உன்னிடத்தில் மனம் மயங்குதே அத்தியாயம் -12
சாரல் நடந்த விஷயத்தைப் பற்றி அவளும் நினைத்துக் கொண்டாள்.பப்பு தாத்தா வாங்கி கொடுத்த எல்லா உடையையும் போட்டு விட்டான்.ஆனால் அவனுக்கு அந்த உடையை சரியாக துவைத்து போட தெரியவில்லை.
அவனுக்கு தெரியாத விஷயங்களை பப்பு வந்து நேராக கேட்கும் ஒரே நபர் சாரல் தான்.
அப்படி அவன் சாரலிடம் சென்று தயக்கமாக “சாரல் எனக்கு ஒரு விஷயம் சொல்லித் தருவியா?”
அவளோ கையில் ஏதோ ஒன்றை வைத்து கொறித்துக் கொண்டிருந்தாள்.”ம்ம்… சொல்லு என்ன சொல்லித் தரணும்?” என்று கேட்டாள்.
“எனக்கு என் துணியை துவைக்கனும்”
“சரி துவைச்சுக்கோ”
“எனக்கு எப்படி துவைக்கனும் தெரியாது”
அவனது பதிலைக் கேட்டு மேலும் கீழுமாக பார்த்தவள் மெதுவாக எழுந்து அவனிடம் வந்து “உன்னைப் பத்தி தான் மறந்துட்டேன்னு சொன்னே ஓகேன்னு ஒத்துக்கலாம்,
ஆனால் அழுக்குத் துணியை துவைக்கத் தெரியாதுன்னு சொல்றது எல்லாம் ரொம்ப ஓவர்” என்று அவனிடம் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தாள்.
பப்புவோ முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு “எனக்கு நிஜமா துணி துவைக்கத் தெரியாது சாரல் ப்ளீஸ் சொல்லிக் கொடு” என்று கெஞ்சினான்.
அவளும் வேறு வழியில்லாமல் வீட்டின் பின்புறம் சின்னதாக கல்மேடைக்கு அழைத்துச் சென்று அவனது உடைகளை எடுத்து தண்ணீரில் ஊறவைத்தாள்.
பின்னர் ஒவ்வொரு முறையாக சொல்லிக் கொடுக்க அவனும் அதே போல் செய்தாள்.கடைசியில் துணியை உதறி துணிகளை காயப்போடும் கயிற்றில் போட்டுக் காட்டினாள்.
அவள் செய்வதை எல்லாம் அச்சு பிசகாமல் அப்படியே செய்தவன் கடைசியில் அவனது துணியை துவைத்து முடிக்கவும் ஏதோ பெரிய சாதனை செய்த வெற்றியோடு “சாரல் இனி நீ துணி துவைக்கும் போது என்னையும் சேர்த்து கூப்பிடு” என்றான்.
அதனால் சாரல் தனது துணியையும் துவைத்து விட்டு தாத்தாவின் உடைகளை அலசும் போது பப்புவையும் உடன் சேர்த்துக் கொள்வாள்.
அப்படி துவைக்கும் போது பப்புவும் சாரலுக்கு உதவுவான்.பப்பு தனது துணியை துவைத்துக் கொண்டிருந்தான்.
சாரல் பப்புவிடம் “நல்லா அழுத்தி தேய் அப்போத்தான் நல்ல நுரை வரும்” என்றாள்.
உடனே பப்பு “இதோ இப்படியா? என்று அவன் துணியிலிருந்து வந்த அழுக்கு நுரையை எடுத்து அவள் மீது வீசினான்.இதை சற்றும் எதிர்பார்க்காத சாரல் “எவ்வளவு தைரியம் இருந்தால் என் மேல உன் அழுக்கு நுரைய போடுவே” என்று ஓரமாக இருந்த பாத்திரத்தில் இருந்த தண்ணீரை அவன் மீது அடித்தாள்.
உடனே பப்பு திரும்ப அடிக்க ஆரம்பிக்கவும் இருவரும் மாறி மாறி விளையாட்டாக தண்ணீரை மேலே சிந்தி விளையாடினார்கள்.
