வழியிலே இதயத்தின் நிழலாய் - 04

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஷாரிகா

Well-known member
Staff member
Apr 26, 2026
61
267
53
Srilanka
VIN - 4

காலையில் சித்தி வந்து எழுப்பும் வரையில் ஷோபனாவுக்கு முழிப்பில்லை. எட்டரை வரைக்கும் நல்..ல தூக்கம்.

அம்மம்மா , அவளுக்கு எண்ணெய் வைத்து தலைவாரிப் பிண்ணிவிட்டார். தம்பிமாருடன் சேர்ந்து சிறிதுநேரம் கெரம்போர்ட் விளையாடினாள். முன்பகலில் அபியை மரமேற்றி மாங்காய் பறித்து, உப்பு, வெட்டுத்தூள் சேர்த்து சாப்பிட்டார்கள். மூவரும் 'மோனிக்கா' பாடலுக்கு ஆட்டம் போட்டார்கள். அபித்ரன் நன்றாகவே ஆடினான். மற்ற இருவரும், பாட்டுக்கு ஆட சொன்னால்.. அவர்கள் பாட்டுக்கு ஆடினர். மதியம் சாப்பிட்ட பின்னர் எல்லாருமாக சேர்ந்து அம்மம்மாவின் தெரிவில் 'சூரியவம்சம்' பார்த்தனர்.

இப்படியாக, அன்று பூராகவும் அங்கேயே நேரம் செலவழித்துவிட்டு, மாலையில்தான் வீடுவந்து சேர்ந்தாள் ஷோபனா.

கொழும்பிலிருந்து கொண்டுவந்திருந்த, புத்தகங்கள் - நிரம்பிய ஓரிரண்டு பெட்டிகள், இன்னும் பிரிக்கப்படாமல் அப்படியே இருந்தன. மேசைக்கருகே அறைச்சுவற்றுடன் ஒட்டியவாறிருந்த, 'Plywood'இனாலான புத்தகரேக்கில் அப்புத்தகங்கள் எல்லாவற்றையும் நேர்த்தியாக அடுக்கிவைக்கத் தொடங்கினாள்.

அடுக்கி முடிக்கவும், ஏதாவது வாசிக்க வேண்டும் போலிருந்தது அவளுக்கு. பாதியில் விட்டிருந்த, 'The Kite Runner' நாவலின் இடைக்குள் வைத்திருந்த புக்மார்க், வெளியே தலையை நீட்டியபடி இருப்பதைக் கண்டவளுக்கு, அமீரின் பயணத்தில் இணைந்துகொள்ளும் மனநிலை இப்போதைக்கு இல்லை. அதற்கு சில நாட்கள் போக வேண்டும்.

காதல் நாவல்கள் வாசிக்கவும் மனமில்லை, அதற்கு இன்னும் பல நாட்கள் போக வேண்டும்.

ஒருவழியாக நா.முத்துக்குமாரின் 'அணிலாடும் முன்றில்'லை எடுத்துக்கொண்டு அமர்ந்தாள். ஏற்கனவே பலதடவைகள் படித்தாயிற்று. தோன்றும் போதெல்லாம் மீண்டும் படிக்குமளவிற்குப் பிடிக்கும்.

அந்த புத்தகத்தின் அணிந்துரையும் கூட அவ்வளவு அழகாக எழுதப்பட்டிருக்கும். அதன் இரண்டாம் பந்தியில் ‘எத்தனை தடவை வெட்டிவிட்டாலும் பூப்பது மட்டுமே வாழ்வென...’ என்பதாக, அவர்கள் வீட்டு நந்தியாவட்டையைப் பற்றி கவிஞர் வண்ணதாசன் குறிப்பிட்டிருப்பார். எப்போது படித்தாலும் ஓர் நேர்மறையான அதிர்வை ஏற்படுத்திவிடும் வரிகள் அவை. இப்போதும் கூட.

