என் சோலைப் பூவே 28 – 2

சற்றுத் தயங்கியபோதும், “சரியங்கிள்!” என்று சொல்லவும் தவறவில்லை அவன்.

 

அவனோடு பேசிவிட்டு வைத்தவர் இலேசான மனதோடு மனைவிக்கு அழைத்து மகள் வந்திருப்பதைச் சொல்லவும், பத்து நிமிடத்தில் அங்கிருந்தார் லக்ஷ்மி.

 

“சித்தூ..!” என்றபடி, மகளிடம் விரைந்தவரின் கண்களில் கண்ணீர்.

 

மகளை நெடுநாள் பிரிந்தவர் போன்று அவர் கட்டிக்கொள்ளவும், சித்ராவுக்கும் கண்களில் மெலிதாகக் கண்ணீர் கசிந்தது.

 

அதுவரை குழந்தையை அழித்ததில் தாய் மேல் கோபமாக இருந்தவள் எல்லாவற்றையும் மறந்து அவரைத் தானும் கட்டிக்கொண்டாள்.

 

அவளின் கன்னங்களை வருடி, “காலையில் சாப்பிட்டாயா சித்து. உனக்கு இட்டலி கொண்டுவந்தேன். கொஞ்சமாகச் சாப்பிடுகிறாயா?” என்று அவர் கேட்டதும், அவளுக்கு இன்னும் கண்ணைக் கரித்தது.

 

தந்தை அவள் வாழ்க்கையை கவனித்தால் தாயோ அவள் வயிற்ரை கவனிக்கிறார்.

 

இதுதானே தாய் தந்தை பாசம்!

 

“தாங்கம்மா சாப்பிடுகிறேன்..” என்றவள், காலையில் சாப்பிட்டாயா என்று அவர் கேட்ட கேள்விக்குக் கவனமாகப் பதில் சொல்லாமல் தவிர்த்தாள்.

 

வீட்டிலிருந்து கொண்டுவந்த உணவைத் தட்டில் இட்டபடி, புகுந்த வீட்டு விபரங்களைச் சேகரித்தார் லக்ஷ்மி. அவரின் மனம் நோகாதபடிக்குத் தேவையானவைகளை மட்டும் சொன்னவளுக்கு, இட்டலியில் இருந்து ஒரு துண்டைப் பிய்த்து வாயில் வைக்கையிலே ரஞ்சனின் நினைவு தானாக ஓடிவந்தது.

 

அவனும் தானே காலையில் சாப்பிடாமல் வந்தான். அவளைக் கவனித்துக்கொள்ள இங்கே அம்மாவும் அப்பாவும் இருக்கிறார்கள். அங்கே அவனுக்கு?

 

யாருமில்லையே நினைத்த மாத்திரத்தில் நெஞ்சடைத்தது அவளுக்கு.

 

அடுத்த வாயை எடுத்து வைக்கமுடியாமல் அவள் இருக்க, “ஏன் சாப்பிடாமல் இருக்கிறாய். சாப்பிடு சித்து..” என்றார் அவள் அருகில் நின்ற அன்னை.

 

தாயை நிமிர்ந்து பார்த்தவள், “அம்மா அது.. அவர்.. ரஞ்சன் சாப்பிட்டாரா தெரியவில்லை..” என்று தயக்கத்தோடு சொன்னவளின் பேச்சில் தாயின் முகம் மலர்ந்தது.

 

கணவனின் மேல் அக்கறை வந்துவிட்டாலே அது அன்பாக மாறிவிடுமே! அப்படியே மகளின் வாழ்வும் மலர்ந்துவிடுமே என்று எண்ணியவர், “அவருக்கு அழைத்துக் கேளேன் சித்து..” என்றார் கனிவான குரலில்.

 

“சரிம்மா..” என்றவள், அங்குவந்த தந்தையிடம் கைபேசியை வாங்கி ரஞ்சனுக்கு அழைத்தாள்.

 

கணவனுடன் கதைக்க மகளுக்குத் தனிமையைக் கொடுத்துவிட்டு அங்கிருந்து அகன்றனர் பெற்றவர்கள்.

 

“சொல்லுங்கள் அங்கிள்..”

 

“நான் சித்ரா..”

 

“ஓ..!”

 

“அது.. சாப்பிட்டீர்களா?”

 

அந்தப்பக்கம் சில வினாடிகள் அமைதியில் கழிய, “இல்லை..” என்றான் ரஞ்சன் உணர்வுகளைக் காட்டாத குரலில்.

 

“அதைக் கேட்கத்தான் எடுத்தேன். வைக்கிறேன்.” என்றுவிட்டுக் கைபேசியை அணைத்தாள்.

 

உடனேயே தாய் கொண்டுவந்த உணவுக்கூடையில் மீண்டும் தன் உணவையும் வைத்து எடுத்துக்கொண்டவள், அந்தக் கூடையோடு அறையை விட்டு வெளியே வந்தாள்.

 

அங்கே நின்ற தாய் தந்தையரிடம், “அப்பா, நான் அவரின் கடைக்குப் போய்ச் சாப்பிட்டுவிட்டு வருகிறேன். நீங்கள் முருகனை வீட்டுக்கு அனுப்பி என் ஸ்கூட்டியை இங்கே எடுப்பியுங்கள்.” என்றவள், அவர்களின் பதிலை எதிர்பாராது கடைக்கு வெளியே வந்து வீதியில் வந்த ஒரு ஆட்டோவை மறித்து ஏறி ரஞ்சனின் கடைக்குச் சென்றாள்.

