காதல் ராஜ வீதியில் - 8

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,208
16,465
113
Germany
8

வதனிக்கு கடைசி வருடம் கல்லூரி படிப்பு நடந்து கொண்டு இருந்தபோது தமிழிடம் வாயை விட்டாள். அன்று காலை அதிசயமாக வீட்டில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள். சாப்பிடும் போது அதை தவிர பேசுவது வதனிக்கு கைவந்த கலைகளுள் ஒன்று என்பதால் அப்படித்தான் அப்போதும் பேசிக் கொண்டிருந்தாள். பல நாட்களுக்குப் பிறகு குடும்பத்துடன் ஒன்றாக உணவுண்டு கொண்டிருந்த மதிவாணன் வேறு வழி இன்றி அவளுக்கு பதில் கொடுத்துக் கொண்டிருந்தான். வைக்கப்பட்ட உணவுகள் கடகடவென்று காலியாகி கொண்டு இருக்க அவளுடைய சலசலப்பும் இடைவிடாமல் அந்த இனிய குடும்பத்தில் எதிரொலித்துக் கொண்டு இருந்தது.

“ஆமா அண்ணா, இப்போ டாக்டரா இருக்கீங்களே அந்த ஆஸ்பத்திரியில நர்ஸ் எல்லாம் நல்லா இருக்காங்களா?” என்று புதிதாக ஆரம்பித்தாள் தங்கை.
மதிவாணனும் சாதாரண போல பாவித்து “ஏன்? அவங்களுக்கு என்ன? நல்லாதான் இருக்காங்க” என்றான் சூதுவாது இல்லாமல்.

“என்னது? நர்ஸ் எல்லாம் நல்லா இருக்காங்களா? அப்போ நீ வேலை பார்க்க ஆஸ்பத்திரிக்கு போகல! நர்சை எல்லாம் பாக்குறது தான் ஆஸ்பத்திரிக்கு போய் இருக்க?” என்றாள் தண்ணீரை அருந்திக் கொண்டே. அவள் கேள்வியில் அலறியடித்த மதிவாணன் “அய்யய்யோ! நான் அப்படி சொல்லல அப்படி சொல்லல” என அலறினான்.

“அப்படி சொல்லலையா? வேற எப்படி சொன்ன?” என்று கொலையாக கொன்றாள் வதனி.

“அதில்லை நான் தப்பா ஒன்னும் சொல்லல” என்று தடுமாறினான் மதிவாணன்.

வதனியும் “நானும் ஒன்னும் தப்பா கேக்கல” என்றாள் முறைத்த தாயை பார்த்துக் கொண்டு.

“என்ன தப்பா சொல்லல? நர்ச பாக்கதான் போனேன்னு என்னை சொல்லுவியா? அது தப்பில்லயா?” என பக்குவமாக எடுத்து சொன்னான் அண்ணன்.

வதனி சிரிப்புடன் “ஏன்? நீ நர்ச பார்க்கிறது இல்லை? அப்புறம் தன்னந்தனியாவா ஆஸ்பத்திரில நிக்கிற?” என்றவளிடம், “தப்பு தப்பா பேசாத பாப்பா. எல்லோரும் எங்களை நம்பி வேலைக்கு வர்றவங்க. அவங்களோட பாதுகாப்பு எங்க பொறுப்பு. இது மாதிரி பேச்சு எனக்கு பிடிக்காது. இப்படி பேசக்கூடாது” என்றான்.

“ஓஹோ! நான் பேசினது தப்பா? இருக்கட்டும். அப்போ அவங்க எல்லாம் உனக்கு சிஸ்டர்ஸ் அப்படித்தானே?” என்று தாயை அர்த்தமாக பார்த்தாள் வதனி. ஏன் எனில் இது அவரது சந்தேகம். அதை இவளிடம் புலம்பவும் அப்படியில்லை என்றாவள் அதை உறுதிப்படுத்த இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டாள் மகள்.

இப்போ திருப்தியா? என்பதாக அன்னையைப் பார்த்தாள். அவர் முகம் நிம்மதியை காட்டியது. கூடவே அடுத்து மகனுக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்ற பொறுப்பை காட்டியது..

