என்னுள் இருந்த தைரியமெல்லாம் எங்கே போயிற்று?
‘போயிறலாம், இனியும் இங்க நிற்க வேணாம்.’ தொய்ந்த என்னுள்ளம் அலறியது.
“ஹலோ! அந்தளவுக்குப் செத்துப் போன காதலில திடமாக இருந்த மனிசன் ஏன் கலியாணத்துக்குத் தலையாட்ட வேணுமாம்? பிறகென்ன கண்துடைப்புக்கு அவளிட்ட கேட்டன் எண்டு சொல்லுறது?
அவள்ட வீட்டில…அது பெயருக்குத்தான் அவளிட வீடு; மற்றும் படி, பச்சத்தண்ணி குடிக்கிறது எண்டாலும் சுதந்திரமாகச் செய்யேலாது எண்டெல்லாம் உங்களுக்குத் தெரியாதாக்கும். யாருக்குக் கதை விடுறீங்க?”
கோபத்தில் கேலியாக நர்மதா சொன்னது சூர்யாவின் மனத்தைக் குத்திக் கிழித்திருக்க வேணும். தாயை உக்கிரமாக முறைத்தார்.
“இதென்ன கொடுமையாக் கிடக்கு? ஏய் உதயா! அவையள் என்னவும் சொல்லட்டும் எண்டு என்னடி பார்த்துக் கொண்டிருக்கிற? உன்ன நானென்ன கொடுமையா செய்யிறன்? இப்படித்தான் ஊருக்கெல்லாம் சொல்லித் திரியிறியா?”
சித்தியின் அதட்டலை வெட்டிக்கொண்டு எழுந்தது சூர்யாவின் அன்னையின் குரல்.
“ஐயோ! எல்லாம் என்ர பிழைதான். உனக்கு ஒரு கலியாணம் செய்ய நினைச்சதுக்குப் பேசாமல் நான் செத்துப் போயிருக்கலாமே! உன்னைப் பெத்து வளர்த்து என்ர மகன் எப்பேர்ப்பட்டவன் எண்டு பெருமைப்பட்டதுக்கு வட்டியும் குட்டியுமா அவமானத்தை வாங்கித் தந்திட்ட போ!”
அழுகையும் தள்ளாடலுமாக முன்னால் வந்தவர் மகன் கன்னத்தில் பளார் பளாரென்று அறைய, “அதுதானே? எப்பிடி எப்பிடி…சம்மதம் கேட்டாராமே!” என்னை விட்டு விட்டுப் பாய்ந்து சென்றார்கள் தங்கைகள்.
“ஏய்! வேணாம் நில்லுங்கடி!” கையுயர்த்தி நிறுத்த முயன்றேன்.
கையும் உயர்ந்தது தான். நடுங்கிய நாவினால் தான் வார்த்தைகளை வெளியிட முடியவில்லை
“கண்டவைக்கும் தானே பதில் சொல்ல முடியாமல் கிடக்கு? இப்ப நாங்க கேட்கிறம் சொல்லுங்க.”
சென்ற வேகத்தில் சூர்யாவைப் பிடித்து உலுப்பினாள் கவி.
தட் தட்டென்று நெஞ்சில் இறுக்கிக் குத்தினாள் சின்னவள்.
“ஏய்! விடுங்கடி அவனை.”
மகள்களை இழுத்துத் தடுக்க முயன்ற சித்தி, கவி பிடித்துத் தள்ளியதில் அவரின் பெரிய தங்கைமீது மோதி விழாது தப்பித்தார். அந்தளவுக்கு விசர் பிடித்த மாதிரி நின்றார்கள், தங்கைகள் இருவரும்.
எல்லோர் மனத்திலும் கோபமும் ஆத்திரமும் இருந்ததால் அசையவில்லை; பார்வையாளராகிப் போனார்கள்.
தமக்கை மகள்கள், தான் தூக்கிப் பாராட்டிச் சீராட்டி வளர்த்தவர்கள் ஆச்சே! அவர்களிடமிருந்து இப்படியானதொரு ஆக்ரோசத்தை சூர்யா எதிர்பார்க்கவில்லை என்பது அவர் அதிர்ந்து நின்ற தோரணையே சொல்லிற்று.
அவர்கள் அடித்த அடிக்கு அப்படியே பின்னால் நகர்ந்து சென்று கட்டிலில் தொப்பென்று விழுந்தவரை, ஆத்திரம் அடங்காது அடித்துத் தள்ளினார்கள் தங்கைகள்.
“எங்கட அக்காவையே கை நீட்டி அடிப்பீங்களோ? அவாவின்ட வாயில ரெத்தம் வருது.” கவி.
“எங்கட அப்பா ஒருநாள் எங்களில கை வச்சிருப்பாரா? இப்ப அவர் இருந்திருக்க உங்களக் கொன்று போட்டிருப்பார்.” சின்னவள்.
“நீங்க எங்களுக்கு மாமாவோ? நாளைக்கு இப்படித்தான் எங்களையும் யாராவது ஒரு குடிகாரனுக்கு கட்டிக் குடுக்கும் இந்த வீடு. உங்களை எங்கட அப்பா போல எல்லா நினைச்சிருந்தம்.”
