இறுதி அத்தியாயம் -20
சாரல் வாழ்க்கையின் எதார்த்தை புரிய ஆரம்பித்து இருந்தாள்.இது தான் தனக்கான வாழ்க்கை என ஒவ்வொரு முறை அவள் முடிவெடுக்கும் போது விதி அவளை இன்னொரு திசையில் அழைத்துச் செல்லும்.இப்போதும் அப்படித் தான் அதன் இழுப்புக்குச் செல்ல தன்னை தயார்படுத்திக் கொண்டாள்.
மறுநாள் காலையில் சாரல் எழுந்து வந்தாள்.தாராவின் பொருட்கள் எல்லாம் அவள் வைத்த இடத்தில் அப்படியே இருந்தது.அதனால் அவள் அறையில் படுத்து இருப்பாள் என்று நினைத்து விட்டு ஆதியும் பாலாவும் வரவேற்பறையில் படுத்து இருந்தார்கள்.
காலையில் எழுந்து தேநீர் போடலாமா? என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது காலை உணவிற்கான வேலையை ஆரம்பித்தவள் இன்னொரு அடுப்பில் தேநீரையும் போட ஆரம்பித்தாள்.
அரிசிமாவு ரொட்டியும் சிக்கன் கிரேவியும் வைத்துக் கொண்டிருக்கும் போது ஒவ்வொருவராக எழுந்து வர ஆரம்பித்தார்கள்.
பாலா முகத்தை கழுவிக் கொண்டு நேராக மேசையில் வந்து உட்கார்ந்தவன் “சாரல் நேத்து ஒருவேளை சாப்பாடு போட்டே நான் இன்னும் என் வீட்டுப்பக்கம் போகலை.இன்றைக்கு நீ மூணுவேளை சாப்பாடு போட்டால் அவ்வளவுதான் போல இருக்கே” என்று சொல்லி சிரித்தான்.
அங்கே தூக்க கலக்கத்தோடு வந்த தாரா “அப்போ சாப்பிடாமல் இப்பவே கிளம்பு.ஒன்னும் ஆகாது சாரல் டீ போட்டு இருக்கியா? வாசனை தூக்கலா இருக்கு எடுத்துட்டு வாம்மா” என்றாள்.
பாலா தாராவின் முகத்தை உற்றுப் பார்த்தவன் “ஹேய் உன் கண்ணு ஏன் வீங்கி போய் இருக்கு நைட் அழுதியா என்ன?” என்று கேட்டான்.
வேகமாக மறுத்த தாரா “நைட் தூங்கினது லேட் அம்மா சரியான திட்டு எல்லாம் கேட்டுட்டு படுக்கவும் ரொம்ப டயர்டா இருந்துச்சு அதான்”
ஆதியும் இவர்களோடு சேர்ந்துக் கொண்டான்.
சாரல் மூவருக்கும் தேநீரை வந்துக் கொடுத்தாள்.ஆதி “நீ டீ குடிக்கலையா?”
“இல்லை நான் அப்புறமா குடிக்கிறேன்” என்றாள்.
பாலா அவளது கையைப் பிடித்து “இங்கே நீயும் உட்காரு இனி எங்கள்ல ஒருத்தி சாரல்.உனக்கு யாரும் இல்லைன்னு நினைக்காதே நான் எப்போதும் துணையாக இருப்பேன்போ உன் டீயை எடுத்துட்டு வா” என்று சொன்னான்.
சாரலும் அவளது தேநீரை எடுத்து வந்து உட்கார்ந்தாள்.ஆதித்யா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.
தாரா சாரலிடம் “இனி என்ன வொர்க் பண்ணலாம்னு இருக்கே?” என்று கேட்டாள்.
சாரல் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்தாள்.
தாரா “ஏதோ ஒரு இன்ஸ்டிடியூட் போறேன்னு சொன்னேல்ல அங்கே என்ன கத்துகிட்டே சாரல்?” என்று கேட்டாள்.
“அங்கே துணி தைக்கவும் ஆரி வொர்க் போட கத்துக்கிட்டேன்”என்றாள்.
தாரா யோசனையோடு “சாரல் என் கூட வந்து என்னோட பொட்டிக்ல வொர்க் பண்ணு அங்கே உன்னோட ப்ராபாமன்ஸை பொறுத்து பார்க்கலாம் எப்படி வொர்க் செய்றேன்னு முடிவு பார்க்கலாம்” என்றாள்.
