காதல் காயங்களே 21 – 2

அவனுக்குப் பிடித்த பெண்ணுக்கு ஏதோ பிரச்சனை என்று நினைத்தாரே தவிர அவளின் அந்த நிலைக்கு இவனே காரணமாயிருப்பான் என்று அவருமே எதிர்பார்க்கவில்லை. ஆயினும், எதையும் வெளியே காட்டிக்கொள்ளவில்லை. மனைவியைப்போல வார்த்தைகளை விடவில்லை. அருகில் மருமகன்கள் வேறு நிற்கிறார்கள். என்ன இருந்தாலும், அவர்களுக்குப் பிறகும் ஒருவரோடு மற்றவர்கள் நெருங்கிய சொந்தமாய் என்றும் வாழவேண்டுமே!

 

“என்னத்த பாக்கிறது? பத்து வயசில பிள்ளை இருக்கிறவனுக்கு என்ன பாக்க சொல்லுறீங்க?” என்றும்போலவே இன்றும் நிதானமாய் பேசும் கணவரின் மீது சினம் வந்தது புஸ்பவதிக்கு.

 

திருநாவுக்கரசு இப்போது மகனைக் கூர்மையுடன் பார்த்தார். அவனுக்கும் சங்கடம் தான்! “சொரி ப்பா!” என்றான் மெல்ல.

 

“என்ன சொரி? நீ சொல்லுற இந்த சொரியால என்ன மாறும் எண்டு சொல்லுறாய்? செய்றதை எல்லாம் செய்துபோட்டு சொரி சொன்னா சரியே?” ஆத்திரத்தோடு வெடுவெடுத்த மனைவியை மெல்லத் தட்டிக்கொடுத்து ஆற்றுப்படுத்த முயன்றார் திருநாவுக்கரசு.

 

விழிகளோ மகனிடம் இருந்தது. “இனி என்ன செய்றதா இருக்கிறாய்? தாலி ஏதும் கட்டுற பிளான் இருக்கோ?” அவர் கேட்டுமுடிக்க முதலே, “கடவுளே..” என்று கண்ணீருடன் அரற்றினார் புஸ்பவதி!

 

இன்னும் என்னவெல்லாம் கேட்கப்போகிறார்? அவரால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. இரண்டு பெண் பிள்ளைகளை ஒழுக்கம் தவறாமல் வளர்த்து, நல்லபடியாகக் கட்டிக்கொடுத்தவர் இவனை வளர்ப்பதில் எங்கு தவறினார்? நினைக்க நினைக்க நெஞ்சில் வலி பெருத்துக்கொண்டே போயிற்று!

 

“ஓம் அப்பா. கட்டாயம் கட்டவேணும். அதுக்கு முதல் அவளோட கதைக்கவேணும்!” என்றான் அவன்.

 

அவர் கேள்வியாகப் பார்க்க, “நான் கேட்டுடன். மாட்டன் எண்டுபோட்டாள்.” என்று அவன் முடிக்க முதலே, “இதுக்கு மாட்டன் எண்டவள் அதுக்கு எல்லாத்துக்கும் என்னெண்டு விட்டவளாம்!” கொதித்துவிட்டார் புஸ்பவதி.

 

“புஸ்பா!” திருநாவுக்கரசின் ஓங்கிய அதட்டலில் வாயை மூடிக்கொண்டார் புஸ்பவதி.

 

“இப்ப நாங்க என்ன செய்யவேணும்? அதைச் சொல்லு.” இந்த விசயத்தை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தினார் திருநாவுக்கரசு.

 

“நீங்க வந்து அவளோட கதைக்கவேணும் அப்பா. கலியாணத்துக்கு சம்மதிக்க வைக்கவேணும்.”

 

“சரி போவம்!” என்றவர் அத்துடன் பேச்சை முடிக்க நினைத்தார்.

