தகிக்காதே குளிர்நிலவே..!(13)

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN46

Member
May 5, 2026
53
80
18
Chennai
அத்தியாயம் -13

நாட்கள் அதன் போக்கில் சென்றது.

நந்தினியின் முன்பே அருண்மொழி பாரதியிடம் அதிக நெருக்கம் காட்டினான்‌.

நந்தினியின் பின்னால் செல்வதை குறைத்துக் கொண்டான். டன் கணக்கில் கண்களில் காதலை வழிய விடுவதை நிறுத்திக் கொண்டான்.

வார இறுதியில் நேரங்காலம் பார்க்காமல் அவள‌து வீட்டின்‌ முன்பு‌ தவமாய் தவமிருப்பதை முற்றிலும் நிறுத்தி விட்டான்.

“என்னடா வாட்ச்மேன் வேலை பாக்க இந்த வாரம் போகலையா?. திருந்திட்டியா என்ன?” என்று சந்தேகத்துடன் அமுதனே இரண்டு மூன்று முறை அருண்மொழியிடம் கேட்டுவிட்டான்.

அவனோ சிரித்துக் கொண்டே நகர்ந்து விடுவான்.

அருகிலிருக்கும்‌ போது ஒரு பொருளின் அருமை தெரியாது .‌ ஆனால் அது நம்மை விட்டு விலகிச் சென்றால் தான் அதன்‌ அருமை புரியும் ‌என்கிற யுத்தியை கையாண்டான் அருண்மொழி.

ஓரளவிற்கு அதற்கு பலனும் இருந்தது.

அருண்மொழியையும் பாரதியையும் இணைத்து பார்த்தவளின் முகம் அக்னிப்பிழம்பாய் மாறியது.

நந்தனியின் முன்பு வந்து நின்றான் அருண்மொழி.

அவளோ வழக்கம் போல அவனை கண்டுகொள்ளாமல் தனது வேலையை செய்து கொண்டிருந்தாள்.

“ எக்ஸ்கியூஸ் மீ..மேடம்…” என பத்து முறையாவது கூறியிருப்பான்.

கண்டு கொள்ளாமல் இருந்தவள் சிறிது நேரத்திற்குப் பிறகு சாவகாசமாய் நிமிர்ந்து அவனைப் பார்த்தான்.

“எனக்கு ஒரு ஃஹாப் டே பெர்மிஷன் வேணும் மேடம்.” என்றான்.

“சரியான காரணம் இருந்தா தான் பெர்மிஷன் தர முடியும்.” என்றாள் கறாராக.

புருவத்தை உயர்த்தி அவளைப் பார்த்தவன் , “ ரிஜிஸ்டர் ஆபிஸ்க்கு போய் கல்யாணத்துக்கு கொஞ்சம் அரேன்ஜ்மெண்ட்ஸ் பண்ணனும்” என்றான் கேலியாக.

“ சாரி..பெர்மிஷன் குடுக்க முடியாது.‌ யூ கேன் கோ நவ்” என்றாள் கடுப்பாக.

நாக்கினை உட்பக்கமாக சுழற்றியவன், “ ஏன் மேடம்? இந்த கல்யாணத்துனால உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா? ரொம்பவே சூடா இருக்கீங்க போலவே?” என்றான் நக்கலுடன்.

அவனது பேச்சில் எரிச்சலடைந்தவள் நொடியில் தனது முகப்பாவத்தை சரி செய்து கொண்டாள்.

பேனாவை கீழே வைத்தவள் நிதானமாக அவனை ஏறிட்டுப் பார்த்து, "மிஸ்டர் அருண்மொழி நான் எதுக்காக சூடாகணும்? எனக்கு ஒரு ப்ராப்ளமும் இல்ல…நீங்க தாராளமா போயிட்டு வாங்க” என்று முடித்துக் கொண்டாள்.

சின்னச் சிரிப்புடன் வெளியேறினான்.

அவன் வெளியேறிய சிறிது நேரத்தில் பாரதி அவளது அறைக்குள் நுழைந்தாள்.

“குட் மார்னிங் மேம். எனக்கு ஒரு ஹாஃப் டே பெர்மிஷன் வேணும்.”என்றாள்.

அவளை‌ பார்த்தவள் பதிலொன்றும் கூறாமல் தனது வேலையை தொடர்ந்தாள்.