பாலா “மீதம் இருக்கிற ப்ரீ டைம்ல என்கூட வந்து மேக்கப் பேஸிக் கத்துக்கோ நாங்க அடிக்கடி ஷோ நடத்துவோம் எங்களுக்கு ஹெல்ப்பா இரு. ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டமா இருக்கும் போகப் போக உனக்கு பழகிடும்” என்றான்.
ஆதித்யாவிற்கு அவள் செய்த உதவிக்கு அவர்கள் இப்போது செய்வது எல்லாம் பெரிதாக நினைக்கத் தோன்றவில்லை.
அதனால் சாரலுக்கு உதவ முன் வந்தார்கள்.
எல்லாவற்றையும் கேட்ட சாரல் “நீங்க இரண்டு பேர் நினைக்கிற அளவுக்கு என்னால பெஸ்ட்டை தர முடியுமான்னு எனக்குத் தெரியலை.ஏன்னா என்னோட படிப்பு ரொம்ப குறைவு.அதே மாதிரி ஆதிக்கு நான் செய்த உதவிக்கு நீங்க கைமாறு செய்றதாக நினைச்சு எனக்கு இந்த வேலை வேண்டாம்.நான் தவறு செய்தால் கண்டிப்பான முறையில் எடுத்துச் சொல்லுங்க,இல்லைன்னா என்னால தவறை திருத்திக் கொள்ளவோ? அதை சரி செய்யவோ முடியாமல் போய்டும்.அதுக்காக எனக்கு கிடைச்சி இருக்கிற இந்த நல்ல வாய்ப்பை ஒழுங்கா பயன்படுத்துவேன்.நான் சரி வரலைன்னா நேராக என்கிட்ட சொல்லுங்க” என்றாள்.
தாராவும் பாலாவும் சரியென்பது போல் தலையசைத்தனர்.
தாரா “நாளையிலிருந்து சரியான நேரத்திற்கு வேலைக்கு வந்திடு” என்றாள்.
பாலா “ஆமாம் சம்பளம் இப்போ சொல்ல முடியாது.உன்னுடைய வேலை எப்படி இருக்குன்னு பார்த்துட்டு தான் சொல்ல முடியும்.இன்னொரு முக்கியமான விஷயம் நான் இனிமேல் சாப்பிட அடிக்கடி வருவேன்.அப்புறம் மெஸேஜ் பண்ணுறேன் எனக்கும் சேர்த்து சமைச்சிடு சரியா? சீக்கிரமா போய் டிபன் எடுத்துட்டு வா சாரல்” என்று அவசரப்படுத்தினான்.
தாரா ஆதியிடம் “எங்க ரெண்டுபேருடைய முடிவைப் பத்தி நீ என்ன நினைக்கிறே? என்ன இருந்தாலும் நீயும் நம்ம கம்பெனியோட ஓனர் தானே. உன்னோட பதில் என்ன?” என்று கேட்டாள்.
ஆதி முகத்தில் எந்தவொரு உணர்ச்சியும் காட்டாமல் “எம்ளாயிஸ் முடிவு பண்ணுறது உங்க ரெண்டுபேருடைய வேலை.அதனால என்னால தலையிட முடியாது.எதுவென்றாலும் எனக்கு ஓகே,நாளைக்கு நான் சிபாரிசு பண்ணேன்னு என்னை பார்த்து சொல்லக் கூடாது.ஏன்னா முடிவு உங்க ரெண்டு பேருடையது.அதனால நீங்களே பார்த்துக் கோங்க,அப்புறம் நாளைக்கு மதியம் கோவா போறேன் எனக்கு ஷோ இருக்கு ஒருவாரம் கழிச்சு தான் வருவேன், தாரா சாரலைப் பார்த்துக்கோ” என்றான்.
தாரா “சாரல் எப்படி தினமும் பொட்டிக் வந்துட்டு போவாள்?” என்று கேட்டாள்.
“நாளைக்கு நான் ஆபிஸ் வரும் போது சாரலை அழைச்சிட்டு வந்து பொட்டிக் இருக்கிற இடத்தை காட்டுறேன்.அப்புறம் ஆப்ல புக் பண்ணால் ஆட்டோ வரும் போய்ட்டு வரலாமே பிறகு என்ன?” என்று கேட்டான்.
தாரா சரியென்பது போல் தலையசைத்தாள்.ஆனால் சாரல் ஆதி இப்படி ஒரு பதிலை சொல்வான் என்று எதிர்பார்க்கவில்லை.