அணிந்துரை முடித்து உள்ளே முன்னேறினால், பழக்கமான வார்த்தைகள், பழைய நண்பர்களைப் போல வரவேற்றன. அணிலாடும் முன்றிலில் ஆழ்ந்து போயிருந்தவளைக் கலைத்தது, கைப்பேசி. அழைப்பு யாழினி டீச்சரிடமிருந்து.

யாழினி, நேற்று ஸ்கூலில்தான் அறிமுகமாகியிருந்தாள். புன்னகை முகமாக பேசியவளை மிகவும் பிடித்துப் போனது ஷோபனாவுக்கு. குறுகிய நேரத்தில் நண்பர்களாகி நம்பரையும் பகிர்ந்திருந்தனர்.

அழைப்பில்...
முதலில் சுகம் விசாரித்த யாழினி, நாளை மதியம் வீட்டிற்கு வருமாறு அழைத்தாள். அவளது மகன் கால் உடைந்து, பெட்ரெஸ்டில் இருப்பதால் பள்ளிக்கு செல்வதில்லை. அவனது டியூஷன் விஷயமாக பேசவேண்டும் என்றாள். ஸ்கூலில் வைத்து மேலோட்டமாக பேசிய விஷயம் தான்.
'நாளையை எப்படிக்கடப்பது' என உள்ளுக்குள் வெகுவாக பயந்திருந்த ஷோபாவும், தான் வருவதாக கூறி போனைவைத்தாள்.

*****
யாழினியின் வீட்டிற்கு செல்வதற்காக அதிகாலையிலேயே குளித்து, தயாராகிய ஷோபா, விட்டிருந்தால் அந்நேரமே போய் நின்றிருப்பாள். அந்தளவிற்கு என்னென்னவோ எண்ணங்கள் அவளை விடாமல்துரத்திக் கொண்டிருந்தன.

தனியாய் இருக்க முடியவில்லை. சிந்தனையை வேறு எதிலேயும் செலுத்தவும் முடியவில்லை. யாருடனாவது பேசினால் தேவலாம்.

இடக்கை பெருவிரல் நகத்தைக் கடித்தபடி, அறையில் அங்குமிங்குமாக நடைபயின்று கொண்டிருந்தவள், கடிகாரம் ஒன்பதெனக்காட்டவும் வீதிக்கு காற்றாய்ப் பறந்திருந்தாள்.
ஷோபாவின் ஸ்கூட்டி இன்னும் இங்குவந்து சேர்ந்திருக்கவில்லை. எனவே, செயலி ஒன்றின் உதவியில் முச்சக்கரவண்டி பிடித்து யாழினியின் இருப்பிடத்திற்கு பயணப்பட்டாள்.

ஷோபாவின் ஊரிலிருந்து, மட்டக்களப்பு டவுனுக்கு செல்ல முழுதாக நாற்பது நிமிடங்கள் எடுக்கக்கூடும். யாழினியின் வீடும் டவுனில்தான். அவர்களது ஸ்கூலுக்கு சற்றுப்பக்கம் என்றிருந்தாள்.

அவள் அனுப்பியிருந்த லொகேஷனை ஷோபா அழுத்தவும், ஜோனத்தனின் திருமணம் நடக்கவிருக்கும் Church உள்ள வீதியால் செல்ல வேண்டுமென்று காட்டியது அது.
கடன்பட்டார் நெஞ்சமென பதைபதைத்து பெண்ணின் உள்ளம். சேர்ச்சிற்குள்ள தூரம் குறையக் குறைய அவள் பதைபதைப்புக் கூடியது.

நேற்றின் உறுதிகளையெல்லாம் காற்றில் பறக்கவிட்டபடி,
'கடைசியாக ஒரு முறை ஜோவைப் பார்த்துவிடேன்...' என சத்தமின்றிக் கெஞ்சியது அவளின் இதயம்.

