சின்னா 'தி ரோமியோ' - 12

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 39

Member
Nov 30, 2025
76
59
18
Chennai
சின்னா - 12

“அம்மா" என்று கத்தினான் சின்னா.

“எதுக்குடா இந்த கத்து கத்தற?" என்று வந்து நின்றார் திலகவதி.

கையிலிருந்த பேப்பரைக் காட்டி, “என்னம்மா இது? இது நான் படிக்கிற பேப்பரே இல்லையே. அவன் என்ன பேப்பர் கொண்டு போட்டாலும் வாங்கி வச்சிடுவீங்களா?” என்றதும் முகத்தைத் திருப்பினார் அவனது தாய்.

"அத நீ அந்த ராங்கியத்தான்டா கேட்கணும். நீ தான் என்னமோ என் முடிவ நீ எடுக்காத எடுக்காதன்னு கத்திக்கிட்டு கிடக்க. இந்த வீட்ல என்ன பேப்பர் படிக்கணும்னுகூட அவதான் முடிவெடுக்குறா" என்று நொடிக்க, சிரித்தான்.

"ஏன் மருமகமேல அவ்ளோ இருந்தா இந்த பேப்பர் வேண்டாம்டான்னு பழையதையே போடச் சொல்றதுதான?” என்றவன் புன்னகையுடன் பேப்பரில் மூழ்க,

“அவ்ளோதான் வீட்டையே இரண்டாக்கிட்டு போய்டுவா உம் பொண்டாட்டி" என்றுவிட்டு உள்ளே நுழைந்தவர்,

"அம்மான்னு அந்தக்குதி குதிச்சான். அவ பேரச்சொன்னதும், பல்ல இளிச்சிக்கிட்டு இவர் மட்டும் படிப்பாராம். வந்துட்டான் பேச..” என்ற தாயின் சத்தம் வெளியில்வரை கேட்க அவன் இதழ்களில் மென்னகை.

தாய்க்கும் மருமகளுக்கும் எப்போதும் இது நடக்கும். இவனிடம் காய்பவர் மருமகளைக் கண்டால் மொத்தமாய் வேறு அவதாரம் கொள்வார்.

பேப்பரில் பார்வையை மேய்ந்துகொண்டே வந்தவனின் பார்வை ஓரிடத்தில் அப்படியே நிலைத்தது.

‘இதற்குதான் மேடம் பேப்பர மாத்தினாங்களா!’

நெஞ்சில் சில்லென்றெ சாரல் மழையடிக்க ஒரு பக்கத்திற்கு அச்சிடப்பட்டிருந்த அவனது புகைப்படத்தை கண்கள் பளிச்சிட பார்த்திருந்தான்.

‘செல்லக் கிறுக்கி’ அவன் இதழ்கள் முனுமுனுத்தது.

ஒரு பக்கம் முழுமைக்கும் அவன் கபடியில் வாங்கிய கப்புடன் இருக்கும் புகைப்படத்தை அச்சிட்டு பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி சொல்லியிருந்தாள் அவனது அத்தைப் பெத்தெடுத்த இரத்தினம்.

அவன்மேல் கொண்ட ஆசையில் இப்படி ஏதாவது கிறுக்குத்தனம் பண்ணிக் கொண்டேயிருப்பதால்தான் செல்லக்கிறுக்கி என்று பெயர் வைத்திருக்கிறான்.

“அதான பார்த்தேன். சம்மந்தமே இல்லாம எலி ஏன் அம்மணமா ஓடுதுன்னு. இத நீ பார்க்கனும்னுதான் பேப்பர்காரன் கிட்ட அந்தக்குதி குதிச்சாளா”

அவன் அருகே நின்று புகைப்படத்தை பார்த்திருந்த திலகவதியும் சிரித்தார்.

“சரி, சாப்பிட வாடா” அன்னை அழைக்க புன்னகையுடனே சாப்பிட அமர்ந்தான்.

