செம்புலம் 25
மேதினூர்:
நண்பனின் குரலை வைத்து ஏதோ சரியில்லை என்பதைப் புரிந்துகொண்ட விக்ரம் "அலவா, என்னடா ஆச்சு?" என்று கேட்கவும், கண்களை மூடித்திறந்த பாரி, கயலைப் பார்த்ததிலிருந்து தற்போது அவன் மனம் படும் பாட்டை எல்லாம் சொல்லத் தொடங்கினான்.
"எதுக்குடா என் வாழ்க்கையில உன் தங்கச்சி வந்து இப்படி பாதியிலே விட்டுட்டுப் போனா? நானும் உணர்ச்சி உள்ள மனுஷன் தானேடா? அவளைப் பார்க்கும்போதெல்லாம் என் மனசும் உடம்பும் படுற பாடு சத்தியமா என்னால கண்ட்ரோல் பண்ண முடியல. கல்யாணமாகி குழந்தைகள் இருக்குன்னு எனக்குப் புரியுது. இருந்தாலும் நான் ஒரு ஆம்பள தானே? விழியை (மலர்விழி) மறந்துட்டு இன்னொரு வாழ்க்கையை என்னால சத்தியமாக ஏத்துக்க முடியாது. ஆனா, இவளைப் பார்க்காமலும் என்னால இருக்க முடியலடா. அவளுக்கே தெரியாம தினமும் அவளைப் பார்த்துட்டுதான் இருக்கேன். நேத்துல இருந்து அவளைக் காணும், வீடு பூட்டியிருக்கு. எங்கே போனாள்?, அவளுக்கு ஏதாவது பிரச்சினையா?, இல்லை உடம்பு எதுவும் சரியில்லையா? என்பதை யோசித்தே என் மனசு எப்படித் தவிச்சிட்டு இருக்கு தெரியுமா?" என்று தனது மனதில் உள்ளதை எல்லாம் பாரி கொட்டினான்.
இதைக் கேட்ட விக்ரமின் கண்கள் சந்தோஷத்தில் கலங்கியது. கடந்த மூன்று வருடமாக பாரி எதைப் பற்றியும் யோசிக்காமல் "பிசினஸ், பிசினஸ்" என்று ஓடிக்கொண்டிருக்கிறான். 'எங்கே இவனது வாழ்க்கை இப்படியே முடிந்துவிடுமோ?' என்று நண்பனின் தங்கையும், தனது மனைவியுமான பவதாரணியிடம் சொல்லி எத்தனையோ நாள் வருத்தப்பட்டிருக்கிறான். அப்படி இருக்கும்போது, தனது நண்பனின் வாழ்க்கையில் இன்னொரு பெண் இடம் பிடிக்கப் போகிறாள் என்பதை அறிந்தவுடன் அவனுக்குச் சந்தோஷம் தாங்கவில்லை.
விக்ரமின் அமைதியை உணர்ந்த பாரி, "என்னடா, நான் சொல்லியதைக் கேட்டுக் கேவலமா இருக்கா? உனக்கும் என்னைப் பார்த்தா அசிங்கமா இருக்கு இல்லையா? எனக்கும் கண்ணாடியில் என் முகத்தைப் பார்க்கும் போதெல்லாம் அப்படித்தான்டா இருக்கு" என்று வருத்தத்தோடு சொல்ல, "அடிச்சுப் பல்லெல்லாம் உடைச்சிடுவேன்டா! எதுக்குடா இப்படி எல்லாம் பேசுற?" என்று விக்ரம் அந்தப் பக்கம் இருந்து திட்டியவன் "மச்சான், தேவையில்லாததெல்லாம் யோசிக்காதடா. ஊருக்கு வரதுக்கு டிக்கெட் போட்டாச்சு. நாளைக்கு எங்களுக்கு பிளைட். நேர்ல வந்து பேசிக்கலாம்" என்று விக்ரம் சொல்ல, பாரியும் "சரி" என்று போனை வைத்தான். ஆறு மாதங்களுக்குப் பிறகு தனது மகன்களைப் பார்க்கப் போகிறோம் என்ற சந்தோஷம் ஒரு பக்கம் இருந்தாலும், குற்ற உணர்ச்சி ஒரு பக்கம் அவனைத் தின்றது.
