சின்னா 'தி ரோமியோ' - 8

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 39

Member
Nov 30, 2025
76
59
18
Chennai
சின்னா - 8

“சின்னாவா… அவன் ஊரை விட்டு போய் கண நாளாச்சே”

“அவேங் குடும்பமே சிதைஞ்சி போச்சப்பு.."

“அவனப்பத்தா செத்ததுக்கப்புறம் போனவேன்தான்"

“கோவில் கும்பாபிஷேகத்தன்னக்கி சண்டையப் போட்டு, ஒரு துணியில இந்த ஊர் மண் அள்ளிக் கட்டிக்கிட்டு நாடோடியாட்டம் போய்ட்டான்.

அப்புறம் போட்டிக்கின்னே அவேங் காட்டுல (வயலுக்குள்ள)
தனியா கோவில் கட்டி கும்பாபிஷேகம் பண்ணான். அத்தோட சரி இந்தப் பக்கம் வரதே இல்ல. இராஜாவாட்டம் வாழ்ந்தவன்.”

இப்படிக் கேட்ட இடத்தில் எல்லாம் சின்னாவைப் பற்றி ஆளுக்கொன்று பேசினார்கள்.

அவர்கள் பதில் சொன்னதைவிட, நீங்க யாரு? எங்கேர்ந்து வாறீக? எங்க சின்னா சுகமா இருக்கா? அச்சச்சோ எதுவுமாகிட்டா?

இப்படிப்பட்ட பதில் கேள்விகளே அதிகம். ஒவ்வொருவருக்கும் பதில் பதில் சொல்லி சொல்லியே ஓய்ந்து போனது அந்தக் கூட்டம்.

“சார், இந்தக் கேஸ எடுத்ததுலர்ந்தே எல்லாம் தலை கீழ நடக்குது.
நம்மள எல்லாம் விசாரிச்சிக்கிட்டு திரியுதுங்க. கண்ணக் கட்டுது சார்" என்றான் மணிகண்டன்.

“ஊர்னா அப்படித்தான்! நீ படிச்சி வளர்ந்த ஊர் மாதிரியா செத்தாலும் என்னான்னு கடந்து போக" என்றார் பெரியாத்தா.

"ரவுடி பேபி அவங்கள கூட நான் சமாளிச்சிடுவேன். உன்னையத்தான் சமாளிக்க முடியல. அவ்ளோ சொல்லி சொல்லி கூட்டி வந்தா நிமிஷத்துல போலீஸூன்னு உளற பார்த்தீல்ல நீயி…
இந்தம்மா அப்படியே சிபி சிஐடி” என்றான் கடுப்பாக.

பின்னர், அரவிந்தனின் குளிர் கண்ணாடியை வாங்கிப் போட்டுக்கொண்டு, பின்னால் கையைக் கட்டியபடி, “நாங்க போலீஸூ" என்று தோரணையாக சொல்லப் போனவரை கிட்டத் தட்ட வாயைப் பொத்தி இவன் தள்ளிக்கொண்டு வர,

“நகை.. நகை பாலீசு போட சின்னாக்கிட்ட குடுத்திருந்தோம்” என்று சமயோசிதமாக மாற்றியவர் சரஸ்வதி பாட்டிதான். கும்பிடுபோட்டான் மணிகண்டன்.

“அப்படியா. கவலைப்படாம போங்க. எத்தனை நாளானாலும் உங்க நகைய பத்திரமாதான் வச்சிருக்கும் சின்னா” என்றார் எதிரிலிருந்த வயதான பெரியவர்.

யாரைக் கேட்டால் சின்னாவை பற்றிய முழுத் தகவலும் கிடைக்கும்? ஊருக்குள் சந்து எது பொந்து எது என்று தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்த வேளையில்,

“எங்க சின்னா நல்லாருக்குதா தம்பி" என்றார் ஒரு மூதாட்டி கண்களில் நிறைந்துவிட்ட கனிவுடன்‌.

“நீங்க எங்க சிவநேசன தேடி வந்துருக்கீங்கன்னு ஊருக்குள்ள பேசிக்கிட்டாகப்பு. அதான் போட்டது போட்டபடி ஓடியாந்தேன்.

அவர் கேட்டதும்தான் சின்னாவின் முழுப்பெயர் சிவநேசன் என்பதையே அறிந்துகொண்டனர்.

