என் சோலைப் பூவே 13 – 1

அத்தியாயம்-13

 

 

கடை வாசலில் கால் பாதிக்கும் போதே சித்ராவின் விழிகள் ரஞ்சனைத் தேடின. அவனும் அவளைக் கண்டுவிட்டான். ஆனாலும் காணாதது போல் நின்றுகொண்டான்.

 

அவனை முறைத்துக்கொண்டே தந்தையுடன் உள்ளே சென்றவள், எதைச் சாட்டி அவருடன் கடைக்கு வந்தாளோ, அதை அவரின் தலையிலேயே கட்டிவிட்டு ரஞ்சனைத் தேடி வந்தாள்.

 

அவனருகில் சென்று, “என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள் உங்கள் மனதில்?” என்று படபடத்தாள்.

 

அவள் தன்னைத் தேடி வருவாள் என்பதை ஊகித்திருந்த ரஞ்சனும் மற்றவர்களின் பார்வை படாத இடத்திலேயே நின்றிருந்தான்.

 

இருந்தபோதிலும், “மெல்லக் கதை!” என்று அதட்டினான்.

 

சட்டென்று நிமிர்ந்து அவன் முகத்தைக் கூர்ந்து கவனித்தாள் சித்ரா. அதில், அன்று அவன் கடையில் வைத்துப் பார்த்த இளகல் மருந்துக்கும் இல்லை. அவன் விழிகளில் காதல் இல்லை. உதடுகளில் சிரிப்பில்லை.

 

மொத்தத்தில் பழைய ரஞ்சனாக இருந்தான். ஆனால், அந்த ரஞ்சனைத் தானே சித்ராவும் காதலித்தாள். எனவே, “என்ன இதயன், ஏதாவது பிரச்சினையா?” என்று இதமாகக் கேட்டாள்.

 

அதைக் கேட்டவனுக்கு உள்ளே சுருக்கென்று வலிக்க, அவளைப் பார்த்தான். அந்தப் பார்வையும் ஒரு நொடிதான். அவள் விழிகளில் இருந்த நேசம் அவனை என்னவோ செய்ய, வேகமாகத் தன் பார்வையைத் திருப்பிக் கொண்டான். “நீ பாட்டுக்கு என்னைத் தேடிவந்து கதைக்கிறாய். யாராவது பார்த்தால்?”

 

“அப்படிப் பார்த்தால் பார்க்கட்டும். ஏன், இதற்கு முன் நான் உங்களோடு கதைத்ததே இல்லையா.. சரி, அதை விடுங்கள். ஏன், நான் அழைத்தபோது எடுக்கவில்லை. ஒரு மெசேஜுக்கும் பதில் இல்லை.”

 

ஒதுங்க நினைப்பவனை விடாமல் துரத்திவந்து அக்கறை காட்டும் அவளின் அன்பு அவனைப் பலவீனப் படுத்தப் பார்த்தது.

 

அதைக் காட்டிக்கொள்ளாமல், “நேரமே இல்லை.” என்றான்.

 

“ஒரு இரண்டு நிமிடம் கூடவா இல்லை?” என்று கேட்டவளை முறைத்தான் ரஞ்சன்.

 

“ஆமாம்! இல்லைதான். இப்போ என்ன அதற்கு?”

 

“இப்போது எதற்கு உங்களுக்குக் கோபம் வருகிறது? நியாயமாகப் பார்த்தால் ஆத்திரப்பட வேண்டியவள் நான்தான்.” என்றவளை இடைமறித்தது அவன் பேச்சு.

 

“நீ எதற்கு ஆத்திரப் படவேண்டும்?”

 

“பிறகு கொஞ்சுவார்களா? என்னோடு கதைக்க ஒரு ஐந்து நிமிடம் கூடவா உங்களால் ஒதுக்க முடியாது? சரி, நேரமில்லை என்பதையாவது மெசேஜாகத் தட்டி விட்டிருக்கலாமே. ஏன் செய்யவில்லை? இதற்கு நீங்கள் என்னை விரும்பாமலேயே இருந்திருக்கலாம்.”.