ஏமாற்றமாக இருந்தாலும் தன் மனதிற்குள் அப்படியே தனது உணர்வுகளை பூட்டி வைத்தாள்.அன்றைய பொழுது நண்பர்களுடன் பேசி சிரித்து மாலையில் எல்லோரும் அவரவர் வீட்டிற்கு சென்று இருந்தார்கள்.
இப்போது வீட்டில் ஆதியும் சாரல் மட்டுமே இருந்தார்கள்.ஆதி சாரலுக்கு வீட்டின் கதவு பாஸ்வேர்டை அனுப்பினான்.
அதை திறக்கவும் சொல்லிக் கொடுத்தான்.எந்த பொருட்கள் எங்கே வைக்க வேண்டும் எனவும் வீட்டைச் சுத்தம் செய்ய வரும் பெண்மனியின் நேரத்தையும் எல்லாவற்றையும் சொன்னவன் அதே ஒரு குரல் பதிவாக சாரலுக்கு அனுப்பியும் வைத்தான்.
சாரல் மெதுவாக “ஆதி நீ எப்போ திரும்பி வருவே?” என்று கேட்டாள்.
ஆதி “ஒரு வாரத்துல வந்துடுவேன்.ஆனால் இன்னொரு ப்ரோகிராம் இருக்கு.அது இன்னும் ஓகே ஆகலை சரின்னு சொல்லிட்டால் மூன்று அல்லது நான்கு நாட்கள் அதிகம் ஆகலாம்” என்றான்.
அதுவரைக்கும் நான் இங்கே தனியா இருக்கனுமா?” கொஞ்சம் பயந்துப் போய் கேட்டாள்.
“வாழ்க்கையில் தனியா இருப்பேன்னு முடிவு செய்து இருக்கோ, முயற்சி பண்ணு உன்னோடு நானும் கூடவே இருந்தால் அது சரி வராது நீ விரும்பிய முதல்ல பழகு” என்றான்.
சாரலால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை.
ஆதித்யாவிற்கு சாரலைப் பார்த்த பிறகு அவனுடன் அவள் இருக்க வேண்டும் என்பதை விட இந்த உலகத்தில் தனிமையில் அவள் எல்லா விஷயங்களையும் கத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்து இருந்தான்.அதோடு யாரையும் சார்ந்து வாழாமல் தனக்கான வாழ்வை அவள் முடிவு செய்துக் கொள்ள வேண்டும் நினைத்தான்.
ஒரு நல்ல காதலான இருப்பதை விட அவளுக்கு உற்ற வழித்துணையாக இருப்பதையே அவன் முதலில் விரும்பினான்.எத்தனையோ உயிர்களை காப்பாற்ற வழி செய்வதள் தன் வாழ்க்கையை அவள் வாழ்வதற்கு போராட அவன் விரும்பவில்லை.
மறுநாள் காலை இருவரும் தயாராகி அவனது அலுவலகத்திற்குச் சென்றார்கள்.எப்போதும் தாமதமாக வரும் சித்தாரா இன்று ஆதி வருவதற்கு முன்பே வந்து இருந்தாள்.
சாரலும் ஆதியும் ஒன்றாக அலுவலகத்திற்கு உள்ளே வரும் போது தாரா அதை கவனித்தாள்.இருவரின் ஜோடிப் பொருத்தமும் சரியாக இருந்தது.இத்தனை நாட்களாக ஆதித்யாவின் முகத்தில் இல்லாத புன்னகை இப்போது அவனது முகத்தில் கண்டாள் தாரா.
நேற்று நடந்தை நினைத்தாள் தாரா.மூவரும் பேசி முடித்ததும் எழுந்துக் கொண்டு அறையில் போய் படுத்தனர்.அப்போது ஆதி தாரா இருந்த அறைக்கதவை மெதுவாக தட்டினான்.
தாரா “ஆதி என்னாச்சு?”
“உன்கிட்டே ஒரு முக்கியமான விஷயம் பேசனும்”
“சொல்லு ஆதி”
“தாரா சாரலை நான் விரும்புறேன்.அவளும் என்னை விரும்புகிறாள்” என்று அவன் சொன்னதும் அந்த வார்த்தை கேட்ட மறுநொடி விழிகளில் அப்படியே கண்ணீர் நிறைந்தது.
“எப்போன்னு தெரிஞ்சுக்கலாமா?” என்று கேட்கும் போது குரல் உடைந்து இருந்தது.
