உயிரில் அமுதங்கள் சுரக்கின்றதே - 12

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 71

Member
Staff member
May 13, 2026
36
74
18
India
அத்தியாயம் - 12

கார் அருகே வரும் வரை கௌதமின் வேகம் குறையவில்லை. அவனது பிடியில் இருந்த பவித்ராவின் கரம் லேசாக வலிக்கத் தொடங்கினாலும் அவள் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. அவனது மனப் போராட்டம் அவளுக்குப் புரிந்தது.

காரில் ஏறி அமர்ந்ததும், காரை ஸ்டார்ட் செய்தவன் புயல் வேகத்தில் பறக்க விட்டான். இந்த வேகத்தை அவனிடம் அவள் பார்த்ததே இல்லை. முன்னால் போகும் வண்டியில் மோதி விடுமோ என்ற பயத்தில், "கொஞ்சம் பொறுமையா போங்களேன்... பயமா இருக்கு" என்று அவள் மெல்லிய குரலில் சொன்ன கணம் தான், தான் செய்த காரியம் அவனுக்குப் புரிந்தது.

மானசீகமாகத் தலையில் அறைந்து கொண்டவன், சட்டென்று வேகத்தைக் குறைத்தான். ஆனால் கௌசல்யாவினால் ஏற்பட்ட அந்த முக இறுக்கம் மட்டும் அவனிடம் குறையவே இல்லை. அவனது கோபத்தின் ஆழத்தைப் புரிந்து கொண்டு அவளும் அமைதியாகவே வந்தாள்.

சற்று நேரத்தில் வீடு வந்து சேர்ந்து விட, அவன் விறுவிறுவெனத் தனது அறை நோக்கி நடந்து விட்டான்.

இன்று தம்பியின் முகத்தில் பழைய கோபத்தைக் கண்ட சரண்யா, பவித்ராவிடம், "என்னாச்சுமா? அவன் ஏதோ பயங்கர டென்ஷன்ல இருக்கிற மாதிரி இருக்கு..." என்று கவலையுடன் வினவிட, "அது வந்து அண்ணி..." என்று தயங்கியவளுக்கு, நடந்ததை சொல்லலாமா வேண்டாமா என்ற தயக்கம், அவளது தயக்கத்தைப் புரிந்து கொண்ட சரண்யாவும் மேற்கொண்டு அவளை வற்புறுத்திக் கேட்கவில்லை.

"சரிமா, நீ ரூமுக்குப் போ. அவன் கிட்டப் பொறுமையா பேசு," என்று அனுப்பி வைக்க, "ம்ம்..." என்றவள், தான் கையில் வைத்திருந்த பொம்மையை நீட்டி.. "இதை அதிதிக்கிட்ட கொடுத்துடுங்க அண்ணி," என்று சொன்னாள். சர்ப்ரைஸாக அவளுக்குக் கொடுக்க வேண்டும் என்று தான் ஆசையாக வாங்கினாள், ஆனால் இப்போது இருக்கும் மனநிலைக்கு அவளுக்கு அதில் விருப்பம் இல்லாததால் பொம்மையைக் கொடுத்துவிட்டு அறை நோக்கி நடந்தாள்.

உள்ளே கௌதமோ கட்டிலில் அமர்ந்து வெறித்த பார்வையுடன் காணப்பட்டான். அவனை இதுவரை அவள் இப்படிப் பார்த்ததே இல்லை, அதனால் அவனிடம் பேசுவதற்கே அவளுக்குப் பெரும் தயக்கமாக இருந்தது. இலகுவான வேறு புடவைக்கு அவள் மாறி வந்த பின்னரும் அவன் அதே நிலையிலேயே அமர்ந்திருந்தான்.

அதற்கு மேலும் அவனது அந்த மௌனத்தைப் பொறுக்க முடியாமல், மெல்ல அவன் அருகில் வந்தவள்... "நடந்ததை விடுங்களேன்..." என்று மிகவும் மென்மையாகக் கூற, அவனது பார்வை அவளின் மீது வந்து நிலைத்தது. அப்போதும் அவன் முகம் பாறையாக இறுகிப் போய் தான் இருந்தது.

