என் சோலைப் பூவே 18 – 2

எப்போதும் சிடுசிடுப்பதுதான் அவனது இயல்பு. அதை அவள் அறிவாள் தான்! ஆனால் இந்தக் கடுமை? அவளையே அவனுக்காகக் கொடுத்த பிறகும் ஏன் இந்த அந்நியத் தன்மையும் கடுமையும்?

 

அன்றைய உறவின் பிறகு அவனை இனி அவளிடம் இருந்து யாராலும் பிரிக்க முடியாது என்று நினைத்தாளே! அது தவறோ என்று நினைத்த மாத்திரத்தில் அடிமனதில் ஒருவிதப் பயம் ஊற்றெடுத்தது.

 

அவன் பிரிந்துவிட்டால்? அவள் கதி என்ன? அப்படிச் செய்வானா? இல்லையில்லை! நிச்சயம் செய்யமாட்டான். அவன் அப்படியானவன் அல்ல!

 

தனக்குத் தானே ஆறுதல் சொல்லிக் கொண்டவளுக்கு அவன் பேசிய பேச்சுக்கள் நினைவில் ஆடின.

 

அதுவும் அவள் சும்மா இருந்து அப்பாவின் பணத்தைச் செலவு செய்வதாகச் சொல்கிறானே. அவள் என்ன அந்தளவுக்குச் சோம்பேறியா? அல்லது உழைக்கப் பிடிக்காதவளா?

 

ஏற்கனவே நொந்திருந்த மனதை அவன் பேச்சுக்கள் இன்னும் பெரிதாகக் காயப்படுத்தியதில் பிடிவாதமாக ஒரு முடிவை எடுத்தாள். நான் ஒன்றும் சும்மா இருந்து உண்ணவில்லை என்று அவனுக்குக் காட்டவேண்டும் என்று எண்ணினாள். என்னாலும் முடியும் என்று நிரூபிக்க நினைத்தாள்.

 

அடுத்தநாள் கலையே எழுந்தவள் கடைக்குச் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்த தந்தையிடம் சென்றாள்.

 

வெளியே செல்லத் தயாராக, அதுவும் சேலையில் வந்த மகளை ஆச்சர்யமாகப் பார்த்தார் சந்தானம். “என்னமா எங்கே போகப் போகிறாய்? அதுவும் சேலையில், உன் தோழிகள் யாருக்காவது பிறந்தநாளா?”

 

தந்தை சாதாரணமாகக் கேட்ட கேள்வி கூட அவளைக் குத்தியது. அதுநாள் வரை இருபத்தியிரண்டு வயது முடிந்திருந்த போதும், மனதளவில் விளையாட்டுத் பிள்ளையாகவே இருந்தவளுக்கு, இப்போது தான் பெரியவள் ஆகிவிட்ட உணர்வு தோன்றியிருந்தது.

 

நடந்துவிட்ட ஒரு நிகழ்வு வாழ்க்கையையே மாற்றிப் போடும் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை. நடந்து முடிந்ததை இனி யாராலும் மாற்ற முடியாது என்பதையும் வேதனையோடு உணர்ந்துகொண்டாள்.

 

அதனால்தான், இனித் தந்தையின் கடைகளைத் தானே பார்த்துக்கொள்ள முடிவு செய்திருந்தவளுக்கு, அங்கே செல்கையில் சேலையை அணியத் தோன்றவும் அணிந்துகொண்டாள்.

 

“ஒருவருக்கும் ஒன்றுமில்லை. நான் நம் கடைக்குப் போகப்போகிறேன்.” என்றாள் தகப்பனிடம், மனதின் வேதனைகளை மறைத்து.

 

செயல், பேச்சு, பார்வை எதிலுமே வெளிப்படைத் தன்மையோடு இருந்தவளிடம் பூடகமாகப் பேசும் தன்மை புகுந்துவிட்டதை வலியோடு உணர்ந்தாள்.

 

மகள் சொன்னதக் கேட்ட சந்தானத்தின் புருவங்கள் சுருங்க, அவளை கேள்வியாக ஏறிட்டார். நானும் கடைக்கு வரப்போகிறேன் என்றால், அவரோடு அவள் வரப்போகிறாள் என்று அர்த்தம். இதென்ன போகப் போகிறேன் என்கிறாள் என்று எண்ணியவர் அதையே மகளிடமும் வினவினார்.

