கடன் அன்பை முறிக்கும் 36 – 2

நேசனுமே அன்னையை இங்கே விட்டுவிட்டு அனுராதபுரம் வரை போய்வரும் எண்ணத்தில் இருந்ததில் அவன் சொன்னதுபோல் அவர்களுக்கு அழைத்து விசாரித்தான்.

 

அவர்கள் வெகு சாதாரணமாகவே இருந்தார்கள். அதுவும் அந்தப் பெடியன் இசை வந்துவிட்டாளா, அவளோடு தான் இனியாவது தனியாகச் சந்தித்துப் பேசலாமா என்பதுபோல் ஆர்வமாகக் கேட்கவும் தூயவனைப் பார்த்துவிட்டு அவர்களிடம் சொல்லிக்கொண்டு அழைப்பைத் துண்டித்தான் நேசன்.

 

அதற்குமேல் அங்கே தாமதிக்கவில்லை தூயவன். அந்தப் பெடியன் எங்கே வேலை செய்கிறான், அவன் வீட்டு முகவரி, அவனுடைய புகைப்படம் எல்லாவற்றையும் பெற்றுக்கொண்டு, “எதுக்கும் கவனமா இருங்க. சண்முகம் பெரியப்பா மாதிரி ஆர் வந்து என்ன கதைச்சாலும் தயவு செய்து எனக்கு உடனேயே எடுத்துச் சொல்லுங்க. என்னில இருக்கிற கோவத்துல நீங்களா எதையும் செய்யப் போகாதீங்க.” என்றுவிட்டுப் புறப்பட்டான்.

 

அதற்குள் அவனை இடைமறித்து நின்று, “எனக்கு இப்பவும் உன்னிலதான் சந்தேகம். நீ இல்லாட்டி உன்ர அப்பா. அதால உனக்கு எங்களிட்ட இருந்து இன்னும் என்ன வேணும் எண்டு சொல்லு, தாறன்? சொத்து எண்டு இருக்கிறது இந்த வீடும் காணியும்தான். அதத் தாறன். என்ர பிள்ளைக்கு எண்டு சேத்த கொஞ்ச நகைகள் இருக்கு. அதையும் வேணுமெண்டாலும் தாறன். தயவு செய்து என்ர தங்கச்சிய தந்திடுடா. எனக்குப் பயமா இருக்கு.” என்கையில் நேசன் உடைந்தே போயிருந்தான்.

 

கோகிலா அம்மா சத்தமாகவே அழ ஆரம்பித்திருந்தார். நெஞ்சு வெடிக்கும் துக்கத்தை அடக்கியபடி, தன் இடுப்பைக் கட்டிக்கொண்டு அழும் மகளை அணைத்துப் பிடித்தபடி நின்றிருந்தாள் நளினி.

 

தூயவனின் முகம் செத்துச் சுண்ணாம்பாக்கியிருந்தது. அவன் பதிலற்று நிற்க, குரு கொதித்துவிட்டான்.

 

“உங்கட நிலைமை, பயம், பதற்றம் எல்லாம் எங்களுக்கும் விளங்குது. அதுக்காகக் கொஞ்சம் கூட யோசிக்க மாட்டீங்களா? இந்த ஊர்ல இருக்கிற ஆராவது ஒரு ஆளின்ர சொத்துப் பத்தை அவன் அடிச்சுப் பறிச்சு நீங்க கேள்விப்பட்டு இருக்கிறீங்களா? சரியோ பிழையோ அவே கேட்டது அவேன்ர சொத்தை. அத தாண்டி என்ன கோவம் உங்களோட அவனுக்கு? உங்கட தங்கச்சிக்காகப் பெத்த தகப்பனோடயே சண்டை பிடிச்சுப்போட்டு வந்திருக்கிறான். அவனைப் பாத்து என்ன கதைக்கிறீங்க?” என்றவனை, “விடு மச்சான்.” என்று தூயவன்தான் அடக்கினான்.

 

அவன் சொன்னதில் இருந்த உண்மை நேசனையும் சுட்டது. கூடவே, இவ்வளவு நேரமும் இவர்கள்தான் என்று ஒரு எண்ணம் இருந்தது. அவர்களும் இல்லை என்றால் வேறு யார்?

 

“அப்ப ஆர் இப்பிடி எல்லாம் செய்ய இருக்கு? நாங்க ஆரின்ர வம்பு தும்புக்கும் போறேல்லையே.” என்றான் நேசன்.

 

ஒரு நெடிய மூச்சை இழுத்து விட்டுவிட்டு, “அப்போத உங்களிட்டச் சொன்ன மாதிரி இசையை எனக்குப் பிடிக்கும். கலியாணத்துக்கு அவளைக் கேட்டனான். அவள் நீங்க சொல்லுறவரைத்தான் கட்டுவன் எண்டு சொன்னவள். ஆனா இது எனக்கு, இவனுக்கு, இசைக்கு மட்டும்தான் தெரியும். அப்பிடி இருந்தும் சண்முகம் பெரியப்பா வந்து உங்களோட கதைச்சிருக்கிறார் எண்டா அது அப்பாக்கும் தெரிஞ்சிருக்கு. எப்பிடி எண்டு இன்னும் எனக்குத் தெரியேல்ல. சோ, அவரின்ர ஏற்பாட்டில இது நடந்திருக்கலாம்.” எனும்போதே கோகிலா திரும்பவும் அழ ஆரம்பித்திருந்தார்.