அப்பொழுது சாரல் கொஞ்சம் தண்ணீரை அவன் மீது அடிக்கும் நேரம் கீழே விழுந்திருந்த சோப்பின் மேல் காலை வைக்கவும் அது அவளை வழுக்கி கீழே தள்ளவும் இதைப் பார்த்த பப்பு அவளை லாவகமாக தன் கரங்களை சாரலின் இடுப்புப் பக்கம் பிடித்து தன் நெஞ்சோரமாய் சாய்த்து பிடித்துக் கொண்டான்.
பப்புவின் படப்படப்பான இதயத்தின் ஓசையை சாரல் ரொம்ப நெருக்கமாகவும் அவனுடைய மூச்சுக்காற்று இவளின் காதோரமாய் உரசிச் சென்றது.
அப்போது ஏதேச்யாக வீட்டிற்கு வந்த ரேவதி வீட்டினுள் யாரும் இல்லாததால் பின்பக்கம் வந்து எட்டிப் பார்த்தாள்.அங்கே பப்புவும் சாரலும் நின்ற நிலைமையை தன் கண்களாலேயே நேராக பார்த்தவள் அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்த பாவையில் அவர்களது விருப்பத்தை இவளும் கண்டுக் கொண்டவள் எதுவும் பேசாமல் அமைதியாக அந்த இடத்தை விட்டு வெளியே வந்தாள்.
அதன் பிறகு ரேவதி ஒரு வாரமாக சாரலை கவனிக்கும் போது எப்போதும் இல்லாத ஒரு மென்சிரிப்பு அவள் முகத்தில் எப்போதும் தவழ்ந்துக் கொண்டிருப்பதையும் பப்புவை நேருக்கு நேராக பார்க்கும் போது அது இரட்டிப்பானதை கவனித்துக் கொண்டாள்.
மேலும் அவனுக்காக அவள் ஒவ்வொன்றாக பார்த்து கவனமாக செய்வதை ரேவதி கண்டுக் கொண்டாள்.
அதே போல் பப்புவிற்கும் சாரலின் மேல் விருப்பம் இருப்பதை அறிந்துக் கொள்ள அவனை கவனித்து வந்தாள்.அவனோ அவளை ஒரு வேலையையும் செய்ய விடாமல் அவளுடன் இருந்து எல்லாவற்றையும் கவனித்து வருவதை ரேவதி உணர்ந்துக் கொண்டாள்.
நடந்த விஷயங்கள் எல்லாவற்றையும் வைத்து தான் இன்றைக்கு சாரலிடம் வம்பு பேசி உண்மையை உடைத்தாள் ரேவதி.அதே போல் தன் கணவன் ராகவனிடமும் பப்புவைப் பற்றி பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.
ரேவதியைப் பொறுத்தவரை சாரலுக்கு ஒரு நல்ல நிம்மதியான வாழ்வு அதுவும் அவள் விரும்பியது போலவே அமைய வேண்டும் என்பது தான் பெரிய விருப்பமாக இருந்தது.நடப்பதை எல்லாம் நினைத்து ரேவதி மகிழ்ச்சியில் இருந்தாள்.ஆனால் காலம் எப்போது நமக்கு எந்தவிதமான அதிர்ச்சியை தர வைத்திருக்கிறது என்று அதற்கான நேரம் வரும் போது தானே தெரியும்.
அந்த வாழ்வின் சுழற்சியில் எல்லோரும் நிச்சயம் சுழன்றே ஆக வேண்டும் என்பது மனிதனாய் பிறந்த எல்லோருக்கும் ஒரே விதி.
சாரலுக்கும் பப்புவுக்கும் இடையினில் மனதின் விருப்பமோ காதலோ அது அவர்கள் இருவரும் அதை வார்த்தைகளால் வெளிக்காட்டாமல் தங்களின் செய்கையினால் ஒருவரையொருவர் விட்டுக் கொடுக்காமல் நேசத்தை காட்ட ஆரம்பித்தனர்.
கையெட்டும் தூரத்தில் இருந்தும் கடற்கரை இருந்தும் இருவரும் மற்ற காதலர்களைப் போல் கரம்கோர்த்து தோள் உரச நடக்கவில்லை.