"நான் கொஞ்சம் தனியா இருக்கணும்னு நினைக்கிறேன்," என்று கௌதம் சொன்னபோது, 'என்னிடம் பேசாதே' என்று அவன் மறைமுகமாகச் சொல்வது போல் அவளுக்குத் தோன்றியது. அவள் முகமே வாடிப் போய்விட, அமைதியாக அறையை விட்டு வெளியேறிவிட்டாள். இரவு உணவு நேரத்தில் வழக்கமாக எல்லாரோடும் கலகலப்பாகப் பேசும் கௌதம், அன்று ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. சாப்பாடும் ஏதோ கடமைக்குக் கொஞ்சமாக எடுத்துக்கொண்டு எழுந்துவிட்டான்.

ஜானகிக்கோ கவலையாகிப் போனது. இருவருக்கும் இடையில் ஏதாவது பிரச்சனையா என்பதை எண்ணி வருந்தியவர், "உங்களுக்குள்ள ஏதாவது பிரச்சனையாமா?" என்று அடக்க முடியாமல் கேட்டும் விட்டார். ஆனால் அப்படி எதுவும் அவர்களுக்குள் நடக்கவில்லை என்பதால், "அப்படியெல்லாம் எதுவும் இல்லை அத்தை," என்பதோடு முடித்துக் கொள்ள, மேற்கொண்டு அவராலும் எதுவும் கேட்க முடியவில்லை.

பவித்ரா அறைக்குச் சென்றபோது, கௌதம் நெற்றியில் கரம் வைத்து கண் மூடிப் படுத்திருந்தான். அவன் தூங்கவில்லை என்பது அவளுக்குப் புரிந்தது. மெல்லத் தான் படுக்கும் இடத்தில் அமர்ந்தவள், படுக்காமல் அப்படியே அமர்ந்தே இருந்தாள்.

கடந்த சில நாட்களாகத் தன்னிடம் மிகவும் கலகலப்பாகப் பேசியவன், இன்று அருகிலேயே இருந்தும் பேசாமலே இருப்பது அவளுக்கு அழுகையை வரவழைத்தது. அவளையும் அறியாமல் கண்ணீர் விட்டு அழுதுவிட்டாள். அவளது மெல்லிய விசும்பல் சத்தம் கேட்டுப் பதறிப் போய்க் கண்களைத் திறந்தவன், "என்னாச்சு பவித்ரா? எதுக்காக அழற?" என்று பதட்டத்துடன் வினவினான்.

"எல்லாம் பண்ணிட்டு என்னாச்சுன்னு வேற கேட்கிறீங்களா?" என்று அவள் விம்மிக் கொண்டே கேட்க, எழுந்து அவள் அருகில் அமர்ந்தவன், "நான் என்ன பண்ணேன்?" என்றான் புரியாமல்.

"இன்னைக்கு சாயந்தரத்துல இருந்து நீங்க என்கிட்ட பேசவே இல்லை. அத்தை, அண்ணி எல்லாரும் நமக்குள்ள ஏதாவது பிரச்சனையான்னு கேட்கிறாங்க" என்று அழுதுகொண்டே கூறிட, அவளது வார்த்தைகளைக் கேட்டபோதுதான் கௌதமிற்குத் தான் செய்த தவறு புரிந்தது. கௌசல்யாவினால் ஏற்பட்ட ஆத்திரம், அவளைப் பார்த்த அசிங்கம் இதை எல்லாம் நினைத்து வெறுத்து போயிருந்தவன், தன் மௌனத்தால் பவித்ரா பாதிக்கபடுவாள் என்று யோசிக்க தவறி விட்டான், அவளது கண்ணீரின் மூலம் தனது தவறை புரிந்து கொண்டவன்,.. "ஸாரி பவித்ரா... ரியல்லி ஸாரி," என்றான் மிகவும் தணிந்த குரலில்.