 

“அப்படி என்றால் இனி நீங்கள் வீட்டில் இருந்து அம்மாவின் சமையலுக்கு உதவி செய்யுங்கள் என்று அர்த்தம். நான் கடைகளைப் பார்த்துக் கொள்கிறேன் என்று அர்த்தம்.” என்று, தன்னைத் தந்தை கண்டுகொள்ளாமல் இருக்கக் கேலி பேசத் தொடங்கினாள் சித்ரா.

 

சந்தானத்தின் கண்ணோரங்கள் சிரிப்பில் சுருங்கிய போதும், “உன்னால் முடியுமா சித்து? அதோடு, திருமணமாகப் போகும் பிள்ளை. எதற்குக் கஷ்டப் படுகிறாய். அதற்கு நீ வீட்டில் இருக்கும் இந்தக் கொஞ்ச நாட்களும் உன் விருப்பப் படியே இரு. அப்பா கடைகளைப் பார்த்துக்கொள்வேன்..” என்றார் பாசத்தோடு.

 

“திருமணத்திற்குப் பிறகும் நான்தான் கடைகளைப் பார்த்துக் கொள்வேன். அதனால் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.” என்றாள் பிடிவாதக் குரலில்.

 

“அதெப்படி சித்து. மாப்பிள்ளை சம்மதிக்க வேண்டுமே. அதோடு திருகோணமலையில் தான் உனக்கு மாப்பிள்ளை அமையும் என்று சொல்ல முடியாதே.” என்றவரை முறைத்தாள் மகள்.

 

“எனக்குத் திருகோணமலையில் தான் மாப்பிள்ளை. அதோடு, என் அப்பாவுக்கு நான் உதவி செய்வதை அவன் என்ன தடுப்பது?” என்று எகிறியவளை, அதுவரை அப்பாவும் மகளும் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டிருந்த லக்ஷ்மி அதட்டினார்.

 

“வருங்காலக் கணவனுக்கு முதலில் மரியாதை கொடுத்துப் பேசிப் பழகு. இப்படியே கதைத்தாயானால் நல்ல வளர்ப்பு வளர்த்திருக்கிறோம் என்று எங்களைத்தான் குறை சொல்வார்கள்.” என்ற தாயாரை முறைத்தவளின் உதடுகள் ‘அவனுக்கு இந்த மரியாதையே போதும்’ என்று ரஞ்சனை எண்ணி முணுமுணுத்தன.

 

மகளின் உதடுகள் அசைவதைக் கவனித்துவிட்டு, “வாய்க்குள் என்னைத்தான் திட்டுகிறாள் உங்கள் மகள்..” என்றார் அவர் கணவரிடம்.

 

“நான் எதற்கு உங்களை வாய்க்குள் திட்ட? எனக்கென்ன பயமா? வாயைத் திறந்தே திட்டுவேன்.” என்று தாயிடம் சொன்னவள், தகப்பனிடம் திரும்பினாள்.

 

“இப்போது எதற்குத் திருமணத்தைப் பற்றிக் கதைக்க அப்பா? நான்தான் கடைகளைப் பார்த்துக் கொள்ளப் போகிறேன். இனி நீங்கள் வீட்டில் இருக்கிறீர்கள். திருமணம் முடிந்த பிறகு மிகுதியை யோசிக்கலாம்.” என்றாள் முடிவான குரலில்.

 

தாயைக் கேலியாகப் பார்த்தபடி, “நான் கடைக்குப் போகிறேன். நீங்கள் போய் அம்மாவுக்குத் தேங்காயைத் துருவிக் கொடுங்கள் அப்பா. பிறகாவது அம்மா சிரிக்கிறாரா பார்க்கலாம்.” என்றவள், பெற்றவர்களிடம் போய்வருகிறேன் என்று சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.

 

இனி என்ன சொன்னாலும் அவள் கேட்க மாட்டாள் என்பதை உணர்ந்த லக்ஷ்மி, மகளின் பின்னால் சென்றபடி,“காலைச் சாப்பாட்டையாவது சாப்பிட்டுவிட்டுப் போ சித்து..” என்றார் சத்தமாக.

