அத்தியாயம்-17
அவர்கள் வீட்டின் பால்கனியில் இருந்த சாய்கதிரையில் அமர்ந்து, கைபேசியில் அவளைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்த சூர்யாவை, விழிகளால் விழுங்கிக் கொண்டிருந்தாள் லட்சனா.
சற்று முன்னர்தான் அவனோடு கதைத்தாள். அதுவும் அன்றைய நாளில் ஐந்தாவது தடவையாக.
காலையிலேயே எழுந்துவிட்டீர்களா என்று கேட்க, முதல் அழைப்பு. காலைச்சாப்பாடு சாப்பிட்டீர்களா என்று கேட்க அடுத்த அழைப்பு. என்ன செய்துகொண்டு இருக்கிறீர்கள் என்று அடுத்தது. வேலைக்குப் போகவில்லையா என்று அடுத்தது. சற்று முன் சும்மா என்று ஒன்று.
ஏதோ ஒன்றைச் சாட்டி எடுப்பவள், என்னவென்றே இல்லாது அவனோடு கதை அளந்துவிட்டுத்தான் வைத்தாள். அப்படி வைத்தபிறகு அடுத்து அவள் செய்யும் வேலை, கைபேசியில் இருக்கும் அவன் போட்டோவோடு கதைப்பது.
“மகா கள்ளன்டா நீ. இப்போது ஆசையாகப் பார்ப்பதுபோல் உன்னை நேராக என்னால் பார்க்கவே முடிவதில்லை. அப்படி இந்தக் கண்ணில் என்னதான் வைத்திருக்கிறாயோ… அப்படியே என்னைச் சுண்டி இழுக்கிறது.” என்றவள் அவன் கன்னத்தைக் கிள்ளித் தன் உதட்டில் ஒற்றிக்கொண்டாள். அவன் கண்களுக்கு நேரடியாகவே ஒரு முத்தம். அந்தக் கைபேசி பாவம்! வாயிருந்திருக்க, கதறிக் கண்ணீர் விட்டிருக்கும்!
“இதையெல்லாம் நேரே செய்யத்தான் விருப்பம். அதற்கு எங்கே நீ விடுகிறாய். நான் ஆரம்பித்தால் நீ முடித்துவைக்கிறாயே, அவசரத்துக்குப் பிறந்தவனே…” மீண்டும் செல்லமாக அவனைச் சீராட்டிக்கொண்டாள்.
வீட்டில் யாருமில்லாத தனிமையும், அவன் அருகிலில்லாத இனிமையும் இதையெல்லாம் வாய்விட்டுச் சொல்லும் துணிவை அவளுக்குக் கொடுத்தது.
அவனைப் பார்க்கப்பார்க்க, அவள் இதழ்களில் இளம் புன்னகை நெளிந்தது. மலர்ந்த முகமும், விழிகளில் கனவுமாக இருந்தவளின் எண்ணங்கள் முழுவதிலும் சூர்யாவே நிறைந்திருந்தான்.
இப்போதெல்லாம் அவள் உள்ளமெல்லாம் உள்ள உணர்வு காதல்… காதல்.. காதல் மட்டுமே!
அந்தளவுக்கு அவன் காதல் அவளை மயிலிறகாய் வருடிக்கொடுத்தது!
ஜெயனைப் பற்றி சூர்யாவிடம் சொல்லவேண்டுமே என்றிருந்த தவிப்பு மறைந்திருந்தது. பெற்றவர்களின் இழப்பைப் பற்றி அவனிடம் சொல்லியதில் மனம் பெரும் ஆறுதல் அடைந்திருந்தது.
போதாக்குறைக்கு அன்று சூர்யாவின் தாத்தா பாட்டியின் வீட்டுக்குச் சென்றபோது, அவர்களின் சம்மதமும் கிடைத்துவிட்டதை அறிந்துகொண்டதில், அவளின் காதல் அசுரனைக் கைப்பிடிக்க அவளுக்குத் தடை எதுவுமில்லை என்று எண்ணியெண்ணி அவள் உள்ளம் களித்தது.
இன்னும் மிகுதியாய் இருப்பது ஒரேயொரு பிரச்சினை. அது ஜெயன்!
அவனிடம் தங்கள் காதலைப் பற்றிச் சொல்லி, அவன் விலகிவிட்டால், அக்கா அத்தானும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். அதுவும் நடக்கும் என்று அவள் உள் மனது நம்பியது.
காரணம், அவள் அறிந்தவரையில் ஜெயன் நல்லவன். மிக மிக நல்லவன்! அவளைப் புரிந்துகொள்வான்.
அவன் பாவமே என்று தோன்றினாலும், காதலின்றி ஒருவனுடன் எதிர்கால வாழ்க்கையை அமைக்கமுடியாதே. அவனுக்கும் அவனையே நினைத்து உருகும் ஒருத்தி வராமலா போய்விடுவாள்.
இன்னாருக்கு இன்னார் என்று இறைவன் நிச்சயித்திருப்பான் தானே! ஜெயனுக்குச் சொந்தமான அந்த ‘இன்னார்’ வெகுவிரைவில் அவன் வாழ்வில் வரவேண்டும் என்றும் வேண்டிக்கொண்டாள்.
அடுத்தநொடியே, அவளுக்குச் சொந்தமான ‘இன்னாரை’ நோக்கி அவள் உள்ளம் பாய்ந்தது.
இப்போதெல்லாம் அவளால் அவனை விட்டுவிட்டு இருக்கவே முடிவதில்லை. ‘எங்காவது சந்திக்கலாம் வா’ என்று அவன் அழைத்த காலம் மலையேறி, ‘இன்று எங்கு பார்க்கலாம் சூர்யா’ என்று அவள் கேட்கும் காலம் வந்திருந்தது.
‘டிரைவிங்’ குக்கு படிப்பதே பெருஞ் சிரமமாக இருந்தது. அந்தளவுக்கு அவன் நினைவுகள் அவளை ஆட்டிப்படைத்தன. பெரும் கஷ்டப்பட்டுப் படித்துத்தான் அந்தப் பரீட்சையை எழுதி சித்தியடைந்திருந்தாள்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் அவன் தோளில் தன்னை மறந்து தொங்கியபடி, “சூர்யா, எழுத்துப் பரீட்சையில் நான் பாசாகிவிட்டேன்…” என்று அவள் துள்ளலோடு சொன்னபோது, அவளை அணைத்து, “வாவ்..! எனக்குத் தெரியும். என் லட்டு பாசாகிவிடுவாள்..” என்று அவன் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தபோது, அவள் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை.
பாசானபோது உண்டான பரவசத்தை விட, அவன் ‘என் லட்டு’என்றபோது உண்டான பரவசம் அதிகமாக இருந்தது.