"உன் மேல எனக்கு எந்தக் கோபமும் இல்லை, அவளை பார்த்ததுல இருந்து என் மனசு ஒரு நிலையில இல்லை, அவ பேசின அசிங்கமான வார்த்தைகள் எல்லாம் என் காதுல கேட்டுக்கிட்டே இருந்துச்சு, அந்த எரிச்சல்ல தான் உன்கிட்டயும் சரியா பேச முடியல. ஆனா அது உன்னை காயப்படுத்தும்னு நான் நினைக்கவே இல்ல," என்று வருத்தத்துடன் கூறிட, பவித்ரா கண்களைத் துடைத்துக்கொண்டு.. "எனக்கு அது தெரியுங்க... ஆனா நீங்க பேசாம இருந்தா எனக்கு என்னவோ போல இருக்கு. இனிமே இப்படி இருக்காதீங்க," என்றாள் உரிமையுடன்.

கௌதம் அவளது கைகளை மெல்லப் பற்றிக்கொண்டு, "இனிமே இப்படி நடக்காது பவித்ரா," என்று கூற, அப்போதுதான் அவள் முகத்தில் சிரிப்பே வந்தது. ஆனாலும் மனதில் உறுத்திய கேள்வியைக் கேட்காமல் இருக்க முடியாமல், "அவங்கதான் உங்க முதல் மனைவியா?" என்றாள்.

"இந்த முதல் மனைவி'ங்கிறதை இனி சொல்லாத, அவளுக்கு ரெஸ்பெக்ட் கொடுக்கிறதையும் இதோடு விட்டுடு," என்று அவன் கண்டிப்புடன் கூற, "ஸாரி ஸாரி... மறுபடியும் பேசாம போயிடாதீங்க, இனிமே சொல்ல மாட்டேன்," என்று அவசரமாகக் கூறியவளைப் பார்த்து மெலிதாய் புன்னகைத்தவன்,.. ஒரு நீண்ட மூச்சை இழுத்து விட்டு, அவளது கேள்விக்குப் பதிலாய், "அவ தான் என் லைஃபையே இருட்டாக்கியவ," என்றான்.

"அவங்க டிரஸ்ஸும் பேச்சும் கொஞ்சம் கூட சரியில்லை, ரெண்டு வருஷம் எப்படி அவங்ககூட வாழ்ந்தீங்க?" என்று பவித்ரா தன் மனதில் பட்டதை கேட்க, "எனக்கும் தெரியலை. ஆனா கௌரவத்துக்காக அடங்கிப் போக நினைச்சேன். ஆனா அது எவ்வளவு பெரிய தவறுன்னு அப்புறம்தான் புரிஞ்சது," என்றான்.

"ஏன் அடங்கிப் போக நினைச்சீங்க? உங்க வசதி பத்தி எனக்குத் தெரியும், ரொம்ப உயர்வான இடத்துல இருக்கிறவருதான் நீங்க. அப்புறம் ஏன் அடங்கிப் போக நினைச்சீங்க?" என்று அவள் வினவினாள்.