ஆனால் அவர்களுக்கான நேசமானது ஒரு பார்வையிலும் புன்னகையிலும் அவனுக்காக அவள் செய்யும் விதத்திலும் இவன் தன்னவளை யாருக்கும் விட்டுக் கொடுக்காத செய்கையில் நேசம் நிறையத் தொடங்கியது.
இன்றைய காதல் என்பது எல்லோருக்கும் வெளிக்காட்டும் வகையில் இருக்க வேண்டும் என்பது எண்ணமாகிப் போனது.ஆனால் தன்னவனுக்காக அவள் என்ன செய்கிறாள் என்று அவனும் அவனும் மட்டும் அறிந்த பாசமுமாய் இருக்கும் போது அது இன்னும் ஆழமாய் வேரூன்ற ஆரம்பித்து இருக்கும்.
தனது ஒவ்வொரு அசைவிலும் தன்னவனின் கவனம் தன் மேல் இருப்பது எந்தவொரு பெண்ணும் எதிர்பார்க்கும் வரம்.அது சாரலுக்கு இப்போது தெரியவும் கிடைக்கவும் ஆரம்பித்தது.
அவர்கள் இருவர் மட்டும் வெளியே தெரியாதது போல் நடந்துக் கொள்ளலாம். ஆனால் சாரலை சுற்றி அவளுக்கு நலவு மட்டும் உள்ளங்கள் அதை விரைவில் கண்டுக் கொள்ள ஆரம்பித்தன.
தாத்தாவிற்கு சாரலின் விருப்பம் தெரிய ஆரம்பித்தது.ஆனால் பப்புவை எதுவும் தெரியாமல் அதுவும் தன்னுடைய பெயரே தெரியாமல் வாழ்பவனை எப்படி சாரல் விரும்ப ஆரம்பித்தாள் என்பதே கோபாலனுக்கு பெரிய கேள்வியாக இருந்தது.ஒன்றுக்கு பலமுறை சிந்தித்து செயல்படு என்று பலமுறை சொன்னதை சரியாகச் செய்தவள் இப்போது இருக்கும் நிலைமை அவரை கவலைக் கொள்ள செய்தது.
பத்து நாட்களுக்கு ஒருமுறை பப்புவை மருத்துவரிடம் பரிசோதனைக்கு அழைத்து செல்லும் அவனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக தான் கற்றுக் கொண்ட தெரிந்த விஷயங்கள் தான் நினைவுக்கு வந்தனயே தவிர அவனைப் பற்றிய எந்த விவரமும் நினைவுக்கு வரவில்லை.
இது எல்லாம் கோபாலன் அறிந்த உண்மைகள்.ஆனால் பப்பு ஏற்கனவே திருமணம் ஆனவனா? அவனுடைய குடும்பம் என்று எதுவும் தெரியாமல் அவரால் வேற எதைப் பற்றியும் யோசிக்க முடியவில்லை.
பேத்தியின் முகத்தில் தெரிந்த மாற்றம் இதுவரை காணாத புது சாரலாக இருந்தாலும் அவரை முழுமையாக மகிழ்ச்சி கொள்ள செய்ய முடியவில்லை.காரணம் அவள் விரும்பியவனைப் பற்றியவனாக இருந்தது.
இங்கே எண்ணங்கள் ஆயிரம் இருந்தாலும் நடப்பவைகள் என்னவோ ஒரே விஷயம் தான்.அதை சமாளிக்கும் நிலையில் அவர்களின் முரண்பாடு.
கோபாலன் மேற்கொண்டு இந்த நிலைமையை அவர் வளர விட விரும்பவில்லை.
அதனால் சாரலிடம் சொல்லாமல் அவளுக்கு வரன் பார்க்க அதுவும் வெளியூருக்குச் சொல்லி இருந்தார்.
இத்தனை நாட்களாக தன் மகளின் பிரச்சினை பெரிய விஷயமாக கருதப்படுமோ? என்று நினைத்தவருக்கு இப்போது சாரலின் விருப்பம் பெரிய பிரச்சினையாக இருந்தது.பப்பு பழகுவதற்கு நல்ல மனிதன் தான்.அவரும் அதை உணர்ந்துக் கொண்டார் தான்.