 

நேசனுக்கும் நெஞ்சு கொதித்தது. “அப்ப நீதான் எல்லாத்துக்கும் காரணம். உன்னால என்ர தங்கச்சி ஆரிட்டை மாட்டி, என்ன பாடு படுறாளோ தெரியா. ஏனடா எங்களைப் போட்டு இந்தப் பாடு படுத்திறாய்?” என்று குமுறினான்.

 

அதில் இருந்த உண்மையில் அவனுக்கு ஒன்றுமே சொல்லாத தூயவன், கோகிலாவிடம் மட்டும், “அம்மா அழாதீங்க. உங்கட மகள் வருவாள். நான் கூட்டிக்கொண்டு வருவன்.” என்றுவிட்டு அங்கிருந்து பறந்தான்.

 

உன்னை நம்ப மாட்டேன், நானும் வருகிறேன் என்று அடம்பிடித்த நேசனை அவன் வீட்டுப் பெண்களுக்குத் துணையாக இருக்கும்படி சொல்லித் தடுத்திருந்தான்.

 

அடுத்த ஒன்றரை மணி நேரத்தில் அனுராதபுரம் பஸ் நிலையத்தில் நின்றிருந்தார்கள். இதற்குள் நேரம் இரவு ஒண்பதைத் தாண்டியிருந்தது. நேரம் போக போகத் தூயவனின் உள்ளம் பதைபதைக்க ஆரம்பித்திருந்தது. இரவின் இருள் என்னென்னவோ பயங்கரமான கற்பனைகளை எல்லாம் கிளப்பி, கண்ட கண்ட காட்சிகளை எல்லாம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தி, அவன் உயிரையே உருவி எடுத்தன.

 

அந்தப் பயணத்திலேயே விமலின் நண்பனைப் பிடித்து விமலைப் பற்றி விசாரித்தான். அவனைத் தான் அப்போதுதான் கொழும்புக்கு பஸ் ஏற்றிவிட்டு வருவதாகச் சொன்னான் அவன்.

 

காரணம் கேட்டபோது, கொழும்பு சிறைச்சாலையில் இருக்கும் அருளைப் பார்க்க அவன் போவதாகவும், ஒவ்வொரு மாதமும் இப்படி அவன் போவது வழமை என்றும் சொன்னான் அவன்.

 

உடனேயே வீடியோ கோலில் விமலுக்கு அழைத்தான் தூயவன். அவனும் ஏமாற்றாமல் அழைப்பை ஏற்று, “என்ன அண்ணா?” என்றான் ஒன்றும் விளங்காமல்.

 

தூயவன் இவனுக்கு அழைக்கும் அவசியமே இல்லை. அப்படி இருக்க வீடியோ கோலில் வருவது என்பது?

 

“இல்ல, அது தெரியாம தட்டுப்பட்டுட்டுது. நீ எங்க போறாய்?” என்றவனின் விழிகள் அவன் சுற்றுப்புறத்தை அலசின.

 

ஏசி பஸ்ஸில் பயணித்துக்கொண்டிருக்கிறான் என்று தெரிந்தது.

 

“அண்ணாவப் பாக்கக் கொழும்புக்கு.”

 

“ஓ!”

 

“என்ன, ஏதும் பிரச்சினையா? இல்ல அலுவலா?”

 

“இல்ல, எப்ப திரும்பி வருவாய்?”

 

“அது தெரியாது. அங்க போய் மனுக் குடுத்து, அவே எப்ப சொல்லினமோ அப்பதான் பாக்கலாம். அதால எப்பிடியும் ஒரு கிழமை செல்லும்.”

 

“சரி, நீ திரும்ப ஊருக்கு வந்ததும் சொல்லு. உன்னோட கதைக்கோணும்.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டிக்கப் போனவன் வேகமாக, “விமல்!” என்றான்.

 

“என்ன, சொல்லுங்கோ?”

 

“ஒருக்கா எழும்பி நிண்டு பஸ்ஸ சுத்திக்காட்டு?”

 

“என்னத்துக்கு? பக்கத்தில இருக்கிற சனம் பேசப்போயினம்.”

 

“பேசினா பேசட்டும். நீ காட்டு.”

 

விமலுக்கு கோபம்தான் வந்தது. அதை அவனிடம் காட்டவா முடியும்? சங்கடப் பார்வை ஒன்றைச் சுற்றி இருந்தவர்களிடம் வீசியபடி எழுந்து நின்று காட்டினான்.

 

அப்போதும் விடாமல் ஆரம்பத்திலிருந்து கடைசிவரை காட்டச் சொல்லி, அந்த பஸ்சுக்குள் யாழிசை இல்லை என்று சொந்தக் கண்களாலேயே உறுதி செய்த பிறகே விட்டான் தூயவன்.

 

இப்போது தூயவனுக்கு மட்டுமில்லை குருவுக்கும் பெரும் குழப்பம்.

 

கருணாகரனாகவே இருந்தாலும் அவராக நேரில் இறங்கியிருக்கப் போவதில்லை. அப்படி என்கையில் யாரைக் கொண்டு இந்தக் காரியத்தைச் செய்திருப்பார்?

error: Alert: Content selection is disabled!!