“ மேம் உங்கிட்ட தான் பெர்மிஷன் கேட்டேன். பதிலே சொல்ல மாட்டேங்குறீங்களே..!” என்றாள் அழுத்தமாக.

பாரதியின் அழுத்தமான பேச்சு அவளுக்கு சிறிதும் பிடிக்கவில்லை.

நாற்காலியில் நன்றாகப் சாய்ந்து அமர்ந்து அவளை மேலிருந்து கீழாக பார்த்தாள்.

“ மேம்…” என்றவளை கையமர்த்தி, 'போகலாம் ‘ என்பதைப்‌ போல சைகை செய்தாள்.

‘சரியான ராங்கி’ என முணுமுணுத்து விட்டு வெளியேறினாள் பாரதி.

சுழல் நாற்காலியில் சுழன்று கொண்டே அவள் சென்ற திசையை பார்த்திருந்தாள் நந்தினி.

அவளது மனதில் பெரும் புயலே அடித்துக் கொண்டிருந்தது.

இங்கே பதிவாளர் அலுவலகத்தில் பெரும் கலவரமே நடந்து கொண்டிருந்தது.

குழலியின் வீட்டார் வந்து பிரச்சினை செய்து கொண்டிருந்தனர்.

அமுதனுக்கும் குழலிக்கும் திருமணத்தை நடத்தி வைத்திருந்தான் அருண்மொழி.

சாட்சிக் கையெழுத்தை பாரதி மற்றும் அருண்மொழி போட்டிருந்தனர்.

குழலியின் வீட்டில் அவர்களின் காதல் விவகாரம் தெரிய வரவே அவளுக்கு வேறொருவருடன் அவசர அவசரமாக திருமணத்தை நிச்சயித்து விட்டனர் அவளின் பெற்றோர்..

உடனே அருண்மொழியிடம் உதவி கேட்டு நின்றான் அமுதன்.

குழலியின் வீட்டினரை சமாதானப்படுத்தி இருவரின் திருமணத்தை நடத்த நேரமில்லாததால் முதலில் பதிவுத் திருமணம் செய்து விடலாம் என்று கூறி அதற்கான ஏற்பாடுகளை விரைவாக செய்து முடித்தான் அருண்மொழி.

அதற்காகவே நந்தனியிடம் அனுமதி கேட்டு நின்றான்.

பின்னோடு பாரதியும் வந்து அனுமதி வேண்டி நின்றதால் நந்தினியின் மனம் தடுமாறி தான் போனது.

அவளது மனம் சற்று திக் திக்கென்று தான் இருந்தது.

பதிவாளர் அலுவலகத்தில் அருண்மொழியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர் குழலியின் பெற்றோர்.

“ நீ யாருடா எங்க வீட்டு பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைக்கறது? பெரிய இவனாட்டம் கல்யாணம் பண்ணி வச்சிருக்க” என பாய்ந்து கொண்டு வந்தான் குழலியின் அண்ணன்.

“ சார் பிரச்சினை வேணாம். அவங்க ரொண்டு பேரும்‌ ஆசைப்பட்டுட்டாங்க . பிரிக்கறது நல்லா இருக்காது. ஆசைப்பட்டவங்களுக்கே கல்யாணம் பண்ணி வச்சிட்டா அவங்க லைஃப் நல்லா இருக்கும் . வீணா பிரச்சனை பண்ணாதீங்க. .” என்றான் அருண்மொழி.

அதற்குள் மேலும் சில அடியாட்கள் வந்து விட அனைவரும் அருண்மொழியை சூழ்ந்து கொண்டு கைகலப்பாகிப் போனது.

இவ்வாறு ஆகும் என்று தெரிந்து தான் அருண்மொழி சமயோசிதமாக பாரதியுடன் குழலியையும் அமுதனையும் வேறு புறமாக அனுப்பி வைத்து விட்டான்.

வந்திறங்கிய அடியாட்களை அருண்மொழி ஒருவனால் சமாளிக்க முடியாமல் போனது.

இதென்ன சினிமாவா தனி ஒருவனாக அனைவரையும் அடித்துப் போட. எதார்த்த வாழ்க்கையில் அவனும் சாதாரண மனிதனே….

இரத்த வெள்ளத்தில் அடிப்பட்டு கிடந்தான் அருண்மொழி.

