என் சோலைப் பூவே 24 – 1

அத்தியாயம்-24

 

தன் அறையோடு சேர்ந்திருந்த பால்கனியில், சுவரில் சாய்ந்தபடி நிலத்தில் அமர்ந்திருந்தாள் சித்ரா. கண்ணோரங்களில் நீர்க்கசிவு நிரந்தரமாகவே தங்கியிருந்தது. கைகளோ அப்பப்போ வயிற்றைத் தடவிப் பார்த்து அதன் வெறுமையை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தியது.

 

ரஞ்சனின் வார்த்தைகளை மறக்கவே முடியவில்லை. அவளாகத்தான் அவனோடு வலியச் சென்று பழகியதாகச் சொல்லிவிட்டானே.. அதை நினைக்க நினைக்க வேதனையோடு அவமானமாகவும் இருந்தது.

 

வண்டை நாடி மலர்கள் செல்வதில்லை என்றாலும் கொடி கொம்பைத் தானே நாடும். அப்படித்தானே அவளும் அவனை நாடியது. அதிலே தப்பென்ன?

 

ஆனால் ஒன்று! அவன் என்ன சொன்னாலும் அவன்தான் அவளது கணவன்! அதை நினைத்ததும் அவள் மனதும் உடலும் உறுதியோடு நிமிர்ந்தது.

 

அவன் சொன்னதுபோல, சாதனாவுடன் அவனைச் சேர்த்து வைத்துவிட்டு எங்கிருந்தாலும் வாழ்க என்று பாடவோ, இன்னொருவனைத் திருமணம் செய்யவோ முடியாது.

 

கல்யாணமே வேண்டாம் என்று சொல்லிப் பெற்றவர்களை வருத்தவும் அவளால் முடியாது.

 

அதோடு, தவறை அவன் செய்ய தண்டனையை அவள் அனுபவிப்பதா? இதுவரை பட்டது எல்லாம் போதும். இனி என்ன நடந்தாலும் அவனுடன்தான் அவள் வாழ்க்கை.

 

திடீரெனக் கைபேசி சத்தமிட சிந்தனை கலைந்து அதை எடுத்துப் பார்த்தாள்.

 

அழைப்பது ரஞ்சன் என்று தெரிந்ததும், அவன் எதற்க்காக அழைக்கிறான் என்பதை ஊகிக்க முடிந்தவளின் இதழ்களில் விரக்தியான புன்னகை ஒன்று நெளிய, நிதானமாக அதைக் காதுக்குக் கொடுத்து, “ஹலோ..” என்றாள்.

 

“கடைகளை வாங்கி, இப்படிப் போட்டோக்களை அனுப்பினால் நான் பயந்துவிடுவேன் என்று நினைத்தாயா?” என்று, எடுத்ததுமே பாய்ந்தான் அவன்.

 

“கடைகளை வாங்கியது அப்பா, நானில்லை. அதோடு மனச்சாட்சிக்கே பயப்படாத நீங்கள் உயிரற்ற இந்த போட்டோக்களுக்குப் பயப்படுவீர்கள் என்று நானும் நினைக்கவில்லை.”

 

“பெண்ணாடி நீ? கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் இப்படித் தரமிறங்கி நடந்துகொள்ள எப்படித் துணிந்தாய்?” என்று சீறினான் அவன்.

“காதலித்தவளை கைவிட்டுவிட்டு இன்னொருத்தியைக் கட்ட நினைத்த உங்களின் தரத்துக்கு என் தரம் ஒன்றும் குறைந்ததில்லை.” என்று அவனுக்குப் பதிலடி கொடுத்தவள், “என்ன, உங்கள் அத்தை மகள் ரத்தினம் திருமணத்தை நிறுத்திவிட்டாளோ. அதுதான் ரஞ்சன் மச்சானுக்கு இவ்வளவு கோபமோ?” என்று நக்கலாகக் கேட்டபோது, அவளுக்கும் வலித்தது.

 

அவளை மிக இலகுவாகக் கழட்டி விட்டவனுக்கு சாதனா திருமணத்தை நிறுத்தியதும் கோபம் வருகிறது என்றால், அவளை விட சாதனா அவன் மனதில் அதிகமாக இடம் பிடித்திருக்கிறாளா?

 

“ஏய்! என்னடி திமிரா? அவள் கல்யாணத்தை நிறுத்தினால் உன்னைக் கட்டுவேன் என்று நினைத்தாயா? யாரைக் கட்டினாலும் உன்னைக் கட்டமாட்டேன்!” என்றவனின் கடினப்பட்ட பேச்சில் அவளின் இமையோரங்கள் நனைந்தது.

