என் சோலைப் பூவே 20 – 2

அப்போதும் ரஞ்சனிடம் இருந்து பதில் வராமல் போக, அதுவரை தான் மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதை அப்போதுதான் உணர்ந்தார் சந்தானம்.

 

“ரஞ்சன்? ஏன் அமைதியாக இருக்கிறாய்?” என்றவரின் மனதில் இனம்புரியா கலவரம் தோன்றியிருந்தது.

 

“பின்னே வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? உங்கள் மகளுக்கும் எனக்கும் கல்யாணம் என்கிறீர்கள். அது இது என்று ஏதேதோ சொல்கிறீர்கள். நான் கேட்டேனா உங்கள் மகளை எனக்குக் கட்டிவையுங்கள் என்று. அல்லது உங்கள் மகளிடம் என்றாவது சொன்னேனா உன்னை நான் கல்யாணம் செய்கிறேன் என்று?” என்று நிதானமாகக் கேட்டான் அவன்.

 

சந்தானத்துக்கு ஒருநிமிடம் ஒன்றுமே புரியவில்லை. இவன் என்ன சொல்கிறான்? தான் சரியாகத்தான் கேட்டோமா? என்று தடுமாறியவர், அடுத்து என்ன சொல்வது என்று தெரியாமல் மகளையும் கையிலிருந்த கைபேசியையும் மாறி மாறிப் பார்த்தார்.

 

அதுவரை அவரையே பார்த்திருந்த லக்ஷ்மி, அவரின் பார்வையில் கலவரமாகி கணவரின் அருகில் வேகமாக வந்து, “என்ன, என்னவாம் அவன்? என்ன சொல்கிறான்? ஏன் நீங்கள் இப்படி இருக்கிறீர்கள்?” என்று அவரின் கைகள் இரண்டையும் பிடித்து உலுக்கினார்.

 

சட்டென அதிர்ச்சி நீங்கியவராக, “பொறு. நீ கொஞ்சம் அமைதியாக இரு..” என்றுவிட்டு, கைபேசியை மீண்டும் காதுக்குக் கொடுத்து, “ஹ..லோ ரஞ்சன்..” என்றவரை இடைமறித்தான் அவன்.

 

“அங்கிள், இங்கே பாருங்கள். உங்கள் மீது எனக்கு நிறைந்த மரியாதை இருக்கிறது. அதற்காக நீங்கள் சொல்வதை எல்லாம் என்னால் செய்ய முடியாது. எனக்கு என் அத்தையின் மகள் தயாராக இருக்கிறாள். நீங்களும் உங்கள் மகளுக்கு மாப்பிள்ளை பார்ப்பதாகக் கேள்விப் பட்டேன். அப்படியே நல்லவனாகப் பார்த்துக் கட்டிவையுங்கள்.” என்று சொன்னவன், வைப்பதாகச் சொல்லிக் கைபேசியை வைத்தும் விட்டிருந்தான்.

 

மீண்டும் என்ன செய்வது ஏது செய்வது என்று தெரியாது நின்ற இடத்திலேயே சிலையாகி நின்றார் சந்தானம்.

 

நெஞ்சு வெடித்துவிடும் போலிருந்தது அவருக்கு. இத்தனை வருடகால வாழ்க்கையில் அவர் அனுபவித்திராத, சந்தித்திராத நிலைமை. அடுத்து என்ன செய்வது என்று தெரியாது நிற்கும் நிலை.

 

அவர் விழிகள் தன்னாலே மகளை நாடி ஓடின. ‘இப்படிச் செய்து விட்டாயேம்மா? இனி என்ன செய்து உன் வாழ்க்கையை நேராக்குவேன்’ என்கிற தவிப்பு இருந்தது அவர் விழிகளில்.

 

அவரின் விழிகளைப் பார்த்ததுமே ரஞ்சன் என்ன சொன்னான் என்று தெரியாதபோதும் சித்ராவின் விழிகள் கண்ணீரை மீண்டும் ஆறாகக் கொட்டத் தொடங்கின.

 

கணவரின் நிலையைப் பார்த்துப் பயந்த லக்ஷ்மி, “கடவுளே! என்னவென்றுதான் சொல்லித் தொலையுங்களேன். ஏன் இப்படி பிடித்துவைத்த கொழுக்கட்டை மாதிரி நிற்கிறீர்கள். எனக்குப் பெற்ற வயிறு பற்றி எரிகிறது. என்னவாம் அவன்? என்ன சொன்னான்?” என்று, ஆற்றாமையோடு பதறினார்.