ஓஹோ அம்மா நிம்மதியா இருக்கிற மாதிரி இருக்கு அது சரி இல்லையே என்று நினைத்த வதனி “ஆனா இன்னும் ஒரு ஜென்மம் உன்னை சுத்தி சுத்தி வருதே?அதுக்கு என்ன பதில்?” என்றாள் ஓர கண்ணில் அம்மாவை பார்த்துக்கொண்டு.

“ஏதாவது உளறிக்கிட்டு இருக்காதே. சும்மாவே தூக்கத்துல உளறுறதுதான் உன்னோட வேலை. நேத்து கூட தூக்கத்துல துட்டு துட்டுன்னு உளறிக்கிட்டே இருந்தே. இதைப் பத்தி நாங்க ஏதாவது பேசுனமா? நீ உன் வேலையை பாரு. என்னைப் பத்தி பேசுறதை நிறுத்து” எதற்கு எதையோ சொல்லி தங்கையிடம் தப்பித்துக் கொள்ள தட்டிலிருந்த பூரி கிழங்கை ஒரே வாயில் சாப்பிட்டு மருத்துவமனைக்கு கிளம்பி விட்டான் மதிவாணன்.

“சும்மா இருக்க மாட்டியா? அவன் இன்னைக்கு வீட்டில் இருப்பான்னு சொல்லி தான் பூரி கிழங்கு செய்தேன். அதை திருப்தியா சாப்பிடவிடாமல் சும்மா குழப்பிட்டு இருக்கிற? நீ சொல்றபடி அவன் எந்த நர்சயாவது புடிச்சி இருக்குன்னு சொன்னா அவளை கட்டி வைக்கிறது என் பொறுப்பு நீ வாயை மூடிக்கிட்டு பூரியை சாப்பிடு” என்றார் மலர்.

“நான் வாயை மூடிகிட்டு பூரியை உதட்டில் வச்சு பிளாஸ்டிரிங் பண்றது இருக்கட்டும். அண்ணனுக்கு எத்தனை வயசு ஆகுது? ஒரு அண்ணியை எனக்கு எப்ப கூட்டிட்டு வருவீங்க?” நீ என்ன சொன்னாலும் நான் செய்வதை தான் செய்வேன் என்று மீண்டும் மீண்டும் பேசிக் கொண்டிருந்தாள் வதனி.

“அதுதான் சொன்னியே? அவனா பார்த்து சொன்னா அதை முடிப்பேன். அதுக்கு அவன் கிட்ட பேச போறேன். அதுவரை கொஞ்சம் அமைதியா இரு. சரி அதெல்லாம் இருக்கட்டும். நேத்து நைட் அப்பாவுக்கு கால் பிடிச்சு விடப் போன நேரத்துல என்ன உளறி இருக்குற? அப்படி என்ன காசு பைத்தியம் பிடிச்சு இருக்கு? இங்கே உன் அப்பா சம்பாதிக்கிறது, அண்ணன் சம்பாதிக்கிறது எல்லாம் உனக்குதானே? தூக்கத்துல வர்ற அளவுக்கு அப்படி என்ன வெறி உனக்கு காசு மேல?” பேசிக் கொண்டே சூடாக இன்னும் இரண்டு பூரிகளை அவளுக்கு வைத்தார் மலர்.

“துட்டா? அம்மா. அம்மா. நான் துட்டு துட்டுன்னு சொல்லி இருக்க மாட்டேன். ’மணி மணி’அப்படின்னு சொல்லியிருப்பேன். ‘மணி’னா பணம் தானே? அதுக்கு இந்த மதுர லூசு மாத்தி சொல்லிட்டு போவுது” என்றாள் வதனி.

“அப்படின்னா மணி யார்?” என்று கேட்டபடியே இன்னும் கொஞ்சம் மசாலாவை எடுத்து தட்டு வைத்துக் கொண்டார் தமிழ். தந்தையும் தங்கள் உடன் இருப்பதை மெதுவாக உணர்ந்த வதனி சட்டென இரண்டு கையையும் பிசைய முடியாமல் ஒரு கையில் உணவு இருந்ததால் ‘திருதிரு’ என்று விழித்தாள்.