அத்தனையும் அவனுக்குப் பிடித்ததாய் சமைத்திருந்தார். இருந்தும் ஏதோ ஒன்று இலையில் குறைவதைப் போல் இருந்தது. தாயை ஏறிட அவர் வாசலையே எட்டி எட்டிப் பார்த்திருந்தார்.

ஒருவாய்தான் எடுத்து வைக்கப் போனான், “மாம்மா..மா..மாம்மா” என்று மூச்சிரைக்க ஓடிவந்தாள் அன்பிலரசி.

“அதெப்படி மாமா என் பாயாசம் இல்லாம நீ சாப்பிட உட்காருவ? பொறந்தநாள்னா உனக்குப் புடிச்ச அவல் பாயாசம் கொண்டு வருவேன்னு தெரியும்தான?” என்று பங்குனி மாதத்து பகல் வெயிலாய் சுட்டெரித்தவள் அடுத்த நிமிடமே,

“இந்தா விபூதி வச்சிக்கோ. உனக்காக அர்ச்சனை பண்ணிட்டு வந்தேன்” என்று மார்கழி குளிரானாள்‌.

சாப்பாட்டில் கை வைத்திருந்தவன், கண்மூடி இடக்கையால் நெற்றிமுடியை விலக்கிக் காட்ட, அவளே அவனுக்கு தீட்டிவிட்டு ஊதியும் விட்டாள்.

“ஏன் ஐத்த, கொஞ்சநேரம் பொறுக்க மாட்டியா? நான் வரதுக்குள்ள எப்படி மாமனுக்கு சாப்பாடு வைப்ப?"

தன் அத்தையிடமும் எகிறிவிட்டு அவர் நெற்றியிலும் விபூதியிட்டு ஊதி விட்டாள்.

“ஆமாடி, காட கௌதாரின்னு அவனுக்கு புடிச்சதா பார்த்து பார்த்து குழம்பு வச்சி வச்சிருக்கேன். அதையெல்லாம் விட்டுட்டு நீ வச்ச ஒன்றரையணா பாயசத்தைத்தான் எம்புள்ள முதல்ல குடிக்கணுமோ?”

திலகவதியின் வாய் ஒன்று பேச கையோ மருமகளின் கையிலிருந்த பாயாச தூக்குச் சட்டியை வெடுக்கென புடுங்கி,
கிண்ணத்தில் வார்த்து மகனின் முன் வைத்தது.

“எங்க உம் புள்ளைய வேற எதையும் முதல்ல தொடச்சொல்லு பார்ப்போம்" என்றவளில்
ஜெர்க் ஆனான் சின்னா.

‘என்னடா வண்டி நம்ம பக்கம் திரும்புது’தானாக கையிலிருந்த இட்லி இலையில் விழ, பாவமாய் தாயை ஏறிட்டான்.

அவர் சிரிப்பது ஒருபக்கக் கன்னத்தில் விழுந்த குழிவில் தெரிந்தது. இவன் பார்த்ததும் முகத்தை கோபம் போல் வைத்துக்கொண்டார். தன்னுடைய மைனாவை ஏறிட்டான்.

மயிலின் கழுத்துநிற பாவாடை ஜாக்கெட்டுக்கு தோதாய் அணிந்திருந்த வெள்ளைத் தாவணியை இழுத்து இடுப்பில் சொருகியவள் இடுப்பில் கை வைத்து சின்னாவை முறைத்து நின்றாள்.

‘எங்க இட்லிய தொடு பார்ப்போம்’ என்ற பாவனை.

இருவரையும் மாறி மாறிப் பார்த்தவன், குழம்புப் படாத இட்லிமேல் பாயாசத்தை ஊற்றி இரண்டையும் ஒன்றாக வாயில் வைக்க, மாமியாரும் மருமகளும் களுக்கெனச் சிரித்தனர்.

இருவரும் ஹைஃபை வேறு கொடுத்துக்கொள்ள இருவரையும் முறைத்தான்.

