சின்னா 'தி ரோமியோ' - 25 ( FINAL - 1)

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 39

Member
Nov 30, 2025
76
59
18
Chennai
சின்னா - 25 (இறுதி அத்தியாயம் - 1)

அரவிந்தன் இதை முற்றிலும் எதிர்பார்த்திருக்கவில்லை. அன்பிலரசி பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்தே கலங்கியவன் இந்தச் செய்தியைக் கேட்டதும் காவலனாய் இருந்தபோதிலும் மனம் கனங்ெத்தது.

"பசுபதி கோவிலுக்கு நீங்க எல்லாம்…" என்றவன் எப்படிக் கேட்பதென தடுமாறினான்.

நிச்சயம் இரண்டு நாட்கள் கடந்திருக்கும்தான். என்னதான் எதிர்பார்த்த மரணமே என்றாலும் வலி வலிதானே!

ஏன் இவனைக் கண்டதும் வெளியிலிருந்த அன்னப்பறவையின் நயன செங்கடல்கள் உடனே கலங்க வில்லை! துடுக்காகத் திரிந்தாலும் அவளது கண்ணில் வலியின் வரிச்சுவடுகள் நொடிக்கு நொடி தடம்பதித்ததைக் கண்டானே!

இவ்வளவு பாசம் வைத்திருப்பவள் தாயுடன் பசுபதி கோவிலுக்குச் செல்லாதது அவனுக்கு ஆச்சரியமளிக்க அதையே கேட்டும் விட்டான்.

“அன்பா எதிர்பார்த்தமாதிரி வாழ்க்கைப் பயணம்தான் சின்னாவோட அமையல. அவளோட இறுதி வழிப் பயணமாவது சின்னாவோட தனிமையில அமையட்டுமே!” என்றவர் வெறுமையாய்ச் சிரித்தார்.

“அன்பாவோட கடைசி ஆசையும் அதுதான். சின்னாவோட மனைவியா அவர் மடியிலதான் அவ உயிர் பிரியணும்னு ஆசைப்பட்டா. தன்னோட முடிவு நெருங்கிடுச்சின்னு உறுதியானதும்தான் இருக்கிற இடத்தை வெளிப்படுத்தி அவ மாமனை வரவழைச்சா…

சின்னா இங்க வந்ததுமே பாதுகாப்புக்காக இரண்டு பேரையும் இங்கயே கொஞ்சம் தள்ளி டீப் ஃபாரஸ்ட்ல தனி வீட்டுக்கு அனுப்பி வச்சிட்டோம்.

தன் அன்பாவ பக்கத்துல வச்சி பார்த்துக்க முடியலையேங்கிற சின்னாவோட ஏக்கத்தையும் இந்த ஒருமாசத்தில் தீர்த்து வச்சி, அவரோட அன்பையும் அள்ள அள்ள குறையாம அனுபவிச்சிட்டு கண்ணை மூடிட்டா” என்றவரிடம் நீண்ட நெடிய பெருமூச்சு.

ஒரு சங்கீத சகாப்தம் அல்லவா சத்தமின்றி சங்கமித்து விட்டது.

அன்பிலரசியின் மரணத்தில் கலந்து கொள்ள வந்ததால்தான் சின்மயா அவன் தொடர்புகொண்டபோது அலைபேசியை எடுக்கவில்லை என்று புரிந்து கனத்த மனதுடன் இருவரும் விடைபெற்று வெளியில் வந்தனர்.

அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தவள், இவனைக்கண்டதும், “இதோ வந்துட்டாங்க" என்றவள், அவனிடம் அலைபேசியை நீட்டினாள்.

புருவம் முடிச்சிட ஏறிட்டவனிடம், "இல்ல …போனை இங்க ம…றந்து சாரி ரொம்ப நேரமா அடிச்சிட்டே இருந்துச்சி அதான்” என்று தடுமாற, அப்போதுதான் மேஜையை தட்டி அழைத்தபோது அவனது அலைபேசியை மறந்து வைத்தவிட்டுது ஞாபகம் வந்தது.

