• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

காதல் எங்கள் சொந்தம் - 22

நிதனிபிரபு

Administrator
Staff member
இருபத்திரெண்டாம் அத்தியாயம்.

காதல் எங்கள் சொந்தம்.. 22

செருப்பு சொல்லுச்சாம் “சருகை மிதிக்கும்போது சப்திக்கும் நாங்கள் மலரை மிதிக்கும்போது மௌனம் சாதிக்கிறோம்....” சமூக அவலத்தை சுட்டிக் காட்டும் கவிதை இது.

மலர் போன்ற ஒரு பெண்ணின் மனதை மிதிச்ச கதை தான் நிர்மலோட அம்மா கோமதியின் கதை. அவள் மௌனமாக அந்த மிதியை தாங்கிக் கொண்டு ஏன் வாழ்ந்தாள்.? டைரியை படிக்கப் படிக்க ஹேமாவின் ரத்தம் கொதித்தது.

இப்படி ஆரம்பிக்கிறது அவர் டைரி.

“கோவில்ல தான் என் வருங்காலம் முடிவானது..

இந்தக் கோவிலில் தான் உன்னை அடிக்கடி பார்க்கிறேன். மகாலட்சுமியே நேரில் வந்தா மாதிரி இருக்கு. உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு... உன்னைக் கல்யாணம் பண்ணிக்க ஆசை..

கோவிலில் இந்த விண்ணப்பம் வச்சது உன் அப்பா தான் நிர்மல்....

சட்டுன்ணு சம்மதிக்க முடியுமா.? அண்ணா அண்ணி என்ன சொல்வார்களோ.? தயங்கினேன்.

உன் அண்ணா அண்ணியிடம் நான் பேசிட்டேன். அவங்க ஓ.கே சொல்லியாச்சு. அப்புறம் தான் உன் பதிலுக்காக நிக்கறேன்னு சொல்றார்.... நா வியப்புடன் பார்க்கறேன்.

ஓ.. விவரமானவர் தான் போலிருக்கு.. உங்கப்பாவை நிமிர்ந்து பார்த்தேன். அப்ப.... என்ன நிர்மலமான மனசு இவரோடதுன்னு தோணுச்சு. கம்பீரமும் களையும் பொருந்திய முகமா இருக்க.. பிடிச்சுது. ஆனாலும் தயக்கம்.... அவர் சொன்னார்..

எனக்கு பத்து வயதில் ஒரு மகன் இருக்கான். பேர் பிரபுசங்கர் .. பிரபுவின் அம்மா இறந்து ஒரு வருஷம் ஓடிப் போச்சு. இன்னொரு கல்யாணமா? வேண்டாமுன்னு நினச்சேன். உன்னைப் பார்த்ததும்.. என் மனசில் மீண்டும் காதல் துளிர்விட்டுச்சு.. உனக்கு சம்மதமா.?....கேக்கறார்.

எனக்கு.... எனக்கு தயங்கினேன்.... அவருக்குத் தெரியுமா தெரியாதா.?

தெரியும் உனக்கு ரெண்டு வயசு மகள் இருக்கா. பேர் கற்பகம். அவள் பிறந்ததுமே உன் கணவர் இறந்துவிட்டார். உனக்கு அப்பா அம்மா இல்லை. அண்ணன் அண்ணியுடன் இருக்கே. கவலைப்படாதே கோமதி, இனி கற்பகம் என் மகள்.... எனக்கு மகள் இல்லாத குறையை தீர்க்க வந்திருக்கா... அழகா பேசினார். அதிர்ஷ்டம் பண்ணியிருக்கேன்னு மகிழ்ச்சி அடஞ்சேன்.... இதை விட வேறு என்ன வேணும் எனக்கு.? அண்ணா அண்ணியிடம் விதவையா திரும்பி வந்து பாரமா இருக்கேனே.... திட்டும் அடியும் வாங்கிக்கிட்டு.... இப்படி ஒரு உத்தமர் என்னை என் மகளோட ஏத்துக்கும் போது, வேண்டாமுன்னு யார் சொல்லுவா.? என் வாழ்வு மலரப் போகுது. அண்ணா அண்ணியிடமிருந்து விடுதலை.! எவ்வளவு பெரிய கொடுப்பிணை.! மகிழ்ந்தேன்.. பின் வரும் அவலம் தெரியாமல்.