“என்னடா மகனே இட்லிப் பாயாசம். புதுச் சேர்க்கையா இருக்கே?” என்று சிரித்தபடி மகனின் அருகில் சாப்பிட அமர்ந்தார் சிவச்சாமி.

மாமியாரும் மருமகளும் சிரித்து நின்ற தோரணையிலயே நடந்ததை யூகித்திருந்தார்.

"மருமகளே காலேஜிக்கு நேரமாகல்ல ஓடு ஓடு… ஏய் திலகா சோறு வைய்யாத்தா. பசி வைத்தை பிராண்டுது” என்று இருவரையும் ஆளுக்கொரு பக்கமாக விரட்ட, மூஞ்சியைத் தூக்கினாள் அன்பிலரசி.

"சரி நான் வரேன் ஐத்த" என்று ஓரமாய் கழற்றி வைத்த பையைத் தூக்கி தோளில் மாட்டிவிட்டு வாசல்படி தாண்ட, கணவனை முறைத்தார் திலகம்.

"புள்ளை ஒன்னுமே சாப்பிடாம போகுதுங்க… உங்களுக்கு உங்க புள்ள வயிறு ரொம்பினா போதுமே" என்று கத்தியவர்,

"ஏய் உனக்குப் புடிச்ச சுறா புட்டு செஞ்சிருக்கேன் டி ஒரு வாய் சாப்பிட்டுப்போ” என்று மருமகளிடம் கெஞ்ச,

“எல்லாத்தையும் உன் புள்ளைக்கும், மாமனுக்குமே கொட்டு” என்று நடந்தவள் திரும்பி,

“மாமா கொஞ்சம் அவல் பாயாசத்தை தேனுவுக்கும் கொண்டு குடுத்திடுறியா ப்ளீஸ்! மறக்காம குடுத்திடு மாமா. அவளுக்கும் ரொம்பப் பிடிக்கும்” என்றவள் நிற்காமல் நடக்க,

அதற்குள் தட்டில் அனைத்தையும் வைத்துக்கொண்டு வெளியில் ஓடினார் திலகவதி.

“நீ நிம்மதியா சாப்பிடுய்யா! இனி மருமவளுக்கு ஊட்டி முடிச்சி பஸ்ல ஏத்திவிட்டுட்டுதான் உங்கம்மா வருவா" என்று சிரித்த சிவச்சாமி தானே இலையில் அனைத்தையும் வைத்துக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தார்.

தந்தைக்கும் மகனுக்கும் இந்த நாடகம் ஒன்றும் புதிதல்ல.

அன்பிலரசிக்கு தினமும் தன் மாமனின் முகத்தில் முழிக்காமல் அன்றைய நாள் செல்லாது. கல்லூரி செல்லும்முன் இங்கு ஓடி வந்திடுவாள். பின் மாமியாரின் கையால் ஊட்டி எடுத்து பேருந்துக்காக நடந்து செல்வாள். அதுவும் முக்கால்வாசி நாட்கள் சின்னாதான் பேருந்து நிலையம் கொண்டு விடுவதும்.

இன்றும் அவள் சாப்பிட்டு முடிக்கும்முன் புல்லட்டில் தயாராக நின்றான் சின்னா.

சாப்பிட்டு முடித்தவள், “எல்லாம் செம்ம ஐத்த. எப்படித்தான் இப்படி சமைக்கிறியோ? எல்லாத்தையும் கத்துக் குடுத்துப்புடு. இல்ல உன்புள்ளைய சமாளிக்க என்னால ஆகாது" எனவும்,

"நீ சமைச்சி கிழிச்சிட்டாலும்” என்று சிரித்தான் சின்னா.

"அதை பாயாசத்தை வழிச்சி வழிச்சி குடிக்கும்போது தெரியலையோ” என்று முகத்தைத் திருப்பினாள்.

தன் அத்தையிடம் திரும்பி “ஐத்த மாமனிட்ட கொஞ்சம் சுறா புட்டும் குடுத்து விடறீயா. தேனு விரும்பிச் சாப்பிடுவா" என்றாள் முகத்தைச் சுருக்கி கெஞ்சலாய்.

