மையல் 31
மேகவி இரவு உணவை முடித்துவிட்டு படுக்கையில் விழ, இரண்டு நிமிடங்கள் இடைவெளியில் வந்து அவளின் அருகே அமர்ந்தான் சத்தி.
பெயரிற்கு என்று மூடி இருந்த இமைகளைப் பிரித்துக் கணவனை நோக்கியவள், “என்ன படுக்கலயா?”
மறுத்துத் தலையசைத்தான்.
“என்ன ஆச்சு, மிஸ்டர் கீர்த்திக்கு? ஏதோ ரொம்ப பெரிய யோசனையில இருக்க போல?” என வினவினாள், அவனின் இரு புருவங்களிற்கு இடையே இருந்த முடிச்சைக் கவனித்து.
“ம்ம்..”
“அப்படி என்ன விஷயம்? என்கிட்ட, ஷேர் பண்ற ஐடியா எதுவும் இருக்கா.?”
“உன்னைப் பத்தின விஷயம் தான்.”
“என்னைப் பத்தியா, சொல்லு?”
“பொண்டாட்டி, ஒரு விஷயம் கேட்கணும்னு நினைச்சேன். கேட்கலாமானு தெரியல, ஆனா மனசு ஒரு மாதிரி அது அரிச்சிகிட்டே இருக்கு. கேட்டுடுறது நல்லதுனு தோணுச்சு. அதான் கேட்கிறேன். உனக்கு சொல்ல இஷ்டம் இருந்தா சொல்லு, இல்லேனா அப்படியே விட்டுடு. ஓகேவா.?”
“என்ன பீடிகை எல்லாம் பலமா இருக்கு? அப்படி எந்த விஷயத்தை பத்திக் கேட்கப் போற.?” என்றவாறே எழுந்து அமர்ந்தாள்.
“ஏன் உனக்கு ஆம்பளைங்க மேல நம்பிக்கை இல்ல? எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் உன்னோட தாத்தா, அப்பா, அண்ணா எல்லாருமே நல்லவங்க தான். அப்படி இருக்கும் போது, எப்படி உனக்குள்ள இந்த மாதிரி ஒரு எண்ணம் வந்துச்சு? நான் முன்னாடியே இதைப் பத்திக் கேட்டு இருக்கேன், ஆனா நீ அப்ப அதை அவாய்ட் பண்ணீட்ட!”
‘அவன் நேர்மையாய் இருக்க முயலும் பொழுது தான் மட்டும் ஒன்றை மறைப்பது என்பது, இருவருக்கும் இடையேயான உறவிற்குச் செய்யும் அநீதி!’ எனத் தோன்றிட, இம்முறை சொல்வதென முடிவெடுத்தாள்.
மெலிதான ஒரு பெருமூச்சை வெளிவிட்டவள், “பொண்ணுங்களோட பழகுற விஷயத்துல தான் எனக்கு ஆம்பளைங்க மேல நம்பிக்கை கிடையாது. தேவைக்கு யூஸ் பண்ணீட்டு, அப்புறம் அவங்களைத் தூக்கிப் போட்டுடுவாங்கனு மனசுல சின்ன வயசுலயே ஆழமா பதிஞ்சிடுச்சு. சோ..”
“ஏன் உனக்குள்ள அப்படி ஒரு எண்ணம் வந்துச்சு.?”
“ஸ்கூல் டேஸ்ல எனக்கு ஒரு பையன் மேல..” என்று உரைத்து அவள் பாதியில் நிறுத்த, “என்ன லவ்வா.?” என ஆர்வமுடன் கதை கேட்பதற்குத் தயாரானான் கீர்த்தி.
சின்னதாய்ச் சிரித்தவள், “இது என்ன ரியாக்ஷன்?”
“ஃபர்ஸ்ட் டைம் உன்னோட பாஸ்ட்டை பத்தித் தெரிஞ்சுக்கப் போறேன். சோ..”