விக்ரம் சொல்லியது போலவே, காஞ்சனா தம்பதியினர் தனது இரண்டு பேரப்பிள்ளைகளோடு இந்தியாவுக்கு வந்துவிட்டனர். பிள்ளைகள் இருவரும் ஏர்போர்ட்டில் தமக்காகக் காத்திருந்த அப்பாவைப் பார்த்து ஓடிவந்து கட்டிக்கொள்ள, இருவரையும் தூக்கி முத்தமிட்டவன் தனது நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.
"அண்ணா!" என்றவாறு தனது மகனோடு வந்தாள் பவதாரணி, "நல்லா இருக்கியா தாரணி?" என்கும் பாரியின் தோள் சாய, "நல்லா இருக்கேன்ணா. எங்க மச்சானை காணும்? என்கவும், இங்க தான் இருக்கேன்டா. உனக்குத்தான் தங்கச்சிகாரியைப் பார்த்தா நண்பனை கண்ணுக்குத் தெரியாதே!" என்றான்.
பின்னர் அவர்கள் பொதுவாகப் பேசிக்கொண்டே வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். காஞ்சனாவிற்கு எப்பொழுது கயலைப் பார்ப்போம் என்று இருந்தது. தனது மாமியாரிடம் ரகசியமாக விசாரிக்க, அவர் கயல் ஊருக்குப் போயிருப்பதாகச் சொல்ல, "அப்படியா?" என்றார். "ஆமாம் ஆமாம்" என்று அவர்கள் சிரித்துக்கொள்ள, "என்ன இங்க ரகசியம் பேசுறீங்க?" என்று பவதாரணியும் வர, அவளிடமும் கயலைப் பற்றிச் சொல்ல, "நானும் அதுக்காகத்தான் வந்திருக்கேன்" என்றாள்.
மூன்று நாட்கள் கடந்திருந்தது. கயல்விழியும் ஊருக்கு வந்திருந்தாள். மறுநாள் விடுமுறை என்பதால் தோட்டத்தில் பாட்டியுடன் பேசிக் கொண்டிருக்கும்போது, தற்செயலாக வருவது போல் காஞ்சனாவும் பவதாரணியும் அங்கு வந்தவர்களோ கயல்விழியைப் பார்த்தவர்கள் மற்றவர்களைப் போலவே அதிர்ந்து போனார்கள். அவர்களைப் பார்த்த காஞ்சனா பாட்டி, "வாதாயி, வா கண்ணு , எப்ப வந்தீங்க?" என்று நலம் விசாரித்தார். "நாங்க வந்து மூன்று நாள் ஆகுது அம்மா" என்றவரை கயல்விழிக்கு அவர்களை அறிமுகப்படுத்த, அவள் மரியாதை நிமித்தமாகத் தலையை மட்டும் அசைத்தாள்.
ஷாலினியும் கடந்த ஒரு மாதமாக பாரியிடம் மறைமுகமாக கல்யாணப் பேச்சு எடுத்தாள். அவனோ அதைக் கண்டுகொள்ளாமல் போக, "இனி நேர்வழியில் முயற்சி செய்து புண்ணியம் இல்லை; குறுக்கு வழியில்தான் ஏதாவது செய்ய வேண்டும்" என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது பிசினஸ் மீட்டிங் ஒன்றுக்கான அழைப்பு பொதுவாக எல்லாருக்கும் வந்தது.
நிச்சயமாக பாரி அதில் கலந்து கொள்வான் என்பது தெரிந்ததால், 'என்ன பண்ணலாம்?' என்று யோசிக்கும்போது, தோட்டத்தில் டிரைவர் காரைத் துடைத்துக் கொண்டிருப்பது தெரிய, அவனை வைத்துத் திட்டம் போட முடிவு செய்தாள்.