 

அதற்கிடையில் ஸ்கூட்டியில் ஏறி அமர்ந்திருந்தவள், “அதை அப்பாவுக்கே போடுங்கள். இனி உங்களுக்கு வாய்த்த அடிமை அவர்தான். நான் கடையிலேயே பார்த்துக் கொள்கிறேன்.” என்றுவிட்டுப் பறந்தாள்.

 

சாப்பிடாமல் போகிறாளே என்கிற கோபத்தோடு உள்ளே வந்த மனைவியைக் கண்களில் கேலி மின்னச் சந்தானம் பார்க்க, “இங்கே என்ன பார்வை? போங்கள்! போய் உங்கள் மகள் சொன்னது போல தேங்காயைத் துருவுங்கள்.” என்றவராலும், கணவரின் கேலிப்பார்வையில் உண்டான சிரிப்பை மறைக்க முடியவில்லை.

 

அதன்பிறகான நாட்கள் சித்ராவுக்கு ஒருவிதப் பிடிவாதத்துடனேயே கழிந்தன. அவனைப் பார்க்கவேண்டும், அவனோடு கதைக்க வேண்டும், அவன் குரலைக் கேட்கவேண்டும் என்று பேராவல் எழுந்தபோதும் அவற்றை அவள் செய்யவில்லை.

 

மீண்டும் ஒருமுறை அவனிடமிருந்து சுடு சொற்களைப் பெற்றுக்கொள்ளும் திராணி அவளுக்கு இல்லை. உள்ளே அரித்துக் கொண்டிருக்கும் வேதனையே போதும். அவன் சொன்னது போல சித்திரை வருடப் பிறப்பு வரைக்கும் அவனுக்குத் தொல்லை கொடுக்காது தள்ளியே இருக்க நினைத்தாள்.

 

அந்தப் பிடிவாதம் மனதில் இருந்தபோதும், யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாத நேசத்தைப் பற்றியும், வெளியில் அதைக் காட்டிக் கொள்ளாமல் அவள் போடும் வேஷத்தைப் பற்றியும் பலதும் எண்ணித் தவித்தது அவள் மனது.

 

இப்போதெல்லாம் அடிமனதில் ஒருவிதப் பயம் அவளை ஆட்டிப்படைக்கத் தொடங்கியிருந்தது. அன்று அவனைச் சொந்தமாக்கி விட்டதுபோல் இருந்தாலும், இன்று அந்த நிகழ்வே நடுக்கத்தை கொடுக்கத் தொடங்கியிருந்தது. இனித்தான் அவள் அவனைப் பற்றிக்கொள்ள வேண்டியதன் கட்டாயமும் புரிந்தது.

 

முதலில் இயல்பாகத் தோன்றியிருந்த காதலும் நேசமும் இன்று ஒரு கட்டாயத்தின் கீழ் சென்றுவிட்டிருந்தது.

 

இந்த மனப் போராட்டத்துக்கு மத்தியிலும், கடைக்கு ஆட்கள் இல்லாமல் அவன் அவதிப்படுவதை நினைவில் வைத்திருந்தவள், தனக்குத் தெரிந்த ஒருவனை ரஞ்சனின் கடைக்கு வேலைக்கு அனுப்பினாள்.

 

அன்று அவளது ஸ்கூட்டியில் பிரேக் ஒழுங்காகப் பிடிக்கவில்லை என்று திருத்தக் கொடுத்தபோது, அந்தக் கடையில் வேலை செய்யும் நகுலன், முதலாளி எங்கே என்று உள்ளே எட்டிப் பார்த்துவிட்டு, “அக்கா, உங்கள் அப்பாவின் கடையில் எனக்கு ஒரு வேலை வாங்கித் தருவீர்களா? இங்கே முதலாளி அடிக்கிறார் அக்கா. சம்பளமும் ஒழுங்காககத் தருவதில்லை.” என்றான் கண்கள் கலங்க. அவளை நீண்ட நாட்கள் தெரியும் என்பதால் கேட்டான்.

 

உடனேயே அவள் நினைவுக்கு வந்தவன் ரஞ்சனே! வீட்டுக்குப் போகக் கூட நேரமில்லாமல் உழைப்பவனுக்கு நகுலன் உதவியாக இருப்பான் என்று எண்ணினாள்.