என்னை காக்க வந்தவர்ன்னு நினைச்சி, சரின்னு சொன்னேன்.... வானத்தில் பறவைகள் பறக்கும்.. சின்னப் பையன்கள் விடும் பட்டம் பறக்கும்.... பலூன் பறக்கும்.. எல்லாம் பார்த்திருக்கோம். ஆனா கழுகும் பறக்கும்ன்னு மறந்து போச்சு.... கோழிக் குஞ்சாக கொத்திட்டு போயிட்டார்...... கோழி மிதிச்சு குஞ்சு முடமாகாதுன்னு சொல்வாங்க. ஆனா நா மிதிச்சு என் மகள் அநாதை போல முடமான நிலைக்கு வந்தாள். அம்மா உயிருடன் இருந்தும் அனாதையா ஹாஸ்டலில் வளர்ந்தாள்.

கல்யாணம் நடந்த போது, அவர் மகனும் என் மகளும் சேர்ந்து வாழப் போகிற புதிய உறவின் கூட்டுக்குள் செல்லப் போறோம்ன்னு நினச்சேன் டா.. ஆனா உங்கப்பா சொன்னார்..

கோமதி.... உன் மகள் சிறிது காலம் உன் அண்ணா அண்ணியிடம் இருக்கட்டும்.... என் மகன் பிரபுவை மெல்ல சம்மதிக்க வச்சு கூட்டிக்குவோம்ன்னு ஒரு இடியை இறக்கினார். அது நடக்கவே இல்ல...... வாக்குறுதி தானே.! தசரத மகா சக்கரவர்த்தியா என்ன.? கொடுத்த வாக்கை காப்பாற்ற.?!

அப்பவே தாலிச்செயினை தூக்கி வீசிட்டு ஓடிவிடணும்னு நினச்சேன் டா.... கல்யாணத்தை ரகசியமா நடத்தினாங்க. வாக்கு கொடுத்தீங்களேன்னு அழுதிட்டே கேட்டேன். வாக்கு தவறலையே கோமதி.. அவள் என் மகள் தான். அவளை நல்லா படிக்க வச்சு.... அவள் காலில் நிற்க அவளுக்கு வேலை வாங்கிக் கொடுத்து.. பெரிய இடத்தில் கல்யாணம் பண்ணி வைப்பேன். உன் அண்ணா அண்ணியிடம் இருந்தால் இது நடக்குமா.? சிந்திச்சுப் பாரு....

ஓ இதுக்கு நான் கொடுக்கும் விலை? ரகசியமாக வளரும் என் மகள்.... அவளுக்கு தம்பி பிறந்தது தெரிவிக்கக் கூடாதுன்னு கட்டளை. அவர் பணம் மட்டும் அனுப்பும் ஏடிஎம் அப்பா, நான் அப்பப்ப போய் பார்க்கும் பொம்மை அம்மா. எவ்வளவு சுலபமா என் அவல நிலையை அவர் தனக்கு சாதகமா பயன்படுத்திக்கிட்டார் பார்த்தியா நிர்மல்?.... நான் வேணும், ஆனா எனக்கு மகள் இருப்பது வெளியில் தெரியக் கூடாது.... கொடுமை.!

எனக்கு என் மகள் போதும்.. உங்க மனைவி பட்டம் வேண்டாமுன்னு தூக்கி எறிஞ்சு அண்ணன் வீட்டுக்கு வந்தேன்.... இத பாரு கோமு.... உனக்கு வாச்சவர் ரொம்ப நல்லவர். உன் மகளின் செலவு எல்லாம் ஏத்துக்குவார். நீ அப்பப்ப போய் பார்த்துக்கலாம்.... பெரிய மனுஷன் பாரு.... உனக்கு வேற பொண்ணு கிடைக்கலையா.? பிள்ளை பெத்தவ தான் கிடச்சாளான்னு கேப்பாங்க. அவமானமா போயிடுமே.. அவர் அந்தஸ்து பாதிக்கப்படும். அதான். வேற ஒண்ணுமில்ல... புரிஞ்சுக்க. இல்ல நீ பிடிவாதம் பிடிச்சேன்னா.. நீயும் உன் குழந்தையும் ஏதாவது ஒரு ஹோமுக்கு தான் போணும்.. முடிவு பண்ணிக்க.... வாழாவெட்டியா என் வீட்டில் வாழலாம்னு கனவு காணாதே.... தேளா கொட்டினா அண்ணி. அண்ணன் அவள் முந்தானையின் பின்.