இரண்டு வருஷத்துக்கு முன்னாடியே சாரலை விரும்பி இருக்கேன் தாரா.பாவி மனசுக்கு தெரிஞ்சது ஆனால் மூளைக்கு நினைவுல இல்லை.
ஆனால் இப்போ சாரல் என்னை வெறுக்கிறாள்.காரணம் என்னாலத் தான் அவ எல்லாத்தையும் இழந்தாள் என்று நடந்த எல்லாவற்றையும் சொன்னான்.
“திரும்ப அவளை இழக்க எனக்கு மனமும் இல்லை,தெம்பும் இல்லை பாலாகிட்டே நீயே இந்த விஷயத்தை சொல்லு.இதைப் பத்தி உன்கிட்டே சொல்லனும்னு தோணுச்சு,என்னை மன்னிச்சிடு தாரா எப்பவும் என் முதல் தோழியாகத் தான் உன்னை நான் இதயத்தில் வைச்சு இருக்கேன்.அதைவிட வேற எந்த எண்ணமும் எனக்கில்லை.என்னுடைய இரண்டு வருடத் தேடலே சாரல் தான்” என்று சொல்லி அவளை திரும்பிப் பார்க்காமல் சென்றான்.
இரவு முழுவதும் ஆதி சொன்னதை பற்றியே நினைத்துக் கொண்டு கண்ணீர் வடித்தாள்.இப்போது அவள் அழுது அடம் பிடிப்பதால் எதுவும் மாறப் போவது இல்லை என்ற உண்மையை விளங்கிக் கொண்டாள் தாரா.
அதனால் இந்த ஒரு தலைக் காதலை கொஞ்சம் கொஞ்சமாக மறக்க வேண்டும் என்று தனக்குத்தானே சமாதானம் செய்து கொண்டாள்.ஆதிக்காக சாரலை ஏற்றுக் கொண்டாள் தாரா.
அலுவலகத்தில் சாரலுக்கு அவளுடைய பிரிவில் அமர்த்தினாள் தாரா.ஆதி கொஞ்ச நேரத்தில் தாராவிடம் மட்டும் சொல்லிக் கொண்டு கிளம்பினான்.
ஒருவாரம் வேகமாக ஓடத் தொடங்கியது.சாரலுக்கு வேலைகள் கஷ்டமாக இருந்தது.இருந்தாலும் அந்த வேலைகளை ஏற்றே செய்தாள்.
தாராவிடம் முடித்து விட்டு பாலாவிடம் செல்ல வேண்டும்.எல்லாம் முடித்து வீடு வந்து சேரும் போது இரவாகிப் போனது.எத்தனையோ நாட்கள் தூக்கம் இன்றி தவித்தவளுக்கு இப்போது வேலையின் பளுவால் படுத்த உடனே தூங்கிப் போனாள்.
ஒவ்வொரு நாள் காலையும் இரவும் ஆதித்யாவின் அறையை எட்டிப் பார்த்தாள்.அவன் வீட்டுக்கு வந்திருக்கிறானா? என்று பார்த்தாள்.கையில் கைப்பேசியை எடுத்து அவனுக்கு குறுஞ்செய்தி அனுப்ப நினைப்பவள் வேண்டாம் என்று வைத்து விடுவாள்.
ஒவ்வொரு நாளும் வெறும் அறை மட்டும் தான் அவளை வரவேற்றது.பத்து நாட்கள் கழித்து இரவு வேலை முடித்து வந்த பொழுது அவனது அறையில் வெளிச்சம் வந்தது.
ஆர்வமாக எட்டிப் பார்த்தாள்.ஆதி நின்றுக் கொண்டு இருந்தான்.
“ஆதி எப்போ வந்தே?”
“இப்போத் தான்”
“சாப்பிட எதாவது செய்யட்டுமா?”
“வேண்டாம் நீயே டயர்டா வந்து இருப்பே உனக்கு சாப்பாடு வாங்கி வைச்சு இருக்கேன். ரெண்டு பேரும் ஒண்ணா சாப்பிடலாமா?” என்று கேட்டான்.
அவன் அப்படி கேட்டதும் அவளுக்குள் மகிழ்ச்சியாக இருந்தது.
“ஒரு நிமிஷம்வெயிட் பண்றீங்களா ரெடி ஆயிட்டு வரட்டுமா?”
சரியென்பது போல் தலையாட்டினான்.