“மணி..வந்து…மணின்னு யாரும் இல்லை. சும்மா மணி எத்தனை, மணி எத்தனைனு கேட்டு இருப்பேன். இப்போ உங்களுக்கு இதெல்லாம் ஒரு கேள்வி? கேட்க வந்துட்டீங்க. போங்கப்பா” என்று ஒருவாரு சமாளித்து விருப்பமான உணவை பாதியிலேயே விட்டுவிட்டு வதனி கல்லூரிக்கு கிளம்பி விட்டாள். தமிழ் அவள் சொல்லும் வார்த்தைகளை நம்பதான் நினைத்தார். ஆனால் அதை சொல்லும் போது அவள் முகத்திலிருந்த திருட்டுத்தனத்தை அவரால் நம்ப முடியவில்லை.

அவர் தவம் இருந்து பெற்ற அவர் குடும்பத்தின் பற்றுகோல் அவரிடம் பொய் சொல்வதை அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அதன் பின்பு தான் மகளை கண்காணிக்க ஆரம்பித்தார். அப்படி ஆரம்பித்த பொழுது மணிமொழி அவள் பின்னே சுற்றுவது அவருக்கு தெரிந்தது. அத்தனை வேலைகள் வைத்திருக்கிறான், அதையும் வைத்துக்கொண்டு வெட்டியாக எப்படி அவள் பின்னால் சுற்ற முடிகிறது? என்ற ஆச்சரியம் தான் வந்தது.

கூடவே இன்னும் ஒரு சிலரும் மகளை கண்காணிப்பதையும் அவர் உணர்ந்தார். உடனேயே நடவடிக்கை எடுக்க அவர் நினைத்தபோது அவளுக்கு இறுதிப் பரீட்சை வந்து படிப்பு விடுமுறை விட்டு விட்டார்கள். நல்லது என்று மகளை கண்காணிப்பதை விட்டு விட்டார். அதே நேரத்தில் மணிமொழியை தவிர மீதி இருந்த மற்றவர்கள் இன்னும் மகளைப் பின் தொடர்கிறார்களா என்று தெரிந்த கன்ஸ்டபிள் மூலம் வேவு பார்த்தார். அப்படியில்லை என்று சொன்னார் அவர். அதுவும் சந்தோஷம்தான் என்று நினைத்து அந்த கவலையை அப்படியே விட்டு விட்டார்.

இப்போது மணிமொழி பிரச்சனை மட்டும் நின்றது. அதை எப்படி சரி செய்வது? பேசாமல் மகளுக்கு ஒரு திருமணத்தை நடத்தி விடலாம் என்று பார்த்தார். அவளோ தொழில் அதிபர் ஆகிறேன் என்று சொல்லிவிட்டாள். என்ன தொழிலை வைக்கலாம் என்று யோசித்தார். பாத்திர கடை வைக்கலாம் என்று மகன் வந்து சொன்னான். சரியாக இருந்தால் வைத்துப் பார்ப்போம் என்று அந்த கடையை மகளுக்கு வைத்துக் கொடுத்து விட்டார்.

அந்தக் கடையில் பெரிதாக பிரச்சனைகள் ஒன்றும் இல்லை. வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருந்தது. இது போதுமே? வதனிக்கு திருமண சமயதத்தில் இந்த கடையை மாப்பிள்ளைக்கு எழுதிக் கொடுத்து விடலாம். எழுதிக் கொடுப்பது என்ன? கடை வாடகைக்கு தான் எடுத்து இருக்கிறார். அதை வருகிற மாப்பிள்ளையும் எடுத்து நடத்தினால் நல்லது. இல்லை என்றாலும் பரவாயில்லை. வீட்டில் சும்மா இருந்து அவர் மனைவியை வேலை வாங்காமல் சொந்தக்காலில் மகள் நிற்பது அவருக்கு சந்தோஷம்தான்.

அப்படி இவர் மனதை தேற்றிக் கொண்டு இருக்கும் போது தான் இவர்களுக்கு பாத்திரங்களை மொத்தமாக சப்ளை செய்யும் நிறுவனத்தில் அந்த மணிமொழியும் ஒரு பங்குதாரர் என்பது தற்செயலாக தெரிய வந்தது.

அதற்கும் இதற்கும் ஒன்றும் இல்லை என்று தன்னை தானே தேற்றிக் கொண்டார் தமிழ். இப்படி எந்த பிரச்சனைக்கும் போகாமல் அவர் அமைதியாகத்தான் இருந்தார். அப்படி இருந்தும் தமிழ் அவரிடம் நேரடியாக ‘உங்கள் பெண்ணை எனக்குப் பிடித்திருக்கிறது. திருமணம் செய்து கொள்ளலாம் என்று இருக்கிறேன்’ என நேரடியாகவே சொல்லி இருந்தான்.

