காதல் ராஜ வீதியில் - 12

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,208
16,465
113
Germany
12

வனிக்கு அவனைப் பார்த்து பாவமாக தான் இருந்தது. ம்! அதற்கு என்ன செய்வது? அவனுக்காக கொஞ்சம் யோசிக்கலாம் என்று பார்த்தால் அவன் சேர்க்கை சரி இல்லையே? அந்த கயல் அவனுடன் தானே இன்னும் வேலை செய்கிறாள்? அவளை பிடிக்கவில்லை என்று ஏற்கனவே அத்தனை சொல்லி இருந்த பிறகும் இன்னும் அவளை வைத்து சீராட்டிக் கொண்டு இருந்தால் இவன் சொல்வதை பற்றி எப்படி யோசிக்க முடியும்?

இருந்தாலும் அவன் மீது கொஞ்சம் இரக்கம் இருப்பதால், அவனுக்கும் ஒரு அவகாசம் கொடுக்க நினைத்து, “சரி. வாங்க. நிலா பார்க் போவோம். உங்ககிட்ட கொஞ்சம் பேச வேண்டியது இருக்கு. பேச்சு வார்த்தை சமரசமா போனா நீங்க கேட்டதை யோசிக்கலாம்” என்றாள்.

“இதுல பேச என்ன இருக்கு? நீ என்ன கேட்டாலும் சரி. என்ன சொன்னாலும் சரி. என்னை கட்டிக்கிட்டா மட்டும் சரி”

அவன் அவள் பேச்சை கவனித்ததாகவே தெரியவில்லை. அவன் முகம் பரிதவித்துக் கொண்டு இருந்தது.

அவள் எதற்கு யோசிக்கிறாள் என்ற எண்ணமே அவனுக்கு வரவில்லை. அவள் யோசிக்கிறாள் என்ற எண்ணம் கூட வரவில்லை. தான் நேசிப்பதை மறுக்கிறாள் என்ற எண்ணம் மட்டுமே அவனைப் போட்டு பந்தாடிக் கொண்டே இருந்தது.

இதோ இருவரும் அந்தப் பார்க்கிற்கு மீண்டும் சேர்ந்து வந்து சேர்ந்து இருந்தனர். இப்போது சூழ்நிலை கருதி அவன் அடக்க ஒடுக்கமாகவே அவளுடன் வண்டியில் வந்து இருந்தான். மீண்டும் அவளுடன் பயணிக்க முடிந்ததே அவனுக்கு கிடைத்த வெற்றி தான்.

இதை விட மாட்டான். எப்படியாவது அவளிடம் சம்மதம் பெற்றே தீருவான். அவனுக்கு அவனே வெற்றி பெற வாழ்த்துகள் கூறி கை குலுக்கிக் கொண்டான்.

பார்க்கில் இருந்த உணவகத்தில் ஒரு தனியான மேஜையில் சென்று அமர்ந்தனர். மொழி மிகவும் பரபரப்பாக காணப்பட்டான். அவனுக்கு இந்த சுற்றுப்புறமே அந்நியமாக இருந்தது. அவளிடம் இருந்து அவனை தள்ளி நிறுத்தி இருக்கும் அந்த சூழ்நிலை மாறும் கணத்திற்காக காத்திருந்தான்.

ஆளுக்கு ஒரு நாற்காலியில் அமர்ந்த பின்பு அவள் அவன் முகத்தை பார்க்க, அவளையே பார்த்துக் கொண்டு இருந்ததால் அவனும் அவள் முகத்தை ஆவலோடு பார்த்தான்.

வனி கொஞ்சம் மூச்சை இழுத்துவிட்டு தன்னை சமாதானப்படுத்திக் கொண்டாள். அவனிடம் அவள் கேட்க வேண்டியது கொஞ்சம் இருக்கிறது. அதற்கு எல்லாம் சரியாக பதில் சொல்லி விட்டால் அப்புறம் யோசிக்கலாம்.

