உயிரில் அமுதங்கள் சுரக்கின்றதே - 4

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 71

Member
Staff member
May 13, 2026
36
74
18
India
அத்தியாயம் - 4

அதிதி துள்ளிக்குதித்துக் கொண்டு முன்னால் ஓட, பவித்ராவும் ஜீவிதாவும் அவள் பின்னால் மெல்ல நடந்தபடி தோட்டத்திற்கு வந்தனர். அந்த வீட்டின் தோட்டம் மிகவும் விசாலமாகவும், கண்ணுக்கு குளிர்ச்சியாகவும் இருந்தது. விதவிதமான பூச்செடிகளும், அடர்த்தியான புல்வெளியும் பவித்ராவின் மனதிற்கு ஒரு நிம்மதியைத் தந்தது.

"அத்த.. இங்கே பாருங்க, இதுதான் என்னோட ஃபேவரைட் ரோஜா செடி!" என்று ஒரு சிவப்பு ரோஜாவை அதிதி ஆசையாக காட்ட, பவித்ரா குனிந்து அந்தப் பூவை ரசித்தாள். அந்தப் பூவின் மென்மை அவளது மனதை என்னவோ செய்தது.

"அக்கா, அத்தான் இந்த கார்டனை ரொம்ப இஷ்டப்பட்டு பார்த்துப்பார், ஆபீஸ்ல இருந்து வந்தா இங்கே கொஞ்ச நேரம் அமைதியா உட்கார்ந்திருக்கிறது அவருக்கு ரொம்ப பிடிக்கும்," என்று ஜீவிதா சொல்ல, பவித்ரா ஆச்சரியத்துடன் அந்தத் தோட்டத்தைச் சுற்றிப் பார்த்தாள். கௌதமிற்குள் இப்படி ஒரு ரசனையா என்று அவளுக்குத் தோன்றியது.

"அத்த.. அத்த.. எனக்கு பால் போடுங்க!" என்று அதிதி ஒரு பிளாஸ்டிக் பந்தை எடுத்துக் கொண்டு வர, பவித்ரா அவளுடன் விளையாடத் தொடங்கினாள்.

அதிதி பந்தை எறிய, பவித்ரா ஓடிச் சென்று பிடிப்பதும், அதைத் திரும்ப எறிவதுமாக அங்கிருந்த சூழலே கலகலப்பானது. எத்தனையோ மாதத்திற்கு பிறகு பவித்ரா வாய்விட்டுச் சிரித்தாள். அவளது சிரிப்பு சத்தம் அந்தத் தோட்டம் முழுவதும் எதிரொலித்தது.

"இப்போதான் அக்கா உங்க முகம் ரொம்ப அழகா இருக்கு. எப்போவும் இப்படியே சிரிச்சிட்டே இருங்க," என்று ஜீவிதா வாஞ்சையோடு சொல்ல, பவித்ராவின் சிரிப்பு சட்டென ஒரு மெல்லிய புன்னகையாக மாறியது.

விளையாட்டின் நடுவே மூச்சு வாங்கியதால் ஒரு பெஞ்சில் அவள் அமர, அவளோடு வந்தமர்ந்த ஜீவிதா, "உங்களுக்கு என் அத்தானை பிடிச்சிருக்காக்கா?" என்று திடீரென்று கேட்டாள்.

அவளது கேள்விக்கு பவித்ரா பதில் சொல்ல முடியாமல் மௌனமாக, ஜீவிதாவின் கண்களோ சட்டென்று கலங்கிப் போனது. "ஜீவி என்னாச்சு?" பவித்ரா பதறிப் போய் வினவ, கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அவளது கரத்தைப் பற்றிக் கொண்ட ஜீவிதா, "என் அத்தான் ரொம்ப பாவம்க்கா. அவர் வாழ்க்கையில நிறையவே கஷ்டப்பட்டுட்டாரு. அவரோட முதல் மனைவி... அவ பேரை சொல்லக் கூட எனக்கு விருப்பம் இல்லை. அவளெல்லாம் மனுஷியே கிடையாது!" என்று ஆவேசமாகச் சொன்னவள்,.. "அவளால என் அத்தான் ரொம்ப கஷ்டப்பட்டுட்டாரு, அவளால எங்கே அத்தானோட வாழ்க்கை செழிக்காம இதோட வீணா போயிடுமோன்னு நாங்க ரொம்ப பயந்தோம், ஒரு கட்டத்துல நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கிறேன் அத்தான்னு கூட அவர்கிட்ட சொன்னேன். ஆனா அவர் கேட்கல. 'நீ என் மாமா மகளா இருந்தாலும் என் மனசுல தங்கை ஸ்தானத்துல இருக்க, அதனால இனிமே இப்படியெல்லாம் பேசாத'ன்னு சொல்லிட்டாரு. அப்போ வேற யாரையாச்சும் கல்யாணம் பண்ணிக்கோங்கன்னு சொன்னேன். அதுக்கும் அவர் கேட்கல. ரொம்ப போராடி, அத்தையும் அண்ணியும் ரொம்ப கன்வின்ஸ் பண்ணி தான் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கவே சம்மதிக்க வச்சாங்க, இதுக்கு முன்னாடி நடந்தது மாதிரி எதுவும் நடக்கக் கூடாது அக்கா, அத்தான் இதுக்கு அப்புறம் சந்தோஷமா இருக்கணும், அவரை நீங்க சந்தோஷமா வச்சுப்பீங்களா?" என்று ஏக்கத்துடன் வினவ, பவித்ராவோ இந்த பெண் தன் அத்தை மகன் மீது வைத்திருக்கும் அன்பைக் கண்டு நெகிழ்ந்து போனாள்.

