மை டியர் ராவணா - 3

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,208
16,513
113
Germany
அத்தியாயம் 3


" ஐயோ டாக்டர் யாராவது இங்க வாங்க ", என்று பயத்தில் அலற தொடங்கி விட்டாள் அந்த நர்ஸ்..!!


அடங்க மாட்டேங்குறானே வந்த இடத்திலும் இப்படி வம்பு செய்கிறானே என்று அவனைப் பார்த்து மிரண்டு போன சீதா வேகமாக ஓடி வந்தாள் அவன் அருகில்..


" என்ன பண்ணிட்டிருக்க நீ?? இப்போ பேசாம வரியா இல்லையா எதுக்காக அவங்க கிட்ட வம்பு பண்ற??", அவனுடைய கைகளை பிடித்து இழுத்த வண்ணம் கேட்டாள்..


" சாமரம் வீசிக் கொண்டிருந்தவள் இங்கே என்ன செய்கிறாள் என்று தான் நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன்"


" என்ன மேடம் ??இது யார்??"


" மன்னிச்சுடுங்க நர்ஸ் அவருக்கு கொஞ்சம்", என்று சொல்லி தலையை சுட்டி காட்டி பைத்தியம் என்று கூறினாள் ஜாடையில்.


" கொஞ்சமெல்லாம் இல்லை ரொம்பவே அதிகமா இருக்கு இவருக்கு.. இங்க வர எல்லாருமே இப்படிப்பட்டவங்க தான் இருந்தாலும் இது கொஞ்சம் அளவுக்கதிகமாக இருக்கு"


" சாரி மன்னிச்சிடுங்க ", என்று கூறி வலுக்கட்டாயமாக அவனை பிடித்து இழுத்து வந்தாள்..


" கொஞ்சமாவது அறிவிருக்கா?? எதுக்காக இப்படியெல்லாம் பண்ணிட்டிருக்கீங்க பொது இடத்தில்??"


உடனே அவன் ஒற்றை புருவத்தை உயர்த்தி அவளை முறைத்துப் பார்த்தான்..


இத்தனை நேரமாக அமைதியாக இருந்தவன் அறிவிருக்கிறதா என்று கேட்கவும் இப்படி கோபப்படுகிறானே என்று உள்ளுக்குள்ளே பயம் தொற்றி கொண்டது அவளுக்கு..


பயத்தில் ஒரு அடி பின்னே நகர்ந்தவள்..


" சரி இங்க உட்காருங்க டாக்டர் வந்ததும் போய் பாக்கலாம்"


" டாக்ட.. என்ன அது?? எனக்கு வாயில் நுழையவில்லை.. அதுதான் அவனுடைய பெயரா?? அரண்மனையில் ஒட்டடை அடிப்பவனோ??", என்றான் கேள்வியாக.


சரியா போச்சு.. இந்த மாதிரி டாக்டர் முன்னாடி வந்து இவன் பேசி வச்சா பெரிய பிரச்சனையாகிடுமே..!!


அது சரி.. என்ன பிரச்சனையாக போகிறது?? இங்க இருக்குற எல்லாருக்கும் ஏதோ ஒரு பிரச்சனை இருக்கத்தானே செய்கிறது பத்தோடு பதினொன்றாக இவனும் இருந்துவிட்டு போகட்டும் என்று மனதிற்குள் அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே


ஒரு நர்ஸ் வேகமாக ஓடிவந்து..

" டாக்டர் உங்களை உள்ளே கூப்பிடுகிறார்", என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.


அப்பாடா தப்பிச்சோம் டா சாமி என்று நினைத்துக் கொண்டு அவனை வேகமாக இழுத்துச் சென்றாள் டாக்டர் இருக்கும் அறையை நோக்கி..


" பெண்ணே எதற்காக இத்தனை வேகமாக என்னை இழுத்துச் செல்கிறாய் இப்படி ஒரு ஆடவனின் கையை பற்றி இழுத்து செல்வது நியாயமல்ல அதிலும் நான் ஒரு மன்னன்.."


" எப்பா சாமி நீங்க மன்னனாவே இருங்க ஆனா கொஞ்ச நேரத்துக்கு அமைதியா இருங்க எனக்கு அது போதும்", என்று கூறியவள்..


" டாக்டர் மே ஐ கம் இன்", என்று அனுமதி கேட்டாள் வாசலில் நின்று.


"எஸ் கமின்", என்றதும்..


டாக்டர் கௌதம் என்ற பெயர் பலகை தாங்கிய கதவை தள்ளி உள்ளே நுழைந்து கதவை சாற்றி விட்டு அவரை ஏறிட்டு பார்த்தாள்.