"பணம், வசதி, அந்தஸ்து இதெல்லாம் இருந்தா மட்டும் ஒரு மனுஷன் நிம்மதியா வாழ்ந்திட முடியுமா பவித்ரா? கௌரவம் தானே ஒரு ஆணுக்கு ரொம்ப முக்கியம். பொம்பளைங்க கெட்டவனுங்க கையில மாட்டிக்கிட்டு கஷ்டப்படுறது எந்தளவு கொடுமையான விஷயமோ, ஆம்பிளைங்க அரக்கத்தனமான பொண்ணுங்க கிட்ட மாட்டிக்கிட்டு கஷ்டப்படுறது அதைவிடக் கொடுமை. ஏன்னா, ஒரு பொண்ணு கஷ்டப்பட்டா இந்த உலகம் உடனே பரிதாபப்படும், ஆதரவு கொடுக்கும். ஆனா ஒரு ஆண் தன் மனைவியால கஷ்டப்படுறான்னு சொன்னா, இந்த சமூகம் அவனைப் பார்த்து ஏளனமா சிரிக்கும். 'ஒரு பொண்ணைக் கூட அடக்கத் தெரியாதவனா நீ'ன்னு கேலி பேசும். அந்த அசிங்கத்துக்குப் பயந்துதான் நிறைய ஆண்கள் உள்ளுக்குள்ளேயே செத்துக்கிட்டு இருக்காங்க. நானும் அப்படித்தான் இருந்தேன்." என்று ஒரு நீண்ட பெருமூச்சை விட்டவன், மேலும்..
"அவ செஞ்ச துரோகம், அவளோட தப்பான பழக்கவழக்கம் இதெல்லாம் வெளிய தெரிஞ்சா என் குடும்பத்தோட கௌரவம் என்னாகும்னு நினைச்சுதான் நான் அடங்கிப் போனேன். ஆனா, நாம எந்தளவுக்குப் பொறுமையா போறோமோ, அந்தளவுக்கு அவங்க அதை நம்ம பலவீனமா நினைச்சுப்பாங்க. கடைசியில அவளாவே 'எனக்கு இன்னொருத்தன் கூடத்தான் வாழப் பிடிச்சிருக்கு'ன்னு சொல்லிட்டுப் போனப்ப தான், எனக்கும் என் கௌரவத்துக்கும் அங்க வேலையே இல்லைன்னு புரிஞ்சது. ஒரு வழியா அந்த நரகத்துல இருந்து வெளிய வந்தேன். ஆனா, அந்த ரணம் மட்டும் அப்படியே இருந்துச்சு. இன்னைக்கு அவளைப் பார்த்ததும் அந்த பழைய வலிதான் கோபமா வெடிச்சது. ஸாரி பவித்ரா, அந்த கோபத்தை தான் மௌனமா இருந்து உன்கிட்ட காட்டிட்டேன்."
என்று அவன் கூற.. "இனி அதைப் பத்தியெல்லாம் யோசிக்காதீங்க. ஒருத்தரோட கௌரவம் அவங்க கூட இருக்குறவங்களால வர்றது இல்ல, அவங்களோட குணத்தால வர்றது. நீங்க ரொம்ப நல்லவர். அவங்க போயிட்டது உங்க தப்பு இல்ல, உங்களோட அதிர்ஷ்டம்னு நினைச்சுக்கோங்க. இனி உங்களுக்கு நான் இருக்கேன்," என்று உறுதியாகச் சொன்னாள்.

அவளது அந்த முதிர்ச்சியான பேச்சு கௌதமிற்குப் பெரிய மருந்தாக அமைந்தது. இருளில் மூழ்கியிருந்த அவனது மனதிற்குள் பவித்ரா ஒரு மெல்லிய ஒளியாகத் தெரிந்தாள்.

"சரி ரொம்ப நேரமாச்சு தூங்குவோமா?" என்று அவன் கேட்க, "ம்ம்..." என்று தலை அசைத்தவள், அன்று தான் நிம்மதியாகக் கண் மூடினாள். கௌதமும் தன் மனதிலிருந்த பாரத்தை இறக்கி வைத்த நிம்மதியில், பவித்ராவின் அருகாமையில் வெகு நாட்களுக்குப் பிறகு அமைதியாக உறங்கினான்.

அடுத்தடுத்த நாட்கள் இருவருக்கும் மிகவும் அமைதியாகவே கடந்தது. இதுவரை அவர்கள் இருவருக்குள்ளும் காதல் என்ற உணர்வு வரவில்லை என்றாலும், அதற்கு இணையான ஒரு அழகான புரிதல் உருவாகி இருந்தது.

வார்த்தைகளே தேவைப்படாமல் ஒருவரது முகத்தைப் பார்த்தே மற்றவரது மனதில் இருக்கும் வலியைப் புரிந்து கொள்ளத் தொடங்கினர்.

கடந்த கால கசப்புகளை மறந்து, ஒருவருக்காக ஒருவர் வாழும் அந்தப் பிணைப்பு அவர்களுக்குள் மெல்ல மெல்ல வலுவடைந்து, பெரிய சத்தமில்லாமல், ஒரு அமைதியான நீரோடை போல அவர்களின் வாழ்க்கை நிம்மதியாக நகரத் தொடங்கியது.



 

Author: STN - 71
Article Title: உயிரில் அமுதங்கள் சுரக்கின்றதே - 12
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
383
83
Chennai
சூப்பர் சூப்பர்....இப்படி தான் ஒருத்தருக்கு ஒருத்தர் அனுசரணையா விட்டு கொடுத்து போகணும்