“உனக்குக் கோபம் வரலயா.?”
“அதான், அது செட் ஆகலயே? ஒருவேளை அப்படி எதுவும் நடந்திருந்தா, எனக்கு சான்ஸ் கிடைச்சு இருக்குமா?”
“நீ இப்படி யோசிக்கிற அளவுக்கு, அது ஒன்னும் அவ்வளவு ஒர்த்தான விஷயம் இல்ல.”
“வொய்?”
“கிரஷ் இருந்தது ஒருத்தன் மேல. லவ்வுன்ற ஸ்டேஜுக்குப் போகவே இல்ல. அப்ப எனக்குப் பதினாலு வயசு தான். சோ, அது எந்த மாதிரியான ஃபீலிங்ஸுனு கரெக்டா ஐடெண்டிஃபை பண்ண முடியல.”
“ஓ.. சரி, மேல சொல்லு.”
“எங்க வீட்டுக்குப் பக்கத்து தெருவுல தான் குடியிருந்தான். ஒரே ஸ்கூல்ல தான் படிச்சோம். பார்க்க நல்லா இருப்பான், அதோட நல்லா படிக்கவும் செய்யிவான். கலகலப்பான ஆளு, ஃப்ரெண்ட்ஸ் ரொம்ப அதிகம், அப்புறம் ஒரு சாயல்ல உன்னை மாதிரி.”
புரியாமல் விழித்தவன், “என்னை மாதிரியா? ”
“ம்ம்.. பேசுறதுல. உனக்கு வேணும்கிறதை பேசியே சாதிச்சுக்கிற இல்ல. அது மாதிரி.”
“ஓ..”
“எப்பவும் அவனை விட நான் கம்மியா தான் மார்க் எடுப்பேன். அந்த மாசம், என்னனு தெரியல. அதிகமா எடுத்துட்டேன். அது சிக்ஸ்த் செவன்த்துனு இருந்த ப்ளேஸை, சடனா தேர்டுக்கு மாத்திடுச்சு. திடீர்னு எப்படி இவ்வளவு மார்க் எடுத்து என்னை முந்திப் போனனு வந்து கேட்டான்.
தெரியலனு பதில் சொல்லி பேச ஆரம்பிச்சு, அப்படியே கண்டின்யூ ஆச்சு. ஏதோ ஒரு வகையில எனக்கு ஈர்ப்பை ஏற்படுத்துன ஒருத்தன் தானா வந்து பேசும் போது, அந்த சான்ஸை மிஸ் பண்ண தோணுமா என்ன? அந்த வயசுக்கே இருந்த ஆர்வம், பழக வச்சிச்சு.
ரெண்டு பேரும் பக்கத்துல தான இருக்கோம்? ஒன்னா ஸ்கூலுக்குப் போகலாமானு கேட்டான். பொதுவாவே நான் யார்க்கிட்டயும் அவ்வளவு சீக்கிரம் பழகிட மாட்டேன். அவங்களா வந்து பேசும் போது, அப்ரோச் பண்ணுற விதம் பிடிச்சிருந்தா, அந்த ஃப்ரெண்ட்ஷிப்பை அக்செப்ட் பண்ணிக்குவேன். அப்படித்தான் அவன்கூட பழக்கம் ஆரம்பிச்சிச்சு.
ரெண்டு பேரும் சேர்ந்து.. ஸ்கூல், டியூசன், சண்டே ஸ்பெஷல் கிளாஸ், காலையில டைப்ரைட்டிங் கிளாஸ்னு வெளியே போய் வந்தோம். ஹோம் ஒர்க்கை ஷேர் பண்ணிக்கிறது, தெரியாததைச் சொல்லித் தர்றது, யார் கிளாஸ் டெஸ்ட்ல அதிகம் மார்க் எடுக்கிறதுனு போட்டியும் படிப்புமா இருந்தோம்.