முன்வழுக்கையோடு கண்ணாடி அணிந்து கொண்டு ஐம்பது வயது மதிக்கத்தக்க டாக்டர் கௌதம், அவர்களை கண்ணாடி வழியே ஊடுருவினார்.


" உக்காருங்க யாருக்கு பிரச்சனை??", என்று கேட்டுவிட்டு அவள் அருகில் நின்று கொண்டிருக்கும் இந்திரராவணனை ஒரு பார்வை பார்த்ததுமே தெரிந்து கொண்டார். அவனுக்கு தான் பிரச்சனை என்று..


" நீங்க உட்காருங்க தம்பி..", என்று இருக்கையை கைகாட்டி அவர் கூறவும்..


" நான் அமர்வது இருக்கட்டும் முதலில் நீ எழுந்திருடா கிராதகா.. அரண்மனையில் ஒட்டடை அடித்துக் கொண்டிருந்த உனக்கு இத்தனை கொழுப்பா?? மன்னன் முன்பே இப்படி மரியாதை இல்லாமல் அமர்ந்திருக்கிறாய்.. உன்னை சும்மா விட மாட்டேன்.. யார் அங்கே?? இந்த மூடனை இழுத்துச் செல்லுங்கள் சிறைக்கு", என்று உரக்க கத்த தொடங்கி விட்டான் அவன்.


அவன் நடந்து கொள்வதை பார்த்து இவளுக்கு தான் அதிர்ச்சியாக இருந்தது ஆனால் டாக்டர் அவனை மிகவும் சாதாரணமாக தான் பார்த்தார் இது போன்ற பல நோயாளிகளை சந்தித்த காரணத்தினாலோ அனுபவத்தினாலோ என்னவோ அமைதியாகவே அவனை புன்னகையுடன் ஏறிட்டார்.


" சாரி சாரி டாக்டர்.. காலையிலிருந்து இவர் இப்படித்தான் பேசிட்டிருக்காரு இவரை பற்றி எந்த தகவலும் எனக்கு தெரியாது நான் வழியில் போயிட்டிருந்த போது தான் பார்த்தேன் அங்கே ஒருத்தரிடம் வம்பு பண்ணிக் கொண்டிருந்தார்.. அப்போதான் இவரை இங்கே கூட்டிட்டு வந்தேன்"


" பரவாயில்லை நமக்கென்ன வந்ததுன்னு கண்டுக்காம நீங்க பாட்டுக்கு போயிருந்தா என்னாகும் மற்றவர்களை போல இல்லாமல் நீங்க கொஞ்சம் மனிதநேயத்தோடு நடந்து கொண்டது எனக்கு ரொம்பவே சந்தோஷம்"


" என்னால முடிஞ்ச உதவிகளை நான் மத்தவங்களுக்கு செய்யணும்னு நினைப்பேன் டாக்டர்.. என்ன அதை இந்த ஊரில் உள்ள மற்றவர்கள் சேவை என்று சொல்லுவாங்க என்னை பொருத்த வரைக்கும் எனக்கு நேரம் கிடைக்கும்போது என்னால் முடிந்த சில உதவிகளை அடுத்தவர்கள் சந்தோஷத்திற்காக செய்வேன்.. ", என்று கூறி புன்னகை புரிந்தாள்.


" ரொம்பவே நல்ல மனசு உங்களுக்கு நீங்க கவலைப்படாதீங்க இவரை நாங்க பார்த்துக்கிறோம்..", என்று கூறி அவள் கையில் ஒரு அப்ளிகேஷன் ஃபார்மை திணித்தார்..


" இந்த அப்ளிகேஷன் ஃபார்மை நீங்க ஃபில் பண்ணிடுங்க.. அப்போதான் இவரை அட்மிட் பண்ண முடியும்"


"ஓகே டாக்டர்", என்றவள் அந்த ஃபார்மை நிரப்பி அவர் கையில் அடுத்த இரண்டு நிமிடத்தில் கொடுத்தாள்..


" கவலைப்படாதீங்க இனிமேல் இவர் எங்களுடைய பொறுப்பு நாங்க பார்த்துக்கிறோம் உங்களுடைய பெயர் என்ன என்று நான் தெரிந்து கொள்ளலாமா??", என்று கேட்டார் அந்த டாக்டர்.


" என் பேர் சீதா", என்றாள் புன்னகைத்துக் கொண்டே..


அவளின் பெயரை கேள்விப்பட்டதும் சிலிர்த்து போய் அவளை திரும்பிப் பார்த்தான் அவன்.


இவள் பெயர் சீதாவா??!!


