என் சோலைப் பூவே 19 – 1

அத்தியாயம்-19

 

ஒரு நிமிடம் தான் கேட்டது உண்மைதானா, சரியாகத்தான் கேட்டோமா என்று அதிர்ந்து நின்றாள் சித்ரா.

 

அவளின் சந்தேகத்தைத் தீர்க்கும் விதமாக, “பின்னே, நீ என் வீட்டுக்கு மருமகளாக வருவதால் எனக்கும் சந்தோசம்தான். நித்தியின் அப்பாவின் விருப்பமும் அதுதானே.” என்றார் இராசமணி சாதனாவிடம்.

 

அதைக் கேட்டவளுக்கோ பெரும் அதிர்ச்சி!

 

அன்று சுகந்தனும் ஜீவனும் சொன்னபோது கூட சிறிதும் நம்பினால் இல்லையே! அவர்கள் மீதுதானே கோபம் வந்தது. இதோ இன்றுவரை அந்தக் கடையின் வாசலை அவள் மிதிக்கவும் இல்லை. அவர்களோடு கதைக்கவும் இல்லை.

 

ஏன்?

 

அவளது இதயனைப் பற்றி அவர்கள் பிழையாகக் கதைத்துவிட்டார்கள் என்கிற ஆத்திரம்! அவன் நண்பர்களாக இருந்தும் அவளிடம் இப்படிச் சொன்னார்களே என்கிற கோபம்! என் இதயனை எனக்குத் தெரியாதா என்கிற கர்வம்.

 

அதைப் பற்றி அவள் அதற்குப் பிறகு சிந்தித்ததே இல்லையே!

 

ஏன், ரஞ்சனிடம் அதைக் கேட்கவேண்டும் என்று கூட எண்ணியதில்லை.

 

அவ்வளவு நம்பிக்கை. என் இதயன் எனக்குத் துரோகம் செய்யமாட்டான் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கை! அப்படி நம்பியது பிழையோ?

 

அதிர்ச்சி விலகாது, காதில் விழுந்ததை ஜீரணிக்க முடியாது ஸ்தம்பித்து நின்றவளின் பார்வையில் விழுந்தான் ரஞ்சன்.

 

அவனைப் பார்த்ததுமே வேதனையும் கண்ணீரும் விழிகளில் பொங்க, ‘இவர்கள் எல்லாம் இப்படிச் சொல்கிறார்களே.. இதற்கு நீ என்ன சொல்லப் போகிறாய்’ என்பதாக அவள் பார்க்க, அவனுமே நின்ற இடத்திலிருந்து அசைய முடியாமல் நின்றான்.

 

அங்கு அவளை எதிர் பாராமல் கண்டதில் அதிர்ந்தாலும், உடனேயே தன் உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டுவந்தவனின் புருவங்கள் சுழித்தன. அதுவே அவளின் உயிரின் ஆழம் வரை வலிக்க, துடித்துப்போய் அப்படியே நின்றாள் சித்ரா.

 

அதற்குள், “அங்கே நின்று என்ன செய்கிறீர்கள் ரஞ்சன் மச்சான். நேரமாகிறது வாருங்கள். கடையைத் திறக்க வேண்டாமா?” என்று அழைத்தாள் சாதனா.

 

சட்டென சித்ராவிடம் இருந்து பார்வையைத் திருப்பியவன், “இதோ..” என்றபடி சென்று சந்தனத்தை சுவாமிப் படங்களுக்கு முன்னால் வைக்க, விளக்கை ஏற்றுவதற்காக லைட்டரைக் கையில் எடுத்தாள் சாதனா.

 

“நீயும் அவளருகில் நின்றுகொள் ரஞ்சன். இருவருமாக விளக்கை ஏற்றுங்கள்..” என்றார், சாதனாவின் தாய் மல்லிகா.

 

அப்படி அந்தப் பெண்ணருகில் போய் நின்றுவிடமாட்டான் என்கிற நம்பிக்கையும், நின்றுவிடுவானோ என்கிற பயமுமாக சித்ராவின் விழிகள் கலக்கத்தோடு ரஞ்சனையே நோக்கின.

 

சித்ராவைத் திரும்பிப் பார்த்தான் ரஞ்சன். அவளருகில் சென்று நின்று விடாதீர்கள் என்று யாசித்தன அவளது விழிகள். ஒரு நொடி அவளையே நோக்கியவன் முகத்ததைத் திருப்பிக்கொண்டு சாதனாவின் அருகில் சென்று நின்று கொண்டான்.

 

சித்ராவின் நெஞ்சு அதிர்ந்தது. நடந்ததை நம்ப முடியாமல் ரஞ்சனின் முதுகை வெறித்தன அவள் விழிகள்!

 

ஆக, ஜீவனும் சுகந்தனும் சொன்னது உண்மைதான். அந்தப் பெண்ணும் அவன் தாயாரும் பேசிக்கொண்டதும் உண்மைதான்.

 

அப்படியானால் இங்கே அவள் யார்? அவளுக்கும் அவனுக்கும் என்ன தொடர்பு? நடந்துமுடிந்துவிட்ட உறவுக்குப் பெயர் என்ன? அவள் வயிற்றில் உதித்திருக்கும் சிசுவின் நிலை என்ன?

 

 

நினைக்க நினைக்கத் தன் பயங்கரமான நிலை அவளுக்கு மெல்லமெல்லப் புரியத் தொடங்கியது.

 

ஆக, அவன்மேல் அவள் வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கையை சிதைத்துவிட்டான்.

