உயிரில் அமுதங்கள் சுரக்கின்றதே - 14

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 71

Member
Staff member
May 13, 2026
36
74
18
India
அத்தியாயம் - 14

அதன் பிறகு அவனது அறைக்கு அவளை அழைத்துச் சென்றான் கௌதம். கதவைத் திறந்து உள்ளே நுழைந்ததும், அந்த அறையின் நேர்த்தியும் அங்கிருந்த நவீன வசதிகளும் அவளை வியப்பில் ஆழ்த்தின. கௌதம் அவளைப் பார்த்து, "சிட்," என்று அவனது பிரம்மாண்டமான நாற்காலியைக் காட்டி சொல்ல, அந்த நாற்காலியைப் பார்த்துவிட்டுத் தயங்கியவள், "இங்கேயா?" என்றாள் வியப்புடன்.

"இங்கே தான் உட்காரு," என்று அவன் உறுதியாகக் கூற, "இது நீங்க உட்கார்ற சீட் தானே?" என்று அவள் தயக்கத்தோடு கேட்கவும், "அதனால தான் உன்னை உட்கார சொன்னேன்," என்றவன், மென்மையாக அவளது தோள்களைப் பற்றி அந்த இருக்கையில் அமர வைத்தான். அவளுக்கோ ஒரு நிமிடம் இதயம் வேகமாகத் துடித்தது. தன் கணவன் அமர்ந்து அதிகாரம் செலுத்தும் அந்த இடத்தில் தான் அமர்ந்திருப்பது அவளுக்கு என்னவோ போல இருந்தாலும், மனதிற்குள் அளவற்ற சந்தோஷத்தைத் தந்தது.

அந்த சுழல் நாற்காலியைத் தடவிப் பார்த்து, லேசாகச் சுற்றிப் பார்த்தவள், "இங்கே உட்கார ரொம்ப நல்லா இருக்கு!" என்று ஒரு குழந்தையைப் போல குதூகலத்துடன் சொல்ல, "அப்போ டெய்லி வந்துடு," என்று அவன் விளையாட்டாகக் கூற, அவளது இதழ்களில் புன்னகை இன்னும் பெரிதாக விரிந்தது.

"எப்படி இருக்கு ஆஃபீஸ்?" என்று கௌதம் புன்னகையுடன் கேட்க, "ரொம்ப நல்லா இருக்கு, நான் இந்த மாதிரி இடத்துக்கெல்லாம் போனதே இல்லை. எல்லாம் புதுசா இருக்கு, பிரமிப்பா இருக்கு... எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு," என்றவள் நெகிழ்ச்சியுடன், "ரொம்ப தேங்க்ஸ்," என்றாள்.

"எதுக்கு?" என்று அவன் புரியாமல் கேட்க, "எனக்கு இவ்வளவு சந்தோஷத்தைத் தந்ததுக்கு. இங்கே எனக்கு இவ்வளவு மரியாதை கிடைக்கும்னு நான் நினைக்கவே இல்லை," என்றாள் பவித்ரா.

கௌதம் அவளைப் பார்த்து மென்மையாக புன்னகைத்தான், அவளது கண்களில் தெரிந்த அந்தத் தெளிவும் மகிழ்ச்சியும் அவனுக்கு நிறைவைத் தந்தது. "இது உனக்குக் கிடைக்க வேண்டிய மரியாதை பவித்ரா. இனிமே நீ எங்கேயும் யாருக்காகவும் தயங்கி நிற்க வேண்டிய அவசியம் இல்லை," என்றான். அவனது அந்த வார்த்தைகள் அவளது காயப்பட்ட மனதிற்குப் பெரிய மருந்தாக அமைந்தன,....

அந்தக் கணம் அவனுக்கு ஒரு போன் கால் வர, "ஜஸ்ட் எ மினிட்" என்று கூறிவிட்டு, அவன் சற்று தள்ளி அங்கிருந்த கண்ணாடி ஜன்னலின் பக்கம் சென்று பேச ஆரம்பித்தான்.

இவளோ, அவனை தான் கண்களை விலக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு கையைத் தன் பேண்ட் பாக்கெட்டில் விட்டுக்கொண்டு, ஜன்னல் வழியே வெளியே வேடிக்கை பார்த்தபடி அவன் பேசும் அந்த மிடுக்கான தோரணை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. இதுநாள் வரை அவனைச் சார்ந்து இருக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்த அவளுக்கு, இன்றுதான் அவனை ஒரு ஆணாக ரசிக்கத் தோன்றியது. அவனது தோற்றம், அந்த அதிகாரம் கலந்த குரல், அனைத்தும் அவளுக்குள் ஒரு புதுவிதமான உணர்வைத் தூண்டியது.