நான் பேசுறது கம்மிங்கிறதால, பெரும்பாலும் யாருமே என்கிட்ட அவ்வளவா பேச மாட்டாங்க. அவன் ஒருஆளு தான் நெருங்கிப் பழகினான். அதுனால ஏதாவது ஹெல்ப் வேணும்னு கேட்டா, மறுக்க தோணாம செஞ்சிடுவேன்.
நான் அதை ஃப்ரெண்ட்ஷிப்பா நினைச்சிருந்தேன். ஆனா, அவன் என்னை யூஸ் பண்ணிக்கிட்டு இருந்திருக்கான்.
யார்க்கிட்டயும் பழகாத நான்.. அவன்கிட்ட மட்டும் நெருக்கமா இருக்கிற மாதிரியும், அவன் சொல்லுறதை எல்லாம் கேட்கிற மாதிரியும் மத்தவங்க பார்வையில ஒரு பிம்பத்தை உருவாக்கி, அதுமூலமா தன்னைத்தானே பெரிய ஆளா கிளாஸ் ஸ்டூடண்ட்ஸ்கிட்ட காட்டிக்கிட்டான். அதுல அவனுக்கு ஒரு பெருமை.
ஆனா நான் இதெல்லாம் எதுவும் தெரியாம, உண்மையா பழகினேன் கீர்த்தி. நயன்த் முடிஞ்சிச்சு. ஸ்கூலோட லாஸ்ட் நாள் வீட்டுக்கு கிளம்புறதுக்காக, டீச்சர்ஸ் கிட்ட எல்லாம் பாய் சொல்லிட்டு அவனைத் தேடிப் போனேன்.
ஃப்ரெண்ட்ஸ்கிட்டப் பேசிக்கிட்டு இருந்தான். டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு, காத்திருக்க ஆரம்பிச்சேன். கடைசி நாள், சோ ரொம்ப நேரம் ஏதேதோ பேசி சிரிச்சிட்டு இருந்தாங்க. மணி ஆறு ஆனதும், இதுக்கு மேல லேட் பண்ணா வீட்டுல திட்டுவாங்கனு அவனைக் கூப்பிடலாம்னு பக்கத்துல போகும் போது தான், என்னோட பெயரைச் சொல்லி பேசுறது காதுல விழுந்துச்சு.”
உரைத்து முடிக்கும் பொழுது அவளது குரலில் தென்பட்ட வலி எதையோ உணர்த்த, “என்ன பேசிட்டு இருந்தாங்க?” என வினவினான் கீர்த்தி.
“நான்கூட அவ ரொம்ப திமிரானவ. நம்மக்கிட்ட எல்லாம் பழக மாட்டான்னு நினைச்சேன்டா. ஆனா.. போய் பேசுனதும், சிரிச்சுக்கிட்டே என்கூட வந்துட்டா! இப்ப எல்லாம், நான் என்ன சொன்னாலும் செய்யிறா தெரியுமா.? என்ன கேரக்டரோ? இதெல்லாம் அவங்க வீட்டுக்குத் தெரிஞ்சா, எப்படி இருக்கும்னு இன்னும் ஏதேதோ..” என்று நிறுத்திட, மனைவியின் கை விரல்களைப் பற்றி அழுத்திக் கொடுத்தான்.
“அந்த டைம்ல, ரொம்ப கஷ்டமா இருந்திருக்கும் இல்ல.?”
வலிந்து புன்னகைத்தவள், “அப்படியே அவன் கூட பேசுறதை கட் பண்ணீட்டு, டென்த்ல வேற கிளாஸ் வேணும்னு கேட்டு மாறிட்டேன். திரும்பப் பேச டிரைப் பண்ணான். அதுக்கு நான் சான்ஸே கொடுக்கல.”
