விசாரணை செய்யும் தோரணையில் கேட்பவளுக்கு விலாவாரியாக விளக்கம் கொடுத்தால் தான் அடங்குவாளோ!
எப்படிப் பக்குவமாக விளங்க வைக்கலாம் என்ற சிந்தனையில் நான் இருக்க அவளோ தொடர்ந்தாள்.
“முதல் அந்த சூர்யா…” என்றுவிட்டு என்னைப் பார்த்தவள், “மாமாவ நீங்க கலியாணம் செய்யப்போறதயே சரியா எதிர்த்தவே அவேதானே? இப்ப அவையளே, ‘ ஒரு சந்தர்ப்பம் குடுத்துப் பார் எண்டு உங்கள இங்க கொண்டு வந்து நிப்பாட்டி இருக்கீனம்.” என்று, அத்தனை நேரமும் மனத்தில் அழுத்திக் கிடந்ததைப் படபடவென்று கொட்டினாள்.
சட்டென்று நான் வாய் திறக்கவில்லை. நிதானமாக அவர்களைப் பார்த்தேன்.
“உங்கட மாமா பற்றி எல்லாம் தெரிஞ்சே தானே நான் கலியாணத்துக்குச் சம்மதம் சொல்லிக் கலியாணமும் செய்து கொண்டன்!” நிதானமாக ஆரம்பிக்க, இடைவெட்டினாள் கவி.
“அக்கா! அது வேற. அதுவே நாம விட்ட பெரிய பிழை எண்டு சொல்லுறன், பிறகென்ன?
அண்டைக்கு என்ன எல்லாம் நடந்து வெளியில் வந்தீங்க? அப்ப அவர் சொன்னதுகள் எதையுமே நாங்க மறக்கேல்லக்கா. நீங்களும் மறந்திருக்க மாட்டீங்க எண்டு நினைக்கிறன்.
அதோட, அப்ப அவர் குடிவெறியில ஒண்ணும் இருக்கேல்ல. நல்ல நிதானமாத்தான் தன்ர மனத்தச் சொன்னவர். காலத்துக்கும் அது…அதில…உங்களுக்கு இடமில்ல எண்டு …” கேவினாள் கவி.
அன்றைய நாளை, சூர்யா அன்று கர்ண கடூரமாக உதிர்த்த வார்த்தைகளை நினைக்கையில் இப்போதும் என் உடலில் நடுக்கம் ஓடியது.
இவர்கள் சொல்வது போல் நான் எடுத்த முடிவு சரியா? என்னையும் மீறியெழுந்தது ஒரு கேள்வி!
என் அமைதி தங்கைகளுக்குச் சாதகமாகப் போயிற்று! மனதில் நினைத்ததை எல்லாம் கொட்டத் தொடங்கினார்கள்.
“ஓமக்கா! இதையெல்லாம் நம்மட வீட்டில வச்சு நாங்க சொல்லியிருக்க இண்டைக்கு வீணா பெரிய சண்டை வந்திருக்கும். அதனாலதான் வாயை மூடிக்கொண்டு இருந்தம்.” என்று, தீர்க்கமாகக் கதைக்கும் தீபியைப் பார்க்கையில் என்னுள் எல்லாம் கடந்து ஆச்சரியமே மிஞ்சியது.
சின்னவள் இந்தளவுக்கு வளர்ந்து விட்டாளா? எனக்குச் சிறியவர்களாக இருந்தும் பெரியவர்களாக, எனக்காக அவர்கள் யோசிப்பது கண்களை கலங்கச் செய்தது.
இருவரையும் இறுக அணைத்துக் கொண்டேன். அத்தனை பாரமும் விலகி நிற்க, மனதுள் உருகியது.
உடன் பிறந்தவர்களின் துணை எவ்வளவு பெறுமதியானது? அக்கணம் முழுமையாகவே உணர முடிந்தது.
இருந்தபோதும், இவர்களுக்கு என்ன சொல்லி என் மனத்தை விளங்க வைப்பேன்? சற்று நேரம் மௌனமே!
“கலியாணம் செய்து இங்க வந்த அண்டைக்கு நடந்த பிரச்சினைகள நான் கொஞ்சமும் எதிர்பார்க்கேல்ல.” மெல்ல ஆரம்பித்தேன்.
அன்றைக்குப் பிறகு அதைப் பற்றியெல்லாம் நாங்கள் கதைத்துக் கொண்டதே இல்லை. இப்போது கதைக்க ஆரம்பிக்கையில் இலேசாக மூச்சடைப்பது போலிருந்தது. நான் திரும்பவும் இங்கு வந்திருப்பதை நம்பவும் முடியாதிருந்தது.
“என்ன ஏதெண்டு சிந்திக்கிற சக்தி இழந்து அதிர்ந்துதான் நின்றிருந்தன். கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க, என்னைத் தவிர எல்லாரும் கதைச்சுச் சண்டை போட்டீனம். எனக்கோ புத்தியே வேலை செய்யேல்ல.
வாய் விட்டுச் சொல்லவே முடியாத அளவுக்கு பலமாக அடிவாங்கி நின்ற நிலையில தான் நின்றிருந்தன். அப்ப என்ர அம்மா போல…” என்று சொல்கையில், என்னையும் அறியாது கண்ணீர் முத்துக்கள் உருண்டு தெறித்தன. தங்கைகள் கண்களிலும் கசிவு!
இருபக்கமும் தோள்களில் தலையைச் சாய்த்துக் கொண்டவர்களின் அணைப்பு இறுகி ஆறுதல் படுத்த முனைந்தது.
