடுங்க, என்ன தேவையெண்டாலும் கேளுங்க, மதி பார்த்துக்கொள்!” என்றவன், “ஒரு முக்கியமான கோல் கதைக்க வேணும், கதைச்சிட்டு வாறன்.” விருட்டென்று வெளியேறுகையில் இலக்கியாவைப் பார்வையாலேயே எரித்துச் சென்றான்.
முதல் நாள் மாலை கடைகளுக்குச் சென்றிருந்தபோது, “நான் அப்பாக்கும் வாங்கிறன்.” முதல் ஆளாக ஆண்கள் பிரிவுக்குள் நுழைந்த இலக்கியா, தகப்பனுக்கு வாங்கிய போதே, கருநீலம் மற்றும் சாணிபச்சையில் இரண்டு டி ஷர்ட்டுகள் வேந்தனுக்கென வாங்கியிருந்தாள், மனதால் அவனுக்கு அணிவித்துப் பார்த்து மிகவும் நன்றாகவிருக்கும் என்ற எண்ணத்தில்.
இப்போது, அவள் வாங்கிப் பரிசளித்த கருநீல நிற டீ சர்ட்டுக்கு ஓஃப் வைட் சோர்ட்ஸ் போட்டுப் புறப்பட்டிருந்தானவன்.
அவளோ? இலக்கியாவின் கண்கள் கலங்கிவிட்டன. பின்னால் சென்று நடந்தைச் சொல்லிச் சமாதானம் செய்விக்க வேண்டும் போலிருந்தது. பரபரத்த உள்ளத்தை அடக்கிக்கொண்டு அங்கமரப் பெரும்பாடுபட்டாலும் அதைத்தான் செய்தாளவள்.
“நேற்று பிரேக் ஃபாஸ்ட் காணாது எண்டு சொன்னீங்களாம், இண்டைக்கு வடிவாச் சாப்பிடுங்க!” அவளையே பார்த்தபடி சொன்னான் மதி. இவள் பகிடிக்குச் சொன்னாளென்று தெரிந்துமே, தானே பார்த்துப் பார்த்து ஒவ்வொன்றையும் செய்துவிட்டு, ஆவலோடு அவர்களின் வருகைக்காக காத்திருந்தவன் ஏன் அப்படிச் சென்றானென்ற கேள்வி இவன் மனதுள்.
“அது சும்மா பகிடிக்கு!” என்ற நாதன் பார்வை இலக்கியாவை நோக்கி நகர்ந்தது. முகத்தின் கலக்கத்தை மறைக்க வேண்டுமே! கைபேசியைப் பார்ப்பது போல் விழிகளைத் தாழ்த்திக் கொண்டாளவள்.
“இப்பிடி ஃபோன நோண்டிக்கொண்டிருந்திட்டுப் பிறகு சாப்பிடெல்ல, காணாது எண்டு சாட்டு.” மாறன் சொல்ல, “அதுதான், கெதியா அலுவல முடியுங்க பிள்ளைகள்.” என்ற சுகுணா, “வேந்தன் சாப்பிட்டிட்டாரா?” வினவினார்.
“இன்னும் இல்ல ஆன்ட்டி. உங்களத்தான் பாத்துக்கொண்டிருந்தவன், இப்ப வருவான், நீங்க சாப்பிடுங்க.” என்றான் மதி.
இங்கு இப்படியிருக்க, நேரே தம் பகுதிக்குள் நுழைந்த வேந்தன் போட்டிருந்த டீசெர்ட்டை கழட்டிட உன்னிவிட்டு மனம் சம்மதியேன் என்று முறுக்கிக்கொள்ள, டப்பென்று அமர்ந்து கொண்டான்.
எவ்வளவு ஆசையாசையாகப் பார்த்துப் பார்த்து அதுவும் முதல் முதலாக ஒன்றை வாங்கினான். எப்படி அதை அவளிடம் சேர்ப்பிப்பதென்று குழம்பிக்கொண்டிருந்தவன், அவள் வருவாள் என்றெல்லாம் நினைத்திருக்கவில்லை. வெளியில் வர வைத்துக் கொடுக்கவேண்டியதுதான் என்று நினைத்திருக்க, ஆரூரன், மாறன் சகிதமேயென்றாலும் வந்துவிட்டாளே! அவன் மனமறிந்தே வந்தது போலுணர்ந்தான் அவன்.