“எனக்குத்தான் தெரியுமே, நீ அவாய்ட் பண்ணணும்னு முடிவு செஞ்சிட்டா எப்படி நடந்துப்பனு. ஒருவாரம் ஒன்னுமே செய்ய முடியாம, எப்படி தவிச்சேன் நான்?”
இம்முறை அவள் உண்மையாகவே புன்னகைக்க, “இதுனாலயா ஆம்பளைங்க மேல நம்பிக்கை இல்லாம போச்சு உனக்கு.?”
மறுத்துத் தலை அசைத்தாள் மேகவி.
அவன் கேள்வியாய்ப் பார்க்க, “அண்ணனால.”
“மாம்ஸா?”
“ம்ம்..”
“அவரு என்ன செஞ்சாரு?”
சாகரனின் முதல் காதலைப் பற்றி உரைத்தவள், “நான் பிறந்ததுல இருந்தே அவனைப் பார்க்கிறேன். லவ் பண்ண பொண்ண ஏமாத்துவான்னு கொஞ்சமும் நினைக்கல. எனக்குத் தெரிஞ்ச, நான் ரொம்ப நம்பிக்கை வச்சிருக்கிற கூடப்பிறந்த அண்ணனோட கேரக்டரே இப்படி இருந்தா, மத்த யாரை நம்ப முடியும்?
ஸ்கூல் டேஸ்ல ஏற்பட்ட பாதிப்பு வேற, அப்படியே தான் இருந்துச்சு. ஆம்பளைங்களோட மனசையும் பேச்சையும் உணர்வுகளையும் சரியா ஜட்ஜ் பண்ண முடியலயோனு என் மேலயே டவுட் வந்திடுச்சு. அதுனால மனசு யாரையுமே நம்ப தயாரா இல்ல.
உன்னை அக்செப்ட் பண்ணதுக்குக் காரணமே, தனாவை எங்க வீட்டுல கல்யாணம் செஞ்சு கொடுத்து இருக்கிறதால, நீ இந்த உறவு பாதிக்கப்படுற விதமா எதுவும் செய்யமாட்டங்கிற எண்ணத்துல தான்.”
ஓர் ஏமாற்றம், பருவப் பெண்ணின் சிந்தனையை எந்த அளவிற்குப் பாதிக்கிறது? அது உளவியல் ரீதியாக அவளின் வாழ்விலும் உணர்வுகளிலும் எவ்வகையான எதிர்வினையை ஏற்படுத்துகிறது என்று கேட்கும் பொழுதே, சத்திக்கு மனம் கனத்தது.
வெளியில் இருந்து பார்ப்பதற்கு அது சாதாரண நிகழ்வாக தெரியலாம். அனுபவிப்பவரும் கூட, அதை அப்படி எண்ணியே கடந்து வர முயல்கின்றனர்.
மேகவியும் கடந்து வந்திருந்தாள். பள்ளிப் படிப்போடு, கல்லூரிக் கல்வியையும் நல்முறையில் முடித்து, பெயர் சொல்லும் படியான பணியில் சேர்ந்து, தனக்கென சொந்தமாய் வீட்டையும் கூட உருவாக்கி விட்டாள். எனினும் உறவுகளின் நிலை..?
இன்றும் தமையனை விலக்கி தான் நிறுத்துகிறாள். கணவனை நம்புவதற்கு தயங்குகிறாள். மற்ற ஆண்கள் எவரையுமே அவசியமே இல்லை என மறுக்கிறாள்.
“ம்ம்.. புரிஞ்சிக்க முடியிது உன்னோட ஃபீலிங்ஸை. பட், மாம்ஸ் அப்படி நடந்துக்கிற ஆளா தோணல எனக்கு.”
“என்னாலயுமே இன்னும் நம்ப முடியல.”