என் மகளை ஊரறிய ஏத்துக்காதவர் கூட ஒரு கட்டாயத்துக்காக வாழ்ந்தேன். அழுது குவிச்சேன்... நான் ஒரு கோழை.... இந்த அநியாயத்தை எதிர்க்க முடியாமல் கதறி கதறி அழுதேன். பேதையின் கண்ணீர் பற்றி யாருக்கு கவலை.? நெஞ்சில் நெருப்பை அள்ளி வீசிவிட்டு.. இது சந்தனம்ன்னு சொல்றவர் கிட்டே என்ன சொல்ல முடியும்.?....என்ன செய்யறதுன்னு தெரியலை டா.... நான் பலி ஆகிட்டேன்.

பத்தாம் பாசம் நீ பொறந்திட்ட. அவர் செய்த குற்றத்தை நா செய்யலை. அவர் மகனை என் மகனா ஏத்துக்கிட்டேன். பிரபுவும் என்னை தன் அம்மாவா நினச்சு அன்பா பழகினான்.

என் மகள் வளர்ந்தாள். ஏம்மா நா இந்த விடுதியிலேயே தங்கணும்.? உன் கூட வந்து இருக்கேன்மா என்றாள் பத்து வயது வரை. ஏதேதோ சாக்கு சொல்லி சமாளித்தேன். விவரம் தெரிய ஆரம்பிச்ச பின் அவளுக்குப் புரிஞ்சுது.. அம்மா ஒரு சூழ்நிலை கைதின்னு.

நீ ஒரு அம்மாவான்னு கேக்கப் போறான்னு கிடுகிடுன்னு உடல் ஆட நின்னேன். ஆனா அவ சொன்னா பாரு, நா ஆடிப்போயிட்டேன்.... அப்பாவை நா பார்க்கணும். கேக்கணும். எதுக்கு என் அம்மாவை ஏமாத்தி கல்யாணம் பண்ணீங்கன்னு கேக்கணும்..... தெளிவா சிந்திக்கிறா என் மகள்ன்னு எனக்கு ஆறுதலா இருந்துச்சு.

ஒரு நாள் அவரை வற்புறுத்தி கூட்டி வந்தேன். கற்பகம் அவரை அப்ப தான் முதல் முதலா பார்க்கிறா. புன்னகையுடன் வரவேற்றாள். அன்புடன் சொன்னாள்..

என்ணைப் பெற்ற அப்பா முகத்தை நா பார்த்ததில்ல. உங்களத் தான் என் அப்பாவா நினைக்றேன். என் அம்மாவுக்கு வாழ்வு கொடுத்து, எனக்கு இனிஷியல் கொடுத்து.. படிக்க வச்சு வேணும்கறதை எல்லாம் வாங்கிக் கொடுத்து.... எல்லாம் செஞ்ச நீங்க ஏன்பா தப்பு செஞ்ச மாதிரி ஒளிஞ்சுக்கிட்டீங்க.?

சாட்டையடி கேள்வி.

நீங்க ஹீரோ பா. இருபது வருஷத்துக்கு முந்தியே ஒரு விதவைப் பெண்ணை அவள் மகளோடு ஏத்து கல்யாணம் பண்ணி, புரட்சி செஞ்சிருக்கீங்க. அது எல்லோருக்கும் தெரிய வேண்டாமா.? இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகலை இந்த உலகறிய உரக்க சொல்லுங்க, கற்பகம் என் மகள்ன்னு.. பிரபு அண்ணா சொல்லட்டும் கற்பகம் என் தங்கைன்னு, நிர்மலுக்கு தெரியட்டும் அவனுக்கு கற்பகம்னு ஒரு அக்கா இருக்கான்னு.... அப்ப தான் நீங்க என் அம்மாவை கல்யாணம் பண்ணியதுக்கு அர்த்தம் இருக்கு.... கொண்டாடப் பட வேண்டிய கல்யாணம் அப்பா உங்களோடது...

நீங்க என்னை உங்க மகளா எல்லோரும் அறிய ஏத்துக்கணும். அது வரை நா விடமாட்டேன்.... ஐ லவ் யூ அப்பா.... ரகசியம் மனசுக்கு சுமைபா.... இப்படி உணர்வுபூர்வமா அவ சொல்லி முடிச்சதும்.. அம்மாடி உன்னை என் மகள்ன்னு சொல்லிக்க எனக்கு ரொம்ப பெருமையா இருக்கும்மா.. நான் கண்டிப்பா செய்வேன் மான்னு சொன்னார்.... எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா.? அப்படியே பறப்பது போல இருந்துச்சு டா.

அன்று தான் நான் பூட்டிக் கொண்ட என் பொன்விலங்கு உடஞ்சது.