 

அங்கிருந்த சோபாவில் தொப்பென்று தொய்ந்து சரிந்தவர், “அவன் அத்தை மகளைக் கட்டப் போகிறானாம். சித்துக்கு நல்ல மாப்பிள்ளையாகப் பார்த்துக் கட்டிவைக்கட்டாம்.” என்றார் ஈனஸ்வரத்தில்

 

சித்ராவுக்கு நெஞ்சு வெடித்துவிடும் போலிருந்தது. எப்படி? எப்படி முடிந்தது அவனால்? என்று அவள் தவிக்க,

 

“என்னது??” என்று அதிர்ந்த லக்ஷ்மி, “ஐயோ என் மகளின் வாழ்க்கை போச்சே. இனி என்ன செய்யப் போகிறோம்?” என்று வேதனை தாங்க முடியாமல் வெடித்து அழுதார்.

 

கண்களில் கண்ணீர் வடிய தகப்பனையே பார்த்துக் கொண்டிருந்த மகள் கண்களில் பாடவும், “எல்லாம் இவளால் வந்தது..” என்றபடி ஆவேசத்தோடு அவளை நெருங்கியவர் மீண்டும் அடிக்கத் தொடங்கினார்.

 

ஒருபக்கம் பிள்ளைச் சுமை போதாக்குறைக்குத் தாயின் கைகளினால் கிடைத்த அடி என்று ஏற்கனவே ஓய்ந்துபோய்க் கிடந்தவளை தகப்பன் சொன்ன விஷயம் முற்றாக ஒடுக்கியது.

 

இப்படி எல்லாம் சொன்னானா என்று நெஞ்சு உள்ளே கதறிக் கண்ணீர் வடிக்க, சுவரோடு சுவராக ஒண்டிக் கிடந்தவளை தாயார் அடிக்க, அதைத் தாங்கவும் முடியாமல் தடுக்கவும் முடியாமல் கிடந்தாள் சித்ரா.

 

“கேட்டியாடி, அவன் சொன்னதைக் கேட்டியாடி. கடவுளே இனி ஊரே காறித் துப்புமே.. உன் வாழ்க்கையை நீயே நாசமாக்கி விட்டாயே.. உன் தலையில் நீயே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டாயே. வயிற்றில் சுமையோடு நிற்கும் உன்னை இனி எவன் கட்டுவான். எத்தனை தரம் சொல்லியிருப்பேன் பெண் பிள்ளையாக வீட்டில் அடங்கி ஒடுங்கி இரு என்று. கேட்டாயா?”

 

ஏற்கனவே எதற்கு எடுத்தாலும் சற்று அதிகமாகவே தன் உணர்ச்சிகளைக் கொட்டும் லக்ஷ்மியின் நிதானத்தை நடந்துகொண்டிருந்த விடயங்கள் முற்றாக அழித்ததில், மகளின் தாய்மை நிலைகூட அவருக்கு மறந்து போயிருந்தது.

 

இந்தமுறை மகளை அடிக்கும் மனைவியைத் தடுக்கத் தோன்றாமல் சிதைந்துபோய் நின்றார் சந்தானம். தடுப்பது என்ன நடப்பதை அவர் உணர்ந்ததாகவே தோன்றவில்லை.

 

ஒரு கட்டத்துக்கு மேல் முடியாமல் தானும் மகளருகில் தொய்ந்து விழுந்தார் லக்ஷ்மி. “அவன் நல்லாவே இருக்க மாட்டான். நாசமாத்தான் போவான். என் பிள்ளையின் வாழ்க்கையைக் கெடுத்தவன் கடைசி வந்தாலும் நன்றாக இருக்கமாட்டான். கடவுளே அவனுக்கு எதையாவது காட்டு. என் பிள்ளையின் வாழ்க்கையை அழித்தவன் அழிந்து போகட்டும்.” என்று ஆவேசத்தில் ரஞ்சனையும் திட்டித் தள்ளியது அந்தத் தாய்மனம்.