இப்போது மறுபடியும் அதற்கும் இதற்கும் முடிச்சு போட்ட போது மகள் தூக்கத்தில் சொன்ன மணி அவன்தான் என்று தெரிந்தது. இதை இப்படியே நீடிக்க விடக்கூடாது என்று முடிவு செய்தார். அவன் வேண்டாம் என்று நினைக்க சிறுவயதில் அவனது இல்ல வாழ்க்கையே போதுமானதாக இருந்தது.அத்தனை சிறுமைப்பட்ட இழிவான வாழ்க்கை அவரை பொருத்தவரை அது.

அந்த வாழ்க்கையை வாழ்ந்தவன் அவரது மகளுக்கு எப்படி மணமகனாக இருக்க முடியும்? ஒரு பெரிய குடும்பத்தில் கௌரவமாக பிறந்து வளர்ந்தவனை தன் மகளுக்கு மணவாளன் ஆக்கி பெருமையாக பிறரிடம் சொல்லுவதையே அவர் வாழ்நாள் குறிக்கோளாக இருந்தது.

அதற்கு வேட்டு வைக்கும் மணிமொழியின் ஆசை எரிச்சலோடு கோபத்தையும் தந்திருந்தது. முடியாது என்று அவனிடம் எப்போதோ சொல்லிவிட்டார். ஆனால் அவன் விடவில்லை. அடுத்து ஜார்ஜ் வில்லியம்ஸ் மூலம் பேச்சு வார்த்தையை அவன் ஆரம்பித்திருந்தான்.

ஜார்ஜிற்கு இல்லத்துப் பிள்ளைகள் எல்லாம் அவரது பிள்ளைகள் தானே? அந்த மகிழ்ச்சியில் மிகவும் ஆர்வமாக தமிழிடம் பேசி இருந்தார் அவர். இப்படி எந்த பக்கமும் திரும்ப முடியாமல் மொழி தனக்கு முட்டுக்கட்டை போடுவதை தமிழ் வெறுத்தார்.

அதை மீறும் பொருட்டு என்ன செய்யலாம் என்று யோசித்தார். நேரிடையாக ஜார்ஜிடம் முடியாது என்று சொல்ல அவருக்கு தயக்கமாக இருந்தது. அதற்கும் ஒரு காரணம் இருந்தது. அதை அப்புறம் பார்க்கலாம் என்று இருந்தார்.

இப்போது இவனிடம் இருந்து தப்பிக்க என்ன செய்யலாம் என்று தலையைப் பிடித்துக் கொண்டு அவர் யோசித்ததில் எப்படியோ அந்த ஜம்பு பெயர் நினைவுக்கு வந்ததுதான் இப்போதைய நிலைக்கு காரணம்.

ஒரு வழியாக இங்கு ஜம்புவின் வீட்டுக்கு வந்து அவர் இறப்பு சடங்கில் கலந்து கொண்டும் ஆயிற்று. சரி இங்கிருந்து அப்படியே கிளம்பவோம் என்று நினைத்தால், அவர் மகன் வேறு ஏதோ கிளப்புகிறான். சரி அதையும் பார்ப்போம் என்று முடிவுக்கு வந்தார் தமிழ். அதன்படி இப்போது செல்வாவிடம் அடுத்து தான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அவன் சொன்னது அவருக்கு தயக்கத்தை கொண்டு வந்து இருந்தாலும், முன்வைத்த காலை பின்வைக்க அவரால் முடியவில்லை. ஒரு சில நேரங்களில் மனம் மூளை இரண்டுமே வேலை செய்யாமல் இருந்தால் அதன் விளைவை அவரவர்கள் அனுபவிக்கத்தான் வேண்டும்.
 
Last edited by a moderator:

Author: நிதனிபிரபு
Article Title: காதல் ராஜ வீதியில் - 8
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: Magizh kutty

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
379
83
Chennai
முன்னாடி செஞ்சி வெச்சது எல்லாம் போதாதுன்னு இப்ப இப்படி ஒரு முடிவை எடுத்து இருக்கார்...
மகள் மனதில் என்ன இருக்குனு தெரிஞ்சிக்க முயற்சியாவது செஞ்சி இருக்கலாம் இவர்