“எங்க தங்கம் நல்லாருக்குதா?" கடைசி வார்த்தையை சொல்லும்முன் அவர் குரல் உடைந்திருக்க, அந்தத் தள்ளாத வயதிலும் ஓட்டமும் நடையுமாய் வந்திருப்பார் போலும் இலேசாக மூச்சு வாங்கியது.

“சின்னாக்கு ஒன்னுமில்ல பாட்டி. இந்தத் தண்ணியக் குடிங்க" அரவிந்தன் கொண்டு வந்திருந்த தண்ணீரைக் கொடுக்க,

ஒரே மூச்சில் குடித்துவிட்டு காலி பாட்டிலைத் தூக்கி எறிந்தார் அந்த மூதாட்டி.

"கிழவிக்கு கொழுப்பப் பார்த்தியா” மணிகண்டன் பெரியாத்தாவின் காதில் புலம்ப, “ஏழேய்! என்னையும் பின்னாடிப்பக்கம் போய் கிழவின்னுதான் கூப்பிடுவியோ" என்றார் அவர்.

“சரி, இனி அறுபதிளங்குமரின்னு கூப்பிடுறேன். போதுமா!” என்றவன் சொன்னதும், "உனக்கு இருக்குடே”என்றார் முறைத்து.

பாட்டி பேசிக்கொண்டே அருகிலிருந்த சிறு குடிசையின் பக்கம் கூட்டி வந்திருக்க, அதற்குள் இலேசு பாசாக அவர்கள் வந்த விசையத்தைப் பற்றி தெரிவித்திருந்தான் அரவிந்தன்.

அரவிதனின் கடைசி வார்த்தையைக் கேட்டுவிட்டு, எக்காளமிட்டுச் சிரித்தது அந்தக் குடிசையின் திண்ணையில் படுத்திருந்த அந்த உருவம்.

“அவன காணோமா… என் பொண்டாட்டிய இழுத்துட்டு ஓடியிருப்பான்.

மூணு பொண்ணு வாழ்க்கைய சீரழிச்சவன் நல்லாருப்பானா…

செத்துருப்பான்… எனக்கு முன்னாடி அவன் செத்துட்டானா” கைக்கொட்டிச் சிரித்தான் அவன். அவனின் கால்கள் அங்கிருந்த சங்கிலியால் பிணைக்கப்பட்டு கட்டிலின் காலில் கட்டப்பட்டிருக்க, எலும்பும் தோலுமாய், உடம்பில் அங்கங்கு புண் என்று பார்க்கவே படு மோசமாய் இருந்தான் அவன்.

“குடிக்கிறது அவன் போட்ட கஞ்சி! இதுல உனக்கு எகத்தாளம் வேறயா” அந்த உருவத்தைத் திட்டிய மூதாட்டி குடிசைக்குள்ளிருந்து கஞ்சிக் கரைத்து அவன் முன் வைத்தார்.

தொடர்ந்து சத்தமாய் அவன் சின்னாவைத் திட்டி ஏதேதோ கத்திக் கொண்டேயிருக்க, அவன் பேசவிடமாட்டான் என்பது தெரிந்தது போலும்,

"தம்பி, நீங்க யாரோ எவரோ! இந்த ஊர்லயே பெரிய தலைக்கட்டு மூணு குடும்பம்தான்.

மூணும் சிவநேசன் குடும்பம் தான். அந்தா தெரியுதுல்ல ஒரு பெரிய மச்சி வீடு. அதுதான் சின்னாவோட தாய்மாமன் வீடு.

அங்க போய் கேளுங்க. அவன் அத்தைக்காரி காண விடமாட்டா. வயிரெறிவா” என்றார் நம்பிக்கை இல்லாமல்.

“ஏ கிழவி அது என் வீடுறி" என்றவன் கஞ்சி பாத்திரத்தை எட்டி உதைக்க,

“பேசாம இருக்கல. பெத்த பாவத்துக்கு அரளி விதையை அரைச்சி வாய்ல ஊத்திருவேன்" என்றார் அந்த மூதாட்டி.

"முதல்ல அதைச் செய்” என்ற பெரியாத்தா அரவிந்தனை இழுத்துக்கொண்டு அவர் சுட்டிக் காட்டிய வீட்டை நோக்கி நடையைப் போட்டார்.

சின்னாவை திட்ட அவன் பயன்படுத்திய வார்த்தைகள் அவரை ஏகத்துக்கும் கடுப்பேற்றியிருந்தது.