 

அவன் பேச்சு மனதை வாள் கொண்டு அறுத்தபோதும், “உங்களுக்கு உங்கள் தங்கையின் வாழ்க்கை முக்கியம் இல்லைப் போலவே ரஞ்சன். அவளுக்கு என்னவானாலும் பரவாயில்லையா?” என்று எள்ளலோடு கேட்டாள் சித்ரா.

 

“அவளுக்கு என்ன பிரச்சினை. அவள் நன்றாகத்தான் வாழ்வாள். வாழ வைப்பேன்!” என்று உறுமினான் அவன்.

 

“நவீனுக்கு இந்தப் போட்டோக்களை அனுப்பி, அண்ணாவே இப்படி என்றால் தங்கை எப்படி இருப்பாள் என்று கேட்கவா?” என்று அவள் சொல்லிமுடிக்க முதலே, “ஏய் என்னடி மிரட்டுகிறாயா? அப்படி அனுப்பிப் பார்! நடக்கிறதே வேறு! நித்தியின் திருமணத்திற்கு ஏதாவது கெடுதல் நடந்தது, நீ தொலைந்தாய்!” என்றான் ஆத்திரமும் வெறுப்புமாக.

 

“நீங்கள் என் வாழ்க்கையைக் கெடுக்கலாம். ஆனால் உங்கள் தங்கைக்கு ஒன்று என்றால் மட்டும் கோபம் வருகிறதோ? எனக்குத் தேவை உங்களோடு திருமணம். அது நடக்க வேண்டும். இல்லையானால் நவீனுக்கு இன்னும் பணக்கார, வசதியான வீட்டுப் பெண்ணை நானே பேசி முடிப்பேன். அவனும் உங்களைப் போல பணத்துக்காக பிணமாகக் கூடியவன் தானே! செய்யவா?”

 

அதைக் கேட்டதும் ஒருநொடி அதிர்ந்து நின்றான் ரஞ்சன். எதற்கும் அசையாத அவனை அசைத்துப் பார்த்தது அவள் பேச்சு. தன்னை மட்டுமே தாக்குவாள் என்று அவன் நினைக்க அவளோ தங்கை வரைக்கும் பாய்ந்தது அவன் சற்றும் எதிர்பாராதது.

 

ஆத்திரம் மேலோங்க, “என்னடி, உன் பணத்திமிரைக் காட்டுகிறாயா? நான்தான் நீ எனக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டேனே. பிறகும் எதற்கு அலைகிறாய். ஒதுங்க வேண்டியதுதானே. உலகத்தில் வேறு ஆண்களே இல்லையா உனக்கு?” என்றவனின் பேச்சில் வெகுண்டது சித்ராவின் மனம்.

 

“ஆமாம்! பணத் திமிரைத்தான் காட்டுகிறேன். புதுப் பணக்காரன் நீங்களே இவ்வளவு ஆடும்போது நான் நிரந்தரப் பணக்காரி எவ்வளவு ஆடுவேன்..?” என்று அவனுக்குக் குறையாத ஆத்திரத்தோடு கேட்டவள்,

 

“வேறு ஒருவனைக் கட்டி, நீங்கள் எனக்குச் செய்த துரோகத்தை நான் அவனுக்குச் செய்யவா? உங்களோடு பழகியதை மறைத்து அவனோடு வாழ்வதற்கு என்ன பெயர் ரஞ்சன்? என்றாவது நடந்தவைகள் அவனுக்குத் தெரிய வந்தால் பிறகும் நரக வாழ்க்கைதானே. இதுதானே உங்களைப் போன்ற நயவஞ்சகர்களைக் காதலித்து ஏமாந்துபோன பல பெண்களின் நிலை. ஏமாற்றப்பட்ட பெண்கள் திருப்பி அடித்தால் எப்படி இருக்கும் என்று நீங்கள் உணர வேண்டாமா? அழுது கரையாமல் பெண்கள் நிமிர்ந்து நின்றால் என்னாகும் என்று தெரியவேண்டாமா?” என்று ஆவேசமாகக் கேட்டாள் சித்ரா.