'என்னால உன் அத்தானை சந்தோஷமாகப் பார்த்துக் கொள்ள முடியும்' என அவளால் அடித்துச் சொல்ல முடியவில்லை. ஏனென்றால் அவள் இருக்கும் மனநிலையும் மிக மோசமானது அல்லவா! ஜீவிதாவிற்குப் பவித்ரா தன் முதல் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள் எதுவுமே தெரியாது. வெறும் கருத்து வேறுபாட்டால் முதல் வாழ்க்கையிலிருந்து விலகி விட்டதாய் தான் அவள் எண்ணினாள், அவளுக்கு தெரியாமல் இருந்தது பவித்ராவிற்கும் நிம்மதியாக இருந்தது.

அந்தப் பெண்ணின் ஆதங்கத்தையும் அன்பையும் புரிந்து கொண்ட பவித்ரா,.., "நான் என்னால முடிந்த வரை முயற்சி பண்ணுறேன் ஜீவி," என்று மெல்லிய குரலில் கூறினாள்.

"அது போதும் அக்கா... நீங்க மனசு வச்சா கண்டிப்பா அத்தானை மாத்த முடியும், உங்க அன்பால கண்டிப்பா என் அத்தான் லைஃப் சூப்பரா மாறும்" என்று ஜீவிதா நம்பிக்கையோடு சொல்ல, பவித்ரா மௌனமாக அந்தத் தோட்டத்தைப் பார்த்தாள்.

அவள் கௌதமைத் தேற்ற வேண்டுமா? அல்லது கௌதம் அவளைத் தேற்ற வேண்டுமா? இருவருமே காயப்பட்ட இதயங்களோடு தான் இந்தப் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, அந்தப் பழைய வடுக்களை ஆற்றப் போகிறார்களா? அல்லது காலம் அவர்களை இன்னும் சோதிக்கப் போகிறதா? என்பது அந்த இறைவனுக்கே வெளிச்சம்.

வீட்டில் வேலை செய்வதற்கு பணிப்பெண்கள் இருந்தாலும் சமையல் மட்டும் அந்த வீட்டின் பெண்களுடையது தான், அதை மட்டும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள், அப்படி தான் அன்று வாசுகி, ஜானகி, சரண்யா மூவரும் சமையல் வேலையை கவனித்துக் கொண்டிருந்தனர்,.

அந்த கணம் ஜானகியின் முகத்தில் வாட்டத்தை கண்ட வாசுகி,.."என்ன ஜானு, உன் முகமே சரி இல்லையே என்னாச்சு உனக்கு" காய்கறி நறுக்கிக்கொண்டிருந்த வாசுகி கீரை உருவிக் கொண்டிருந்த ஜானகியிடம் மெல்ல வினவ,.. "தெரியல அண்ணி, ஒரு மாதிரியாவே இருக்கு" என்றார் ஜானகி,..

"என்னமா கவலை உங்களுக்கு, தம்பிக்கும் நாம நினைச்ச மாதிரி நல்லபடியா கல்யாணம் முடிஞ்சிடுச்சி, இன்னும் என்ன ஒரு மாதிரியாவே இருக்குனு சொல்றீங்க" என்று கேட்டாள் அவருடன் சேர்ந்து கீரை உருவிக் கொண்டிருந்த சரண்யா...

