இணைபிரியா நிலை பெறவே 18 – 1

அன்று நிலையிழந்து நடந்துவிட்டதை உணர்வதற்கு சகாயனுக்கு நிறைய நேரம் பிடிக்கவில்லை. அவள் சொல்லிவிட்டுப் போன வார்த்தைகள் ஒவ்வொன்றும் உள்ளே இறங்க இறங்க அப்படியே நின்றுவிட்டான்.

அப்போதுதான் என்ன காரியமெல்லாம் செய்துவைத்திருக்கிறோம் என்றே விளங்கிற்று. பளார் பளார் என்று தன் கன்னத்தில் தானே அறைந்துகொண்டான். தடுக்க வந்த கிரியையும் பிடித்துத் தள்ளிவிட்டான்.

கிரி மீதும் மிகுந்த கோபம் உண்டாயிற்று. எப்போதுமே தன் சுயத்தை அளவுக்கதிகமாக நம்புகிறவன் சகாயன். அப்படியிருக்க கிரியுடன் சேந்து அவன் உருப்படாமல் போய்விடுவான் என்று அவள் சொன்னாள் என்றதும் மொத்த நிதானத்தையும் இழந்துவிட்டான். செய்யக் கூடாத அத்தனை காரியங்களையும் செய்துவிட்டான்.

அதுவும் அவள் முன்னே சிகரெட் புகைத்து… அவனால் மேலே யோசிக்கக் கூட முடியவில்லை. தங்கையின் திருமணத்தின் மிகுதி நாளை எப்படிக் கடந்தான் என்றே அவனுக்குத் தெரியாது. சொல்லாமல் கொள்ளாமல் எங்கே போனாள் என்று ஆரபி குறித்த வினோதினியின் கேள்விகளையும் சமாளிக்க வேண்டியிருந்தது.

அந்த நிமிடமே அவளுக்கு அழைக்க அவனுக்குத் தைரியம் வரவில்லை. நிதானமாக இருந்து பேசுகிற அளவுக்கு நேரமும் சூழ்நிலையும் அமையவும் இல்லை. வீடு முழுக்க உறவுகள் நிறைந்திருந்தனர். இரண்டு நாள்கள் கடந்து, வினோவின் திருமணப் பரபரப்பு ஓரளவிற்கு கட்டுக்குள் வந்த நிலையில், “ஆரபி கொழும்புக்கு போயிற்றாளாம் அண்ணா.” என்று வினோ சொன்னதைக் கேட்டுத் திகைத்துப்போனான்.

ஒரு நாளில் பலமுறை கைப்பேசியை எடுப்பான். அவளுக்கு அழைக்கும் தைரியம் இல்லாமல் வைத்துவிடுவான். கிரியிடம் கூட முகம் கொடுக்கவில்லை. லைப்ரரியில் வைத்து என்ன நடந்தது என்று கேட்டுத் தெரிந்துகொண்டவனுக்குக் கிரி மீது கண்மண் தெரியாத கோபம் உண்டாயிற்று.

“நீ எதையும் வேணுமெண்டு செய்யிறியாடா?” என்றான் தன் மனத்தை மறைக்காமல்.

“டேய் மச்சான்?” என்று திகைத்தான் கிரி.

“அங்க நடந்தது வேற என்னவோ. நீ சொன்னவிதம் அப்பிடி இருக்கேல்ல. அவள் உன்னில இருந்த கோவத்துல சொன்ன மாதிரி இருந்தது. இதுல நான் சொன்னதை நம்பாம அவளிட்ட போய் என்னையும் உன்னையும் பிரிக்கப் போறியா எண்டும் கேட்டிருக்கிறாய். என்ன பிளான்ல இருக்கிறாய் நீ? நானும் அவளும் சேருறது உனக்கு விருப்பம் இல்லையா?”

“டேய் மச்சான். என்னடா இப்பிடி எல்லாம் கதைக்கிறாய்?” என்ற கிரிக்கு மெய்யாகவே கண்கள் கலங்கிப் போயின.