“அம்மாட கைபிடிச்சு நடக்கிற குழந்தையாத்தான் நர்மதா இழுத்த இழுப்புக்கு வீட்ட வந்திருந்தன்.” என்று சொல்லி நிறுத்தி, தங்கைகளின் முகங்களை நிமிர்த்தித் தீர்மானமாகப் பார்த்தேன்.
“இப்ப…நானா இங்க திரும்பி வரேல்ல. அண்டைக்கு அப்பிடிக் கதைச்ச உங்கட மாமா காலையில நம்மட வீட்ட வந்தவர். ஏன் வருவான்? கொஞ்சம் யோசிச்சுப் பாருங்கவன். தான் அண்டைக்கு நடந்து கொண்ட விதம் பிழை எண்டதால தானே வந்தவர்?” என்றபோது முறைத்தாள் கவி.
“அக்கா! அந்தாள் வந்தவரேயொழிய ஒரு வார்த்தை கதைச்சவரா? ‘நான் அண்டைக்கு அப்பிடிச் செய்தது எல்லாமே பிழை உதயா, தயவு செய்து மன்னிச்சுக் கொள்; இனிமேல் இப்பிடியெல்லாம் நடந்து கொள்ள மாட்டன்.’ எண்டு ஏதாவது சொன்னவரோ? குட்டிச் சித்திதான் எல்லாம் சொன்னார்; அதெல்லாம் கணக்கில சேர்க்க ஏலாது.” என்றாள் தீபி.
“நாமதான் நின்று கதைக்கிற சந்தர்ப்பமே குடுக்கேல்லையே! நின்று கதைச்சிருந்தாச் சொல்லி இருப்பார்.” என்றேன், மெதுவாக.
“அந்தாள் அவ்வளவு செய்த பிறகும் இப்பிடிக் கதைக்க வேணாம் கா!” தீபி.
” சரி நீங்க சொல்லுறதே சரியென்று வைப்பமே. அம்மம்மா நீங்க இங்க வரப் போறீங்க எண்டு இன்றைக்கு எத்தின மணிக்கு ஃபோன் பண்ணிச் சொன்னவா? கூட்டிட்டுப் போக வா எண்டு சொல்ல, குட்டிச் சித்தியும் ‘இந்தா வாறம்‘ எண்டு சொன்னவாவா இல்லையா? வந்தவையா? எவ்வளவு நேரம் பார்த்திருந்திட்டு நாமளா வந்தம். அது எதுக்காம்?” கேட்ட கவி, பதில் சொல்லுங்களேன் என்ற மாதிரிப் பார்த்திருந்தாள்.
‘அதுதானே எதுக்காம்?’ என் உள்ளமும் கேள்வி கேட்டாலும், “அதுதான் நாம வரேக்க அங்க வரத்தான் வெளிக்கிட்டம் எண்டு சொல்லேல்லையாடி?
கராஜில எதுவும் முக்கிய வேலையா நின்றிருந்தா என்னெண்டு உடனே விட்டுட்டு வாறது சொல்லு.
நம்மட பைகளத் தரச் சொல்லி எல்லாம் கேட்கேல்லையாடி?”
“போங்க அக்கா, நான் அப்பிடி நினைக்கேல்ல; அந்தாள் நாம வந்து இறங்கினதும் முகம் இறுகத்தான் நின்றவர்; அதோட அம்மம்மா சொல்லித்தான் பைகளக் கேட்டவர்; தானாக் கேட்கேல்ல.” தீபி
“பச்! உங்களை விட எவ்வளவு வயதில பெரியவர்? அதென்ன அந்தாள்? உங்கட மாமா தானே? அப்படியே சொல்லுங்க. வர வர உங்கட பழக்க வழக்கம் எல்லாம் மாறுது!” சீறினேன்.
“அக்கா!” பதில் சீறல் கவியிடமிருந்து.
“நாங்க என்ன கதைக்கிறம்? நீங்க என்ன சொல்லுறீங்க?” தீபி.
“சரி, எல்லாம் விடுங்க. நாம உள்ள வந்த பிறகு வீட்டுக்குள்ள வந்தவரா? அப்பிடியே போய்ட்டார்க்கா!”
‘உண்மைதான்…’ மனம் சொன்னாலும், அவர்களிடம் அதை ஒப்புக்கொண்டு, இப்போ நான் இங்கு வந்தது தவறு என்ற அவர்களின் கோணத்தை வலுவாக்க விரும்பவில்லை.
“இப்படிச் சின்னச் சின்னதாய்ப் பார்த்தா எல்லாமே பிழையாத்தான் தெரியும்.”
இருவர் தலைகளையும் செல்லமாக ஆட்டினேன்.
“உங்கட மாமா இப்ப எல்லாம் குடிக்கிறதும் இல்ல. நாலு வருசங்களுக்கு முதல் எப்படி இருந்தவர் எண்டு நான் சொல்லத் தேவையில்லை.
நீங்க வேணுமென்றால் இருந்து பாருங்க, எல்லாம் கெதியாச் சரியாகீரும். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு. அதனால தேவையில்லாமல் இதுகளைப் பற்றி யோசிச்சு உங்கட நேரத்த வீணாக்காமல் படிப்பில கவனம் செலுத்துங்க! அது மட்டும் தான் இப்ப உங்கட வேலை!” என்றேன், கண்டிப்போடு!
இருவரும் பெருமூச்சுடன் ஆயாசமாகப் பார்த்தார்கள்.
“இப்பிடி நீங்க பிடிவாதமாக இருந்தால் நாங்க என்னக்கா சொல்லுறது? ஆனால், அண்டைக்குப் போல இன்னொருநாள் அந்தாள்…” என்றுவிட்டு, என்னை ஒருதடவை பார்த்தாள் கவி.
“பெரிய…. மாமாவும் சோமாவும்.” நெளித்தாள், தீபி.