முதலில் கருவாட்டை பூனை பார்ப்பது போல் பார்க்கும் இவனை திசை திருப்ப வேண்டும். கொஞ்சம் பேச ஆரம்பித்தால் சாதாரணமாக இருப்பான் போல் இருக்கிறது. இத்தனை நாள் ஜென்டில்மேனாக இருந்தான். இவனை நம்பி வண்டியில் கூட்டிக் கொண்டு வந்தது பெரிய தவறாகி போனது. அது அவளுடைய தப்புதான். ஆனால் அதுவும் சொல்ல மாட்டாள்.

அவன் பின்னால் உட்கார்ந்து போனால்தான் அவளுக்கு பிரச்சனை ஆகும் என்று அவள் பின்னால் அவனை உட்கார வைத்திருந்தாள். அது அவனுக்கு தொக்காகிவிட்டது.

கொஞ்சம் கொஞ்சமாக அவள் தன் சிந்தனையை மாற்றிக் கொண்டே இருக்கும்போது இது என்ன சோதனை? அதுவும் அவள் எதுவும் வேண்டாம் என்று முடிவெடுத்து இருந்தாளே?

இப்போது இப்படி வந்து நின்றால் அவளும்தான் என்ன செய்வாள்? அவள் கேட்டது, சொன்னது எல்லாம் சரிதானா? இவனிடம் கேட்டால் எதுவும் தெரியுமா? இவன் சரியாக சொல்லுவானா? எப்போது அவனை அவளுக்கு மீண்டும் நெருக்கமாக பேச ஆரம்பித்தாள் என்று அவளுக்கு புரியவில்லை.

ஒருவழியாக பேச முடிவெடுத்து பேச ஆரம்பித்தாள் வனி.

“நீங்க அப்ப என்கிட்ட ஏதோ சொன்னீங்க. என்னவோ நான் தான் உங்களைப் பார்த்தேன் அப்படின்னு. என்ன தைரியத்துல நீங்க என்கிட்ட அப்டிலாம் பேசறீங்க. தெரிஞ்சவரா இருந்ததால ஏதோ பார்த்து இருப்பேன். அது என்னவோ நான் உங்களை தப்பா பார்த்த மாதிரி நடு ரோட்டில் வைத்து என்னை கேவலப்படுத்துறீங்க. இதுலையே தெரியுது உங்க லட்சணம்”

சாதாரணமாக பேசத்தான் ஆரம்பித்தாள் வனி. பேச பேச அவன் அவளை குறை சொன்னது அவளுக்கு ஒவ்வொன்றாக நினைவு வந்தது. அவள்தான் அவனைப் பார்த்து சிரித்தாளாமா? இவன் புல் புடுங்கிக் கொண்டு இருந்தானாமா? பதிலுக்கு பல்லையும் கண்ணையும் காட்டவில்லை? வந்த கோபத்தில் விளாசிவிட்டாள். அவன் பதறி விட்டான்.

“என்ன சொல்ற வனிமா? ‘கேவலப்படுத்தறேன்’ அது இதுன்னு என்ன பெரிய வார்த்தை எல்லாம் பேசுற? நான் அப்படி பண்ணுவேனாடா? ஒரு ஆதங்கத்துல பேசினேன். அப்பவும் நம்மை சுற்றி யாரும் இல்லைனு நல்லா தெரிஞ்சுகிட்டு தானே பேசினேன். அங்கே நம்மளைத் தவிர யாரும் இல்லடா. நம்புடா.

நான் அப்பா அம்மா பெயர் தெரியாதவன் வனிமா. நான் அந்த நடு ரோட்டில் இருந்து தான் வந்தவன். இதெல்லாம் நான் சம்பாதித்தாலும் அதுக்கு ஆதாரம் நீ தான். வேற யாராகவும் இருந்து உன்கிட்ட சம்மதம் கேக்குறதை விட, எதுவும் இல்லாத நிலைமைல உன்கிட்ட கேட்டேன். உனக்கு புரியுதா? அந்த இடத்துல உன்னை தவிர எனக்கு யாரும் ஆதரவு இல்லை. நீ அப்படியே விட்டுட்டு போயிருந்தா நான் நடுத்தெருல தான் நிக்கணும். அப்படி நீ விடல. இது உனக்கு சொல்லலையா உன் மனசை உனக்கு?”

