“அண்ணா வாறீங்களா போயிட்டு வரலாம்; வருவம் எண்டு பார்த்துக் கொண்டிருப்பீனம்?” என்ற குட்டியின் குரலில் சலிப்பு அப்படியே ஒட்டிக் கிடந்தது. இத்தோடு எத்தனையோ தடவைகள் அழைத்து விட்டாளே!
இருந்தும் நான் அசையவும் இல்லை, பதில் சொல்லவும் இல்லை.
கண்களைக் கூடத் திறவாது குப்புறக்கிடந்தேன்.
தங்கை வரும் காலடிச் சத்தம் கேட்டது.
“அண்ணா இன்னும் என்ன செய்யிறீங்க? கதவைத் திறவுங்க! நேரம் போகுது, போய்க் கூட்டிக்கொண்டு வருவமே.”
அதற்கு மேலும் அப்படியே இருக்க மனம் வரவில்லை.
எழுந்து சென்று கதவைத் திறந்த என்னைக் கூர்மையாகப் பார்த்தாள் அவள். அந்தக் கூர்மையில் குற்றம் சாட்டுதல் சற்று அதிகமாகவே இருந்தது.
“பச்!” திரும்பிச் சென்று கட்டிலிலமர்ந்து விட்டேன்.
“அண்ணா! என்னண்ணா நீங்க? இவ்வளவுக்கும் பிறகு இப்பிடிச் செய்தால்?”
“எனக்கும் அது விளங்குது குட்டி, ஆனாலும் முடியேல்லயே!”
முணுமுணுத்தபடி, கனத்த தலையை, திமிறி நின்ற சிகையை விரல்களால் அழுந்தக் கோதினேன்.
‘ஒருவழியாக அண்ணா வழிக்குக் வந்திட்டார்’ என்று சின்னதாகச் சந்தோசம் கொண்டுள்ள தங்கையை ஒரேயடியாக வருத்தவும் விரும்பவில்லை. பிறகு அவளும் முருங்கை மரம் ஏறிடுவாளே!
அதேநேரம்… ‘ஓஓஓஓ …!’ பிளந்த வேதனையில் அலறியது நெஞ்சம் !
என்னையே பார்த்து நின்ற தங்கைக்கும் என்ன சொல்வது என்ற தடுமாற்றம் போலும்.
சிறிது நேர மௌனத்தின் பின்னர் என்னருகில் வந்தமர்ந்தவள், “உங்கட வாழ்க்கையில கல்யாணி முடிஞ்ச கதை அண்ணா; அதில இருந்து நீங்க எப்பவவோ விலகி வந்திருக்க வேண்டியதுதான் இயற்கை. இல்லவே இல்லையென்றானதப் பிடிச்சுக்கொண்டு மிச்சம் இருக்கிற உங்கட வாழ்க்கையை…” என்று சொல்லிக் கொண்டு வந்தவள்,
“பச்! திரும்பத் திரும்ப அந்தக் கதையேன்? அந்த நினைவுகளில இருந்து விலகி வரவேண்டிய கட்டாயத்தில இருக்கிறீங்க! அதைக் கலியாணம் பேசிய போதே செய்திருக்க வேணும்.
விரும்பியோ விருப்பம் இல்லாமலோ கலியாணம் செய்ய வெளிக்கிட்டீங்க தானே?
அப்பவே, விருப்பமே இல்லாட்டியும் அந்த நினைவுகளை கொஞ்சம் தள்ளிவைச்சிட்டு உங்களோட வாழ வந்தவளுக்கு இடம் கொடுக்கத் தயாராகி இருக்க வேணும். அப்படிச் செய்திருந்தால் இப்ப இந்த நிலையில வந்து நிற்காது. எல்லாருக்கும் எவ்வளவு வேதனை? பச்… விடுவம். போனது போகட்டும் ணா.”
என் சின்னத்தங்கை தாயின் பரிவோடு ஆறுதல் சொன்னதில் துக்கம் தான் பீறிட்டது.
அவளுக்குத் தாலி கட்டிய கணமே நான் அந்த முடிவை எடுத்துவிட்டேனே! இருந்தும் அடுத்தடுத்து என்ன எல்லாம் நடந்திட்டு?
‘கட்டாயத்தில கலியாணம் செய்தவள் சந்தர்ப்பம் கிடைச்சதும் ‘நீ வேணாம்‘ எண்டு போய்ட்டாள். அப்பிடியிருந்தும் போய்க் கூப்பிட்டன் தானே? வந்தாளா?’
எப்பிடி அவள் சந்தர்ப்பம் கிடைச்சதும் விலகிப் போனாளோ, அப்படியே, ‘கல்யாணிதான் எனக்கு நிரந்தரம்‘ என்று, என் ஆழ்மனம் சந்தோசித்துத் துள்ளியதை என்னவென்று சொல்ல?
ச்சே! என்னில் எனக்கு அடங்கா வெறுப்பேற்பட்டது. இரத்தமெனச் சிவந்த விழிகளை யன்னலுக்கு அப்பால் செலுத்திவிட்டேன்.
கல்யாணிக்கும் உதயாவுக்கும் இடையில் அகப்பட்ட என்னுள்ளம் படும் பாடறியாது தொடர்ந்தாள் தங்கை.