 

ஆனால் பிரதீபனோ, “என்ன கோவமா இருந்தாலும் என்னட்ட காட்டுங்க. செய்தது எல்லாம் நான். அங்க வந்து அவளிட்ட கோபத்தை காட்டவேண்டாம். அவளும் பிள்ளையும் பாவம். சொந்தம் எண்டு யாருமே இல்லை.” என்றான் அன்னையைப் பார்த்து.

 

கொதித்துவிட்டார் புஸ்பவதி. “அவளிட்ட காட்ட எனக்கு என்ன தகுதி இருக்கு. என்ர பிள்ளை இப்படியெல்லாம் செய்யமாட்டான் எண்டு நான் உன்னை எப்படி நம்பினேனோ அப்படி அவளும் உன்ன நல்லவன் எண்டு நம்பி இருப்பாளா இருக்கும். இதுல அவளிட்ட கோபப்பட என்ன இருக்கு?” என்றார் சினத்துடன்.

 

கன்றிப்போன முகத்துடன் அவன் அமர்ந்திருக்க, “நீதான் பொய்யன் அவள் இல்ல. பிள்ளையை அழிக்கச் சொன்னவனை தூக்கி எறிஞ்சுபோட்டு போய் தன்ர சுயமரியாதையை காப்பாத்தினதும் இல்லாம அந்த குழந்தையையும் தனி மனுசியா நிண்டு பெத்து, வளத்து தான் பெரிய மனுசி எண்டு காட்டிப்போட்டாள். ஆனா நீ? நல்லது கெட்டது எல்லாம் சொல்லித்தானேடா வளத்தனான். பிறகு எப்படி புத்திகெட்டுப்போய் இவ்வளவையும் செய்தாய்?” என்றவர் பார்த்த பார்வையில் பொசுங்கிப்போனான் அவன்.

 

திருநாவுக்கரசுவுக்கோ இதற்குமேல் மனைவியை இப்படியே விடக்கூடாது என்று விளங்கிப் போயிற்று! எனவே, “போதும் மா. இத்தனை வருசமா அவனுக்கு ஒரு கல்யாணத்தை கடிவைக்க நீ எவ்வளவு பாடு பட்டாய். இதாலதான் அவன் கட்டேல்ல. அவளை தேடி இருக்கிறான். அப்ப அவனை நீயும் நல்லாத்தான் வளத்திருக்கிறாய். சும்மா கண்டதையும் யோசிச்சு உடம்ப கெடுக்காத” என்றவர், “எல்லாரும் நடவுங்கோ. நாளைக்கு அங்கேயும் போகவேணும்!” என்று எல்லோரையுமே அவரவரின் அறைகளுக்கு அனுப்பிவைத்தார்.

 

அறைக்குள் வந்தவனோ தலையைப் பிடித்துக்கொண்டு அப்படியே அமர்ந்துவிட்டான். மென்று முழுங்கி, அம்மாவின் முகம் பார்க்க முடியாமல் சகோதரிகளின் பார்வையை எதிர்கொள்ள வெட்கி, அத்தான் மச்சான் நிற்கிறார்கள் என்று குறுகி, அப்பாவை நிமிர்ந்தே பார்க்காமல் சொல்லி முடிப்பதற்குள் குன்றிக் குறுகிப் போனான்! இப்போது நினைத்தாலும் தேகத்தில் ஒரு நடுக்கம் ஓடியது! சற்றுநேரம் அப்படியே அமர்ந்திருந்தான். இதயத்தின் துடிப்பு நிதானத்துக்கு வருவதற்கு நேரம் பிடித்தது.

