ஒரு பார்வையிலே என்னை வீழத்திவிட்டாய் - 1

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,208
16,482
113
Germany
பார்வை 1

அதிகாலைச் சூரியன் தன் ஆயிரம் கரங்களையும் விரித்து அந்த நாளை அழகாய் வரவேற்றது. சூரியனின் வருகையால் தான் அடிவானம் வெட்கி சிவந்ததோ என்பதுபோல், அடிவானம் எங்கும் செம்மையாய் காண்பதற்கு அத்தனை ரம்மியமாக இருந்தது.

அதிகாலைச் சூரியனை ரசிப்பது அவளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. ஆம், அவள் இயற்கையின் ரசிகை. புத்திசாலி, மென்மையானவள், இனிமையான குணம் கொண்டவள் என்று அவளது பெற்றவர்களுக்கு முன்பே தெரிந்ததோ என்னவோ, அதனால்தான் அந்தப் பெயரை வைத்தார்களோ… அவளின் பெயரின் அர்த்தமே அவளாகிப் போனது. ஆம், அவள் மதுமதி பிரதிக்ஷா.

அன்றும் பால்கனியில் சூரிய நமஸ்காரம் செய்து முடித்தவுடன், அதன் அழகில் லயித்து ரசித்துக் கொண்டிருந்தாள்.

மது மதி… கீழே வாம்மா!”
என்ற தாய் பரிமளத்தின் குரல், சூரியனை விட பிரகாசமாக அவளை நிகழ்வுக்கு கொண்டு வந்தது.

“அடடா… சூரியனுக்கு ஒரு குட் மார்னிங் சொல்ல விட மாட்டாங்க போல,” என்று மனதுக்குள் முணுமுணுத்தவள், கடைசியாக ஒருமுறை வானத்தைப் பார்த்துவிட்டு, மென் புன்னகையுடன் கீழே வந்தாள்.

“என்னடா உனக்கு… நேரம் ஆகலையா? வேலைக்கு போகும் முதல் நாள்… கொஞ்சம் சீக்கிரம் போக வேண்டாமா?” என்றாள் பரிமளம்.
“இந்தா… இந்த காபியை குடிச்சிட்டு ரெடியாகு. நான் போய் உன் தம்பி முகுந்தனை எழுப்புறேன். காலேஜுக்கு போகணும்னு கொஞ்சமாவது நினைப்பு இருந்தா, இந்த பையன் இப்படி கும்பகர்ணன் மாதிரி தூங்குவானா?”
என்று புலம்பியவாறே, பரிமளம் முகுந்தனின் அறையை நோக்கிச் சென்றார்.

அம்மா… அந்தப் புலம்பல் இல்லாம ஒரு நாள் விடியாதா?”
என்று சிரித்தபடியே, மதுமதி காபி கோப்பையுடன் ஹாலுக்கு வந்தாள்.

அங்கே கணேசமூர்த்தி அன்றைய தினசரியைப் படித்துக் கொண்டிருந்தார். பெரிய நிறுவனத்தில் ஆடிட்டராக வேலை பார்க்கும் அவர், நியூஸ் பேப்பருக்கு மட்டும் ரொம்ப விசுவாசி

“இன்றைய ஹாட் நியூஸ் என்னப்பா?”
என்றவாறே அருகில் அமர்ந்த அவள், ஒரு நாளிதழை எடுத்துக்கொண்டு தாய் தந்த காபியை ரசித்து பருகினாள்.

“எப்பவும் போலதாம்மா… எங்க நியூஸ் பேப்பரை எடுத்தாலும் நல்ல செய்தி கிடைக்கவே மாட்டேங்குது. ஒரே கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஆள் கடத்தல்… இப்படியே தான் நியூஸ் வருது. என்ன பண்றது… நல்ல செய்தி எங்கன்னு தேட மைக்ரோஸ்கோப் வேணும் போல,”
என்று பெருமூச்சு விட்டார்.

மதுமதி சிரித்தவாறே,
“அவங்களும் பக்கத்தை நிரப்ப வேண்டாமா பா,”
என்றாள். தலைப்பு செய்திகளை நோட்டமிட்டவள், அப்போதுதான் சுவர்க் கடிகாரத்தை பார்த்தாள். உடனே எழுந்து அம்மாவிடம் சென்றவள், அவரின் காலைநேரப் பரபரப்பைக் கண்டு, உதட்டோரம் சிறு முறுவலுடன்,
“எப்பவும் போல காபி ரொம்ப சூப்பர் மா. காபி போட்ட கைக்கு ஐந்து சவரன் வளையல் வாங்கித் தரணும் மா,”
என்றாள்.