அவர் சொன்னார், கற்பகம்.... பணமும் அந்தஸ்தும் ஏற ஏற மனுஷன் சமுதாயத்துக்கு.. நாலு பேரின் அபிப்பிராயத்துக்கு அஞ்சி நடக்க ஆரம்பிக்கிறான்.. நான் செஞ்சது தப்புன்னு எனக்குத் தெரியும். குற்ற உணர்வில் துடிச்சிட்டு தான் இருக்கேன்...... எனக்கு டைம் கொடு, நீ சொல்வது போல் செய்யறேன். முதலில் பிரபுவிடம் சொல்றேன்னார்.

அந்த பெரிய மாற்றம் நடக்கும்ன்னு நினச்சேன். பிரபுவிடம் சொன்னார். ஸாரிப்பா உங்களுக்குப் பொறக்காத பெண்ணை நா என் தங்கையா ஏத்துக்க முடியாதுன்னு சொல்லிட்டான்....

அவ்வளவு குறுகிய மனசா டா உனக்கு.? அப்படியா உன்னை வளர்த்தேன்.? அவ என்னடா பாவம் செஞ்சா.? அவ என்ன அவமானச் சின்னமா.? முறைப்படி பொறந்த பொறப்புடா அவ.. அவளை நீ அங்கீகரிக்கலைன்னா நீ மனுஷனனே இல்லடான்னு சொல்லிட்டேன்.... அவன் அலட்சியமா பார்த்தான்.

நிர்மல்..... உன்னிடம் இந்த பொறுப்பை ஒப்படச்சிட்டுப் போறேன். உனக்கு ஒரு அக்கா இருக்கா. அவளை இந்தக் குடும்பம் ஏத்துக்கணும் எல்லோரும் அறிய.. இந்த பொறுப்பை நீ நிறைவேத்தணும். அப்ப தான் என் ஆத்மா சாந்தி அடையும்....

இதோடு அந்த வாசங்கங்கள் முடிவடைந்து விட்டன.

ஹேமா கண்களில் தாரை தாரையாக கண்ணீர். நீ நரகத்துக்குள் போகிறாய் என்றாலும் போய்க் கொண்டே இரு.... நின்றுவிடாதேன்னு ஒரு அறிஞர் சொன்னது அவள் ஞயாபகத்துக்கு வந்தது. நடக்க நடக்க வெளிச்சம் வரும்.. பாதை தெரியும்.

மறுநாள் ஹேமா நிர்மலைத் தேடிச் சென்றாள். காலை சூரியன் மெல்ல எழுந்து கொண்டிருந்தான். ஜன்னல் வழியே வந்த தங்கநிற ரேகை அவன் முகத்தில் பட்டு தகதகத்தது. அவன் அம்மாவின் புகைப்படம் அவன் கையில்....

“படிச்சிட்டியா.?”

“ம்ம்ம்.... இவங்க தான் உங்கம்மாவா.? எத்தனை அழகு.!”

“அந்த அழகு தான் அவங்களுக்கு எதிரி.... அவங்க என் அப்பாவின் கண்ணில் பட.... காதல். தோற்றத்தை கண்டு காதல். அம்மா எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாங்க....”

“உங்களுக்கு உங்கக்கா பத்தி....”

“சாகும்போது தான் அம்மா சொன்னாங்க. என் மடியிலே தான் அவங்க உயிர் போச்சு. எனக்கு அப்ப உயிர் போனா மாதிரி இருந்துச்சு. டயரி குறிப்பு படிச்சிட்டு அழுதேன்.... எங்கோ வளரும் அக்கா எவ்வளவு வலி தாங்கியிருப்பாங்கன்ணு தோணுச்சு....”

அப்போ கற்பகம் அங்கு வந்தாள்.

சொந்தம் தொடரும்.
 
Last edited by a moderator:

Gowri Karthikeyan

Well-known member
நிர்மல் அம்மா சூழ்நிலை கைதி தான்....
நிர்மல் வளர்ந்த அப்பறம் ஆவது அவன் கிட்ட சொல்லி இருக்கலாம் இல்ல....ஏன் சொல்லல????
கற்பகம்.....நிர்மல் வளர்ந்த பிறகு ஒரு வாட்டி கூட அவங்க அம்மா பார்க்கலையா என்ன????
இப்ப அவங்க ப்ரெக்னன்ட் ஆ இருக்காங்க....
கல்யாணம் கூட இவங்களுக்கு தெரிஞ்சி நடக்கலையா????
 
Top Bottom