"நீயே கொண்டு குடுத்துட்டு போறதுதானடி.‌ என் புள்ள என்ன உனக்கு வேலைக்காரனா?” என்று மருமகளின் வாயை தன் முந்தானையில் துடைத்துவிட்டார் திலகவதி.

“ஏன் உன் நொண்ணன் என் முதுகுத் தோள உறிக்கவா? உனக்குத் தெரியாதாத்த, உன்வீட்ல இல்ல மாமன்கூட இருக்கேன்னு சொல்லிதான தினமும் அவளைப்போய் பார்த்துட்டு வரேன்” என்று கெஞ்சியவள்,

“என் மாமா எனக்காக அவளுக்குச் செய்யும். இல்ல மாமா?" என்று அவனுக்கும் ஐஸ் வைக்க, “இன்னைக்கு காலேஜ் போற ஐடியா இல்லையா. ஏறுடி சீக்கிரம்” என்று கடித்தவனை முறைத்தபடி ஏறி அமர்ந்தாள்.

தேனு! தேன்மதி! குணசேகர் பானுமதி தம்பதியரின் ஒரேமகள். பிரசவத்தில் குழந்தை சிக்கலாக ஆயுதக் கேஸில் பிறந்தவள். ஆயுதம் போட்டு குழந்தையின் தலையை வெளியே இழுக்கும்போது முதுகுத் தண்டுவட எலும்பில் பாதிப்பு ஏற்பட்டு கழுத்துக்கு கீழ் முழுவதுமாய் உணர்வற்று பிறந்தவள். (முன்பு குழந்தை பிறப்பில் சிக்கல் வந்தால் கிடுக்கி போன்ற ஆயுதம் போட்டு குழந்தையை வெளியே இழுப்பராம். அதில் சிலர் இப்படி பாதிக்கப் படுவதுண்டு).

சில மாதங்கள் கழித்தே குழந்தையின் பாதிப்பை உணர்ந்தனர் பெற்றோர். இப்படிப்பட்ட சிலருக்கு பேச்சும்கூட வராதாம். ஆனால் தேன்மொழி அவள் பெயரைப் போன்றே சுவையாகப் பேசுவாள். வார்த்தைகள் வர தாமதமாகுமே தவிர பேசுவாள்.

குணசேகரின் அண்ணன் குடும்பம் ஒரு விபத்தில் பலியாகிட அநாதையாகிவிட்ட அண்ணன் மகன் பாண்டியுடன், தேன்மதியையும் சேர்த்து தங்களுக்கு குழந்தை போதும் என்றுவிட்டனர் தம்பதியர். பாண்டிதான் சின்னாவின் ஆருயிர் நண்பன்.

முதல்முதலாக சின்னாதான் அன்பிலரசியை தேனுவிடம் கூட்டிச் சென்றான். இருவருக்கும் ஒரே வயது வேறு, அன்பிலரசிக்கு அந்தச் சிட்டுவை பிடித்துவிட இருவரும் இணைபிரியா தோழியாகினர். கருணாகரனுக்கு தெரியாமல்.

கல்லாங்காய் முதல், பல்லாங்குழி, சதுரங்கம் என்று அனைத்திலும் ஒருத்தியாய் நின்று இருவருக்குமாய் மாறி மாறி விளையாடும் அன்பிலரசியை யாருக்குத்தான் பிடிக்காது.

தேனுவின் கண் காட்டலில் எந்தக் குழியிலிருந்து காயை எடுத்து ஆட வேண்டுமென அன்பிலரசியே இருவருக்குமாய் விளையாடுவாள்.

தேனுவுக்கு அன்பிலரசிதான் ஒரே உலகம்.

அவளுக்குதான் பிடித்ததாய்க் கொடுக்க அத்தையை கெஞ்சிவிட்டு வந்திருக்கிறாள்.