அவனது அன்னையைப் பற்றித்தான் அவன் அறிவானே! அவன் எடுக்கும்வரை தொடர்ந்து அழைத்துக்கொண்டே இருப்பார்.

அன்னையிடம் தற்பொழுது பேசும் மனநிலையில் இல்லாதவன், “ப்ளீஸ் அப்புறம் பேசுறேன் மா" என்று அலைபேசியை துண்டிக்க கோபத்துடன் உறுத்து விழித்தாள் பாவை.

"இருக்கும்போது அருமை தெரியாது" சட்டென்று நீர் முத்துக்கள் திரண்டுவிட அவன் காணாது முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

அவனது அன்னைக்கான அவளது கோபம் அவனது மனநிலையை முற்றிலுமாய் திசைத் திருப்ப, அழுதவளை அப்படியே விட்டுச் செல்லும் எண்ணமில்லாதவன்,

“யார் இருக்கும்போது டாக்டரம்மா" என்று மெல்லிய புன்னகையுடன் அவளை நெருங்கினான்.

மணிகண்டன் என்ன நடக்கிறது இங்கே என ஆவென்று பார்த்திருக்க,"பாவம், சாருக்குதான் இரண்டு நிமிஷம் போனை பார்க்கவே டைம் கிடைக்காதே”
என்றவளில் அவன் புன்னகைத்து இன்னும் நெருங்கினான்.

அதைக் கவனியாதவளோ,
“அஞ்சி நிமிஷம் எடுத்து பதில் சொல்றதுல உங்க காக்கிச் சட்டை ஒன்னும் கறை படிஞ்சிடாதே” என்று உதட்டை வளைக்க,

“போலீஸ்காரன் பொண்டாட்டியா பொறுப்பா பேசுடி" என்றான் மென் சிரிப்புடன் அவளை இருபக்கமும் அணைக்கட்டி.

“ஆமா போட்டோவே பார்க்க மாட்டாங்கலாம். இதுல பொண்டாட்டி…” என்றவள் அப்போதுதான் அவன் சொன்னதை உணர்ந்து நிமிர்ந்து பார்க்க விரிந்த புன்னகையுடன் அவளை இருபக்கமும் அணைக்கட்டி நின்றிருந்தான் அவன்.

நெஞ்சம் படபடக்க சுற்றும் முற்றும் பார்த்தாள். மதிய நேரம் என்பதால் அனைவரும் உணவருந்தி குட்டித் தூக்கம் போட்டிருக்க, அங்கு தன் அண்ணனின் புது அவதாரத்தில் ஸ்மரணையற்று நின்றிருந்த மணிகண்டனைத் தவிர ஒருவருமில்லை.

“போட்டோ பார்க்கலைன்னு மேடம்க்கு ரொம்ப கோபமோ? வந்ததிலிருந்து வெண்ணிலா நெருப்பா
காயுதே!" சிரித்தபடி கேட்டவனை நெஞ்சில் கை வைத்துத் தள்ளி விட்டாள்.

“பார்க்காமதான் இப்படி உரசிட்டு நிக்கறீங்களா ஃப்ராடு போலீசு” என்றவளின் அழுத தடம் சற்றே புன்னகையாய் மாறியிருக்க அதுதானே அவனுக்கு வேண்டியதும்.

“PG அப்ளை பண்ணு. உங்கப்பா அம்மா மாதிரி இரண்டு வருஷம் திகட்ட திகட்ட காதலிச்சிட்டு கல்யாணம் பண்ணிக்கலாம்” என்றவனில் அவளது கண்களில் மிரட்சி.

அவளது மிரட்சி எதற்கென்று புரிய சட்டென்று புன்னகைத்தான்.