“யாரைத் தேடி எங்க வந்து கேக்கீங்க? என் பொண்ணு வாழ்க்கைய நாசம் பண்ணவன் நல்லாருப்பானா அவன். எங்குடும்பத்தயே கருவறுத்தவன் எக்கேடு கெட்டா எங்களுக்கென்ன? பாவி மக அவனைப் போய் நம்புனாளே?”

அந்த மூதாட்டி சொல்லி அந்த வீட்டுமுன் நின்றிருந்தவர்களுக்கு திக்கென்றிருந்தது.

அந்தப் பெண்மணி மண்ணை வாரி இறைக்காதது மட்டுமே குறை. அத்தனை வசவு விழுந்தது சின்னாவுக்கு.

இதை எல்லாம் கேட்டபடி திண்ணையில் அமர்ந்திருந்த பெரிய மனுஷன் துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு அமைதியாக நடையைக் கட்ட,

“ம்க்கூம்” என்று தோளில் இடித்தார் அந்தம்மணி.

அவர் கருணாகரன். சின்னாவின் தாய் மாமா‌. தூற்றி வாரிய பெண்மணி மரகதம். சின்னாவின் அத்தை.

“ஏய் மரகதம், கேட்டா தெரிஞ்சத சொல்லு. முடிஞ்சு போன கதைக்கு மொளம் தட்டிட்டு இருக்கவ" என்று தெருவில் போனவர் ஒருவர் அந்தப் பெண்மணியைத் திட்ட மூஞ்சில் அடித்ததுபோல் கதவை அடைத்துக் கொண்டார் அவர்.

“ஏம்பா, நீங்க எந்த ஊரு?" என்று கேள்வியை ஆரம்பித்து பதிலைப் பெற்ற பிறகே,

“சிவநேசன் இப்போ எங்க இருக்கான் என்னங்கிற விவரமெல்லாம் இந்த ஊர் மணியக் காரர் ஒருத்தருக்குத்தான் தெரியும் தம்பி. சின்னா நிலத்தை எல்லாம் குத்தகைக்கு எடுத்து பார்த்துக்கிறது அவர்தான்.

அவன் எப்படி இராசாவாட்டம் வாழ்ந்தான்னு கேட்டீன்னா இந்த ஊரோட தூண் துரும்பும் கூட சொல்லும்" என்றவர் மணியக்காரரின் வீட்டைக் காட்டிவிட்டு தன் ஆடுகளை ஓட்டிக்கொண்டு போனார்.

“தூண் துரும்புகூட சொல்லும்னுட்டு சொல்லாமலே போறாரே!

வாங்க சார் அடுத்த வீட்ட பார்ப்போம்” என்றான் மனிகண்டன் முன்னால் நடந்தபடி.

"கும்பல் கும்பலா போய் ஒரோரு வீட்டு முன்னாடியும் நிக்கறது வீடு வீடா போய் பிச்சை கேட்கிற ஃபீலீங்காவே இருக்கு. உனக்கு என்ன தோணுது விசித்திரக் குழவி? என்றான் மணிகண்டன், இரகசியமாய் பெரியாத்தாவிடம்.

“அதென்னடா விசித்திரக் குழவி? கேள்வி பின்னால் அரவிந்தனிடமிருந்து வரவும், அரண்டு முழித்தான்.

“நல்லா கேளு தம்பி! வேளைக்கு ஒரு பேரு வைக்கான்” என்று வாயைத் திறந்த பெரியாத்தாவில் அரவிந்தனின் உதட்டில் மென்னகை.

சின்னாவின் அத்தை தூற்றி வாரியதில் பெரியாத்தாவின் கண்கள் கலங்கியிருக்க, தேற்றும் வழிதெரியாமல் அரவிந்தன் தவித்த போதுதான் ஆபத்பாந்தவனாய் மணிகண்டன் வழக்கம்போல் கலகலத்திருக்க,அதையே பற்றிக்கொண்டான் அரவிந்தன்.

ஒன்றும் நடவாததுபோல் மணிகண்டனை ஊக்க,

“சித்திரக் குப்தன் கணக்கிலிருந்து மிஸ் ஆன விசித்திர கிழவிகள் சார் இவங்கெல்லாம். கிழவின்னு சொன்னா நீங்க முறைப்பீங்க இந்தா இது கடிக்கும்" என்றான் அவன்.