 

நகுலனும் நம்பிக்கையானவன் என்பதால், அவர்களின் கடைக்கும் வேலைக்கு ஆட்கள் தேவை என்பதை அறிந்திருந்த போதும், “அப்பாவிடம் இல்லை. ஆனால், எனக்குத் தெரிந்த இன்னொருவரிடம் அனுப்புகிறேன். போகிறாயா? அங்கேயும் உனக்கு வேலை கிடைக்கும். நல்ல சம்பளமும்.” என்று அவனிடம் கேட்டாள்.

 

முகம் மலரத் தலையாட்டியவன், அவளது ஸ்கூட்டி திருத்தியதுமே அதோடு சேர்ந்து அந்த வேலையையும் விட்டுவிட்டு அன்றே அவளோடு வந்துவிட்டான். வந்தவனை இப்போது எப்படி அந்தக் கடைக்கு அனுப்புவது என்கிற யோசனை எழுந்தது அவளுக்கு.

 

அன்று, ‘ரஞ்சன் உன்னைத் திருமணம் செய்துகொள்ள மாட்டான்..’ என்று சுகந்தனும் ஜீவனும் சொன்னதில் உண்டான கோபத்தில் அந்தக் கடைக்குப் போவதையே விட்டுவிட்டாள் சித்ரா.

 

பின்னே, அவளுடைய இதயனைப் பற்றி அவளிடமே குறையாகச் சொன்னால் அதை ஏற்க முடியுமா அவளால்? அல்லது அவர்களோடு பழகத்தான் முடியுமா? ரஞ்சனோடும் சித்திரை வருடப் பிறப்பு வரைக்கும் கதைப்பதில்லை என்று முடிவு செய்திருக்கிறாள்..

 

என்ன செய்யலாம்?

 

உடனேயே கைபேசியை எடுத்து, ‘எனக்குத் தெரிந்த ஒரு பொடியனை அனுப்புகிறேன். பெயர் நகுலன். நம்பிக்கையானவன். உங்களுக்கு உதவியாக வேலைக்குச் சேர்த்துக் கொள்ளுங்கள்.’ என்று ஒரு மெசேஜை ரஞ்சனுக்கு அனுப்பினாள்.

 

பிறகு நகுலனிடம் தன் கைபேசி இலக்கத்தை கொடுத்து, வேலைக்குச் சேர்ந்துவிட்டு எனக்கு அழைத்துச் சொல்லு என்று சொல்லி அவனை ரஞ்சனிடம் அனுப்பி வைத்தாள்.

 

அவள் வீட்டுக்குச் சென்றதும் நகுலன் அழைத்தான். “அக்கா, அந்த அண்ணா என்னை வேலைக்குச் சேர்த்துக் கொண்டார்க்கா. மிக்க நன்றிக்கா.” என்றவனிடம், “சரிடா. இனிச் சந்தோசமாக வேலை செய். ஏதாவது என்றால் எனக்கு அழைக்கத் தயங்காதே..” என்று சொல்லி வைத்தவளுக்கும், நீண்ட நாட்களுக்குப் பிறகு மனது கொஞ்சம் அமைதியாக இருந்தது.

 

அவள் அனுப்பிய ஒருவனை ரஞ்சன் வேலைக்கு அமர்த்திவிட்டானே!

 

அப்படியே நாட்கள் அதன்பாட்டுக்கு நகர, அன்று காலையில் எழுந்த சித்ராவுக்கு சற்றுக் களைப்பாக இருந்தது. இரவு நன்றாகத் தூங்கியும் இதென்ன காலையிலேயே முடியாமல் இருக்கிறது என்று எண்ணியபடி தன் வேலைகளை முடித்தவள், எப்போதும் போலக் கடைக்குச் சென்றாள்.

 

அங்கேயும் வேலைகளைப் பார்க்க முடியாமல், சோர்வு. நிராக முடியவில்லை, நடமாட முடியவில்லை. நேற்று அபியோடு கதைக்கையில் அவளும் இப்படித்தானே சொன்னாள்.. என்று எண்ணியவளின் நினைவுகள் கூட ஒரு நிமிடம் ஸ்தம்பித்தது.

error: Alert: Content selection is disabled!!