கைகளால் முகத்தை மூடிக்கொண்டு, ''ஐயோ! இல்ல, வேணா..ம் வேணா..ம்'' என தலையை இடம்வலமாக அசைத்தபடி சத்தமாக முணுமுணுத்தவள்,
நிமிர்ந்தபோது விரலிடைவெளிகளினூடே சேர்ச் தெரியவும், சட்டென்று தன்னைமீறி, ''அண்ணா... இங்க நிப்பாட்டுங்க.'' என்றிருந்தாள்.

ஆட்டோக்காரரிடம் பணத்தைக் கொடுத்தவள், ஆழ மூச்சொன்றை இழுத்துவிட்டு, திறந்திருந்த பெரிய கேட்டினூடாக தேவாலய வளாகத்தினுள் நுழைந்தாள்.

வெளியே வாகனங்கள் தவிர யாரும் இல்லை. எல்லோரும் உள்ளே தான் நின்றிருந்தார்கள். சேர்ச்சின் உள்ளே நுழைய தயக்கமாகவும் பயமாகவும் இருந்தது.மேலுதட்டின் மேலாக அரும்பியிருந்த வியர்வைத் துளிகளை இடக்கரத்தினால் அழுந்தத் துடைத்துக்கொண்டு வாசலை நோக்கி நடந்தவளது விழிகள் அவனைக் கண்டுகொண்டன.

நீண்ட இருக்கையிடைப் பாதையின் (Aisle) முடிவில் பலிபீடத்தினருகே (Altar) கருநிற கோர்ட்சூட் அணிந்து பற்கள்தெரிய ஜோராய் புன்னகைத்தபடி நின்றிருந்தான் ஜோ.

அதுவரை அவள் காதில் கேட்டுக்கொண்டிருந்த சத்தங்கள் எல்லாம் தூரமாய்ப் போயிருந்தன. மூச்சுக்காற்றும் கூட.

ஷோபனா ஒருநொடிக்கும் குறைவாகவே அவன் முகம் பார்த்திருப்பாள். அவன் உருவம் அவளின் பார்வைக்குள் விழுந்த அடுத்த கணமே கால்கள் வேகமாக வெளிநோக்கி நடக்கத் தொடங்கியிருந்தன. இல்லையில்லை, ஓடத்தொடங்கியிருந்தன.

சேர்ச்சைவிட்டு வெளியேறி ஐந்து நிமிடங்கள் நடந்திருப்பாள். சற்றுத் தள்ளியிருந்த பேருந்து தரிப்பிடம் (Bus Halt) ஆட்களின்றி தனித்திருக்கவும், யோசிக்காமல் சென்று அங்கிருந்த நீண்ட பெஞ்சில் அமர்ந்துகொண்டாள்.

கைகள் மெதுவாக நடுங்கிக் கொண்டிருந்தன. விரல்கள் ஒன்றையொன்று பிடித்துக்கொண்டன.
அழுதுவிடாதிருக்க, கலங்கிய விழிகளை உள்ளங்கையால் துடைத்துக்கொண்டாள்.

யாழினியிடமிருந்து அழைப்பு வரவும்தான் எதற்காக தயாராகி வந்தாள் என்ற நினைவே வந்தது ஷோபாவுக்கு. செயலியில் ஆட்டோ புக் செய்துவிட்டு, கால்களை சேர்த்துவைத்து, மடியில் முழங்கைகளையூன்றி, தலையைத் தாங்கிப்பிடித்தவாறு காத்திருந்தாள்.

' போயிருக்க கூடாது. '
மூடியிருந்த கண்கள் மீண்டும் கசியத்தொடங்கின.

யாரோ நடக்கும் அரவம் கேட்க கண்களைத் திறந்தவளுக்கு, மிக அருகே பிளக் ஷூ அணிந்த ஆணின் கால்கள் தெரிய, சட்டென்று நிமிர்ந்து முகம் பார்த்தாள்.

ஜோனத்தனின் நண்பன் வருண் நின்றிருந்தான். ஷோபாவின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்தன. சேர்ச்சிலிருந்து தான் வந்திருக்க வேண்டும்.