போன் பேசிக்கொண்டே தற்செயலாக திரும்பிய கௌதம், பவித்ரா தன்னை பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்து.. 'என்ன?' என்பது போல தன் புருவத்தை உயர்த்தி வினவ, அவள் திருட்டுத்தனம் பிடிபட்ட குழந்தையைப் போலத் திடுக்கிட்டு, 'ஒன்றுமில்லை' என்பது போல சட்டென்று தலை குனிந்துகொண்டாள்.

அவளது அந்த சிறுபிள்ளைத்தனமான மாற்றத்தை விழிகள் சுருங்கப் பார்த்தவன், மீண்டும் தன் பேச்சில் பிஸியாகித் திரும்பிக்கொண்டான். ஆனால், அவனது பார்வையின் தாக்கம் குறையும் முன்னே, பவித்ராவின் கண்கள் மீண்டும் மெல்ல உயர்ந்து அவன் மீதே வந்து நிலைத்தன.

தன்னையும் அறியாமல் அவனிடம் அவள் மனதை பறிகொடுத்துக் கொண்டிருப்பதை அந்த மௌனமான பார்வை சொல்லாமல் சொன்னது. இத்தனை நாள் இருந்த பயம் மறைந்து, இப்போது அந்த இடத்தில் மெல்லிய காதல் துளிர்விடத் தொடங்கியிருந்தது.

அடுத்த ஒரு வாரம் மிக வேகமாகவே கடந்தது. இப்போதெல்லாம் பவித்ராவின் உலகம் கௌதமை சுற்றியே நகரத் தொடங்கியிருந்தது. அவன் செய்யும் ஒவ்வொரு சின்ன சின்ன விஷயங்களையும் அவள் ரசிக்க ஆரம்பித்திருந்தாள். சில நேரங்களில் அவள் தன்னைத் திருட்டுத்தனமாகப் பார்ப்பதை கவனித்துவிடும் கௌதம்
சட்டென்று திரும்பி "என்ன?" என்பது போலப் புருவத்தை உயர்த்தித் துளைக்கும்போது, அவளோ கையும் களவுமாகப் பிடிபட்டது போல "ஒன்றுமில்லை" என அவசரமாகத் தலையைத் திருப்பிக்கொள்வாள். அவளது இந்த அழகான கள்ளத்தனம் கௌதமிற்கு நன்றாகவே புரிந்தது. அவள் தன்னை ரசிக்கிறாள் என்ற எண்ணமே, எப்போதும் கம்பீரமாக இருக்கும் அவனது இதழ்களில் ஒரு மெல்லிய வெட்கப் புன்னகையை பூக்கச் செய்தது.

அன்று மாலை பவித்ராவிடம் வந்தவன், "நெக்ஸ்ட் வீக் நான் ஃப்ரீ தான் பவித்ரா. உனக்கு எங்கே போக ஆசையா இருக்குன்னு சொல்லு, நாம போயிட்டு வரலாம்," என்று கேட்க, அவளும் சிறிது நேரம் தீவிரமாக யோசித்து விட்டு, கண்கள் மின்ன, "நாம கொடைக்கானல் போலாமா?" என்றாள்.

நிஜத்தில் அவளை ஏதாவது வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றுதான் கௌதம் திட்டமிட்டிருந்தான். அவளது உலகத்தை இன்னும் பெரிதாக அவளுக்குக் காட்ட வேண்டும் என்பது அவனது ஆசை. ஆனால் இப்போது அவள் கொடைக்கானல் என்று சொன்னதும் அவனுக்கு ஒரு சிறிய ஏமாற்றம் ஏற்பட்டாலும் அவள் எங்கே சென்றால் மகிழ்ச்சியாக இருப்பாளோ அங்கே செல்வதே சிறந்தது என்று முடிவெடுத்து, அவளது ஆசையைச் சிதைக்க விரும்பாமல், "ஓகே பவித்ரா... உன் இஷ்டப்படியே நாம கொடைக்கானலுக்கே போகலாம்," என்று அவன் சம்மதித்தான்.

அவனது சம்மதத்தைக் கேட்டதும், பவித்ராவின் முகம் ஒரு குழந்தையைப் போலப் பிரகாசமானது. அந்தப் புன்னகைக்காக அவன் எங்கு வேண்டுமானாலும் வரத் தயாராக இருந்தான்.

கொடைக்கானல் அவர்கள் இருக்கும் ஊரிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவுதான் என்பதால், கௌதம் தனது காரிலேயே செல்ல முடிவு செய்தான். நீண்ட தூரம் காரை ஓட்டிச் செல்வதும் அந்தப் பயணத்தில் அவர்கள் இருவர் மட்டுமே தனியாக இருப்பதும் தானே அவனுக்கும் தேவை. அதனால் இந்த முறையையே தேர்ந்தெடுத்திருந்தான்.