 

“ஒருவரை ஒருவர் விரும்பினால் இதையெல்லாம் செய்யவேண்டும் என்று கட்டாயமா என்ன?” என்றவனின் பேச்சை அவள் இடைமறிக்கப் பார்க்கவும், கையை நீட்டித் தடுத்தான் ரஞ்சன்.

 

“நான் சொல்வதைக் கேள். இப்படித் தனியாக நாமிருவரும் நின்று கதைப்பது நல்லதில்லை. இனிமேல் இப்படி என்னைத் தேடிவந்து கதைக்காதே. உன் அம்மாவுக்கோ அப்பாவுக்கோ தெரிந்தால் பிரச்சினை. அதோடு, காதலிப்பவர்கள் இந்தக் கைபேசியில் கதைப்பது, மெசேஜ் அனுப்புவது எல்லாம் செய்யவேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. யார் செய்தாலும் என்னால் முடியாது. அதனால் இனி நீயும் எனக்கு அழைக்காதே. அப்படியே அழைத்தாலும் நான் கதைக்க மாட்டேன். அதோடு, நீ உன் படிப்பைக் கவனி. நான் என் வேலையைக் கவனிக்க வேண்டும்.” என்றான் அவன்.

 

“சரி! இனி இப்படி உங்களைத் தேடிவந்து கதைக்கவில்லை. ஆனால்,கைபேசியிலும் கதைக்க வேண்டாம், மெசேஜும் அனுப்ப வேண்டாம் என்றால் வேறு என்னதான் செய்வது?” என்று கேட்டாள் சித்ரா.

 

பதில் சொல்லமுடியாமல் அவன் நிற்க, “வருகிறீர்களா, வெளியே எங்கேயாவது போவோம்?” என்று வேண்டுமென்றே கேட்டவளை முறைத்தான் அவன்.

 

“அதற்கும் மாட்டீர்கள். இப்படி ஒரு வழியிலும் உங்களோடு கதைக்காமல் என்னால் இருக்க முடியாது இதயன்.” என்றவளை, ஒருவித இயலாமையுடன் பார்த்தான் அவன்.

 

முடிந்தவரை அவளைத் தள்ளி வைக்கலாம் என்று பார்த்தால் அதற்கும் விடுகிறாள் இல்லை. ஒதுங்க நினைத்தாலும் தேடிவந்து கதைக்கிறாள்.

 

அவளது பிடிவாதக் குணமும், அவன் மீது கொண்ட காதலும் ஒன்றாகச் சேர்ந்து அவனை ஆட்டிப் படைத்தது. அவனைப் புரிந்து கொள்கிறாள் இல்லையே என்றிருந்தது. தேடிவந்து நேசக்கரம் நீட்டும் அவளிடம் அவனாலும் ஒரு அளவுக்கு மேல் ஒதுங்க முடியவில்லை.

 

“இவ்வளவு நாளும் எப்படி இருந்தாயோ அப்படியே இரேன்..” என்றவனை இப்போது அவள் முறைத்தாள்.

 

“உங்களை..! போயும் போயும் உங்களைக் காதலித்தேனே நான்.” என்று பல்லைக் கடித்தவள், சொன்னாள்.

 

“முன்னர் மாதிரி இருப்பதற்கு நானும் நீங்களும் யாரோ கிடையாது. அதனால் நீங்கள் என்னுடன் தினமும் கைபேசியில் கதைக்க வேண்டும். நான் மெசேஜ் அனுப்பினால் பதில் வரவேண்டும். இல்லையானால் என்ன ஆனாலும் சரி என்று இங்கே வந்து உங்களுடன் கதைப்பேன். அப்படியே யாராவது பார்த்தாலும் என்ன நடக்கும்? நம் திருமணம் தானே. அதற்கு நான் எப்போதோ தயாராகிவிட்டேன்..” என்றாள் அந்தப் பிடிவாதக்காரி.