திரும்பிப் பார்த்து அவளை முறைத்தவர்,
“காபி நல்லா இருக்குன்னு சொன்னா போதாது. நீயும் போடப் பழகணும் கண்ணு,”
என்றார்.

‘இனி நின்றால் ஆரம்பித்து விடுவார்’ என்று எண்ணியவள்,
“சரிம்மா… கண்டிப்பா கத்துக்கிறேன் மா,”
என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நழுவி, வேலைக்கு ஆயத்தமாக சென்றாள்.

காலைச் சிற்றுண்டியை தந்தை, தமக்கை, தமையன் என்ற மூவரும் சேர்ந்து சுவைத்தனர். முடித்த கையோடு, பரிமளம் ஆவி பறக்கும் சூட்டில் மூவருக்கும் காபியை தந்தார்.

“அம்மா கை பட்டாலே காபி மணமும் சுவையும் கொஞ்சம் கூடுதலா தான் இருக்குது இல்லையாப்பா?” என்றாள் மதுமதி.

“போதும் போதும்… இப்படியே அம்மாவுக்கு ஐஸ் வச்சுட்டு, எதையும் சமைக்கப் பழகாம இருந்தா, புகுந்த வீட்டில் எனக்கு கெட்ட பெயர் வாங்கித் தராம விடமாட்ட போல இருக்கு,”
என்றாள் பரிமளம் ஒரு பொறுமலுடன்.

“அச்சோ!”
என்று மாட்டிக் கொண்ட பாவனையில் இருந்த தமக்கையைப் பார்த்த முகுந்தன்,
“பாவம்… அக்காவை கல்யாணம் பண்ணப் போறவர். அவர் பாடு திண்டாட்டம் தான்,”
என்றான் கேலியாக.

உடனே மதுமதி அவனை முறைத்துப் பார்த்தவளாக,
“நான் யாரையும் திண்டாட விட மாட்டேன். நீ முதல்ல இதையெல்லாம் செய்யப் பழகு. அப்புறம் உனக்கு தான் திண்டாட்டமா போயிடும்,”
என்றாள்.

“ஏன் ஏன்… நான் ஏன் பழகணும்?”
என்றவனை,
“உன்னை கல்யாணம் பண்ணிக்கப் போறவளுக்கு நீ போட்டு தர வேண்டாமா டா?”
என்றாள் நக்கலாக.

“ரெண்டு பேருக்கும் என்னடா இந்த பேச்சு… வயசுக்கு தக்க பேசுங்க. உங்க ரெண்டு பேரையும் விட்டா இப்படியே வம்பு பேசிக் காலத்தைப் போக்கிடுவீங்க. மது, உனக்கு நேரம் ஆகலையா? சீக்கிரம் கிளம்பு,”
என்றார் பரிமளம் அக்கறையோடு.

“ஏம்மா மது, நான் இன்று மட்டும் உன் கூட வரட்டுமா?”
என்றார் தந்தை கனிவாக.

“வேண்டாம்பா… நானே போய்க்கிறேன்,”
என்றாள் மகள் சிறு புன்னகையோடு.

“உன் மோகன் மாமா சொன்னார்… அவனுக்கு நல்லா தெரிஞ்சவங்கன்னு. ஆனாலும் நானும் வந்து பார்த்தா எனக்கும் கொஞ்சம் நிம்மதியா இருக்கும் இல்லம்மா. அதான் உன் கூட வரட்டுமா ன்னு கேக்குறேன்,”
என்றார்.

“அப்பா ப்ளீஸ்… வேலைக்குத் தான்பா போறேன். போருக்கு போற மாதிரி பயப்படுறீங்க. நான் வெளியூரா போறேன்? என் ஃப்ரெண்ட் சுதா வீடும் அங்க தான் இருக்கு. நான் நிறைய தடவை அங்க போய் வந்திருக்கேன். நீங்க கவலைப்படாதீங்க,”
என்று சொல்லியவாறே ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தாள்.

மதுமதி மிகவும் தைரியமான பெண். மேலும் புத்திசாலியும் கூட. ஆனால் அவளது தந்தைக்கு, அவள் எப்போதுமே அவரின் செல்லக் குழந்தைதான்.