இரண்டு பேரும் ஒன்றாக உணவருந்தினார்கள்.
எத்தனையோ நாட்களுக்கு பிறகு அவளுக்கு ஆறுதல் கிடைத்தது போல் இருந்தது.அவனுக்கும் தான்.ஆனால் இருவரும் சொல்லிக் கொள்ளவில்லை.
மறுநாளே திரும்பவும் வெளியே சென்று இருந்தான்.
ஒரு மாதம் கடந்த நிலையில் வேலையை விட்டு வந்ததும் சாரலுக்கு குளிரும் உடல் சூடாகி உடம்பில் வலி எடுத்தது.
அப்படியே போய் மெத்தையில் படுத்தவள் வலியில் முணங்கிக் கொண்டிருந்தாள்.எவ்வளவு நேரமாக சென்றது என்று அவளுக்குத் தெரியாது.
அப்பொழுது அவள் விரும்பிய அந்த கரங்கள் அவளது நெற்றியைத் தொட்டுப் பார்க்கும் உணர்வு ஏற்பட்டது.
அந்த உணர்வில் அப்படியே மயக்கமானாள்.வேலையை முடித்து விட்டு வந்த சாரல் கையில் வைத்திருந்த கைப்பை எல்லாவற்றையும் அப்படியே போட்டு விட்டு மெத்தையில் போய் படுத்தாள்.
அதை எல்லாம் அங்கே மாட்டியிருந்த கண்காணிப்பு கேமராவில் கண்ட ஆதித்யா சாரலுக்கு என்னவென்று பயந்து வந்து பார்த்தான்.இத்தனை நாட்களாக பாதி நாட்கள் வெளியூரிலும் மீதி நாட்கள் ஹோட்டலிலும் தங்கி இருந்தான்.அவள் நேரம் தினமும் கண்காணிப்பு கேமராவில் அவள் நலமாக இருக்கிறாளா? என்று ஒவ்வொரு முறையும் தன் கைப்பேசியில் பார்ப்பான்.அப்படி தான் அன்றும் கவனித்தவன் அருகில் இருக்கவும் உடனே வந்தான்.அவளுக்கு காய்ச்சலும் குளிரும் இருந்தது.
உடனே மருத்துவரை அழைத்து அவளுக்கு மருத்துவம் பார்த்து மருந்தும் ஏற்றப்பட்டது.
எல்லாவற்றையும் முடிக்கும் போது இரவு இரண்டு மணியாகப் போனது.அவளுக்கு அருகில் இருந்தவன் அவளது கையைப் பிடித்தப்படி அப்படியே தூங்கிப் போனான்.
மறுநாள் காலை காய்ச்சல் குறைந்து விழிகளைத் திறந்துப் பார்க்க அருகில் ஆதி இருந்தான்.அவளுக்கு ஓரளவு நடந்ததை யூகித்தவள் மெதுவாக அவனுடைய கன்னத்தை வருடியவள் “பப்பு பப்பு” என்று அழைத்தாள்.
அவளது தொடுகையில் உணர்ந்தவன் கண் விழித்துப் பார்த்தான்.அவளது பப்பு என்ற அழைப்பினில் சாரலை வேகமாக எழுந்து அணைத்தான் ஆதி.
இத்தனை வருட ஏக்கத்தின் அணைப்பு இருவருக்கும் தேவையாக இருந்தது.மெதுவாக சாரல் “என்னை மன்னிச்சிடு பப்பு. நான் பண்ண தப்புக்கு உனக்கு தண்டனை கொடுத்துட்டேன்” என்று அழுதாள்.
அவனோ “என்னுடைய நேரம் நான் எல்லாத்தையும் மறந்துட்டேன்.அது தான் காரணம்” என்றான்.
இருவரும் மாறி மாறி தங்களையே குற்றம் சொன்னார்கள்.இறுதியில் ஓரளவு சமாதானம் ஆனார்கள்.
சாரல் தன்னையும் மீறி அழ ஆரம்பித்தாள். அவளது முகத்தை தனது கரங்களில் ஏந்தியவன் தன் ஆறுதலான அன்பு முத்தத்தை அவளது உதட்டில் ஆழப்பதித்தான்.
கண்ணீரில் ஆரம்பித்த அழுகை இப்போது ஆறுதலை தேடி இருந்தது.
இருவருக்குமான இடைவெளி இப்போது மொத்தமாய் உடைந்து இருந்தது.