"கல்யாணம் நல்லபடியா முடிஞ்சிடுச்சி தான், ஆனா கல்யாணமானவங்க சந்தோஷமா வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கனும் இல்லையா, ரெண்டு பேருக்கும் காயம்பட்ட புண்பட்ட மனசு, அதான் எப்போ புரிஞ்சிக்கிட்டு வாழ ஆரம்பிக்க போறாங்கனு யோசிக்கிறேன்" என்றார் ஜானகி,..

"என்ன ஜானு நீ, நேத்து தானே கல்யாணம் ஆகிருக்கு, அதுக்குள்ள அவங்க வாழ ஆரம்பிக்கனும்னு சொன்னா என்ன அர்த்தம், அவங்களுக்கும் நாம டைம் கொடுக்கணும் இல்லையா, நீயே சொல்ற காயம்பட்ட மனசுன்னு, அப்புறம் இதையே நினைச்சுட்டு இருந்தா எப்படி" என்றார் வாசுகி,..

"அத்த சொல்றது சரி தானேம்மா, நீங்க சும்மா போட்டு மனசை குழப்பிக்காதீங்க, முதல்ல பவித்ரா நம்ம கிட்ட நல்லா ஒட்டி பழகட்டும்,
அப்புறம் மெல்ல மெல்ல கௌதம் கிட்டயும் அவ பழக்கத்தை ஏற்படுத்திப்பா. ரெண்டு பேருமே ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிற வரைக்கும் நாம பொறுமையா தான் இருக்கணும்," என்று சரண்யா பக்குவமாகச் சொல்ல, "அதுவும் சரிதான், ஆனா பெத்த மனசு கேட்க மாட்டேங்குது, என் பையன் இதுக்கு அப்புறமாவது நிம்மதியா வாழணும், அது தான் எனக்கு வேணும்" என்று ஜானகி பெருமூச்சுடன் கூற,.. "கண்டிப்பா நடக்கும் ஜானு, இப்போ எதுக்கு இந்த பழைய கதையெல்லாம் பேசிட்டு விடு" என்று வாசுகி பேச்சை மாற்ற, அந்த சமையலறையில் மீண்டும் கலகலப்பான பேச்சுக்கள் ஆரம்பமானது.

அங்கே வெளியில் அதிதியுடன் விளையாடிக் கொண்டிருந்த பவித்ராவிற்கு, உள்ளே தங்களை பற்றி இத்தனை பெரிய விவாதம் நடப்பது தெரியாது, அவள் அந்த சிறுமியின் மழலையில் தன்னை மறந்து சிரித்துக் கொண்டிருந்தாள். இருப்பினும் ஜீவிதா சொன்ன அந்த பழைய விஷயங்கள் அவள் மனதின் ஒரு ஓரத்தில் கௌதம் மீதான ஒரு மெல்லிய சலனத்தையும் உருவாக்கி இருந்தது,...

அன்றைய மதிய உணவையும் காலை போல தனது புது குடும்பத்துடன் அமர்ந்து தான் உண்டாள் பவித்ரா, கௌதம் மட்டும் தான் அங்கு குறையாக இருந்தான், அவன் அலுவலகம் சென்றால் மதிய உணவிற்கு வர மாட்டான் என்பதால் குடும்பத்தினர்களும் பெரிதாக கவலை கொள்ளவில்லை,..

அன்றைய பொழுது அப்படியே கழிய, சரவணன் வாசுகி குடும்பம் தாங்கள் கிளம்ப போகும் செய்தியை கூறினர், அவர்களும் அதே ஊரில் உள்ள வேறொரு தனி வீட்டில் தான் இருக்கிறார்கள், கௌதமின் திருமணத்திற்காக தான் வந்திருந்தார்கள், அவர்கள் வருவதும் போவதும் இயல்பாக நடக்கும் ஒன்று என்பதால் கௌதமின் உறவினர்களுக்கு ஒன்றும் பெரிதாக தெரியவில்லை, ஆனால் பவித்ராவிற்கு தான் ஒரு மாதிரியாக இருந்தது, ஆனால் அவள் அதனை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை,..

அவள் வெளிக்காட்டிக் கொள்ளாவிட்டாலும் அவர்கள் மூவருக்கும் அவளின் ஏக்கம் புரிந்தது,.. "கவலை படாதம்மா வாரத்துக்கு ஒரு நாள் எப்படியும் நாங்க இங்கே வந்திடுவோம்" என்று சொல்ல, அவள் முகமும் மலர்ந்தது, அதன் பிறகு சரவணன் வாசுகி தங்கள் மகள் ஜீவிதாவுடன் விடைபெற்றுக் கொண்டனர்.

ஜீவிதா சென்ற பிறகு, அந்த வீட்டின் கலகலப்பு குறையாமல் இருக்க அதிதியின் மழலையே காரணமாக இருந்தது.