“உங்கப்பா மாதிரி தொலைச்சிட்டுல்லாம் தேடமாட்டேன். என்னை விட்டு தொலைஞ்சிப் போகணும்னு நினைச்சாலே முட்டிக்கு கீழ சுட்டு பிடிப்பேன். வித் லைசன்ஸ்" என்றவன் கண்சிமிட்ட, அவனின் அடாவடிக் காதலில் கட்டுண்டவளில் மென்னகையுடன் விழிநீர் கசிந்தது.

“ஐய்ய ரொம்பத்தான்" என்று தன் தந்தையிடம்போல் இடுப்பையும் உதட்டையும் ஒன்றாக வளைத்துக் காட்டியவளில் அவன் இதயம் இடம் மாற பழைய ஷிவமதி திரும்பியிருந்தாள்.

“இப்பவே இதை இவ்ளோ கஷ்டப்படுத்தாதீங்க டாக்டரம்மா. பின்னாடி இதுக்கு நிறையவே வேலை இருக்கு” என்றவனின் ஒரு கை அவள் குவிந்த இதழ்களை வளைத்துப் பிடித்திருக்க, மற்றொருகரம் அருகிலிருந்த மணிகண்டனின் கண்களை மூடியிருந்தது.

மென்மையாய் நீர்கசிந்த விழிகளில் முத்தமிட்டு விலகியவன், "உன் அம்மா உன்னை தனியா விட்டுட்டு போகல… உன் அப்பா இருக்கார்ங்கிற நம்பிக்கைல போயிருக்காங்க. அவரைப்போல ஒரு தகப்பன் கிடைக்கிறது அபூர்வம் வதிம்மா! இந்த இரண்டு வருஷத்துல அவர் அன்பை எவ்ளோ அனுபவிக்க முடியுமோ அனுபவிச்சிக்கோ. அப்புறம் என்கிட்ட அதெல்லாம் கிடைக்காது” என்றவன் புன்னகையுடன் மணிகண்டனை இழுத்துக்கொண்டு ஜீப்பில் ஏற,

அதிர்ந்து சிலையாக நின்றவளிடம், “உங்க அப்பாகிட்ட சொல்லி மறக்காம PG சென்னைல அப்ளை பண்ற! ஒவ்வொரு தடவையும் ட்ரக்கிங் பண்ணி உன்னை பார்க்க வர முடியாது. புரிஞ்சிதா டாக்டரம்மா! என்று கண் சிமிட்டி விடைபெற்றான்.

“அன்னைக்கு போட்டோ பார்க்காத மாதிரி சீனைப் போட்டீங்க" என்ற மணிகண்டனில்,

“நான் எப்போ பார்க்கலைன்னு சொன்னேன்" என்றவன் சத்தமாய் சிரித்தான். அலைபேசித் திரை அணையும் நொடிப்பொழுதில் அவன் விழித்திரையில் விழுந்திருந்தாளே!

“நான் பார்க்கணும்னுதான அன்னைக்கு வாட்சப்ப திறந்தே என்கிட்ட குடுத்த" என்றான் அதே சிரிப்பு மாறாமல்.

"இருந்தாலும்" என்ற மணிகண்டன், “ஒரு பச்சைப் புள்ளைய பக்கத்தில வச்சிக்கிட்டு இதெல்லாம் ஓவர் தெரியுமா? அதுவும் அவங்களுக்கும் உங்களை புடிச்சிருக்கான்னு தெரியாம…” என்றான்.

அரவிந்தனின் அதிரடியில் அதிர்ந்து நின்றதென்னவோ அவன்தானே!

இலேசாகப் புன்னகைத்த அரவிந்தன், “நாம மீட்க முடியாத ஒரு இழப்பை சந்திக்கும்போது யாரைக் கண்டா உடைவோம் மணி" என்றான்.

“நம்ம மனசுக்கு நெருக்கமானவங்களை" என்றான்.