அங்கிருந்த சிலர் அவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

நடந்த களேபரம் எதுவும் அறியாத நந்தினி அருண்மொழி மீது பயங்கர கடுப்பில் இருந்தாள்..

சொல்லமுடியாத ஆத்திரம் உள்ளுக்குள் கனன்று கொண்டிருந்தது.

அரை நாள் விடுப்பு என்று கூறி விட்டு இருவரும் அலுவலகம் வராததால் இன்னும் அவளது கோபம் அதிகமானது.

பட்டென்று எதைப்பற்றியும் யோசிக்காமல் அவனது அலைப்பேசிக்கு அழைத்து விட்டாள்.

அவளது அழைப்பு சென்று கொண்டிருந்ததே ஒழிய ஏற்கப்படவில்லை.

பதற்றத்துடன் நகத்தை கடித்து துப்ப ஆரம்பித்துவிட்டாள்.

சிறிது நேரத்தில் அவளது அலைப்பேசிக்கு அருண்மொழியின் எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.

அழைப்பை ஏற்றவள் எதிர்முனையில் இருப்பவர் பேச ஆரம்பிக்கும் முன்பே பொரிய ஆரம்பித்து விட்டாள்.

“ ஹாஃப் டே தானே பெர்மிஷன் கேட்டீங்க? இப்ப முழு நாளும் வேலைக்கு வரலை. வர முடியலைன்னா இன்ஃபார்ம் பண்ணனும்னு தெரியாது உங்களுக்கு? கொஞ்சம் கூட சென்ஸ் இல்லை? நீங்க வருவீங்க வருவீங்கன்னு நாங்க வெயிட் பண்ணிட்டு இருக்கணும். வர முடியலைன்னு இருந்ததுன்னா உங்க வெர்க்கை வேற யார் கிட்டயாவது குடுத்துட்டு போயிருக்கலாம் ல? ஒவ்வொண்ணும் நான் சொல்லித் தரணுமா? கொஞ்சம் கூட சீரியஸ்னஸ் கிடையாது உங்களுக்கு”என்றாள் எரிச்சலுடன்.

‘இருவரும் ஒன்றாக சென்றார்களே..! உண்மையாகவே இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகின்றார்களா? அல்லது பதிவு திருமணத்திற்கு ஏற்பாடுகள் செய்வதற்காக சொன்றுள்ளார்களா?’ என ஆயிரம்‌ கேள்விகள் தலையினுள் ஓடியது.

எனவே தான் அருண்மொழியிடம் அத்தனை சிடுசிடுப்பு.

அவள் பேசியதற்கு பதிலேதும் எதிர்முனையில் பதிலேதும் வராததால் மீண்டும்,” ஹலோ..! லைன்ல இருக்கீங்களா? ஹலோ..” என்றவள் அலைப்பேசியை காதிலிருந்து எடுத்துப் பார்த்தாள்.

எதிர்முனையில் இருப்பவர் அழைப்பில் தான் இருந்தார்.

“ஹலோ…! நந்தினி மேடம்..இங்க.. கொஞ்சம் பிரச்சினை ஆகிடு…ச்சு. நா..நான்‌ ஹாஸ்பிட்டல்ல இருக்கேன்.. இன்னும் ஒ…ஒரு வாரத்துக்கு என்..என்னால வ..வர‌ முடியாது..” என்றான்‌ திணறலுடன்.

நந்தினிக்கோ அவன் கூறியது மூளைக்குள் சென்றடைய சிறிது நேரம் எடுத்தது.

“ ஹ..ஹலோ..!" என்றான் ஈனஸ்வரத்தில்.

சட்டென்று சுதாரித்தவள், “ எந்த ஹாஸ்பிட்டல்?” என்றாள் பதட்டத்துடன்..

அவன் மருத்துவமனையில் பெயரைக் கூறியவுடன் தனது காரை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டாள்.

வரவேற்பில் அவனது பெயரைச் சொல்லி அவன் அனுமதிக்கப்பட்டிருக்கும் அறையின் எண்ணைக் கேட்டுக் கொண்டு அங்கு விரைந்தாள்.

வேக வேகமாக அந்த அறையினுள் நுழைந்தவள் அவனைப் பார்த்தாள்.

