• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

செதுக்கிய சிற்ப பாவையே - 31

Vishakini

Moderator
Staff member
சிற்ப பாவை - 31

இருவரும் பேசிக்கொண்டே காலனியை நெருங்க, அவர்கள் இருவரும் பைக்கில் ஒன்றாக வருவதை ஆனந்தி தன் குடும்பத்துடன் அவள் வீட்டிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தார்.

பிரணேஷ் ரத்தக்கண்ணீர் வடித்தான். ஆனால் அவள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று மனதார நினைத்தான்.

மொத்த காலனியும் அவளுக்காகக் காத்திருந்தது.

பைக் வந்து நின்றதும் மேள சத்தம் எழ, நகை கம்பீரமாக இறங்கி நின்றாள்.

"உங்க வேலையா இது?" தன்னவனிடம் கேட்க,

"பாப்பு, இந்த மாதிரி வேலை எல்லாம் நான் பண்ணுவேனா? நம்ம பசங்க ட்ரம்ஸ் வச்சிருக்கானுங்க, அவனுங்களே இந்த ஏற்பாடெல்லாம் பண்ணிக்கிட்டானுங்க."

அவளுக்கான வரவேற்பைக் கண்டு அவள் மனம் குத்தாட்டம் போட்டது.

அதுவரை மறைந்திருந்த வெட்கம் அவள் கன்னத்தில் படர்ந்தது.

"அப்பாடி! ஆரம்பிச்சுடுச்சு, பொண்ணு வெட்கப்பட்டுடுச்சு. கல்யாணம் பண்ணிக்கக்கூட வெட்கப்படாமப் போயிடுமோன்னு பயந்துட்டோமே!" என்று ஒரு பாட்டி கூச்சலிட, அங்கே ஆரவாரமான சத்தம் எழுந்தது.

அவள் பெரிதாகத் தன் சந்தோஷத்தை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. பரமுவிடம் மட்டுமே தன் முழுமையான குணத்தை வெளிக்காட்டிக் கொண்டு இருக்கிறாள்.

"எல்லாருக்கும் ரொம்ப நன்றி" எனப் பொதுவாகக் கூறியவள், தன்னவனைப் பார்த்து மட்டும் கண்ணசைத்துவிட்டுத் தன் தாய், தங்கைகளிடம் சென்றாள்.

சுடர் குடும்பத்துடன் வந்திருந்தார். கவி அக்காவைப் பார்த்ததும் ஓடி வந்து கட்டிக்கொண்டாள்.

"கல்யாணம் ஆனாலும் நீ எங்களை விட்டுப் போகமாட்ட. நான் நினைக்கும் போதெல்லாம் வீட்டுக்கு வந்துடுவேன்" என்று கவி கூற,

அவள் தலையை வருடிவிட்டவள், "அக்கா, உங்களை விட்டு எங்கேயும் போக மாட்டேன்" என்றாள்.

"வாங்க வீட்டுக்குப் போகலாம்" என வெண்பா அனைவரையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றார்.

தன்னவளைப் பின்னிருந்து ரசித்தபடி பரமு அங்கேயே நின்றிருந்தான். வீட்டிற்குள் நுழையும் முன்பு திரும்பித் தன்னவன் முகம் பார்த்தவள், அவன் ரசனையைக் கண்டு மென்மையாகச் சிரித்தாள். அவனைப் பார்த்து அவள் கண்ணடிக்க, பைக்கில் சாய்ந்து நின்றவன் நிலைதடுமாறி விழப்போனான்.

"மச்சி பார்த்துடா!" நண்பர்கள் அனைவரும் கூச்சலிட, இம்முறை வெட்கப்படுவது பரமுவின் முறை ஆனது.

நண்பர்களின் கூச்சம், காலனி மக்களின் கொண்டாட்டம் என்று விடிய விடிய அங்கே யாரும் தூங்கவில்லை. நகையின் திருமணத்தை அந்த காலனியே ஒரு திருவிழாவாகக் கொண்டாடியது.

விடிந்ததும் அனைவரும் பரபரப்பாகத் தயாராகி, நடந்தே மண்டபத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.

"அண்ணா வாட்ச் போட்டுக்கோ அண்ணா, செயின் போட்டுக்கோ" என்று அவன் உடன் பிறந்தவர்கள் இருவரும் மாற்றி மாற்றி அவனைத் தயார் செய்து கொண்டிருந்தனர்.