"அதுவரை திடமா பேஷண்ட்ட பார்த்துட்டு இருந்தவ என்னைக் கண்டதும் உடைஞ்சி அழுதா பார்த்தல்ல‌. அது ஒன்னு போதாதா அவ மனசுல நான் இருக்கேன்னு புரிய!

பத்தாததுக்கு கிட்டதட்ட நாம உள்ள இருந்த அரைமணி நேரமா என் அம்மாகிட்ட பேசிட்டு இருந்திருக்கா. இரண்டு பேரும் முதல்டைம் பேசிக்கிட்டா மாதிரியும் இல்ல. என்னைப் பிடிக்காமலா என் அம்மாகிட்ட அவ்ளோ நேரம் பேசி இருப்பா” என்றான் புருவத்தை உயர்த்தி.

“ஆனாலும் இந்த வேகம்…” என்றவன் அரவிந்தனைப் பார்த்து பக்கென்று சிரித்தான்.

"போனவங்க திரும்பி வரப்போறதில்லை. அதுக்காக அவகூட சேர்ந்து அழுதா போலீஸ்காரன் கெத்து என்னாகிறது” என்று இலேசாய் மீசையை முறுக்கிக் காட்டியவன், "என்கிட்ட அன்பை எதிர்பார்த்து போலி கோபம் காட்டுறவள அப்படியே விட்டுட்டு வர மனசு தாங்கல மணி” என்றான் முகம் சிவக்க.

" பார்ரா.. போலீஸ்காரருக்கு வெட்கமெல்லாம் வருது" என்று கலாய்த்தவன், "அதெப்படி சார் ஒரே முத்தத்துல அழுதப் பிள்ளையை சிரிக்க வச்சீட்டீங்க?

எனக்கெல்லாம் இந்த டெக்னிக் தெரிஞ்சிருந்தா ஊர்ல ஒரு பொண்ணைக் கூட அழவிடமாட்டேன் தெரியுமா?” என்றான் காலரைத் தூக்கி.

வாகனத்தை சடாரென பிரேக்கிட்டு நிறுத்தினான் அரவிந்தன்.

“அதோ பார் லெஃப்ட்ல, அங்க எப்படியும் ஒரு பொண்ணாச்சும் அழுதுட்டுதான் இருக்கும். நீ என்ன பண்ற அங்க போய் கட்டிப்புடிச்சி முத்தம் குடுத்து அழுகையை நிறுத்திட்டு வர…” என்று ஜீப்பை நிறுத்திவிட்டு சட்டமாய் அமர்ந்துகொள்ள,
அரவிந்தன் சுட்டிக்காட்டிய திசையில் பார்த்த மணிகண்டன் அதிர்ந்தான்.

பந்தலெல்லாம் போட்டு அது ஒரு சாவு வீடு. ‘அடப்பாவி மனுஷா!’ என்று வாயில் கை வைத்தான்.

“செந்தில் மாதிரி சாவு வீட்ல போய்ட்டு உங்க பொண்டாட்டி என் பொண்டாட்டி மாதிரின்னு முத்தம் குடுத்து அடிவாங்கி வைக்கவா…
சும்மா கலாய்ச்சதுக்கு இப்படியா?” என்றவனில் சிரித்துவிட்டு பயணத்தைத் தொடர்ந்தான் அரவிந்தன்.

“அடுத்து எங்க சார் பசுபதி கோவில்தானே" என்றதும் அதுவரை இருந்த இதம் மறைய, அரவிந்தனின் முகம் பாறையாய் இறுகியது.

‘இல்லை’ என மறுத்துத் தலையாட்டினான்.

“சின்னான்னா சாந்தம், அன்பு, தைரியம்னே மனசுக்குள்ள அவருக்கு ஒரு உருவகத்தை குடுத்துட்டேன் மணி! அப்படிப்பட்ட மனுஷன் உடைஞ்சி நிக்கிறதை பார்க்கிற தைரியம் எனக்கில்ல” என்றான் உடைந்த குரலில்.