 

எவ்வளவுக்கு எவ்வளவு வலித்ததோ அவ்வளவுக்கு அவ்வளவு ஆத்திரமும் வந்தது.

 

இப்போது அவள் என்ன செய்யவேண்டும்?

 

தன் வாழ்க்கையின் திசையை நிர்ணயிக்கப் போகும் மிக முக்கியமான சூழ்நிலையில் தான் நிற்பதை அந்த நொடியில் உணர்ந்தாள்.

 

உடனேயே அவள் உடல் நிமிர்ந்தது. தப்பு செய்யாதவர்களிடம் இருக்குமே அசைக்க முடியாத உறுதி. அந்த உறுதி முகத்தில் துலங்க, “ஒரு நிமிடம்!” என்றபடி அவர்களை நெருங்கினாள்.

 

விளக்கை ஏற்றப் போன சாதனா என்ன என்பதாகப் பார்க்க, அங்கிருந்த மற்றவர்களின் பார்வையும் அவளைத் தொடர்ந்தது. சாதனாவின் கையில் இருந்த லைட்டரைப் பிடுங்கியவள், “தள்ளுங்கள்!” என்றுவிட்டு ரஞ்சனின் அருகில் நின்று விளக்கை ஏற்றினாள்.

 

அவளின் அந்த நிமிர்வில், யாரைக் கண்டும் அஞ்சாத துணிவில் ரஞ்சனே சற்று அசந்துதான் போனான்.

 

யாருமே இதைச் சற்றும் எதிர்பாராததில், நடப்பதை ஊகித்து, உணர்ந்து, தடுப்பதற்கு முதலில் விளக்கை ஏற்றிவிட்டிருந்தாள் சித்ரா.

 

“ஏய், என்ன செய்கிறாய்?”

 

“இது யார் ரஞ்சன்?”

 

“என்ன செய்கிறாள் இந்தப் பெண்.”

 

“என்னடா பார்த்துக் கொண்டிருக்கிறாய்..” என்று பலகுரல்கள், பதட்டத்துடனும், ஆத்திரத்துடனும், சினத்துடனும் ஒலிக்க, அதில் சிறிதும் பாதிக்கப் படாமல் இரு கரம் கூப்பி சுவாமியைக் கும்பிட்ட சித்ரா, அன்று போலவே இன்றும் திருநீறு சந்தனத்தை ரஞ்சனின் நெற்றியில் பூசிவிட்டாள்.

 

அதைப் பூசுகையில் சந்தித்துக் கொண்ட இரு ஜோடி விழிகளும் வெட்டிக் கொண்டன.

 

அவன் விழிகள் ஆத்திரத்துடன் அவளை உறுத்தது என்றால், ‘என் உரிமையை நீ தரும் இடத்திலும் நான் பெரும் இடத்திலும் இருப்பேன் என்று நினைத்தாயோ?’ என்று கேட்டது அவள் விழிகள்!

 

எனக்கானதை நான் யாருக்காகவும் எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்கிற பிடிவாதம் தெரிந்தது அவள் முகத்தில்!

 

சித்ராவின் செயலில் வெகுண்ட இராசமணி, “சித்ரா! நீ யார் என் மகனின் கடையில் விளக்கேற்ற?” என்று கேட்டார் ஆத்திரத்துடன்.

 

அவர் தன் சொந்தபந்தங்களின் முன்னால் அவமானப் படுத்தப் பட்டுவிட்டதாக உணர்ந்தார். அதோடு, சாதனாவும் அவள் குடும்பமும் வேறு நிற்கிறதே. அவர்கள் ரஞ்சனுக்கும் சாதனாவுக்குமான கல்யாணத்தை நிறுத்திவிட்டால், தன் கணவரின் ஆசை நிறைவேறாமல் போய்விடுமே என்கிற பதைப்பு.

 

ஆனால், அவரின் கோபத்துக்கு சிறிதும் அஞ்சாமல், “நான் யார் என்று உங்கள் மகனிடமே கேளுங்கள். சொல்வார்..” என்று நிமிர்ந்தே பதில் சொன்னாள் சித்ரா.

 

அதைக் கேட்ட இராசமணியே அசந்துபோனார். இவ்வளவு பேருக்கும் முன்னால் ஒரு பெண் துணிந்து ‘உன் மகனைக் கேள்’ என்று சொல்கிறாள் என்றால், அந்தத் தைரியத்தை யார் கொடுத்தது. என் மகனா? ஏன்? எப்படி?

 

சந்தேக விதை மனதில் விழ மகனைப் பார்த்தார். எல்லோருக்கும் முன்னால் அவரால் அதை வாய்விட்டுக் கேட்கமுடியாதே.

 

முகம் இறுக, சொந்தங்கள் எல்லோரும் அவர்களையே பார்த்துக் கொண்டிருக்கையில் ஒன்றும் சொல்ல முடியாமல் அவளை உறுத்தபடி நின்ற ரஞ்சனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, கடையப் பார்க்கும் விதமாக அவர்களை விட்டு விலகிச் சென்றாள் சித்ரா.

 

அவளை வெறுப்புடன் பார்த்துவிட்டு, “இங்கு என்னதான் நடக்கிறது அண்ணி?” என்று ஆத்திரத்துடன் கேட்டார் மல்லிகா.

 

“அது.. ஒன்றுமில்லை மல்லிகா. அந்தப் பெண் இவன் முதலில் வேலை செய்தானே, அந்தக் கடை முதலாளியின் மகள்.” என்று அவரைச் சமாளிக்கப் பார்த்தார் இராசமணி.

 

error: Alert: Content selection is disabled!!