மகளின் மீது பேரன்பு கொண்டவராயிற்றே… அவளை தனியே அனுப்ப மனம் ஒப்பவில்லை. அவள் சென்ற திசையை யோசனையுடன், நெஞ்சத்தில் சிறு படபடப்புடன் பார்த்துக் கொண்டிருந்தவரை பரிமளம் அழைத்ததும் தான் நிகழ்வுக்கு வந்தார்.

“என்னங்க… நீங்க அவ என்ன சின்ன பொண்ணா? இருபத்தி மூணு வயசு ஆகுது. அவ தனியா எங்கேயும் போய் வருவாள். நீங்க தான் இப்படி பயப்படுறீங்க,”
என்றாள் தன்மையாக.

“எனக்கும் தெரியும் பரிமளா. ஆனா முதல் நாள் வேலைக்கு போறப்ப கொஞ்சம் தைரியமா இருப்பாள்னு தான் சொன்னேன்,”
என்றார் மனதிலிருந்த சஞ்சலத்தை குரலில் காட்டாமல்.

“அவ தைரியத்துக்கும் தன்னம்பிக்கைக்கும் குறைவே இல்ல. நீங்க கூட போனாதான் அவளை அதிகமா பயப்படுத்துவீங்க,”
என்றார் கேலி கலந்த குரலில்.

“எனக்கும் அவ புத்திசாலின்னு தெரியும் டி. ஏன்னா அவ என் பொண்ணாச்சே,”
என்றார் அவரை சீண்டுவதற்காக.

“ம்கும்…”
என்று முறைத்தவள்,
“அவ உங்களுக்கு மட்டும் பொண்ணு இல்ல… எனக்கும் தான் பொண்ணு,”
என்றார் .

“சரி சரி… ஒத்துக்கிறேன்,”
என்று அவர் சிரித்தார்.

பரிமளாவும் வீட்டுக்குள் நுழைந்தபடியே,
“முகுந்தா, காலேஜுக்கு கிளம்பிட்டியா? மறக்காம டிபன் பாக்ஸ் எடுத்துட்டுப் போடா… மறந்துடாதே,”
என்றார்.
முகுந்தனும் கல்லூரிக்கு கிளம்பினான்.

.. .. .. .. .. ..

மதுமதி நீதிமன்ற வளாகத்தைத் தாண்டி, ரேஸ்கோர்ஸ் பிரதான சாலையில் நுழைந்தாள்.
“எப்பா… என்ன இவ்வளவு டிராபிக்கா?”
என்று வியந்தவாறே, தனது வண்டியைச் செலுத்தினாள்.

ரேஸ்கோர்சில் சாலையின் இருபுறமும் மரங்கள் அடர்ந்து, குளுமையாக இருந்தது. நடைப்பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக அமைக்கப்பட்ட நடைபாதை, மேலும் ஆங்காங்கே இளைப்பாற இருவர் அமரும் சாய்வு இருக்கைகள்—எல்லாமே பார்க்க நன்றாக இருந்தது. அவற்றை ரசித்தவாறே அவள் சென்றாள்.

இரண்டு மூன்று தெருக்களை கடந்தவள், நான்காவது தெருவில் வண்டியை நிறுத்தினாள். விசிட்டிங் கார்டை பார்த்தால் “நான்காவது வீதி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தத் தெருவில் வண்டியைச் செலுத்தியவள், இரண்டு வீடுகளை கடந்ததும், மூன்றாவது வீட்டின் காம்பவுண்ட் சுவரில் சலவைக் கல்லில் “சாந்தி பவனம்” என்று தங்க நிறத்தில் பொறிக்கப்பட்டிருந்ததை கண்டாள். அதைக் கண்டவுடன், அந்த காம்பவுண்டின் அருகில் தனது வண்டியை நிறுத்தி, சாவியை எடுத்துக் கொண்டாள்.

வாயில் காவலனிடம் தன் வருகையின் காரணத்தை கூறியதும், அவன் உள்ளே அழைத்துச் சென்று விசாரித்து, பின்னர் அனுமதித்தான்.

சிவப்பு நிற டைல்ஸ் பாதையின் இருபுறமும் புல்தரையில் ஆங்காங்கே ரோஜா செடிகள் இருந்தன. புல்தரையின் மையத்தில் இளைப்பாறுவதற்காக ஒரு ஊஞ்சல் அமைக்கப்பட்டிருந்தது. புல்தரையின் முடிவில், ஒரு சிறிய தொட்டி போன்ற அமைப்பில் அல்லி மலர்கள் சிரித்துக் கொண்டிருந்தன.