பயணத்திற்கு ஒரு நாள் முன்பே அவளை கடைக்கு அழைத்துச் சென்று, குளிருக்குத் தேவையான உடைகளையும், அழகான ஸ்வெட்டர்களையும் அவளுக்குப் பார்த்துப் பார்த்து வாங்கிக் கொடுத்தான்.

புறப்படும் அன்று காலை வீடே பரபரப்பாக இருந்தது. "எல்லாம் எடுத்து வச்சுட்டியா பவித்ரா? அங்கே ரொம்ப குளிரா இருக்குமே, ஸ்வெட்டர் எல்லாம் மறக்காம எடுத்துக்கிட்டியாமா?" என்று ஜானகி அக்கறையுடன் கேட்க, "எல்லாம் வச்சுட்டேன் அத்த," என்றவள், தன் அத்தை மற்றும் நாத்தனாரை பார்த்து, "நீங்களும் வரலாமே... எல்லாரும் போனா இன்னும் சந்தோஷமா இருக்குமே!" என்றாள்

ஜானகி மென்மையாக சிரித்துக்கொண்டு, "முதல்ல நீங்க ரெண்டு பேரும் போயிட்டு வாங்கம்மா. அடுத்த தடவை கண்டிப்பா நாம எல்லாரும் சேர்ந்து போகலாம்," என்று கூற, "அதிதி குட்டியையாச்சும் எங்கூடக் கூட்டிட்டுப் போகட்டுமா?" என்று சரண்யாவிடம் கேட்க, சரண்யாவுக்கோ என்ன சொல்வதென்று தெரியவில்லை. இவர்கள் இருவரும் தனிமையில் நேரம் கழிக்க வேண்டும் என்பது தானே அவர்களின் விருப்பமாக இருந்தது.

அதனால்.. "அவளைப் பத்திதான் உனக்குத் தெரியுமே பவி... நைட் நான் பக்கத்துல இல்லாம அவ தூங்கவே மாட்டா. அங்கே வந்து அடம் பிடிச்சு உங்களை நிம்மதியா இருக்க விடமாட்டா" என்று சமாளிக்க, பவித்ராவும், "சரிங்க அண்ணி," என்று தலையசைத்தவள், அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு தன் கணவனுடன் காரில் ஏறினாள்.

காரில் ஏறிய சிறிது நேர பயணத்திற்கு பிறகு, அவன் ரேடியோவை ஆன் செய்து மெல்லிய ஒலியில் ஒரு மெலடி பாடலை ஓடவிட, அந்த இசையில் லயித்தபடி ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்தபடி வந்த பவித்ரா "அத்தை நிறைய ஸ்நாக்ஸ் தந்து விட்டிருக்காங்க, பசிச்சா சொல்லுங்க," என்றாள்.

"ம்ம்..." என்று தலையசைத்தவனோ, அவளது மனநிலையை அறியும் ஆர்வத்தில், "எப்படி ஃபீல் பண்ணுற பவித்ரா?" என்று கேட்டான்.

"ரொம்ப ஹேப்பியா இருக்கு! ஆனா வீட்ல உள்ளவங்களும் வந்திருந்தா இன்னும் ஹேப்பியா இருந்திருக்கும்ல," என்று அவள் சொல்ல, கௌதம் காரை ஓட்டிக்கொண்டே அவளை ஒரு மாதிரி திரும்பிப் பார்த்தான், ஆனால் எதுவும் சொல்லவில்லை.

அவன் மௌனமாக இருப்பதைப் பார்த்து, "என்ன ஒன்னும் சொல்ல மாட்டேங்கிறீங்க?" என்று அவள் வினவிட,.. "நாம ரெண்டு பேரும் மட்டும் தனியா போகணும்ங்கிறது தான் அவங்க எண்ணம். உனக்கு அது இன்னும் புரியவே இல்லையா?" என்று அவன் நேரடியாகவே கேட்டுவிட, பவித்ரா சற்றுத் தயங்கி, "புரியுது... ஆனாலும் அவங்களும் வந்தா ஜாலியா இருக்கும்ல," என்று அதே பல்லவியைப் பாடினாள்.

இவளிடம் எப்படிப் பேசிப் புரிய வைப்பது என்று தெரியாமல் கௌதம் ஒரு பெருமூச்சுடன் மௌனமாகி விட்டான். 'தனியாக இருக்கும் போதுதான் ஒருவரை ஒருவர் இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள முடியும்' என்ற உண்மை அந்தப் பேதைக்கு புரியவில்லையா? இல்லை புரியாதது போல் நடிக்கிறாளா?

சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு, அவன் நீண்ட நேரமாகக் காரை ஓட்டுவதைப் பார்த்து... "இன்னும் ரொம்ப தூரம் போகணுமே, உங்களுக்குக் கை கால் எல்லாம் வலிக்காதா?" என்று கேட்க, "எனக்கு செல்ஃப் டிரைவிங்னா ரொம்ப இஷ்டம் பவித்ரா. பிடிச்ச விஷயத்தை செய்யும் போது பெயின் எல்லாம் தெரியாது," என்றான் அவன். அவன் பிடிச்ச விஷயம் என்று சொன்னது டிரைவிங்கை மட்டுமா அல்லது அவளுடன் செல்லும் இந்தப் பயணத்தையுமா என்பது அவனுக்கே வெளிச்சம்.

எதையாவது ஒன்றை அவனுடன் பேசிக்கொண்டே வந்தவள், அடுத்த கொஞ்ச நேரத்தில் பயணக் களைப்பினால் தன்னையும் அறியாமல் தூங்கிவிட, அவளது ஆழ்ந்த உறக்கத்தைக் கலைக்க விரும்பாத கௌதம், மெல்லிய பாடல்களின் சத்தத்தை இன்னும் குறைத்துவிட்டு, காரின் வேகத்தைச் சற்றே கூட்டினான்.

ஓரிரு மணி நேரத்தில் கார் மெல்ல மலைப் பாதையில் வளைந்து நெளிந்து ஏறத் தொடங்கியது. ஜன்னல் இடுக்கு வழியே ஊடுருவிய ஊசி போன்ற குளிர்ந்த காற்று பவித்ராவைத் தீண்ட, சட்டென்று ஒரு சிலிர்ப்புடன் உறக்கம் கலைந்து விழித்தாள்.

"ரொம்ப நேரம் தூங்கிட்டேனா நான்?" என்று கண்களைக் கசக்கியபடி கேட்டவளிடம்,"ஒன்னும் பிரச்சனை இல்ல பவித்ரா, நீ தூங்கு. இன்னும் கொஞ்ச நேரத்துல நாம ரீச் ஆகிடலாம்," என்றான் அவன்.

"இல்ல... இதுக்கு மேல தூக்கம் வராது," என்றவள், வெளியே தெரிந்த அந்த பசுமையான மலைகளையும், மேகக் கூட்டங்களையும் பிரமிப்புடன் பார்த்தபடி வந்தாள். மேலே செல்லச் செல்லக் குளிரின் தாக்கம் அதிகமாக,.. "ரொம்ப குளிருதுல?" என்று தோள்களைக் கட்டிக்கொண்டு கேட்டாள்.

கௌதம் உடனே காரின் ஏசியை அணைத்துவிட்டு, ஹீட்டரை ஆன் செய்துவிட்டவன்... "ஸ்வெட்டர் போட்டுக்கிறியா? பேக்ல தான் இருக்கு," என்றான் அக்கறையுடன்.

"ஐயே வேணாம்! எனக்கு ஸ்வெட்டர் போடவே பிடிக்காது. நீங்க ரொம்ப கம்பல் பண்ணினனால தான் அந்தக் கடையில வாங்கினேன்," என்று முகத்தைச் சுளித்து கூற,
அவளது பிடிவாதத்தைப் பார்த்துச் சிரித்தவன், "சரி... அங்கே வந்து நீ எப்படி ஸ்வெட்டர் போடாம இருக்கேன்னு நானும் பார்க்கிறேன்," என்றான்.

"நான் முன்னாடி ஒரு தடவை போயிருக்கேன், அப்போ அவ்ளோ ஒன்னும் குளிர் இல்லையே," என்று அவள் வாதாட, "அப்போ நீ சம்மர்ல போயிருப்ப. இது வின்டர் சீசன், நீயே வந்து பாரு குளிர் எப்படி இருக்குனு," என்றான்.

"ஐயையோ... அப்போ ரொம்பக் குளிருமா?" என்று அவள் அப்பாவியாகக் கேட்க, கௌதம் அவளது பயத்தை ரசித்தபடி, "குளிருமாவா? நடுங்க வைக்கும்! நீயே ஸ்வெட்டரைத் தேடி ஓடுவ பாரு," என்று அவளைக் வம்புக்கு இழுத்தான்.

அந்தப் பனிமூட்டமான சாலையில், ஒருவருக்கொருவர் செல்லமாக வாதிட்டுக்கொண்டே கொடைக்கானலின் உச்சியை நோக்கி முன்னேறினர்.


 

Author: STN - 71
Article Title: உயிரில் அமுதங்கள் சுரக்கின்றதே - 14
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.