கை கால், மற்றும் தலையில் பலத்த அடி. உடலை சிறிது கூட அசைக்க முடியாமல் கண் மூடி படுத்திருந்தான்.

ஒரு கணம் என்னவோ போல் ஆகி விட்டது அவளுக்கு.

மருத்துவர் அவனுடைய காயத்தின் கட்டை சரி பார்த்துக் கொண்டிருந்தார்.

அருகில் காவலர்களும் நின்றிருந்தனர்.

மருத்துவர் அருகில் வேகமாக சென்றவள் , “இவருக்கு என்ன ஆச்சு டாக்டர் ? “ என்றாள் பதட்டத்துடன்.

அவளை ஒருகணம் பார்த்துவிட்டு, "நீங்க இவருக்கு என்ன வேணும்?” என்றார்.

“அது…அது..அவர் என்னோட எம்ப்ளாயி.‌ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எனக்கு ஃபோன் பண்ணியிருந்தார். அதான்..” என்று இழுத்தாள்..

நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியருக்காக இவ்வளவு தூரம் அக்கறை கொள்ளும் அவளை பார்த்து சற்று வியந்து தான் போனார் மருத்துவர்.

“ மேடம் ரிஜிஸ்டர் ஆபிஸ்ல ஒரே கைகலப்பாக ஆகிடுச்சு. மிஸ்டர் சங்கரோட பொண்ணுக்கும் உங்க ஆஃபிஸ்ல வெர்க் பண்ணுற அமுதனுக்கும் இவர் கல்யாணம் பண்ணி வச்சிருக்கார். அதான் சங்கரோட ஆளுங்க எல்லாம் ரவுண்டு கட்டிட்டாங்க. பாவம் இவர் ஒருத்தர் தான் மாட்டிகிட்டார். அவங்க எல்லாரையும் சமாளிக்க முடியல. வச்சி செஞ்சிட்டானுங்க. அவனுக்கு எல்லாம் பெரிய ரவுடிங்க. அவங்க வீட்டு பொண்ணுக்கே திருட்டு கல்யாணம் வச்சிருக்காங்க. பொண்ணும் மாப்பிளையும் தப்பிச்சிட்டாங்க. இவருக்கு தான் நல்ல அடி. சங்கர் இவர் மேல் போலீஸ் கம்ப்ளைண்ட் குடுத்திருக்காரு. எதுக்கும் இவரு கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும்.” என்றார் அந்த காவலர்.

சலிப்புடன் இருபுறமும் தலையை ஆட்டியவள் அவனருகே சென்று நின்றாள்..

“பெயின் கில்லர் குடுத்திருக்கு. தூங்கிட்டு இருக்காரு‌. அப்பறம்… இவருக்கு சொந்தக்காரங்க யாருமில்லையா? “ என்றார் மருத்துவர்..

அவளுக்கும் அதே எண்ணம் தான்.

இங்கு வேலைக்கு சேர்ந்த நாளிலிருந்து அவன் தேவையின்றி விடுமுறை எடுத்ததில்லை.

அவனைத் தேடிக் கொண்டும் ‌யாரும் வரவில்லை.அலுவலகத்தில் உள்ள அவனது தகவல் குறிப்பேடில் அவனது தகவல்கள் மட்டுமே இருந்தது.

அவனது குடும்பத்தினரைப் பற்றிய தகவல்கள் தகவல் குறிப்பேட்டில் இல்லாததால் இதனைப் பற்றி அவனிடம் கேட்க வேண்டும் என பல நாட்களாக நினைத்திருந்தாள்.

மருத்துவரும் அதே கேள்வியைக் கேட்கவும் அவளுமே அவனைப் பற்றிய முழு தகவல்களையும் கேட்டறிந்து கொள்ள வேண்டும் என நினைத்தாள்.
 
Last edited:

Author: STN46
Article Title: தகிக்காதே குளிர்நிலவே..!(13)
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
383
83
Chennai
வீரா ஓட பேரன் அப்படின்னு தெரியும் போது என்ன செய்வா நந்து????
இந்த பாரதி வேற .....மனசில் ஆசையை வளர்த்துட்டு இருக்கா....பாவம்.....

தேவியை கொலை செய்து இருப்பாங்களா????
எனக்கு என்னவோ இந்த மந்தாகினி மேல தான் செம்ம டவுட்