"போதும் போதும், எதுக்கு இந்த வெட்டி பில்டப்? எல்லாத்தையும் நீங்களே போட்டுக்கோங்க, இதெல்லாம் உங்க நகைகள்" அவன் திட்டவட்டமாக மறுத்தான்.

பெண் பிள்ளைகளுக்கு நகை போட்டு திருமணம் செய்து கொடுத்துவிட்டு, அந்த நகையை எடுத்துத் தான் போட்டுக்கொள்ள அவனுக்கு விருப்பமில்லை.

"எங்க நகையா இருந்தா என்ன? இதெல்லாம் நீதானே வாங்கிக் கொடுத்த?" அவன் தங்கை கோபித்துக்கொள்ள,

"அப்படியெல்லாம் கிடையாதுடா. எனக்கு இதெல்லாம் பிடிக்காதுன்னு உனக்குத் தெரியும். எனக்கு இது போதும், நான் தான் கழுத்துல ஒரு செயின் போட்டிருக்கேன், கையில வாட்ச் கட்டிருக்கேன். இது மட்டும் போதும். நீங்க எடுத்துட்டு வந்ததே சந்தோஷம்" என்று அவை அனைத்தையும் மூடி வைத்தான்

வீட்டில் இரண்டு பெண் பிள்ளைகள் இருந்தும், அந்த வீடே திருவிழா கோலம் பூண்டிருந்தது. அவர்களின் மொத்தக் குடும்பமும் அங்கே திரண்டிருக்க, அவர்கள் ஒவ்வொருவரும் முடிந்தவரை இவனுக்கு ஒத்தாசையாக ஓடி ஓடி உதவி செய்தனர்.

இவன் முகத்தில் மின்னும் அந்தப் புது சந்தோஷத்தை, அவர்கள் தங்கள் வீட்டுப் பிள்ளையின் வளர்ச்சியாக எண்ணி மனநிறைவோடு பார்த்துக் கொண்டிருந்தனர்.

"பரமு... கிளம்பலாமா? நகை ரெடியாகி விட்டாளாம், இப்பதான் வெண்பா போன் பண்ணிச் சொன்னா," என்று அம்மா அழைக்க,

"அப்படியாமா? சரி வாங்க எல்லாரும் கிளம்பலாம்," என்றான் பரமு.

தன் குலதெய்வத்தை மனதார வேண்டிக்கொண்டு, அனைவரும் கூட்டமாக வீட்டில் இருந்து கிளம்பினர்.

மொத்தக் குடும்பமும் ஒன்றாக செல்ல வேண்டும் என்பதற்காக, ஒரு சின்ன வேனை முன்கூட்டியே புக் பண்ணியிருந்தான். வீட்டு வாசலில் அந்த வேன் வந்து நிற்க, சிரிப்பும் பேச்சும் சலசலக்க மொத்தக் குடும்பமும் அதில் ஏறிக் கொண்டது.

பரமு மெல்லத் தாயிடம் நெருங்கி, "அம்மா... நான் அவளை அழைச்சுக்கிட்டு பைக்ல வரவா?" என்று ஒருவித எதிர்பார்ப்போடு கேட்டான்.

தன் மகன் மனதிற்குள் ஊற்றெடுக்கும் ஆசையை உணர்ந்த கண்ணகி, அதற்குத் தடை சொல்லவில்லை.

"நாங்க எல்லாரும் முன்னாடி போறோம், நீ நகையை அழைச்சிட்டு சீக்கிரம் வந்துடு, சரியா?" என்று சொல்லிவிட்டு வேனில் ஏறினார்.

"சரிம்மா," என்றவன், வேகவேகமாக செட்டிற்குள் நுழைந்து, தன் பைக்கை ஸ்டார்ட் செய்து வந்தான்.

அதற்குள் வேன் புறப்பட்டு வெண்பாவின் காலனிக்கு முன் போய் நின்றது. அங்கே வெண்பாவின் குடும்பமே வாசலில் காத்திருந்தது. கூட்டத்தின் நடுவே நகை நின்றிருந்தாலும், அவளுடைய கண்கள் மட்டும் ஏக்கத்தோடு தன்னவனைத் தேடி அலைபாய்ந்தன.

"அண்ணி, அண்ணா பைக் எடுத்துட்டு வராங்க. நாங்க எல்லாரும் முன்னாடி போறோம், நீங்க எல்லாம் ஒண்ணா மெதுவா வாங்க," என்று உறவினர்கள் கேலிச் சிரிப்புடன் சொல்லிவிட்டுப் புறப்பட்டனர்.