 

செல்லும் மகளையே பார்த்திருந்த பெற்றவர்களின் மனம் நிறைந்து போனது!

 

அடுத்த வீதியிலேயே அவன் கடை இருந்தபோதும், ஆட்டோவில் சென்று அவன் கடைக்கு முன்னால் இறங்கியவள், ஆட்டோக்காரரிடம் கொஞ்சம் பொறுக்கும்படி சொல்லிவிட்டு உள்ளே சென்றாள்.

 

அங்கே கடைக்குள் எதையோ செய்தபடி நின்ற ரஞ்சன், அவளைக் கண்டதும் புருவங்கள் சுருங்க கேள்வியாகப் பார்த்தபடி அவளை நோக்கி வரவும், “வெளியே ஆட்டோ நிற்கிறது. அதற்குப் பணத்தைக் கொடுத்துவிட்டு வாருங்கள்!” என்று அவனுக்கு உத்தரவைப் பிறப்பித்தவள், உணவுக் கூடையுடன் அவனது தனியறைக்குச் சென்றாள்.

 

எதற்கு வந்தாள் என்கிற கேள்வி எழுந்தபோதும், அவள் சொன்னதைச் செய்தவன், சித்ராவைத் தேடித் தன்னுடைய அறைக்குச் சென்றான்.

 

அங்கே இரண்டு தட்டுக்களில் உணவைப் பரிமாறிக் கொண்டிருந்தாள் அவள்.

 

அதைப் பார்த்த ரஞ்சனின் நிலையை அவனாலேயே வரையறுக்க முடியவில்லை. என்ன செய்வது, என்ன சொல்வது என்று எதுவுமே தெரியாமல் அப்படியே நின்றான்.

 

காலையில் அவ்வளவு கடுமையாக அவளைச் சாடியபோதும் அதை மனதில் வைத்திராது அவனுக்கு உணவைப் பரிமாறும் அவளையே பார்த்தபடி நின்றான்.

 

அவன் அவளைக் கஷ்டப்படுத்த நினைக்க அவளானாள் அவனை அக்கறையோடு கவனிக்கிறாளே!

 

அவனைத் திரும்பிப் பார்த்து, “கையைக் கழுவிக்கொண்டு வாருங்கள் சாப்பிட.” என்று அழைத்தாள் அவள்.

 

அப்போதும் அவன் அசையாது நிற்க, “என்ன? வெற்றிலை பாக்கு வைத்து அழைத்தால் தான் வருவீர்களோ?” என்றாள் அதட்டலாக.

 

ஒன்றும் சொல்லாது ரஞ்சன் கை கழுவச் செல்ல, வெளியே சென்ற சித்ரா நகுலனை அழைத்து, “ஒரு ஐந்து நிமிடம் கழித்து இரண்டு டீ வாங்கி வா..” என்று சொன்னவள், உள்ளே வந்து ரஞ்சனுடன் அமர்ந்து தன் உணவையும் உண்டாள்.

 

அதற்கு மேல் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ஆனாலும் அவன் தட்டில் குறைபவைகளைப் பார்த்துப் பார்த்துப் பரிமாறினாள் சித்ரா.

 

“நானே எடுத்துக்கொள்வேன். நீ சாப்பிடு.” என்று அவன் சொன்னதைக் காதிலேயே விழுத்தவில்லை அவள்.

 

அவர்கள் சாப்பிட்டு முடியவும் டீ வரவும் சரியாக இருந்தது. அதை நகுலனிடம் இருந்து வாங்கிக் கொண்டவள், “அவனிடம் இதற்குப் பணத்தைக் கொடுங்கள்.” என்றாள் டீயைக் காட்டி.

 

அப்போதுதான் அவள் கையில் பணம் இல்லாததைக் கவனித்தவன், தன் பர்சைத் திறந்து நகுலனிடம் பணத்தைக் கொடுத்து அனுப்பிவிட்டு, கொஞ்சப் பணத்தை எடுத்து அவளிடம் நீட்டினான்.

 

“உன் செலவுகளுக்கு வைத்துக்கொள்!”

 

மறுக்காது அதை வாங்கிக் கொண்ட சித்ரா, “கடைகளுக்குப் போகவேண்டும். எப்போது உங்களுக்கு நேரமிருக்கிறது.” என்று கேட்டாள், டீயைப் பருகியபடி.

 

போகலாமா என்று கேட்காமல், போகவேண்டும் என்று உத்தரவாகப் பேசும் அவளையே நீண்ட நாட்களுக்குப் பிறகு விழிகளால் அளந்தான் ரஞ்சன்.

 

முன்னரை விட இப்போது மெலிந்திருந்தாள். அதேபோல முகத்தில் பழைய மிளிர்வு இல்லாதபோதும், நெற்றியில் இட்டிருந்த குங்குமமும், கழுத்தில் தொங்கிய பொன் தாலியும் அவள் முகத்துக்கு இன்னுமின்னும் பொலிவைக் கூட்டியிருந்தது. அதுவும் நெற்றியிலிருந்த குங்குமம் கொஞ்சம் அவள் மூக்கில் மெலிதாகச் சிந்தியிருந்தது. அதுவேறு அவளின் அழகுக்கு இன்னும் அழகைச் சேர்த்தது. அவன்வாங்கிக் கொடுத்த ஊதா நிறச் சுடிதார் வேறு அவள் நிறத்துக்கு மிக எடுப்பாகவே இருந்தது.

 

error: Alert: Content selection is disabled!!