இரவு சாப்பாட்டிற்கு பிறகு அனைவரும் தத்தம் அறைக்கு சென்று விட, பவித்ராவும் தயக்கத்துடன் கௌதமின் அறைக்கு வந்தாள். அவன் படுக்கையில் தான் அமர்ந்திருந்தான் தனது மடிகணினியுடன், அவள் வருவதை கண்டாலும் அவன் ஏறிட்டுப் பார்க்கவில்லை. அவன் பார்த்தால் தான் பதட்டத்துடன் குனிந்து கொள்கிறாளே,.. எதற்கு வம்பு என்ற எண்ணத்தில் அவன் அவள் பக்கமே திரும்பவில்லை, அவளுக்கும் அது சற்று நிம்மதியை தர, தனது இடத்தில் வந்து முதுகை காட்டி படுத்துக் கொண்டாள்.

அறைக்குள் மௌனம் மட்டுமே நிலவியது. மடிக்கணினியின் விசைப்பலகையில் அவனது விரல்கள் தட்டும் சத்தம் மட்டும் சீராகக் கேட்டுக் கொண்டிருந்தது. அந்த சத்தம் அவளுக்குள் ஒரு வித பாதுகாப்பான உணர்வைத் தந்தாலும், தூக்கம் மட்டும் அவளது கண்களைத் தழுவ மறுத்தது. பகலில் ஜீவிதா சொன்ன விஷயங்கள் தான் அக்கணம் அவளது மனத்திரையில் நிழலாடின.

'இப்போ நான் என்ன பண்ணனும், அவர் கிட்ட ஏதாவது பேசலாமா' என்று எண்ணிக் கொண்டிருக்கும் போதே, மடிக்கணினியை மூடும் சத்தம் கேட்டது. சட்டெனத் தனது கண்களை இறுக மூடிக்கொண்டு தூங்குவது போலப் பாவனை செய்தாள் அவள், ஏன் அவனிடம் அவளுக்கு இவ்வளவு பதட்டம் எழுகிறது என்று தெரியவில்லை, பேசலாம் என்று நினைத்தாலும் மற்றவர்களுடன் பேசுவது போல் இயல்பாக பேச்சு வரவில்லை, 'நாளை பாரத்துக் கொள்ளலாம்' என்று மௌனமாகவே இருந்து விட்டாள்.

அவனோ விளக்கை அணைத்துவிட்டுப் படுக்கையில் சாய்ந்தான். அவளுக்கும் அவனுக்கும் இடையே இருந்த அந்த மெல்லிய இடைவெளி அப்படியே இருந்தது. அந்த இருட்டில் அவனது மூச்சுக்காற்றின் வேகம் சீராக இருப்பதை அவதானித்து மெல்ல விழிகளை மூடிக் கொண்டவள் எப்போது உறங்கினாள் என்றே தெரியவில்லை.

அவனும் கொஞ்ச நேரம் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தவன், ஒரு வழியாக உறக்கத்திற்குச் சென்றிருந்தான். மணி நள்ளிரவு இரண்டு இருக்கும். ஆழ்ந்த அமைதியில் இருந்த அந்த அறையில், திடீரெனக் கேட்ட ஒரு மெல்லிய முணுமுணுப்பு சத்தத்தில் கௌதமின் தூக்கம் கலைந்தது.

மெல்லக் கண்களைத் திறந்து பார்த்தவனுக்கு அதிர்ச்சியில் இதயம் ஒரு கணம் நின்று துடித்தது. அருகில் படுத்திருந்த பவித்ராவின் உடல் தூக்கத்திலேயே ஏதோ ஒரு இனம் புரியாத பயத்தில் துடித்துக் கொண்டிருந்தது. அவளது கை கால்கள் தானாகவே நடுங்க, அந்த இருட்டிலும் அவளது முகம் வேதனையில் சுருங்குவதை அவனால் உணர முடிந்தது.

கெட்ட கனவு எதிலோ சிக்கிக்கொண்டவள் போல, அவளது உடல் ஒருவித வலிப்பு வந்ததைப் போல நடுங்கிக் கொண்டிருக்க, அதைக் கண்ட கௌதம் திகைத்துப் போனான்.
 

Author: STN - 71
Article Title: உயிரில் அமுதங்கள் சுரக்கின்றதே - 4
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
383
83
Chennai
அச்சோ பவி.....கௌதம் நீயாவது ஏதும் அவளை பேசி இயல்பு ஆக்கலாம் இல்ல.....
ஆன உன் எண்ணமும் சரி தான்.....எங்கே அவள் பேச இடம் தருகிறாள் இல்ல