அவனுக்குத் தன் தவறு புரியவேயில்லை. அன்றும் சகாயனோடு கதை என்று சொல்வதற்குத்தான் அவளை மறித்துக் கதைக்க முயன்றான். என்ன, அவள் மீது நிரந்தரமாகத் தங்கிப்போன வெறுப்பு அவளை நிதானமாகவோ நல்ல முறையிலோ அணுக விடவில்லை.

திருமண வீட்டிலும் நான் என்று நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு திரிந்த நண்பனைக் காதல் என்கிற பெயரில் பிய்த்துத் தின்னுகிறாளே என்கிற கோபம்தான் பேச வைத்தது. கூடவே அவள் அவனைத் தவறானவனாகக் காட்ட முயல்கிறாள் என்றதும் சினம் வந்துவிட்டது.

அவனின் நண்பனானால் இதையெல்லாம் விளங்கிக்கொள்ளாமல் வேண்டுமென்றே அவர்களைப் பிரிப்பதற்காகச் செய்ததாக நினைக்கிறான்.

“நான் வேணுமெண்டு எதையாவது செய்வன் எண்டு நினைக்கிறியாடா? அதுவும் உனக்கு.” என்றான் மிகுந்த மனத்தாங்கலோடு.

முகத்தைத் திருப்பிக்கொண்டு பதில் சொல்லாமல் இருந்தான் சகாயன். அவனையே சில கணங்களுக்குப் பார்த்துவிட்டு, “உன்னையும் என்னையும் ஆரும் பிரிச்சிடக் கூடாது எண்டு நினைச்சனானே தவிர, உன்னையும் அவளையும் பிரிக்க நினைக்கேல்லையடா.”என்று சொல்லிவிட்டு எழுந்து போய்விட்டான் கிரி.

அதன் பிறகு இவனைப் பார்க்க வரவில்லை. தனக்கு எந்த உறவையும் கையாளத் தெரியவில்லையோ என்கிற கேள்வியும் குழப்பமும் அவனைப் போட்டு அழுத்தின.

வினோவின் திருமணத்தில் வைத்தும் ஆரபியைப் பல புகைப்படங்கள் எடுத்திருந்தான் சகாயன். அவற்றை எடுத்துப் பார்த்தான். என்னதான் அவள் மறைக்க முயன்றாலும் நிரந்தரமாகத் தங்கிப்போன முகவாட்டத்துடனேயே இருந்தவளை இப்போது பார்க்கையில் நெஞ்சைப் பிசைந்தது.

இதை எடுக்கும்போதெல்லாம் ‘திரும்பியும் பாராமல் இருந்து என்னை வதைப்பது போதாது என்று உனக்கு என்ன சோகம்?’ என்று மனத்தினுள் கொந்தளித்தான். ஆனால் இப்போது? ஆறாத காயத்தைக் கொடுத்துவிட்டான். இனி எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவளோடு பேசுவான்?

பேசு என்று ஒரு மனமும், நீ செய்த காரியங்களுக்கு எல்லாம் உன்னால் என்ன நியாயம் செய்துவிட முடியும் என்று இன்னொரு மனமும் கேட்கையில் எப்படி அவளுக்கு அழைப்பான்?

ஆனாலும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு ஒருமுறை அவளுக்கு அழைத்தான். அழைப்புப் போகவில்லை. அவனை முற்றிலுமாகத் தடை செய்திருந்தாள்.

அவனோடு மட்டுமல்ல வினோதினியோடு, அவன் குடும்பத்தினரோடு என்று அவள் தன் உறவை முற்றிலுமாகத் துண்டித்துக்கொண்டிருந்தாள்.

அன்றைக்குப் பிறகு மூன்று வருடங்கள் கழித்து அன்று ஆனந்தனோடுதான் பார்த்தான். பார்த்த கணத்திலிருந்து அவளோடு பேச, சமாதானமாகிவிட, அவர்களின் உறவைப் புதுப்பித்துக்கொள்ள அவன் மனம் துடியாய்த் துடித்தது. அவளானாள் அசைந்து கொடுக்கவே மாட்டாளாம்.

error: Alert: Content selection is disabled!!