ஊரைத்தாண்டி வயல்கள் வந்ததும் மெதுவே அவளது விரல்கள் சின்னாவின் இடுப்பைப் பற்ற, “அன்பா" என்றான் ஒற்றை வார்த்தையில் அதட்டி.

"இதுக்குதான் இந்த 90ஸ் கிட்ஸயே லவ் பண்ணக்கூடாது" என்றவளின் கைகள் மீண்டும் தோளில் பதிய அவன் இதழ்களில் மென்னகை.

“உன் தாலி செண்டிமெண்ட்க்கு அளவே இல்ல சின்னு." என்றாள் மூக்கை உறிஞ்சி.

அவளது சின்னுவில் உணர்வுகள் உயிர்கொள்ளத் துடித்தது.

அவனின் இரகசியப் புன்னகை மேலும் விரிய அதை அவள் பார்த்துவிடாதபடி பக்கக் கண்ணாடியைத் திருப்பி வைத்தான்.

அவனுக்குப் பிடித்த மயில் வண்ணத்தில் பார்த்த நொடியிலிருந்து உள்ளுக்குள் வதம் செய்துக்கொண்டிருப்பவளை பிரிய முடியாமல்தானே அத்தனை வகை உணவிருந்தும், அவனும் அவசரம் அவசரமாய் வாயில் அள்ளிப்போட்டுக்கொண்டு வந்து நின்றது.

அதைக் காட்டிக்கொண்டால் தொலைந்தான் அவன். கண்ணிலிருக்கும் காதல் கருத்தில் படாமல் காத்து வருகிறான்.

அவனுக்கும்தான் எப்போதடா அவள் படிப்பு முடியும் என்றிருக்கிறது. இன்னும் ஒருமாதம்தான் என்ற எண்ணமே மனதில் குளிரை பரப்ப, உல்லாசத்தில் வண்டி மெது வேகம் கண்டது.

அவளை வாசிக்கத்தான் நேரம் கூட வேண்டும். ஆனால் சுவாசிக்கலாமே!

அதற்கெனவே முயலின் தோழன் வேகத்தில் வண்டியைச் செலுத்தினான்.

அவள் மூச்சுவிடும் தூரம்போதும் முக்தி கொள்ளும் அவன் புத்தி.

“பேப்பர்லல்லாம் வாழ்த்து போடுற அளவுக்கு பெரிய மனுஷியாகிட்டீங்களா மேடம்”

இருவருக்குள் நிலவிய அந்த ஏகாந்தநிலை அவனையும் உள்ளூர சீண்டிப் பார்த்ததில் பேச்சை மாற்றினான்.

“என் சின்னுவுக்கு நான் செய்வேன். வருஷா வருஷம் செய்வேன்” என்றாள்.

"என் ஃப்ரண்ட் அப்பாவோடதுதான் மாமா. அவளுக்கும் உன்னை மாதிரியே நான்னா இஷ்டம்” என்றவளிடம் கொஞ்சம் பெருமிதமும் கூட.

பக்கத்திலேயே என்றாலும் பார்த்து பார்த்து பெரிய கல்லூரியில்தான் சேர்த்திருந்தான் சின்னா.

“இஷ்டம் சொல்லு! அதென்னடி உன்னை மாதிரியே இஷ்டம்” பொறாமையில் கடிய, " ஐய்யே! ரொம்பத்தான்” என்றாள் அவள்.

"ஆகமொத்தம் ஒருநாள் கூத்துக்கு உன் ஃப்ரண்ட்டோட பத்திரிக்கைய எங்க தலைல கட்டிட்ட. அப்பா பாவம் டி. அவர் பல வருஷமா குறிப்பிட்ட பெயர் சொல்லி அந்தப் பத்திரிக்கைய படிக்கிறார்” என்றான்.

“மாமா வேணும்னா எதும் வாசிக்கட்டும். ஆனா இனி நீ இதுதான் வாசிக்கணும் மாமா" என்றவளை வித்தியாசமாய் திரும்பிப் பார்த்தான்.