போர்டிகோவில் நின்றிருந்த பிளாக் கலர் இனோவாவை கடந்தவள், கதவின் அருகில் சென்றபோது, சிபாரிசு கடிதத்தை கையில் எடுத்துக் கொண்டாள்.

காலிங் பெல்லை அழுத்த கையை உயர்த்தியவள், அரக்கு நிறப் புடவையில் அழகான தோற்றத்துடன், ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி
“யாரம்மா?”
என்று அருகில் வந்ததும், அனிச்சையாக கையை கீழே போட்டுக் கொண்டு,
“மேடம்,”
என்றவாறு சிபாரிசு கடிதத்தை நீட்டினாள்.

அதை வாங்கிப் பார்த்தவர்,
“உள்ளே வாம்மா. அதோ அங்குதான் என் அலுவலக அறை. நீ அங்கே சென்று காத்திரு,”
என்றார்.

மதுமதி சுமார் பதினைந்து நிமிடங்கள் காத்திருந்த பின், ஜே.எம். கார்மெண்ட்ஸ் மற்றும் ஜே.எம். பில்டர்ஸ் நிறுவனங்களின் எம்.டி., சொக்கலிங்கத்தை சந்தித்தாள்.

ஏற்கனவே அந்த அம்மாள் செய்தியை தெரிவித்து இருக்க வேண்டும். வந்தவரை பார்த்தவுடன்,
“மோகனசுந்தரம் அனுப்பிய பெண்ணம்மா நீ?”
என்று சிறு புன்னகையுடன் கேட்டார்.

“உன்னைப் பற்றி சொல்லியிருக்கான். உன் அப்பா பெயர் கணேஷ்மூர்த்தி தானே? மோகன் சொன்னான். அதனால்தான் இன்டர்வியூ வைக்காமலேயே உன்னை என் செயலாளர் பதவிக்கு நியமித்தேன். அவனுக்கும் எனக்கும் முப்பது வருட பழக்கம். அவன் கேட்டால் நான் இல்லைன்னு சொல்ல மாட்டேன்னு அவனுக்கும் தெரியும். அவன் சொன்னால் சரியா இருக்கும் என்பதும் எனக்கும் தெரியும்,”

என்றவாறு அவளுடைய கல்விச் சான்றிதழ்களை புரட்டிப் பார்த்தவர்,
“உனக்கு சிபாரிசு தேவையில்லை போலத் தெரிகிறதே,”
என்றார் பிரமிப்புடன்.

“எம்.பி.ஏ… கோல்ட் மெடலிஸ்ட்… ம்ம்… அவன் சொன்னதால்தான் உன்னை வரச் சொன்னேன். ஆனா உனக்கு சிபாரிசு தேவையே இல்ல போல இருக்குது,”
என்றார் பெரிதாக புன்னகைத்தவாறு. மேலும் அவளிடம் சில கேள்விகளை கேட்டார். அவற்றுக்கு அவள் அளித்த பதில்களால், அவரது புருவங்கள் மெச்சுதலாக உயர்ந்தன.

“பர்சனல் செகரட்டரியாகத்தான் இப்போ உன்னை வேலைக்கு நியமிக்கிறேன் அம்மா. ஆனாலும், உன் கல்வித் தகுதிக்கு ஏற்ற பணியை உனக்கு நிச்சயம் தர ஏற்பாடு செய்கிறேன்,”
என்றார். சம்பளம் மற்றும் பணி நேர விவரங்களை விளக்கி,
“உனக்கு வேற ஏதாவது சந்தேகம் இருந்தால் கேட்கலாம்,”
என்றார்.

சார்… தலைமை அலுவலகம் எங்கே இருக்கிறது?”
என்று அவள் சற்றே யோசித்தவாறு கேட்டாள்.

“இங்க தான்… அவினாசி ரோட்டில் இருக்கிறது,”
என்றார்.

அவரது பதிலில் ,அவளது மனம் நின்று துடித்தது.
 
Last edited by a moderator:

Author: நிதனிபிரபு
Article Title: ஒரு பார்வையிலே என்னை வீழத்திவிட்டாய் - 1
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Love
Reactions: Magizh kutty