பப்புவை சந்தித்து இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிறது.நேரங்கள் எப்போதும் தன் வேலையை சரியாக செய்கிறது.ஆனால் இதில் மனிதர்களின் மாறுதல்கள் இப்போது கோபாலனையும் பாதிக்க தொடங்கியது.
சாரலின் விருப்பம் பெரிதாக எண்ணி அவர் நடந்துக் கொள்ளலாம். ஆனால் பப்புவிற்கு தன்னுடைய உண்மையான அடையாளத்தை தெரிந்துக் கொள்ளும் போது இவன் சாதாரண மீனவனின் பேத்தியை ஏற்றுக் கொள்வானா? அதோடு அவன் விரும்பிய வேறு பெண் அவனுக்காக காத்திருக்கவோ இல்லை வேறு ஏதேனும் திருமணம் முடிந்து இருந்தால் சாரலின் நிலைமையைப் பற்றி நினைக்கவே கோபாலானால் முடியவில்லை.
அதனால் அவர் ஆழ்ந்த யோசனையில் மூழ்கிப் போனார்.சாரலுக்கு பப்புவை பிடித்து இருக்கிறது என்று அவளுக்குத் தெரியும்.
எந்த விஷயமாக இருந்தாலும் முதலில் தாத்தாவிடமே சொல்லிப் பழகியவளுக்கு இன்று பப்புவின் மேலுள்ள விருப்பத்தை பேச முடியவில்லை. காரணம் தாத்தா கேட்கும் கேள்விகளுக்கு அவளிடம் பதிலில்லை.அமைதியாக நிற்க வேண்டும்.
பலமுறை யோசித்து முடிவெடுக்க சொல்லித் தந்தவரிடம் தான் செய்யும் தவறை சொல்ல அவளுக்கு மனம் வரவில்லை.
அதனால் கொஞ்ச நாட்கள் பப்புவிற்கு நினைவு திரும்பும் வரை தன் விருப்பத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று நினைத்தாள்.
அதனால் அமைதி காத்தாள்.இங்கே இரு மனங்களுக்கு உள்ளே நடக்கும் போராட்டம் எதுவும் அறியாமல் காதலில் திளைத்துக் கொண்டிருந்தான் பப்பு.
ஒருவாரம் கழிந்த நிலையில் ராகவன் திரும்ப ஊருக்கு விடுமுறையில் வந்தவன் கோபாலன் தாத்தாவை சந்தித்து அவரிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தான்.இதை கவனித்த ரேவதி அவர்கள் இருவரும் பேசுவதைக் கேட்டாள்.தாத்தா ஏதோ ஒருவனின் பெயரைச் சொல்லி கேட்டார்.இதை ஓரளவூ யூகித்த ரேவதி தாத்தா சென்றதும் ராகவனிடம் விசாரித்தாள்.
ராகவன் “ஒன்னுமில்லை சும்மா தான் பேசிட்டு இருந்தேன்” என்று சொன்னான்.
அதை நம்பாத ரேவதி “உண்மையைச் சொல்லு ராகவா என்ன நடக்குதுன்னு எனக்கு தெரிஞ்சாகனும்” என்று விடாப்பிடியாக கேட்டாள்.
ராகவன் “ஏன் உனக்கு தெரிஞ்சாகனும்? அதுக்கான காரணத்தை முதல்ல சொல்லு” என்று கேட்டான்.
ரேவதி தான் பார்த்த விஷயத்தை சொல்லாமல் சாரலும் பப்புவும் விரும்புவதைச் சொன்னாள்.
அதைக் கேட்ட ராகவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
காரணம் சாரலின் விருப்பத்தை அறிந்து அதற்கு மாற்றாக செய்யக் கூடியவர் கோபாலன் கிடையாது.
ஆனால் எந்த காரணத்திற்காக வெளியூர் மாப்பிள்ளையை அவர் தேடுகிறார் என்று புரியாமல் தவித்தான்.
ஏனென்றால் ஒரு மாப்பிள்ளையின் புகைப்படத்தை அனுப்பி அவரைப் பற்றி சென்னையில் விசாரிக்க சொன்னார்.அதைப் பற்றி தான் அவனும் பேசினான்.ஆனால் இங்கே நடப்பது வேறாக இருந்தது.