 

அப்படியே ஒரு பக்கமாகச் சரிந்து கிடந்த லக்ஷ்மி தன் பாட்டுக்கு அரற்ற, மற்றப் பக்கமாக நிலத்தில் கிடந்த சித்ராவின் விழிகளில் இருந்து கண்ணீர் தன் பாட்டுக்கு வழிய, எங்கே என்றில்லாது விழிகளை இலக்கற்று பதித்திருந்த சந்தானத்தின் முகம் இறுகிக் கிடந்தது.

 

அந்த வீடு என்றுமில்லாது அன்று மயான அமைதியில் ஆழ்ந்திருந்தது. இரவுப் பொழுதும் வந்துவிட்ட போதும், விளக்கேற்ற மறந்து, இரவு உணவைத் தயாரிக்க மறந்து, அப்படியே கிடந்தார் லக்ஷ்மி.

 

வீடு முழுவதும் கும்மிருட்டில் மூழ்கிக் கிடப்பதை அப்போதுதான் உணர்ந்த சந்தானம் எழுந்து மின்விளக்குகளை ஒளிரவிட்டார்.

 

ஓய்ந்து போயிருந்த மனைவி மகளோடு, மதியம் சமைத்த யாருமே சாப்பிடாமல் கிடந்த உணவையே பெயருக்குக் கொரித்தவர்கள் தங்கள் தங்கள் அறைகளில் முடங்கினர்.

 

அடுத்தநாள் காலையில் நேரத்துக்கே எழுந்து தயாராகி, “நான் வெளியே போய்விட்டு வருகிறேன்..” என்றார் சந்தானம்.

 

விழித்துவிட்டபோதும் எந்த வேலையும் பார்க்கத் தோன்றாமல் கட்டிலில் கிடந்த லக்ஷ்மி, வேகமாக எழுந்தார். “எங்கே.. எங்கே போகிறீர்கள்? அவனிடம் நேரில் கதைக்கப் போகிறீர்களா?”

 

இறுகிய குரலில், “போய்விட்டு வந்து சொல்கிறேன்..” என்றபடி வெளியேறினார் அவர்.

 

அவர் சென்றதும் சித்ராவின் அறைக்குச் சென்று பார்த்தார் லக்ஷ்மி. அங்கே, எங்கோ வெறித்தபடி கிடந்த மகளைப் பார்க்க வேதனையும் ஆத்திரமும் சேர்ந்தே வந்தது. பூ மாதிரி வளர்த்த மகளுக்கு மிகச் சிறப்பாகத் திருமணம் செய்துகொடுத்து ராணி மாதிரி அவள் வாழ்வதைக் கண்ணாரக் காணவேண்டும் என்று ஆசைப்பட்டது தப்பா?

 

தான தர்மங்கள் செய்தால் பிள்ளையின் வாழ்க்கையைக் கடவுள் நன்றாக வைப்பார் என்று நம்பி எத்தனையோ நல்ல காரியங்களைச் செய்தோமே, அதில் ஒன்று கூட என் பிள்ளையின் வாழ்க்கையைக் காப்பாற்றாதா?

 

கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்றல்லவா சொல்வார்கள். செய்த தர்மத்திற்குப் பலனாக மகளின் நல்வாழ்க்கையை எதிர்பார்த்தார்களே, அதற்கான தண்டனைதான் இதுவா?

 

அதற்காக இவ்வளவு பெரிய தண்டனையா?

 

அவரால் தன் மனதைச் சமாதனாப்படுத்தவோ அல்லது அறுதல் படுத்தவோ முடியவே இல்லை. இப்படி ஆகிவிட்டதே.. இப்படி ஆகிவிட்டதே என்று அதிலேயே நின்று உழன்றார்.

 

என்னென்னவோ எண்ணி உள்ளுக்குள்ளேயே உழன்றபடி காலைக் கடன்களை முடித்துக்கொண்டு அறையை விட்டு வெளியே வந்தவர், “அம்மா, நான் வெளியே போய்விட்டு வருகிறேன்..” என்று, திடீரென்று கேட்ட மகளின் குரலில் திடுக்கிட்டுத் திரும்பினார்.

 

அடித்ததனால் வீங்கிக் கிடந்த அவளின் கன்னங்களை பார்த்ததுமே அவர் விழிகள் கலங்கின. அதையும் மீறி வெளியே செல்வதற்கு தயாராக நின்றவளின் மீது கோபம் எழுந்தது.

 

error: Alert: Content selection is disabled!!