“இன்னொருதடவ கல்யாணியைச் சாட்டி உதயாவை எந்தவிதத்திலும் வருத்தினால்…” சொல்லி நிறுத்தியவள், “இங்க பாருங்கண்ணா!” என்று என் முகம் பற்றித் திருப்பினாள்.
“திருப்பத் திருப்ப இதைச் சொல்லவா வேணும்? உங்கட பொறுப்புகள் தெரியாத ஆளில்லை நீங்க. அம்மா ஃபோன் பண்ணிச் சொல்லி எவ்வளவு நேரமாயிற்று! பார்த்துக்கொண்டு நிப்பீனம், வாங்க போயிட்டு வருவம்.” எழுந்து நின்று, என் கரம் பற்றி எழுப்ப நினைத்தாள்.
‘நானும் என் மனத்தை எவ்வளவுவோ விதங்களில் சமாதானம் செய்துகொண்டுதான் ஒவ்வொன்றையும் செய்யிறன். அப்பிடித்தான் காலம உதயாவ இங்க கூட்டிக்கொண்டு வர நினைச்சதும்…’ பெருமூச்சோடு நின்ற என்னைக் கண்டிப்போடு பார்த்தாள் தங்கை.
“அதுதான் உதயாவே வர முடியாது எண்டு திட்டவட்டமாச் சொல்லீட்டாளே! பிறகேன் கட்டாயப்படுத்துவான்?” என்றதையே பிடித்துக்கொண்டு தொங்குகிறதே என்னுள்ளம்.
எங்களிடம் ஒருவார்த்தை சொல்லாமல் கொள்ளாமல் அங்கு சென்றிருந்த அம்மாவிடமே இதைத்தான் கேட்டேன்.
“பின்ன? நீ அவளுக்குச் செய்த மரியாதைக்குப் போய்க் கூப்பிட்ட உடனே தலையாட்டிக் கொண்டு பின்னால் வர வேணுமே! அந்தளவுக்கு அவள் ஒண்ணும் கிள்ளுக்கீரை இல்லடா! நல்லா நினைவில வச்சிரு!” அவள் வீட்டிலிருந்துகொண்டு அம்மா சீற, அதையேதான் குட்டியும் பிடித்துக் கொண்டாள்.
‘எல்லாம் நான் உதயா வீட்ட போனதால் வந்த வினை. இல்லையோ, இப்ப அம்மா அங்க போயிருந்து கொண்டு விருப்பம் இல்லாதவளத் திரும்பவும் வலுக்கட்டாயமாக் கூட்டிக்கொண்டு வர நினைச்சிருக்க மாட்டார்.
குட்டியும் கொழும்புக்கு எல்லாம் எடுத்துக் கதைச்சி…இப்ப..’ என்றெண்ணமோட, இத்தனைக்கும் பிறகும் பழையபடி எந்தவிதச் சமாதானத்தையும் ஏற்க மறுக்கும் மனத்தைப் பயத்தோடுதான் பார்த்து நின்றேன் நான்.
மீண்டும் என் முன்னால் நிற்கும் தங்கையைதான் இறைஞ்சலாகப் பார்த்தேன்.
‘இவள் மட்டும் உதயா இங்க வந்தால் தான் வெளிநாடு போவன் எண்டு சொல்லவில்லையேல்…நான் என்பாட்டில் என் நினைவுகளோட இருந்திருப்பனே’ என்று எண்ணுகையிலேயே, ‘அப்படிப்பட்டவன், ஒரு அப்பாவி உன் வாழ்வில எட்டிப் பார்க்கிற சந்தர்ப்பத்தை ஏன் கொடுத்தனி?’ என்ற எண்ணமும் குறுக்கிடாது இல்லை.
இருந்தும், சரிவராது வேணாம் என்று விலகியவள் விலகியவளாகவே இருக்கட்டும் என்ற முடிவுக்கே வர முனைந்தது உள்ளம்.
அவளுக்குப் பொருத்தமா, முக்கியமா அவள் மனத்துக்குப் பிடித்தமாதிரி ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பது என் பொறுப்பு என்றுதானே சொல்கிறேன்.
“நீ மட்டும் கண்டதையும் சொல்லிப் பிடிவாதம் பிடிக்காமல் வெளிநாட்டுக்குப் போம்மா! உதயா இங்க வந்தால் தான் போவன் எண்டத விட்டிரு! உதயா இங்க வரவே வேணாம்; அந்தப் பிள்ளை இங்க வந்தால் நல்லா இருக்கவே முடியாது; ஏனெண்டா…என்ர மனம் எனக்குத் தான் தெரியும்.”
மீண்டும் முருங்கை மரமேறி, என் மனத்தை வார்த்தைகளில் காட்டிவிட்டேன்.
கேட்டவளோ, நிச்சயம் அதிர்ந்தே தான் போனாள். இதை அவள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என்பது தெளிவாகவே தெரிந்தது.
‘சே! நீயெல்லாம் திருந்தவே மாட்ட!’ என்பது போன்ற வெறுப்புப் பார்வையோடு விசுக்கென்று நகர்ந்தாள்.