குளியலறையோடு இருக்கும் சிறுபகுதியில் தான் வோஷ் மெஷின் வைத்திருந்தார்கள். வந்த வேகத்தில் மாறன் குளியலறைக்குள் சென்றிருக்க, இவள், ஆடைகளை மெஷினுக்குள் போட்டுக் கொண்டிருந்தாள். அருகிலேயே இருக்கும் வரவேற்பறையில் அமர்ந்திருந்த ஆரூரனுக்குக் கதை கொடுத்தபடியே வந்திருந்தவன் நொடியில் அவள் கரம் பற்றி அந்தப் பையை வைத்திருந்தான், “நாளைக்குப் போடும்!” என்றபடி. அவள் திடுக்கிட்டுப் போனாலும் சட்டென்று சுதாகரித்து இன்னொரு பையை அவன் கரத்தில் திணித்துவிட்டுப் பார்த்த பார்வையை, அதிலிருந்த நெருக்கம் கலந்த நேசத்தை அவனால் எப்போதுமே மறக்க முடியாது. வாய் திறந்து சொன்னால் தானா? தன்னுள்ளத்தில், இவன் மீதாக இருக்கும் நேசத்தை துல்லியமாக உணர்த்தினாளவள். இதுதானென்று இல்லை, இதுவும் அப்படியொரு தருணம்.
அப்படியிருக்க, தமக்கையிடம் அந்த உடுப்பைக் கொடுப்பாளா ஒருத்தி!
இவன் இப்படிக் குழம்பியிருக்க கைபேசி கிணுகிணுத்தது. அவளோ! கோபமும் எரிச்சலும் மண்டிக்கிடந்த உள்ளம் அவளாக இருக்கும் என்றது. அதுபார்த்தால் அவன் அம்மா.
அவர் என்ன சொல்வாரென்று தெரியாதா? விடிந்த இந்தக் கொஞ்ச நேரத்தில் இதோடு நான்காவது முறை! எடுக்கவில்லையோ இன்னும் கொஞ்ச நேரத்தில் வாகனமோட்டுகையில் எடுத்துக் கொண்டேயிருப்பார்.
“ம்மா சொல்லுங்க!” எடுத்துக் காதில் வைக்கவும் மறுபுறம் படபடக்கவும் சரியாகவிருந்தது.
“பச்! திரும்ப திரும்ப சொன்னதையே சொல்ல வேணுமாம்மா? அதெல்லாம் நான் கவனமா இருப்பன், தேவையெண்டா நீங்க சொன்னபடி இன்னொரு ட்ரைவர் ஏற்பாடு செய்யிறன், நேர வந்து எல்லாம் சொல்லுறன் மா! இப்ப நேரமில்ல, இரவுக்கு எடுக்கிறன். ப்ளீஸ் மா!” கெஞ்சிக் கொஞ்சி அவன் வைக்கவும், “நீ சாப்பிடேல்லையா? நாதன் அங்கிள் எங்க எண்டு கேட்டுக் கொண்டிருக்கிறார்.” மதி வரவும் சரியாக இருந்தது.
“பச்! பசிக்கேல்ல…விடு!” நகர முயன்றவனைப் பிடித்து நிறுத்திவிட்டு முறைத்தான் மதி.
“நீ சரியில்ல வேந்தன். இப்ப என்ன புதுப் பிரச்சனை?”
“ஒண்டுமில்ல விடு!”
“இல்ல ஏதோ இருக்கு. அந்தப்பிள்ளையும் ஒண்டும் சாப்பிடேல்லை. சொல்லு, கதைக்காமல் பேசாமல் பார்வையாலயே சண்டை போடுற அளவுக்கு நெருக்கம் போல!”