நாம் உண்மையிலேயே எப்போதாவது பிரிந்து இருக்கிறோமா? நீயும் நானும் ஒருவரின் இதயத்தில் உறைந்த நிசப்தத்தின் தொலைவில் மற்றொருவர் தொடர்ந்து வாழ்ந்துக் கொண்டிருக்கும் போது நம்மால் எவ்வாறு பிரிந்திருக்க முடியுமா?
இதை எல்லாம் அவளும் அவனிடமும் அவன் அவனிடமும் சொல்ல நினைத்த வார்த்தைகள்.
மறுநாள் காலை இருவருக்கும் அழகானதாக விடிந்தது.நேசம் இப்போது ஒருவரையொருவர் கொஞ்சம் கொஞ்சமாக காட்டி வாழ ஆரம்பித்தார்கள்.
ஒருநாள் ஆதி சாரலிடம் “சாரல் விதுன் உன்னை பார்க்கனும்னு ஆசைப்படுறான்.நீ ராகவனைப் பார்க்க தயாராக இருக்கியா?” என்று கேட்டான்.
சாரல் “ராகவன்கிட்டே பேசுனீங்களா?”
“ஆமாம் சித்தப்பு தான் சொன்னாரு.விதுன் உன்னை ரொம்ப தேடுவதாகச் சொல்லவும் தான் கேட்டேன்” என்றான்.
அடுத்த வாரம் நமக்கு நடக்கப் போற நிச்சயதார்த்ததுக்கு ராகவனையும் அழைப்பு வைங்க.அப்போ நான் விதுனை பார்த்துக்கிறேன்.விதுனுக்கு நான் அம்மா இருக்கிறதை விட அவனுக்கு நீங்க சித்தப்பான்னு நான் காட்டனும்” என்றாள்.
அது போலவே தன் நெருங்கிய நண்பர்களை மட்டும் அழைத்த நிச்சயதார்த்தம் நிகழ்வினில் ராகவன் விதுனை அழைத்து வந்தான்.தாராவும் பாலாவும் வந்து இருந்தார்கள்.சித்தப்புவும் செல்லம்மாவும் வந்து இருந்தார்கள்.சாரல் விதுனை அன்பாய் அழைத்து அவனிடம் ஆதியை அவனது சித்தப்பாவாக அறிமுகப்படுத்தினாள்.
அது விதுனுக்கு மட்டுமல்ல.ராகவனுக்கும் சேர்த்து தான்.
தனக்கு நெருங்கிய மற்றும் அன்பான உறவினர்கள் மத்தியில் ஆதித்யா சாரலை தன்னவளாக்கிக் கொள்ள முதலாக மோதிரத்தை அணிவிக்க அவளும் அதே காதலோடு ஆதித்யாவிற்கு மோதிரத்தை அணிவித்தாள்.
எட்டு மாதங்களுக்கு பிறகு…
சாரல் இப்போது சித்தாராவின் முக்கிய உதவியாளராக மாறினாள்.அவள் தான் மாடலிங் துறையில் உள்ளவர்களை தேர்வு செய்வதும் அவர்களுக்கான உடையை சரிசெய்யும் முக்கியபணியில் இருந்தாள்.
பாலாவோடு ஒப்பனையிலும் நல்ல முன்னேற்றம் இருப்பதால் இரண்டையும் அவளே பார்த்துக் கொண்டாள்.
அப்போது அங்கே வந்த ஆதித்யா சாரலைப் பார்த்து “மேடம் இன்னும் இரண்டு நாள்ல நமக்கு ஊர்ல கல்யாணம் நினைவு இருக்கா?” என்று கேட்டான்.
சாரலோ “ம்ம்ம்… நினைவு இருக்கு பாஸ்.நாளைக்கு நைட் ஊருக்கு போகலாம்.இப்போ என்னை வேலை செய்ய விடுங்க” என்றதும் அவன் கொஞ்சம் தள்ளி நின்று அவளை இரசிக்க அவளும் விழிகளாலேயே தன்னவனை நிறைத்துக் கொண்டே பார்த்தவள் அவள் மனம் அவனிடத்திலும் அவனுடைய மனம் அவளிடத்திலும் மயங்குவதை இருவரும் உணர்ந்தே இரசித்தனர்.
முற்றும்.
Author: நிதனிபிரபு
Article Title: உன்னிடத்தில் மனம் மயங்குதே - 20
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: உன்னிடத்தில் மனம் மயங்குதே - 20
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.