கொஞ்சநேரம் எல்லவற்றையும் மறந்து சிரித்திருந்தவனை தானே வருத்தப் படுத்திவிட்டோமே என கலங்கினான் மணிகண்டன்.

பேச்சை மாற்ற, "சார், அப்போ கருடன் சம்பா?” என்றான் கேள்வியாய்.

"இப்போ போய் அவர்கிட்ட கருடன் சம்பா எங்க இருக்குன்னு உன்னால கேட்க முடியுமா?” என்றான்.

அவசரமாய் மணிகண்டனின் தலை மறுத்தது.

“இந்த விசயம் அவருக்கு தெரியுமான்னே தெரியல. கடந்த ஒரு மாசமா அன்பிலரசியைத் தவிர நெல்லோ இந்த மண்ணோ எதுவுமே அவருக்கு முக்கியமா பட்டிருக்காது. நமது நெல் இயக்கத்துலருந்து வந்த மெயில்கூட பார்த்திருக்க மாட்டார். அப்படி தெரிஞ்சிருந்தா நம்மளை இவ்ளோ அலைய விட்டிருக்கவும் மாட்டார்” என்றவன்,

“கொஞ்சநாள் போகட்டும் மணி!” என்றான்

“அதுவுமில்லாம நமதுநெல் இயக்கத்துலருந்து போன் பண்ணினாங்க, நாம கொரியர் அனுப்பினது எல்லாம் கருடன் சம்பாதானாம். தைரியமா காப்பிரைட் அப்ளை பண்ணுங்க மீதி சேம்பிள்ஸோட கூடிய சீக்கிரம் வரேன்னு சொல்லிட்டேன்” என்றான்.

மணிகண்டன் இன்னமும் தெளிவடையாமல் முழித்தான். சின்னா உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்றுதானே இந்த ஓட்டம் ஓடியது.

அது புரிந்தார் போல், "இளவரசி மாமனார் தானே” என்றான் அரவிந்தன்.

மணி ‘ஆம்’ என தலையசைக்க, “அந்த நாட்டில இருக்கிற அவரை நம்மால ஒன்னும் பண்ண முடியாது. அங்க இப்ப எலக்ஷன் நடக்கறதால இப்போதைக்கு அவரும் ஒன்னும் பண்ண முயற்சிக்க மாட்டார்.

யாருக்கு தெரியும் ஆட்சி மாறினா இளவரசியோட மாமனார் செல்லாக் காசாகலாம். அதுக்குள்ள முடிஞ்சவரை நாம சீக்கிரமே காப்பிரைட் வாங்கிடலாம்” என்றான் நம்பிக்கையாய்.

“சார் பாட்டீங்ககிட்ட என்ன சொல்றது"

"அதைச் சின்னாவே பார்த்துக்கட்டும் மணி! இப்போதைக்கு ஒன்னும் சொல்ல வேண்டாம்” என்றவன், மணிகண்டனை சிறிதுநேரம் ஓட்டச் சொல்லிவிட்டு இருக்கையில் கண்மூடிக் கொண்டான்.
 

Author: STN - 39
Article Title: சின்னா 'தி ரோமியோ' - 25 ( FINAL - 1)
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

STN - 39

Member
Nov 30, 2025
76
59
18
Chennai
ஏங்க ரைட்டர் இப்படி அழ வைக்கறிங்க 😭😭😭😭😭
இங்க வெற்றி பெற்ற காதலை விட காதல் தன் கொடிய நாட்டி வெற்றிகரமா தன் ஆட்சியை செலுத்தறதுக்கு இங்க சின்னா மாதிரி காதலிக்கிறவங்கதான் காரணம்னு தோணுச்சி.. காதல்னு தீம் சொல்லவும் இந்த கான்சப்ட்னு மனசுக்குள்ள உறுதியா முடிவெடுத்துட்டேன் டியர்...