“விடுடா…நீ வேற. சாப்பிடேல்லையா அவள்?” நடக்கத் தொடங்கியிருந்தான்.
“என்ன நடந்தது எண்டு சொல்லன்டா.”
“நேற்று நான் வாங்கிக் குடுத்த…” தொடங்கி, “கவி அந்த உடுப்போட முன்னால வந்திருக்க எனக்கு எப்பிடி இருந்திச்சு தெரியுமாடா?” என்றான் ,கோபத்தோடு.
“ஓ!” இழுத்தான் மதி.
“ஒருவேள அக்கா தங்கச்சி தானே, ஆசையில கேட்டு மாறிப் போட்டிருக்கலாம்.” சொல்லவும் செய்தான்.
“அதெப்படிடா? கேட்டா இவள் குடுப்பாளோ!? இப்ப அவள் வாங்கித் தந்ததை நான் போட்டிருக்கிறன் தானே? நீ ஆசைப்பட்டுக் கேட்டால் தந்திருவனா என்ன?”
முறைத்தான் மதி. “அந்தளவுக்கு ஆகிப்போச்சு! கண்டதும் காதல் எண்டா அதெல்லாம் வெறும் நடிப்பு எண்டு கூட சிலர் சொல்லியிருக்கீனம், எனக்கு நல்லா நினைவிருக்கு வேந்தன். உனக்கு அதேதும் நினைவிருக்கா என்ன?” கேலியோட கேட்டு வேந்தனிடம் முறைப்பை வாங்கிக்கொண்டான்.
“மனுசர் ஏதோ இதில இருக்க உனக்குக் கடி!” கதைத்தபடி உணவுக்கூடம் வந்திருந்தார்கள்.
அங்கேயோ, காலையுணவுக்கான பணத்தைச் செலுத்துவதில் மும்முரமாக நின்றனர், நாதனும் மாறனும்.
“அங்கிள் என்ன நீங்க எவ்வளவு சொன்ன பிறகும்.” என்று சென்ற மதி, நாதனை அப்பால் நகர்த்த முனைந்தான்.
“இல்ல தம்பி நேற்றும் இப்பிடித்தான் நீங்க, இது சரியில்ல. வாங்குங்கோ.” என்றார் நாதன்.
“சொன்னால் கேளுங்கோ அங்கிள், நேற்று வேந்தன் தந்த ட்ரீட், இண்டைக்கு எங்கட யாழ் ட்ராவல்ஸ் தன்ர கஸ்டமருக்குத் தாறது. அப்பத்தானே அடுத்த முறையும் இங்க வருவீங்க.” சொல்லிக்கொண்டே நாதனை வெளியில் நடத்திக்கொண்டு வந்துவிட்டான், இழுக்காத குறையாக.
“வேந்தன் எங்க போயிட்டீங்க சாப்பிடேல்லையா?” மாறன் கேட்க, “அம்மாட கோல்…அதுதான். நீங்க எல்லாரும் வடிவா சாப்பிட்டாச்சா? நான் ஒரு பத்து நிமிசத்தில வாறன்.” என்றபடி, தனக்கு ஒரு டோஸ்டை எடுத்துக்கொண்டு அமர்ந்தவன், மறந்தும் இலக்கியாவைப் பார்க்க முனையவில்லை. அவள் செயலை அந்தளவுக்கு இலகுவாக எடுக்க முடியவில்லை.
இலக்கியா அங்குதான் நின்று கொண்டிருந்தாள். பசித்தும் உண்ண முடியவில்லை. அதையும் இதையும் சொல்லிச் சமாளித்துவிட்டு எழுந்தவள் விசுக்கென்று கோபத்தோடு சென்றவன் எங்கே என்றுதான் பார்த்துக்கொண்டிருந்தாள். வந்தவன் அவளைக் கடந்து சென்றும் ஏனென்றும் பார்க்கவில்லை. அருகில் வந்து கொண்டிருந்த மதி தான் நட்போடு முறுவலித்துவிட்டுச் சென்றிருந்தான்.
error: Alert: Content selection is disabled!!