பெரியாத்தா அரவிந்தன் நினைத்ததுபோலவே கலகலப்பாகி, மணிகன்டனை துரத்த அவர் கைகளுக்கு சிக்காமல் ஓடினான் அவன். அப்போதும் சிறு கல்லெடுத்து அவன் மீதெறிந்தார்.

மீண்டும், “என்னா பேச்சு பேசுறா. நம்ம ஊரா இருந்தா நாக்க இழுத்து வச்சி அறுத்துருப்பேன்" என்றவர் கோபப் பட,

"விடுங்க பாட்டி” என்ற அரவிந்தன் தன் இடப்பக்கமாய் நடந்து வந்த பெரியாத்தாவை ஒருமுறை தோளோடு அணைத்து விடுவித்தான்.

“நீ அப்படியே எங்க சின்னா மாதிரிய்யா" என்றார் அவர் நெகிழ்ந்து.

“அதுவும் இப்படித்தான் எங்க கண்ணுல தண்ணீய பார்த்தா பொறுக்காது” என்றவர் விழிளில் மேலும் ஒரு துளி நீர்.

அரவிந்தனின் செல்ல முறைப்பில் கண்ணைச் சிமிட்டி உள்ளிழுத்துக் கொண்டவர் மெல்லச் சிரித்தார்.

“பொண்ணு பார்த்து வைக்கிறேன்னதும் கரிசனமெல்லாம் பலமா இருக்கே" என்ற மணிகண்டன், “ம் ம்க்கூம்" என்று வேண்டுமென்றே அரவிந்தன் அருகில் வந்து தொண்டனையைக் கணைத்தான்.

பெரியாத்தாவுக்கு தப்பியக் குறி அரவிந்தனுக்கு தப்பவில்லை. சிறிய கல் மணிகண்டனின் பின்மண்டைய பதம் பார்க்க,

“எல்லாம் குடும்பமா சேர்ந்துட்டீங்கல்ல. இருங்க இந்த ஊர்லயே ஒரு பொண்ணத் தூக்கிட்டு போய்.. சம்போ ஹரே சம்போ ஹரஹர சம்போன்னு நாடோடிகள் ட்யூன்ல உங்க எல்லாரையும் ஓட விடல என் பெயர் மணிகண்டன் இல்ல" என்றவனை பெரியக்கல் எதும் கிடைக்காதா என்று தேடினான் அரவிந்தன். அதற்குள் மணியக்காரர் வீடும் வந்திருந்தது.

நரைத்த தலைக்கும் இறுகிய உடல் வலிமைக்கும் சற்றும் சம்மந்தமில்லாத தோற்றத்தில் அமர்ந்திருந்தார் சண்முகவேல் பாண்டி. அவர் அமர்ந்திருந்த (ஈஸி) மடக்கு நாற்காலியே அவருக்கு தனி கம்பீரத்தைத் தந்தது.

“ரஞ்சிதம்…”

கூப்பிட்ட குரலுக்கு உள்ளிருந்து கையில் காப்பி, பலகாரங்களுடன் வந்தார் அவர் மனைவி மனோரஞ்சிதம்.

சண்முகவேலின் பார்வையே எவருக்கும் மறுக்கத் தோன்றவில்லை. ஆளுக்கொன்றாய் எடுத்துக்கொள்ள,

“நீயும் சின்னாவ தேடித்தான் வந்தியா" என்றவர் அகரனை வாஞ்சையாய் முதுகில் தட்டிக் கொடுத்தார்.

‘அப்பா மென் சிரிப்பில்கூட என்ன கம்பீரம்’ வியந்தான் மணிகண்டன்.

“நீங்க போலீஸ்தான தம்பி!”
அவரின் அடுத்த கேள்வியில் அவன் குடித்த காப்பி புரைக்கேறியது.

சின்னா வருவான்...
 

Author: STN - 39
Article Title: சின்னா 'தி ரோமியோ' - 8
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

suji

Member
Aug 29, 2021
30
25
18
germany
பாட்டிகள் ஒரு பக்கம் அலப்றைனா ,மணிகண்டன் is equal wavelength to rowdy babies
 
  • Love
Reactions: STN - 39

STN - 39

Member
Nov 30, 2025
76
59
18
Chennai
பாட்டிகள் ஒரு பக்கம் அலப்றைனா ,மணிகண்டன் is equal wavelength to rowdy babies
அவன்தான் பாட்டீஸோட க்ரைம் பார்ட்னர்😂
நன்றிகள்...