தவித்துப் போய் கேட்டான் மொழி. அவனிடம் அக்கறை கொண்டவள் அவள் அல்லவா? அந்த நம்பிக்கையில் தானே அவன் உயிர் என்னும் அவனிடம் உறைந்து கொண்டு இருக்கிறது? அவனுக்கான அவன் ஜீவன் அவனிடம் சண்டை இட்டுக் கொண்டு இருப்பது, அதுவும் அவனிடம் இருந்து மாறுபட்டு சண்டை இடுவது நெஞ்சை பிசைந்தது அவனுக்கு.

ஆனால் அவள் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஏனோ அவனிடமிருந்து அவள் விலகியே இருக்கிறாள். அது ஏன் என்று தான் தெரியவில்லை. அதைச் சொல்லிவிடுவாள் என்று தான் காத்திருக்கிறான்.

அவள் அவன் எந்த தவிப்புக்கும் அசரவில்லை.

“சும்மா ரீலு விடாதீங்க. கைல இருக்குது செல்போனு. கால் டாக்ஸி புக் பண்ணி எங்க போகணுமோ சொல்லி போய்க்கலாம். அப்படியே வீட்டுக்கும் போய் சேர்ந்துவிடலாம். இதுல என்னமோ நான் வந்து உங்களை காப்பாத்துன மாதிரி எதுக்கு இந்த பில்டப்? இன்னும் நான் அந்த காலேஜ் படிச்சுக்கிட்டு இருந்த வனிக்குட்டின்னு நெனச்சிடீங்களா?”

அவள் பேச பேச அவன் முகம் மலர்ந்து போனது. வனிக்குட்டி என்பது அவன் சிறு வயதில் அவளை அழைப்பது. அது இன்னுமா நினைவு இருக்கிறது?

அப்படி என்றால் அவளுக்கும் அவன் மீதான நேசம் முன்பே உண்டு என்பது உறுதியாகிறது அல்லவா? இல்லாமலும் இருக்கலாம் இது ஒன்றே அன்பின் ஆதாரமாக இருக்க முடியாது தான். ஒருவேளை அன்பாக இருந்து விட்டால்?

அது எப்போது இருந்து? அதை அறிய வேண்டுமே? அவன் நெஞ்சம் படபடவென துடித்தது.

இதோ இப்போது அவன் வாழ்வில் வெள்ளி முளைத்து விடும். இன்னும் ஒரு சில நிமிடங்களில்…

அவன், அவள் எண்ணங்கள் தவிர எப்போதும் கற்பனையில் வாழ்பவன் அல்லன். அவனைப் போட்டு பந்தாடிக் கொண்டு இருப்பவள் அவள் மட்டும் தான்.

அவன் அவசர அவசரமாகவும் ஆசையாகவும் அவளைப் பார்த்துக் கேட்டான்.

“உனக்கு அது நியாபகம் இருக்குதா வனிமா?”

“எது?”

“வனிக்குட்டி?”

“எல்லாம் நினைவு இருக்கு. நீங்க அப்படி கூப்பிடறது எனக்குப் பிடிக்காது. ஏன்னா நான் பிக் கெர்ள்” என்று தலையைச் சிலுப்பினாள் அந்தக் குட்டி.

அவன் புன்னகைத்தான். இன்னும் அவள் அப்படியே இருக்கிறாள் என்பதில் மகிழ்ச்சிதான். ஆனால் அப்படியே விடவும் முடியாது. இவளிடம் பேசிக் கொண்டிருந்தால் இன்றைக்கு பொழுது இப்படியே போய் விடும். அப்புறம் அடுத்த ஆறு நாட்கள் தான் இருக்கும். இது வேலைக்கு ஆகாது.

உடைத்துப் பேசி விட வேண்டியது தான். என்னத்தை உடைப்பது? ஏற்கனவே சொல்லியாகி விட்டது. இங்கே கூட்டிக் கொண்டு வந்து என்ன பேச போகிறாள்? என்பதை அவள்தான் சொல்ல வேண்டும். சரி கேட்போம். சொன்ன பிறகு வழிக்கு வருகிறாளா பார்ப்போம்.

“சரி அதை விடு. ஏதோ பேசணும்னு கூட்டிட்டு வந்தியே? என்ன அது?” என்றான் அதே புன்னகையுடன்.