 

அவன் மறுத்தும் உன்னோடு கதைப்பேன், நீயும் கதைக்கவேண்டும் என்றவளின் பால், எவ்வளவு தடுக்க முயன்றும் அவன் மனம் சாய்ந்துகொண்டே சென்றது.

 

அதோடு, அவனாக வேலையை விடும்வரைக்கும் அவனுக்கு அந்தக் கடையில் வேலை செய்தாகவேண்டும். அதற்கு அவளால் எந்தப் பிரச்சினையும் வரக்கூடாது என்றும் நினைத்தான். எனவே, அவள் கடையில் வைத்துக் கதைக்கமாட்டேன் என்றதே போதுமானதாக இருக்கச் சம்மதித்தான் ரஞ்சன்.

 

அவன் சம்மதித்த பிறகே அவனை விட்டு சந்தானத்திடம் சென்றாள் சித்ரா. அவருக்கு ஓய்வைக் கொடுத்துவிட்டு மெய்யாகவே கணக்கு வழக்குகளைப் பார்க்க ஆரம்பித்தாள்.

 

வேலை ஒருபக்கம் நடந்தபோதும், அவ்வப்போது கடைக்குள் வந்து ரஞ்சனைப் பார்ப்பதும் யாரும் பார்க்காதபோது அவனைப் பார்த்துக் கண்ணடிப்பதும், நாக்கைத் துருத்திக் காட்டுவதும், குறுஞ்சிரிப்பு மின்ன அவனையே விழிகளால் தொடர்வதும் என்று அவனைச் சித்தரவைதை செய்யத் தவறவில்லை அந்தச் சித்திரப் பெண்.

 

உள்ளூர அதையெல்லாம் ரசித்தபோதும், வெளியே முறைத்தான் ரஞ்சன். அவனது இயல்பு அதுதான் என்று கணித்திருந்த சித்ராவும் அதைப் பற்றியெல்லாம் பெரிதாகக் கவலைப் படவும் இல்லை. தன் குறும்புச் செயல்களை நிறுத்தவும் இல்லை.

 

அதன்பிறகு வந்த நாட்களில் எல்லாம் சித்ரா அவனுக்கு அழைக்கத் தவறியதுமில்லை. அவன் அவளின் அழைப்புக்களை ஏற்கத் தவறியதும் இல்லை. ஆனால், முடிந்தவரை சுருக்கமாகத் தன் பேச்சுக்களை முடித்துக் கொண்டான்.

 

அப்படியே ஓடிப்போனது நாட்கள். மாத முடிவை நெருங்குகையில் அந்த மாதத்துக்கான மொத்த வருமானமே மூன்று லட்சங்களை நெருங்கியது ரஞ்சனுக்கு. அவனே எதிர்பாராத வியாபாரம்!

 

உடனேயே சந்தானத்தின் இரண்டு லட்சங்களை மீண்டும் அவரது வங்கியில் வைப்புச் செய்தான்.

 

மாதக் கடைசியில் மட்டுமே நிலுவையைச் சரிபார்க்கும் சந்தானத்துக்கு, மாதத் தொடக்கத்தில் எடுக்கப்பட்ட பணம் மாதக் கடைசியில் வைப்புச் செய்யப் பட்டது தெரியவராமலேயே போனது.

 

பல வருடப் பழக்கம் என்பதால், வங்கியையும் அவர் சந்தேகப் படவில்லை. ரஞ்சனையும் சந்தேகப் படவில்லை.

 

அடுத்த மாதமும் பிறந்தது. முதல் வாரத்தில் சந்தானம் வங்கியில் போடச் சொல்லிக் கொடுத்த பணத்தில் ஒன்றரை லட்சங்கள் எடுத்தவன், தன்னிடம் இருந்த ஒரு லட்சத்தையும் சேர்த்துச் செருப்புகளைக் கொள்வனவு செய்தான்.

error: Alert: Content selection is disabled!!