இருவரும் அழுதபடி அடித்த அடிகளிலிருந்து தப்ப நினைத்து எழுந்த சூர்யாவின் கரம், கடைசியாக அவர்கள் சொன்னதைக் கேட்டதும் அப்படியே தொய்ந்தது.
“கவி…” தமக்கை மகளின் முகத்தைப் பற்ற முயன்றார்
“ச்சே! நல்ல மனிசன் போல என்ர பெயரைச் சொல்ல வேணாம். எங்கட அக்கா ஒண்ணும் ஆசையா உங்களைக் கட்டச் சம்மதம் சொல்லேல்லத் தெரியுமா?
வெளியில கட்டினா வீடும் நகையும் போயிரும், நாங்க என்ன செய்யிறது? சாகத்தான் வேணும் எண்டு சொல்லி, இந்தா சாகிறன் எண்டு குசினியைப் பூட்டிட்டு நிண்டு அம்மா போட்ட நாடகத்தில பயந்துதான் தலையாட்டினா தெரியுமா?” என்றவளை, பாய்ந்து வந்து இழுத்து அறைந்தார் சித்தி.
“என்னடி கதைக்கிற? நானும் பொறுமையா இருப்பம் எண்டு பார்த்தா நீங்க ரெண்டு பேரும் என்ன கூத்துக் காட்டுறீங்களா? அவள் சொல்லித் தந்தது இதுதானா? வயசுக்கு ஏற்ப நட இல்லயோ கொன்று போடுவன். எத்தின தடவைகள் சொல்லுறது? ரெண்டு பேரும் இனி ஒரு நிமிசம் இங்க நிக்கிறது இல்ல. வீட்ட ஓடுங்க!”
பெரியவளுக்குக் கொடுத்துக் களைச்சு நிமிர்ந்து சின்னவளுக்கு அடிக்க ஓங்கிய கரத்தை இறுக்கப் பற்றினார் சூர்யா.
“அப்பிடியெண்டா கவி சொன்னது எல்லாம் பொய்யா?”
“கலியாணமும் முடிஞ்சிட்டு, இப்ப வந்து என்ன கேள்வி கேட்கிற? ஏன், இங்க மட்டும் என்னவாம்? அம்மா சாகப் போறன் எண்டோண்ண தானே நீ தலையாட்டினனீ? நீ நல்லா இருக்க வேணும் எண்டு நினைச்சுத்தான் நான் அவள உனக்குக் கட்டிக் குடுக்க நினைச்சன்.”
“இதை நான் நம்ப வேணுமா?”
“டேய்! நம்பினால் நம்பு, இல்லையோ போ!” சினந்தார் சித்தி.
“எல்லாரும் வரிசை கட்டிக்கொண்டு கேள்வி கேளுங்கோ! கை கட்டி வாய்கட்டி நிண்டு பதில் சொல்லிப்போட்டுப் போறன், சரியா? அந்தளவுக்கு இளிச்சவாய் தானே நான்? இவள்ட அப்பனக் கட்டின அண்டேல இருந்து(அன்றிலிருந்து) இதுவே பிழைப்பாய்ப் போச்சு!”
வெறுப்பாக என்னைப் பார்த்தார்.
“இங்க பாரடி, இத்தின நாளும் ஊமக்கொட்டான் வேசம் போட்டது எல்லாம் சேர்த்து இப்பிடிப் பெரிய நாடகம் போடத்தானா? இதையெல்லாம் வேற எங்கயும் வச்சுக்கொள். இங்க என்னட்ட வேணாம் சரியா? உன்ர இத்துப் போன அப்பனுக்கு என்ர தம்பி எவ்வளவோ மேல் தெரியுமோ!”
இறந்தும் திட்டு வாங்கும் அப்பாவை நினைக்க மனம் எரிந்தது.
இருக்கும் வரை எல்லாரையும் அன்பாக நடந்த நினைத்த மனிதர் அவர். அதற்கு மற்றவர்களும் சந்தர்ப்பம் கொடுத்தால் தானே? வாய்விட்டா கேட்க முடியும்?
இப்ப மட்டும் நான் சத்தமாக மூச்சு விட்டாலே இன்று இந்த இடத்தில் காளியாடுவார் சித்தி. என்னுடம்பிலோ மனதிலோ சக்தியும் இல்லை, தலைவேறு சுற்றுவது போலிருந்தது.
“நீங்க பெரிய திறம் போல எங்கட அப்பாவை ஒண்டும் சொல்ல வேணாம்!” சின்னவள் எதிர்ப்புக்குரல் கேவலோடு வந்தது.
“பெரிய உங்கட அப்பா! அந்தாள் இவளுக்குத்தான் எப்பவும் அப்பனா இருந்தவர் தெரியுமா? அது விளங்காம என்னையே எதிரியாய்ப் பார்க்கிறீங்க? கடைசியில இந்த நோனா உங்களத் தாங்கப் போறதில்ல; நான் தான் உங்களுக்காக நிற்பன், நினைவில வச்சிருங்க!” என்ற சித்தியும் அழுதார். அதைத் தங்கச்சிகளோ கோபமாகத்தான் பார்த்தார்கள்.