அவள் அந்தப் புன்னகையை அதிர்ச்சியுடன் நோக்கினாள்.

அடப்பாவி! இதற்கு முன்னேயும் இவன் இப்படித்தானே இவளை பார்த்து சிரிப்பான்? அப்பாவியாக அவனை நல்லவன் என்று நம்பி விட்டாளே?

அது அப்படி இல்லை.

அவன் மீது அவள் நம்பிக்கை கொண்டது அவள் விருப்பம். ஒரே ஒரு குழப்பம் மட்டும் தான். அது தெரிந்து விட்டால், தெளிந்து விட்டால் அப்புறம் இவனைப் பார்த்துக் கொள்ளலாம்.

“என்னது? நான் உங்களை கூட்டிட்டு வந்தேனா? நீங்கதான் டீ குடிக்கணும்னு சொல்லி என்னை கூட்டிட்டு வந்தீங்க. இப்போ மாத்தி பேசுறீங்க? உங்களை நம்பவே முடியாது”என்று சொல்லிக் கொண்டே வந்தவள் கோபத்தில் ‘மூசு மூசு’ என்று மூச்சு வாங்கினாள்.

“என்ன ஆச்சு வனிமா? கோபப்படாதேமா. நான் தான் உன்னை கூட்டிட்டு வந்தேன், ஓகே வா? ஓகே. ஓகே. அதைவிடு. நமக்கு இப்போ முக்கியமா பேச வேண்டியது நிறைய இருக்கு இல்லியா? அதை பேசுவோமா? ஒன்னும் பிரச்சனை இல்லியே?”

அவள் முகத்தை பார்த்துக்கொண்டே மெது மெதுவாக பேசினான். அவளது கோபம் கொஞ்சம் கொஞ்சமாக குறைவதை பார்த்தபின் இவன் சமாதானம் ஆனான்.

“இப்ப ஓகேவா?”

அவன் முகத்தில் கனிவு காதல் ஆசை எல்லாம் கூடாரம் அமைத்துக் கொண்டு ஒன்றை விட்டு மற்றொன்று போவேனா என்று இருந்தன.

“ஓகே. ஓகே” என்று முகத்தை துடைத்துக் கொண்டவள், “நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்றாள்.

“பேசுமா. பேசு. இப்பவாச்சும் பேசு. என்ன கேட்கணுமோ கேளு. எனக்கு தெரிஞ்சதை சொல்றேன்” என்றான் அவன்.

“உங்களுக்கு தெரிஞ்சதை இல்ல, உள்ளதை சொன்னால் போதும்” என்று முறுக்கிக் கொண்டு இரண்டு வருடம் முன்னர் நடந்த அந்த நிகழ்ச்சிக்கு சென்றாள் அவள்.

“ரெண்டு வருஷம் முன்ன காலேஜ் முடிச்சதும் நான் நிலா காலத்துக்கு வந்திருந்தேன். உங்களுக்கு நினைவு இருக்கா” என்று கேட்டாள் அவள்.

அவ்வளவு நேரம் கழித்து இப்போதுதான் ஒரு போர்டர் வந்து, “சார், மேடம் என்ன சாப்பிடறீங்க? உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டு டேபிளில் இருந்த கேட்டலாக் எடுத்து இவர்களின் கைகளில் கொடுத்தார்.

இத்தனை நேரம் வராதவர் இன்னும் கொஞ்ச நேரம் வராமல் இருந்திருக்கலாம் என்று தோன்றியதை அடக்கிக் கொண்டு “வனிமா, உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டான் மொழி.

அவளும் அதைத்தான் நினைத்தாள் போல. “இப்ப ஒன்னும் வேண்டாம். கொஞ்சம் கழிச்சு சொல்றோம்” என்று அவனுக்கும் சேர்த்து சொல்லவும் அவன் முகம் சிரித்தது.
 
Last edited by a moderator:

Author: நிதனிபிரபு
Article Title: காதல் ராஜ வீதியில் - 12
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: Magizh kutty

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
379
83
Chennai
இப்ப கயல் தான் இவ ப்ராப்ளம்மா?????
அச்சோ அவ உன் அண்ணியா வர போறவ டா .....
இவனுக்கு தங்கை முறை தான் வரும்