என்னவோ தெரியவில்லை இவளை பார்த்த கணம் முதல் என் மனதிற்குள் ஏகப்பட்ட மாற்றங்கள் உண்டாகிறது இவள் அருகில் இருந்தால் என்னென்னவோ தோன்றுகிறது, இதயம் முரசு கொட்டுகிறது..!!


விரல்கள் நடுங்கத் தொடங்குகிறது இவளுக்கும் எனக்கும் என்ன பந்தம்?? ஏன் இவளை பார்க்கும் பொழுது நான் தடுமாறுகிறேன் ?? என்று மனதிற்குள் ஏகப்பட்ட கேள்விகளை எழுப்பி கொண்டிருந்தான் அந்த இந்திரன்..!!


" நான் அப்போ கிளம்புறேன் டாக்டர் கொஞ்சம் பார்த்துக்கோங்க கவனமா", என்று சொல்லி ராவணனை ஆழமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து கிளம்பினாள்..


சட்டென்று அவளின் கையை பிடித்திழுத்தான் அவன்..


" சீதையே.. என்னை தனியே தவிக்க விட்டு நீ மட்டும் எங்கே செல்கிறாய்?? எனக்கு இங்கு யாரையும் தெரியாது இந்த உலகமே எனக்கு புதிதாக இருக்கிறது யாரைப் பார்த்தாலும் எனக்கு அச்சம் தோன்றுகிறது.. என்னால் இந்த உலகில் தனியாக இருக்க முடியும் என்ற தோன்றவில்லை.. இவர்களை பார்த்தாலே எனக்கு பிடிக்கவில்லை தயவு செய்து என்னை விட்டு நீங்கி செல்லாதே என்னுடனே இருந்து விடு.. இல்லையேல் உன்னுடன் என்னை அழைத்துச் செல்..", அந்த இரும்பு மனிதன் மன்றாடிக் கொண்டிருந்தான் அந்த மலர் பெண்ணிடம்..!!


என்னதான் பிடிவாதமாக தன்னுடைய கைகளை அவனிடமிருந்து விடுவித்துக் கொள்ள அவள் முயற்சி செய்தாலும் அவன் பேசிய பேச்சும் அவன் கண்களில் தென்பட்ட ஏக்கம், பயம், குழப்பம் போன்ற அனைத்து உணர்ச்சிகளும் அவள் மனதை என்னவோ பண்ணியது..!!


தன்னந்தனியே ஒரு கைக்குழந்தையை தவிக்க விட்டு செல்வது போல அவள் மனம் பதற தொடங்கியது..


எல்லா உணர்வுகளையும் கட்டுப்படுத்திக் கொண்டு அங்கிருந்து ஒரே மூச்சாக கிளம்பி செல்ல வேண்டும் என்று உறுதி கொண்டவள் அவனுடைய பேச்சுகளையும் கெஞ்சல்களையும் காதில் வாங்காமல் கையை உதறிச் சென்றாள் வேகமாக வெளியே..


" சீதா சீதா.. என் பேச்சை கேள்.. தயவு செய்து என்னை நீங்கி செல்லாதே.. சொல்வதை கேள் ", என்று கத்திக் கொண்டே அவள் பின்னாடி ஓடி வந்தவனை நான்கைந்து பேர் சேர்ந்து மடக்கி பிடித்துக் கொண்டார்கள்.


திரும்பி திரும்பி அவனை பார்த்துக் கொண்டே சென்றாள் அவள்..


வேகமாக வெளியில் இருக்கும் தன் ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு சிட்டாய் பறந்து விட்டாள்..


அந்த இடத்தை விட்டு எப்படியோ வெளியே வந்து விட்டாள் தான்.. ஆனால் அவன் கத்திய போதும் சரி, அவன் கெஞ்சிய போதும் சரி அவளிடம் மன்றாடி நின்ற அவனுடைய தீட்சண்யமான விழிகள் மீண்டும் மீண்டும் அவள் கண் முன்னாடி வந்து போனது..


" என்னை விட்டு நீங்கி செல்லாதே சீதா", என்று அவன் மன்றாடியது இன்னும் அவள் காதில் கேட்டுக் கொண்டே இருந்தது..!!


அவனுடைய நினைவுகளை துணி வைத்து துடைத்தார் போன்று எல்லாவற்றையும் மறந்து ரோட்டில் கவனத்தை செலுத்த முயற்சி செய்தாள்..


ஒரு வழியாக மனதை ஒருநிலைப்படுத்தி லாவகமாக வண்டியை ஓட்டி சென்றவள் நேராக தான் தங்கியிருக்கும் வீட்டிற்கு வந்தாள்.