"நகையை மட்டும் எப்படித் தனியா விட்டுட்டுப் போறது?" என்று வெண்பா ஒரு நிமிடம் யோசிக்க, அதற்குள் அவன் பைக் ஒரு தென்றல் போல அவர்களை உரசி வந்து நின்றது. நகை, தன் மனம் முழுவதும் பொங்கும் சந்தோஷத்துடன், வெட்கத்தை சுமந்தபடி பைக் ஏறி அமர்ந்தாள்.

அவள் தன்னை ஆடம்பரமாக மாற்றிக்கொள்ளவில்லை. ஆனால், அவன் எடுத்துக் கொடுத்த அந்தப் பட்டுப் புடவையைத் தங்கமாகவே நினைத்துப் போர்த்தியிருந்தாள். அவளின் குட்டையான முடி தான் அந்த முகத்திற்குத் தனி அழகைத் தந்தது. லேசாகப் பவுடர் பூசி, நெற்றியில் ஒரு பொட்டு வைத்து, அதன் மேல் ஒரு மெல்லிய கீற்றாகச் சந்தனம் இட்டிருந்தாள்.

காதில் தோடு, கழுத்தில் இரண்டு செயின், கை நிறைய வளையல், காலில் மெல்லிய ஓசை தரும் கொலுசு எனத் திருமணப் பெண்ணாகச் சாதாரணமாக இருந்தாலும், பரமுவின் கண்களுக்கு அவள் ஒரு தேவதையாகவே தெரிந்தாள்.

பைக் நகர ஆரம்பித்ததும், தன் பைக் கண்ணாடியை ஒரு முறை துடைத்தவன்,

"பாப்பு... நீ ரொம்ப அழகா இருக்க," என்றான்.

அவன் முகம் கொள்ளாத சிரிப்புடன் சொன்ன அந்த ஒரு வார்த்தையில், அவள் அணு அணுவாக உருகிப் போனாள்.

"நீங்கதான் ரொம்ப அழகா இருக்கீங்க. தூரத்திலிருந்து வரும் போது பார்த்தேன், வேட்டி சட்டையில செமையா இருக்கீங்க!" என்று அவளும் தன் காதலைச் சொற்களில் வடித்தாள்.

இருவரும் ஒருவரை ஒருவர் மனதார பாராட்டி கொண்டனர். அந்தப் பயணத்தில், உரிமையோடு அவன் இடுப்பை கட்டிக் கொண்டு ஒரு பக்கமாக அமர்ந்து வந்தாள். அந்தச் சந்தோஷமான மனநிலையோடு திருமண மண்டபத்தின் முன் வந்து இறங்கினர்.

"பொண்ணும் மாப்பிள்ளையும் வாங்க, ஐயர் கூப்பிட்டு இருக்காரு," என்று கண்ணகி ஓடி வந்து, இருவரின் கைகளையும் ஆசையோடு பற்றியபடி மேடை நோக்கி அழைத்துச் சென்றார்.

அவர்களை வாழ்த்த வந்தவர்கள் அனைவரும் மேடை முன் அமர, ஐயர் ஓதும் மந்திரங்களை அந்தத் தம்பதியினர் பொறுப்போடு கேட்டுச் செய்ததைக் கண்டு ஊரே மெச்சியது.

தாய்மார்கள் இருவருக்கும் கண்கள் பனித்தன. இந்த ஒரு நாளுக்காக அவர்கள் சந்தித்த வலிகளும், நடத்திய போராட்டங்களும் கொஞ்ச நஞ்சமல்ல.

பல வருடங்களாக காதலித்த தன் காதலி, இன்று சட்டப்படி தனக்கு மனைவியாகப் போகும் அந்தப் பெருமிதமான தருணத்தை பரமு தன் இதயத்தால் ஏற்றுக் கொண்டான்.

"கெட்டி மேளம்... கெட்டி மேளம்..." என்று ஐயர் குரல் கொடுக்க, அவர் தாலியை பரமுவிடம் நீட்டினார். மாலையும் கழுத்துமாக நின்ற இருவரும், ஒரு நொடி கண்களால் ஒருவரை ஒருவர் ரசித்துக் கொண்டனர்.

தாலியைத் தன்னவள் கழுத்தை நோக்கிக் கொண்டு செல்ல, அவளோ தன் காதலனை நெருங்கிச் சற்று குனிந்து அமர்ந்தாள். மெல்லச் சிரித்தபடி, அவள் கழுத்தில் மூன்று முடிச்சுகளையும் இட்டு, தன் காதலியை தன் இல்லத்தரசியாக அதிகாரப் பூர்வமாக ஏற்றுக் கொண்டான்.