 

ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டு தன்னை நிதானப்படுத்திக்கொண்டான். கேசத்தை இரு கரங்களாலும் கோதிக்கொண்டு நிமிர்ந்தவனுக்கு, இப்போது ஒரு விடுதலை உணர்வு. அம்மா என்னதான் திட்டித் தீர்த்தாலும், அப்பா பார்வையாலேயே அவனை வெறுத்தாலும், அக்கா தங்கையின் பார்வையில் ஒரு அந்நியத்தனம் குடிவந்துவிட்டதைக் கண்டாலும், இதெல்லாம் நெஞ்சில் வலியைக் கொடுத்தாலும் ஒரு விடுதலை உணர்வு அவனை ஆசுவாசப்படுத்தியது. இத்தனை வருடங்களாக அவனைப்போட்டு வாட்டி வதைத்த விசயத்தை சொல்லிவிட்டான். இனி மெல்ல மெல்ல எல்லாம் சரியாகும். ஒரு நம்பிக்கையும் கூடவே பிற்றந்தது. நிமிர்ந்து அமர்ந்தான்.

 

அவனுடைய மயூரியும் ஆதிராவும் அவனிடம் வந்துவிடப் போகிறார்கள்! அந்த எண்ணமே அவனுக்குள் மெல்லிய சந்தோசத்தைப் பரப்பிற்று! அதற்காக இதைத் தாங்கலாம். இன்னும் பலதையும் தாங்கலாம். மெல்ல நிதானமாகச் சிந்திக்கத் தொடங்கினான்.

 

நாளைக்கு அவர்கள் வரப்போவதை மயூரிக்குச் சொல்லவேண்டும்! கூடவே, இவ்வளவையும் கடந்து வந்தவனுக்கு அவளோடு கதைக்க வேண்டும் போலிருந்தது. கோபமாகவேனும் அவள் பேசும் வார்த்தைகள் அவன் மனதுக்கு இதம் சேர்க்கும்!

 

வேகமாக ஜெய்க்கு அழைத்து மயூரியின் நம்பரை வாங்கி அவளுக்கு அழைத்தான். அதற்குள் அவன் நம்பர் வாங்கியதை மயூரிக்கும் தெரிவித்துவிட்டிருந்தான் ஜெய்.

 

எனவே, புது நம்பரில் இருந்து அழைப்பு வரவும் அவளுக்கும் அவன்தான் என்று புரிந்து போயிற்று! அழுதழுது ஓய்ந்து அருகில் உறங்கிக்கிகொண்டிருக்கும் மகளைப் பார்த்துவிட்டு, அழைப்பை ஏற்றாள்.

 

“மயூ..ரி…” அவன் குரல் நீண்ட நெடிய வருடங்களுக்குப் பிறகு அலைபேசியில் காதோரமாய் வருடிக்கொண்டு வந்தது. தேகம் சிலிர்க்க விழிகளை மூடிக்கொண்டாள் மயூரி. ஓராயிரம் கோபத்தை அவன் மீது மனம் சுமந்திருந்த போதிலும் அவனுடைய ஒற்றை அழைப்பில் தடுமாறிப்போகிறதே அவளின் இதயம். கண்ணோரம் கரிக்க பதில்கொடுக்கவில்லை அவள்.

 

“மயூ…” மீண்டும் கேள்வியும் ஏக்கமுமாய் அழைத்தான் அவன்.

 

“ம்..” என்றாள் மெல்ல.

 

“படுத்திட்டியா?” ஒரு தயக்கம் அவனுக்கும்.

 

“இல்ல.”

 

“ஆதுக்குட்டி எங்க?” கேட்கும்போதே குரல் கனிந்துபோயிற்று! அவளை அள்ளிக்கொள்ளும் ஏக்கம் அப்படியே தெரிந்தது.

 

மகளைத் திரும்பிப் பார்த்துவிட்டு, “நித்திரை.” என்றாள் அவள்.

 

“உறக்கத்தில என்ர மகள் எப்படி இருப்பாள் எண்டு கூட எனக்குத் தெரியாது மயூ!” என்றான் ஏக்கத்தோடு.

 

இதிலே அவளின் தவறு என்ன இருக்கிறது? மாலையில் போல் ஏனோ அதைக் குத்திக்காட்டவும் பிடிக்கவில்லை.