ஊரின் ஒதுக்குப்புறமாக இருக்கும் அந்த மெயின் ரோட்டில் கிட்டத்தட்ட பத்து வீடுகளே இருந்தது..


ஒவ்வொரு வீட்டிற்கும் இடையில் 15 அடி தூரம் இடைவெளி இருந்தது..


படிப்பை முடித்துவிட்டு இரண்டு வருட காலமாக இங்கிருக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாள்..


சொந்த ஊரான திருச்சியில் வேலை கிடைக்காமல் இங்கே கிடைத்துவிட வேறு வழியில்லாமல் தனியே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி கொண்டாள் அவள்..


அவளுடைய அம்மா வசுமதி, இல்லத்தரசி.. தன் ஒரே மகள் மீது உயிரையே வைத்திருக்கும் ஜீவன்.. அவளுடைய அப்பா ராஜேஷ், வங்கியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.. மகள் வேலைக்கு செல்லவும் இப்பொழுது வீட்டில் ஓய்வெடுக்கிறார்..


பெற்றோர்கள் எத்தனை கூறியும் அவர்கள் பேச்சை கொஞ்சமும் காதில் வாங்காமல் படித்த படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கும் பொழுது வேலைக்கு போய் தான் ஆக வேண்டும் என்று தர்க்கம் செய்து ஒரு வழியாக திருப்பூர் வந்து சேர்ந்து விட்டாள் சீதா..


அழகு அறிவு குணம் பண்பு எல்லாம் நிறைந்தவள் தான் இவள்.. என்ன கோபம் மட்டும் கொஞ்சம் மூக்குக்கு மேல் வரும்..!!


இவள் எந்த ஆண்மகனையும் திரும்பி கூட பார்க்காத பெண் என்று சொல்ல முடியாது.. அழகிய ஆண்களை அவள் ரசிக்கத்தான் செய்வாள்.. அதுவும் ஒரு நிமிடமோ இரு நிமிடமோ அவ்வளவுதான் அதன் பிறகு அவளுக்கும் அவர்களுக்கும் சம்பந்தம் கிடையாது..


அழகிய விஷயங்களை கண்களால் ரசிக்க மட்டும் தான் செய்ய வேண்டும் அதை சொந்தம் கொண்டாட கூடாது என்பது அவளுடைய கொள்கை.. அதனாலோ என்னவோ இதுவரை எந்த ஆணிடமும் அவள் காதல் வயப்படவில்லை.. காதல் என்று சொல்லிக் கொண்டு வந்து நிற்கும் எந்த ஆணின் கோரிக்கையையும் அவள் ஏற்றுக் கொள்ளவில்லை..


குறும்புத்தனம் நிறைந்தவள் அவள்.. ஆனால் பார்ப்பதற்கு அப்பாவி போல மூஞ்சியை வைத்திருப்பாள்..!!


பொது சேவை செய்வதில் அவளுக்கு மட்டற்ற மகிழ்ச்சி கிடைக்கும் எப்பொழுதுமே.. அதனால் எங்காவது பிரச்சனை வம்பு உதவி என்று யாராவது கேட்டாலும் சொன்னாலும் உடனே ஓடி சென்று அங்கே உதவுவது அவளின் வழக்கம்..


இது தவறில்லை எல்லாம் ஒரு அளவுதான் என்று தாய் தந்தையர் எத்தனை முறை கூறியும் அவள் காதில் வாங்கிக் கொள்ளவில்லை..


மனதிற்கு தோன்றியதை செய்தாள் மூளைக்கு எட்டியதை பேச தொடங்கினாள்..


அப்படி சேவகம் செய்யும் எண்ணத்தினால் தான் இவளுக்கு இந்த இந்திர ராவணனின் அறிமுகம் கிட்டியது..!!


- தொடரும்..
 
Last edited by a moderator:

Author: நிதனிபிரபு
Article Title: மை டியர் ராவணா - 3
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
383
83
Chennai
அச்சோ இப்படி விட்டு வந்துட்டாலே😔😔😔😔😔
ஆன அங்க இருக்கறவங்களை நினைச்சா தான்🤭🤭🤭🤭🤭
 
May 19, 2026
60
12
8
Tiruppur
அச்சோ இப்படி விட்டு வந்துட்டாலே😔😔😔😔😔
ஆன அங்க இருக்கறவங்களை நினைச்சா தான்🤭🤭🤭🤭🤭
ஆம் அவர்கள் நிலை தான் பாவம்😜😜

மிக்க நன்றி மா ❤️ ❤️ ❤️ ❤️
 
  • Love
Reactions: Gowri Karthikeyan