மொத்தக் குடும்பமும் அட்சதை தூவி ஆசீர்வதிக்க, அந்த ஊரே அவர்களை மனதார வாழ்த்தியது.

அவனுடைய உண்மையான காதலுக்கும், மாறாத அன்புக்கும் பரிசாக கிடைத்தவள்தான் இந்த நகை.

அவளுடைய கலங்கமில்லாத, தூய்மையான குணத்திற்கு ஒரு தூயவனையே கணவனாகப் பெற்றாள்.

மற்ற சம்பிரதாயங்கள் அனைத்தும் குடும்பத்தோடு சேர்ந்து கலகலப்பாக முடிய, அந்த மண்டபமே மகிழ்ச்சியால் நிறைந்து வழிந்தது.

"நல்ல நேரம் முடியறதுக்குள்ள வீட்டுக்கு போய் விளக்கு ஏத்தணும், ரெண்டு பேரும் வாங்க," என்று வெண்பா அவசரப்படுத்த,

"வெண்பா, நாம ரெண்டு பேரும் முன்னாடி போகலாம். அவங்க வழக்கம்போல பைக்ல வரட்டும்," என்று சொல்லிவிட்டுக் கண்ணகியும் வெண்பாவும் கிளம்பினர். மற்ற உறவினர்கள் மண்டபத்தில் மீதமிருந்த வேலைகளைக் கவனித்துக் கொண்டனர்.

பரமுவும் நகையும் பைக்கில் ஊர்வலமாக வர, அந்த ஊர் மக்களே அவர்களை ஆச்சரியத்தோடும் பெருமையோடும் பார்த்தனர்.

கண்ணகி தானே ஆரத்தி எடுத்து இருவரையும் வரவேற்றார். "நகை, வலது கால் எடுத்து வச்சு வீட்டுக்குள்ள போம்மா," என்று அன்போடு சொன்னார்.

அவளும் வலது கால் எடுத்து வைத்து வீட்டிற்குள் நுழைந்தாள். நேராகத் தெரிந்த அந்தச் சாமி அறையைப் பார்த்ததும், அவளுக்குள் ஏதோ ஒன்று உடைய, கண்கள் கலங்கிப் போனாள்.

அங்கே அவளுடைய தந்தை புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது. "அப்பா..." என்று அடிமனதிலிருந்து கரகரத்த குரலில் அழைத்தாள்.

"வந்து விளக்கேத்து பாப்பு," என்று அவள் கரத்தைப் பற்றி அன்போடு அழைத்துச் சென்றான் பரமு. அங்கிருந்த தெய்வங்களை எல்லாம் வேண்டிக்கொண்டு அவள் விளக்கேற்றினாள்.

"பரமு, மாமாவைத் தொட்டு ஆசிர்வாதம் வாங்கிக்கோங்க," என்று கண்ணகி சொன்னபோது, அவர்களின் பரந்த மனதைக் கண்டு வெண்பாவால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

காத்தவராயன் புகைப்படத்தைத் தொட்டு இருவரும் ஆசி பெற்றனர்.

நகை கண்ணை மூடி நின்றபோது, அவள் தந்தை அவளருகில் இருப்பது போன்ற ஒரு மென்மையான உணர்வு அவளுக்குள் படர்ந்தது.

அவர் கைகள் அவள் தலையை வருடி, "நீ எப்பவும் நல்லா இருக்கணும் நகை," என்று முழுமனதோடு ஆசீர்வதிப்பது போல் தோன்றியது.

கண்களில் இருந்து கண்ணீர் வழிய விழித்துப் பார்த்தவளுக்கு முன்னால், பரமு அவளைக் கவலையோடு பார்த்தபடி நின்றிருந்தான்.

"பாப்பு... ஏன்மா இப்படி அழற?"

அவள் பதில் ஏதும் பேசவில்லை; அப்படியே அவன் நெஞ்சில் சாய்ந்து தேம்பினாள். ஒரு மென்மையான பூங்கொத்து தன் மீது சாய்ந்தது போல உணர்ந்தவன், அவளை அணைத்துக் கொண்டு தோளை வருடித் தேற்றினான்.
 

Gowri Karthikeyan

Well-known member
வாவ் கல்யாணம் முடிஞ்சிருச்சி💐💐💐💐💐வாழ்த்துக்கள் ரெண்டு பேருக்கும்
 
Top Bottom