 

“அவவின்ர வண்ணத்துப்பூச்சி ஸ்டாம்ப்பத்தான் எப்பவும் கையிலேயே வச்சிருக்கிறன். அதப்பாக்கிற நேரமெல்லாம் அவவையே(அவளையே) பாக்கிற மாதிரி இருக்கும். என்ர மகள் என்ர கைக்கையே இருக்கிற மாதிரி ஒரு ஆறுதல்.” என்னவோ, அவள் பதில் சொல்லாவிட்டாலும் இதையெல்லாம் அவளிடம் பகிர்ந்துகொள்கையில் ஒரு ஆறுதல் கிடைப்பதை உணர்ந்தான் அவன்.

 

“பிழைகளை எல்லாம் செய்யேக்க நிமிர்ந்துநின்று செய்திட்டன் மயூ, அதுக்கான பலனை அனுபவிக்கேக்க தான் நரகமே தெரியுது. இண்டைக்கு செய்த காரியத்தை அண்டைக்கு செய்திருக்க வேணும். என்ன செய்ய… அண்டைக்கு தைரியம் இல்லாம போச்சே!” என்று தன்னையே நொந்துகொண்டான்.

 

மயூரியின் புருவங்கள் சுருங்கிற்று! என்ன செய்தான்? கேட்கவேண்டும் போலிருந்தாலும், தன் கேள்விகளை எல்லாம் தயக்கமின்றிக் கேட்கும் அளவுக்கு அவனோடான அவளின் உறவு சீராகவா இருக்கிறது? எனவே அமைதியாகவே இருந்தாள். அவனும் அதை உணர்ந்திருக்க வேண்டும். தானே சொன்னான்.

 

“நாளைக்கு ஒருநாள் லீவு எடுக்கிறியா? அம்மா அப்பா உன்னப்பாக்க வருவினம்.”

 

அதைக் கேட்டதுமே அவளின் ஐம்புலன்களும் விழித்துக்கொண்டது. “வீட்டுல சொல்லிட்டீங்களா?” ஓரளவுக்கு எதிர்பார்த்தாள் தான் என்றாலுமே அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

 

“ஓம். சொல்லீட்டன். சொல்லத்தானே வேணும்.”

 

என்ன சொல்லியிருப்பார்கள்? அவனைத் திட்டி இருப்பார்களா? அவளைப்பற்றி என்ன நினைத்திருப்பார்கள்? நாளைக்கு அவர்களை எதிர்கொள்வதை நினைக்க அவமானமாய் போயிற்று! கன்றிப்போய் நின்றவளிடம், “சொரி மயூ!” என்றான் ஆழ்ந்த குரலில்.

 

அவள் பதிலிறுக்கவில்லை.

 

“அண்டைக்கு நடந்துக்கும் இண்டைக்கு கோவப்பட்டதுக்கும்.” என்றான் அவன்.

 

“பயந்திட்டியா?” என்றான் ஆழ்ந்த குரலில்.

 

அவள் ஒன்றும் சொல்லவில்லை. சொல்ல முடியவில்லை. மூக்குச் சிவந்து தொண்டை அடைத்து கண்ணோரம் நீர் துளிர்க்க ஆரம்பித்திருந்தது.

 

“மயூ..”

 

“ம்…” அவள் உடைந்துகொண்டிருக்கிறாள் என்று அந்த இம்மிலேயே விளங்கிவிட, எதைப்பற்றியும் யோசிக்காமல், அழுத்தமான ஒரு முத்தத்தை அவளுக்கு அனுப்பிவைத்தான். அந்த முத்தம் அவனுக்கும் தேவையாய் இருந்தது. அவளோ சட்டென்று ஃபோனை அணைத்துவிட்டுக் கண்களை மூடிக்கொண்டாள். மூடிய விழிகளில் இருந்து கசிந்து வெளியேறிய கண்ணீர் செவிகளை நனைத்துப் போயிற்று!

 

 

 

error: Alert: Content selection is disabled!!