அவளின் முகத்தினை சில நொடிகள் பார்த்திருந்தவன் திரும்பிப் போயிருந்தான்.

' ஷோபாவுக்கு எதுவும் புரியவில்லை. இவன் ஏன் இங்கே வந்தான்? அவள் சேர்ச் வந்ததற்காக திட்டுவதற்கு வந்துவிட்டு, பாவப்பட்டு திரும்பிப்போயிருப்பானோ.. '

அவள் குழம்பிக் கொண்டிருக்கையிலே மீண்டும் வந்தான் வருண். இப்போது அவன் கையில் புதிய தண்ணீர்ப் போத்தலொன்று இருந்தது. அதை ஷோபாவிடம் நீட்டி, வாங்கிக் கொள்ளுமாறு தலையசைத்தான்.

'தண்ணிய குடிக்கவெச்சுட்டு கிழிக்கப் போறான் போலயே...' என்றெண்ணிவிட்டு தயக்கமாக பார்த்தவள், பின்பு வாங்கிக் குடித்துக்கொண்டாள். உண்மையிலேயே இப்போது சற்று ஓகேயாக இருந்தது.

'' பஸ்லயா போகனும்..? ஆட்டோ பிடிக்கவா..? '' என்று கேட்டவனைப் பேயறைந்ததைப்போல் பார்த்து வைத்தாள்...

''என்ன..பிடிக்கவா?''

'' இல்ல... ஆட்டோக்கு சொல்லிருக்கு..'' மெல்லிய தொனியில் பதில் சொன்னாள்.

சரி என்பதாக தலையசைத்தவன், சற்றுத்தள்ளி நின்று கொண்டான். ஷோபாவுக்கு ஜோவின் கல்யாணக் கவலையெல்லாம் தற்காலிகமாக காணாமல் போயிருந்தது. ' இவன் இங்கே ஏன் நிற்கிறான் ' என்பதே அவளுக்கு இப்போதுள்ள ஒரே பெரிய பிரச்சனை.

' இங்க என்னத்துக்கு இவன் நிண்டு கொண்டிருக்கான்! நமக்கு ஏசினாத்தான் போவானோ? ஐயோ..! இந்த ஆட்டோ வர ஏன் இவ்வளோ சுணங்குது..? ' என
கவலை,குழப்பம், கோவம், எரிச்சல் ஆகிய உணர்வுகளைக் கலந்துகட்டி, மனதுக்குள்ளே பேசித்தீர்த்தவளின் முன்னே முச்சக்கரவண்டி வந்து நின்றது.

அவனிடம் விடைபெறக்கூட இல்லை, வேகமாக ஆட்டோவில் வந்து ஏறிக்கொண்டாள் ஷோபா.

அவளின் பின்னோடே வந்து, ''வன் செக்..'' என ஆட்டோ சாரதியிடம் காத்திருக்க சொல்லிவிட்டு, ஆட்டோக்கம்பியை இடக்கையால் பற்றிக்கொண்டு, அவள்புறமாக குனிந்து,

'' சொரி ஷோபனா.. அன்டைக்கு கொஞ்சம் ஹா(ர்)ஷா கதச்சிட்டன்.'' என வருந்தும் குரலில் கூறினான். முகத்தில் பெரிதாக தெரியவில்லை.

இதை முற்றிலும் எதிர்பார்த்திராதவள், நொடி தாமதித்து ''இல்ல. பரவாயில்ல.'' என உள்ளே போன குரலில் சொன்னாள்.

அவன், ''ஓகேயண்ணா..எடுங்க.'' என்று கூறி விலகி
நின்றுகொண்டான்.

யாழினியின் முகவரி நோக்கி புறப்பட்டது ஆட்டோ...










 

Author: ஷாரிகா
Article Title: வழியிலே இதயத்தின் நிழலாய் - 04
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.