ஆறாண்டு காலம் காத்திருந்து தனது தங்கையைக் கரம் பற்றிய மாமனை, ஏனோ ஓர் ஏமாற்றுக் காரனாய் சத்தியால் கற்பனை செய்து கூட பார்க்க இயலவில்லை. தருணம் அமையும் பொழுது அவனிடமே அதைப் பற்றிப் பேசிக் கொள்ளலாம் என எண்ணிக் கொண்டான்.
“சரி விடு. இப்ப எப்படி ஃபீல் பண்ணுற?” என்று மனைவியின் மனதை அறியும் பொருட்டு வினவினான்.
“எதைப் பத்திக் கேட்கிற?”
“ஸ்கூல் டேஸ்ல நடந்தது இப்பவும் உன்னை அஃபெக்ட் பண்ணுதா?”
“நோ! ஐம் ஓவர் தட்!”
“ம்ம்.. என்னைப் பத்தி?”
“இட்ஸ் ஓகே! உன்கூட இருக்கிறது அப்படி ஒன்னும் கஷ்டமா இல்ல. ஐ ஃபீல் குட்.*
“ஓகே. ஐ வில் ட்ரை டூ பி பெட்டர் இன் தி ஃபியூச்சர்.”
சின்னதாய் சிரித்தவள், “சரி சரி, படு. காலையில சீக்கிரம் எழுந்திரிக்கணும்.” என உரைத்து தலையணையில் தலை சாய்க்க, அருகே படுத்து மனைவியை அணைத்துக் கொண்டான் சத்யகீர்த்தி.
மறுநாளைய விடியல் மங்கையின் வாழ்விலும் உணர்வுகளிலும் பெரும் மாற்றத்தைத் தரக் காத்திருந்தது.
அன்னை ஷீலா மற்றும் அப்பத்தா கனகவள்ளியோடு மனைவியையும் அழைத்துக் கொண்டு, தங்கையின் புகுந்த வீட்டை வந்தடைந்தான் சாகரன். தோழியின் வாழ்வில் நடக்கும் சுபநிகழ்வுக்காக பிள்ளையைப் பள்ளிக்கு அனுப்பி விட்டு சிந்தாமணியும் வருகை தந்திருந்தாள்.
கயிறு மாற்றுவதற்கு ஒன்பது முதல் பத்தரை வரை நேரம் குறித்திருந்தனர். இரு இளைய தம்பதிகளும், பெரியவர்களின் சொல்படி தங்களது திருமண உடையையே அணிந்து இருந்தனர்.
மஞ்சள் கயிற்றில் கோர்த்திருந்த தாலியோடு சேர்ப்பதற்காக, தங்கக் குண்டு, மகாலக்ஷ்மி காசு, கருப்பு மற்றும் சிவப்பில் பாசி மணிகள், இலை வடிவம் பதித்த மாங்காய் ஆகியவற்றைத் தனியே எடுத்து வைத்திருந்தனர். இனிப்பு வகைகள், பூ, பழம், மஞ்சள், குங்குமம், வளையலோடு இல்லத்தில் கூடத்தில் தட்டுகள் அடுக்கப்பட்டு இருந்தது.
மனை அமர்த்தி தம்பதியரை அதில் உட்கார வைத்து, பெண்களின் கழுத்தில் மஞ்சள் கயிற்றில் இருந்த தாலியைப் பிரித்து எடுத்து, தங்கச் சங்கிலியில் அதனைக் கோர்த்து, அதனோடு மற்றவற்றையும் இணைத்தனர்.
மேகவிக்கு புஷ்பவதியும், பிரார்த்தனாவிற்கு சிந்தாமணியும் தாலி கோர்க்கும் பணியைச் செய்தனர். இறுதியாய் அது ஆண்களின் கரங்களால், அவரவரின் மனைவியின் கழுத்தைச் சேர்ந்தது.
அனைவரும் நலங்கு வைத்து வாழ்த்துத் தெரிவிக்க, பெரியவர்களிடம் ஆசி பெற்றுக் கொண்டனர் இரு தம்பதியரும்.