“ஏனாம்"

“அது அப்படித்தான்" என்றவளோ, “கல்யாணத்துக்கப்புறம் நமக்குள்ள சண்டை வந்து
கோவிச்சிட்டு நான் எங்கயாச்சும் போய்ட்டா…

கோவம் குறைஞ்சதும் இந்த பேப்பர்ல அட் குடுத்தா நீ ஓடி வந்துருவல்ல மாமா” என்றாள் குழந்தையாக.

வண்டி சரக்கிட்டு நின்றது.

“இறங்குடி" என்றான்.

"வண்டி பஞ்சரா மாமா?” அவள் புரியாமல் இறங்க,

"மீதி தூரத்த நடந்தே போ! என்றான் வார்த்தையில் அனல் தெறிக்க.

"சண்டை போட்டு ஓடுவாளாம். இவள தொரத்துவாங்களாம். ஏன் சண்டை போட்டா உங்கப்பன் வீட்டுக்கெல்லாம் போகமாட்டியோ?” என்றவன் புல்லட்டை உதைக்க,

“அங்க போனாதான் பத்துநிமிஷத்துல குண்டுகட்டா தூக்கிட்டு வந்துடுவியே மாமா” என்றவளின் மண்டையில் நறுக்கென்று கொட்டினான்.

“மரியாதையா ஓடிரு! இல்ல கொன்னு புதைச்சிருவேன்” என்றவனின் கோபத்தில் புல்லட் பறக்க,

"பக்கத்துலயே அண்ணன் வீட்ட வச்சிக்கிட்டு அம்மா மறைய போக்கிடம் இல்லாம எவ்ளோ அல்லாடுது தெரியுமா? அதெல்லாம் உனக்குப் புரியாது மாமா!” என்று மண்டைடையைத் தேய்த்து விட்டவள்,

"போ! போ! நீ என்கிட்ட சண்டை போட்டுப் பாரு. நான் உன் கண்ணுலயே படமாட்டேன்” என்றவளின் குரல் எட்டாத தூரத்திற்கு சென்றிருந்தான் அவன்.

சின்னா வருவான்...
 

Author: STN - 39
Article Title: சின்னா 'தி ரோமியோ' - 12
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

suji

Member
Aug 29, 2021
30
25
18
germany
இந்த அப்டேட்லயே நான் போய்டுவேன் சூசகமாக சொல்லிட்டா . தரமா சோடியை பிரிச்சுவிட போறீங்கன்னு என் ஆறாம் அறிவு சொல்லுது
 
  • Haha
Reactions: STN - 39

STN - 39

Member
Nov 30, 2025
76
59
18
Chennai
இந்த அப்டேட்லயே நான் போய்டுவேன் சூசகமாக சொல்லிட்டா . தரமா சோடியை பிரிச்சுவிட போறீங்கன்னு என் ஆறாம் அறிவு சொல்லுது
என் ஏழாம் அறிவு என்னா சொல்லுதுன்னா...😜
 

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
370
83
Chennai
இந்த கருணா ஏதோ வில்லா வேலை பார்த்து இவ கல்யாண மண்டபத்தில் இருந்து ஓட போறா.....
அந்த கிணத்துக்காக....பெத்த பெண் வாழ்க்கையை பணயம் வைக்க போறார் கருணா
 
  • Like
Reactions: STN - 39

STN - 39

Member
Nov 30, 2025
76
59
18
Chennai
இந்த கருணா ஏதோ வில்லா வேலை பார்த்து இவ கல்யாண மண்டபத்தில் இருந்து ஓட போறா.....
அந்த கிணத்துக்காக....பெத்த பெண் வாழ்க்கையை பணயம் வைக்க போறார் கருணா
உண்மை... கிணறுதான் எல்லாத்துக்கும் காரணம்
 

STN - 39

Member
Nov 30, 2025
76
59
18
Chennai
அருமையான பதிவு
நன்றிப்பா...🥰🥰🥰

சைட் பக்கம் வரல.. தாமதமான பதில்களுக்கு மன்னிக்கவும்...😍😍😍