 

அதற்கு அவன் என்னவோ சொல்ல வரவும், “நிறுத்துங்கள் ரஞ்சன். இனி நீங்கள் பேச ஒன்றும் இல்லை. நான் சொல்வதை மட்டும் கேளுங்கள்! முழுக்க நனைந்த பிறகு எனக்கு முக்காடு தேவையில்லை. என் கழுத்தில் நீங்கள் தாலியைக் கட்டினால் உங்கள் தங்கையின் வாழ்க்கை பிழைக்கும். இல்லையானால், நடப்பவற்றுக்கு நான் பொறுப்பில்லை. அவள் வாழ்க்கை மட்டுமல்ல, எல்லாமே!” என்று அந்த ‘எல்லாமே’யை அழுத்திச் சொன்னவள், “எனக்கு இன்று இரவே உங்கள் முடிவு தெரியவேண்டும். இல்லையானால், நாளை காலை நான் என்ன செய்ய நினைக்கிறேனோ அத்தனையையும் செய்து முடிப்பேன்!” என்றவள், முதன்முதலாக அவனோடு கதைக்கையில் தானாகக் கைபேசியை அணைத்தாள்.

 

துண்டிக்கப்பட்ட கைபேசியையே கொலைவெறியுடன் வெறித்துக் கொண்டிருந்தான் ரஞ்சன். எவ்வளவு திமிர் அவளுக்கு என்று எண்ணுகையிலேயே அவன் கைபேசி மீண்டும் ஒலியெழுப்பியது.

 

திரும்பவும் எதற்கு அழைக்கிறாள் என்றபடி பார்க்க, சுகந்தனின் இலக்கங்களைக் காட்டியது அது.

 

“என்னடா?” சித்ராவின் மேல் இருந்த கோபத்தில் எரிந்து விழுந்தான் ரஞ்சன்.

 

சிலநொடிகள் அமைதியில் கழிய, “கொஞ்சம் கடைக்கு வந்துவிட்டுப் போ.” என்றான் சுகந்தன்.

 

“ஏன், எதற்கு?”

 

“நீ முதலில் கடைக்கு வா..”

 

“ஏன், கடைக்கு வந்தால் தான் சொல்வாயா?இப்போதே சொல்லு..” என்று எரிந்து விழுந்தவனின் பேச்சைக் கேட்காமல் அழைப்பைத் துண்டித்தான் சுகந்தன்.

 

வரவர எல்லோருக்கும் திமிர் கூடிவிட்டது என்று பல்லைக் கடித்தவன் கடைக்குச் சென்றான்.

 

உள்ளே நுழைந்தவனைக் கண்டதும், “நாங்கள் பழையபடி வொர்க் ஷாப்புக்கே வேலைக்குப் போகப்போகிறோம் ரஞ்சன்.” என்றனர் சுகந்தனும் ஜீவனும் ஒருங்கே.

 

ஆத்திரம் தலைக்கேற, “டேய்! இருக்கிற விசருக்கு நீங்களும் எரிச்சலைக் கிளப்பாதீங்கடா. உங்களுக்கு என்ன பிரச்சினை? இங்கே என்ன குறை? ஏன் திரும்ப அந்தக் குப்பைக்குள்ளேயே போகிறோம் என்கிறீர்கள்?” என்றான் இவன்.

 

“அந்த வேலை குப்பை என்றாலும் எங்கள் மனம் வெள்ளையாகத்தான் இருந்தது.” சட்டென்று சொன்னான் ஜீவன்.

 

அவனைக் கூர்ந்தன ரஞ்சனின் கண்கள். “என்னடா பேச்சு ஒருமாதிரி இருக்கிறது. ஏன், இங்கே உங்கள் மனதுக்கு என்ன நடந்தது?”

 

“உன் கடையில் நிற்க மனம் குத்துதுடா. நீ செய்கிற பாவத்தில் எங்களுக்கும் பங்கு இருக்கிறதோ என்று தோன்றுகிறது. அன்றைக்குச் சித்ரா அழுது வீங்கிய முகத்தோடு வந்ததைப் பார்க்க, அவளின் நிலைக்கு நாங்களும் ஒரு காரணம் என்று மனம் சொல்கிறது. எங்களுக்கும் அக்கா தங்கை இருக்கிறார்கள் ரஞ்சன். பெண் பாவம் பொல்லாததுடா.. அவளுக்குத் துரோகம் செய்தால் நிச்சயம் நீ அனுபவிப்பாய்..” என்றான் சாபம் கொடுப்பது போன்று.

 

“நண்பனுக்கே சாபம் கொடுக்கும் மிக நல்ல நண்பன்டா நீ!” கசந்த குரலில் சொன்னான்.

 

“அதே நண்பன் நியாயப்படி நடந்தால் உயிரையும் கொடுக்கத் தயங்காத நண்பன் தான்டா நான்!” என்றான் ஜீவன்.

 

error: Alert: Content selection is disabled!!