அதனால் உண்மையை அறிந்துக் கொள்ள கோபாலனிடம் நேரிலேயே கேட்டு தெரிந்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தவன் அவர் எப்போதும் இருக்கும் மீன் சந்தைக்கு சென்று சந்திக்கச் சென்றான்.
ராகவனை கண்ட கோபாலன் “என்ன ராகவா இங்கே பார்க்க வந்து இருக்கே?” என்று கேட்டார்.
“உங்ககிட்டே கொஞ்சம் தனியா பேசனும்”
“சொல்லு மக்கா வா பேசலாம்” என்று அங்கே அதே கடலின் பக்கம் நின்று பேசினார்கள்.
“தாத்தா நான் எப்பவும் சாரலுக்கு நல்லது தான் நினைப்பேன்னு நீங்க நம்புறீங்க தானே”
“ஆமாம் மக்கா இதுல என்ன சந்தேகம்”
“அப்போ இங்கே என்ன நடக்குதுன்னு உண்மையை மட்டும் சொல்லுங்க,ஏன்னா சாரலுடைய விருப்பத்திற்கு மாறாக என்னால எதுவும் செய்ய முடியாது ரேவதியும் விட மாட்டாள்” என்றான்.
அவன் அப்படி ஒரு கேள்வி கேட்டதும் எந்த பதிலும் சொல்லாமல் கோபாலன் தோல் சுருங்கிய தேகத்தோடு தன் பார்வையை கொஞ்சம் கூர்மையாக்கி அகன்று விரிந்த அந்த கடலையே வெறித்துப் பார்த்தார்.
“உனக்கு மட்டுமல்ல சாரலுக்கும் தெரியாத ஒரு விஷயத்தை உன்கிட்ட நான் சொல்லுறேன் ராகவன்.
சாரலோட அம்மா என் பொண்ணு எப்படி இறந்தாள்னு தெரியும்.ஆனால் அவள் இப்படி புத்தி சுவாதினம் இல்லாமல் போனதுக்கு காரணம் நான் தான்” என்றார்.
ராகவன் புரியாமல் பார்த்தான்.
கோபாலன் நீண்ட பெருமூச்சு விட்டப்படி “எனக்கு பொண்ணு பிறந்து பன்னிரெண்டு வயது இருக்கும் போது அவங்க அம்மா இறந்து போனாங்க,அதனால என் பொண்ணை ரொம்ப செல்லமா அதே நேரம் உலகம் தெரியாமல் வளர்த்தேன்.அவளை நல்ல வரனாக பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு நினைக்கும் போது அவ ஒருத்தனை காதலிக்கிறேன் அவனைத் தான் திருமணம் செய்வேன்னு சொன்னாள்.அவளுடைய விருப்பத்துக்காகவும் என்னுடைய திருப்திக்காகவும் அவனைப் பத்தி விசாரிச்சேன்.
எல்லோரும் நல்லவன்னு சொல்லவும் ரொம்ப சந்தோஷமா அவ விரும்பியபடி கல்யாணம் செய்து வைச்சேன்.முழுதாக ஆறு மாசம் முடியலை,திடீர்னு அவன் காணாமல் போனான்.சாரல் அப்போ வயிற்றுல நாலு மாசம் குழந்தை தேடாத இடம் இல்லை எங்கே போனான்னு தெரியலை.அவன் வருவான் வருவான்னு நம்பி என் பொண்ணு கொஞ்சம் கொஞ்சமா நம்பிக்கை மனம் உடைந்து புத்தி சுவாதினம் ஆகிடுச்சு அவளைப் போல தன்னோட பிள்ளையையும் சின்ன வயசுல தனியாக விட்டுட்டு போய்ட்டா. இனி சாரலுக்கும் அந்த நிலைமைக்கு வர நான் விடமாட்டேன்” என்று உறுதியாகச் சொன்னார் கோபாலன்.
Author: Vishakini
Article Title: உன்னிடத்தில் மனம் மயங்குதே - 12
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: உன்னிடத்தில் மனம் மயங்குதே - 12
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.