விக்ரம் தனது மனைவி, மகனோடு அவனது அப்பா வீட்டிற்குச் சென்றிருக்க, மீட்டிங்கிற்கு கிளம்பிய பாரி, "வாங்களேன்ப்பா, போயிட்டு வரலாம்" என்று சேயோனை அழைக்க, "எப்பா சாமி... அவ்வளவுதான்! என் பொண்டாட்டி, உன் மவனுங்க அவளை லெப்ட் ரைட் வாங்கிடுவாங்க" என்று சிரித்தவர், "நீ போயிட்டு வா அலவா" என்றார். "சரிங்கப்பா" என்றவன், மீட்டிங் நடக்கும் இடத்தை நோக்கிச் செல்லும்போது கயல்விழி வேலை முடிந்து சோர்வாக வருவது தெரிந்தது.
வாடிய மலர் போல் வருபவளை ரசித்துக் கொண்டே கடந்தவன் பார்வை, கண்ணாடி வழியாகத் தெரிந்த அவளின் பின் தோற்றத்தில்தான் இருந்தது. "பாரி!" என்று தனது தலையில் தட்டிக்கொண்டவன், அரை மணி நேரத்தில் மீட்டிங் நடக்கும் அந்த ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு வந்தான். வண்ண விளக்குகளின் அலங்காரத்தில் மீட்டிங் நடக்கும் இடம் ஜகஜோதியாக ஜொலித்தது.
பாரி உள்ளே போக, எதார்த்தமாக வருவது போல ஷாலினியும் உள்ளே இருந்து வந்தவள் "ஹாய் பாரி, ஒரு கால் பண்ணிட்டு வரேன்" என்று அவள் சொல்ல, "ஓகே ஷாலு" என்றான். சற்று தள்ளி வந்தவள், "வாசு, எல்லாம் ஓகேதானே?" என கேட்க, "ஹ்ம்ம் மேம்" என்று டிரைவரும் சொன்னான். "பீ கேர்ஃபுல்" என்றவாறு உள்ளே வந்தவள், பாரியின் பக்கத்து இருக்கையில் வந்து உட்கார்ந்து கொண்டாள்.
ஒருவழியாக மீட்டிங் முடிந்தது. பஃபே முறையில் டின்னர் அரேஞ்ச் பண்ணியிருக்க, தனக்குத் தேவையானதை எடுத்து வந்து இருவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டனர். அப்போது பாரிக்கு விக்கல் எடுக்க , "பார்த்து பார்த்து" என்று ஷாலினி சொல்லும் போதே, ஒரு ஆள் வாட்டர் பாட்டிலை கொண்டு வந்து கொடுத்துப் போனான்.
உள்ளுக்குள் இருக்கும் குரூர புன்னகையுடன், "இதை குடி பாரி" என்று பாட்டிலை நீட்டினாள். "தேங்க்யூ ஷாலு" என்றவனோ, பாதி தண்ணீர் குடித்துவிட்டுச் சாப்பிட்டு எழுந்தவன் "பாய்" என்று காரில் புறப்பட்ட சிறிது நிமிடங்களுக்குப் பிறகு, அவனுக்கு லேசாகக் கண் மறைப்பது போல இருந்தது.
எப்படியோ தன்னைச் சமாளித்து வரும்போதே மழையும் ஆரம்பமானது. அதைப் பார்த்த உடனே அன்று மழையில் நனைந்து வந்த கயலின் உருவம் நினைவிற்குள் வர, "கயல்..." என்றவாறு தட்டுத்தடுமாறிக் காரை ஓட்டிக்கொண்டு வந்தான்.
அவள் வீடு இருக்கும் வளைவில் காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கியவனோ, வலது பக்கம் இருக்கும் இரும்பு கேட்டைத் திறந்து உள்ளே போனவன் பூட்டியிருக்கும் கதவைத் தட்ட, போனில் கதை படித்துக் கொண்டிருந்தவளோ, "யாரு இந்த நேரத்துல?" என்ற பயத்தோடு கதவைத் திறந்தாள். அங்கே கலைந்த கூந்தல் நெற்றியில் புரள, நைட்டியில் நிற்பவளைப் பார்த்தவனுக்குத் தனது மனைவி போலவே தெரிய, "மை டியர் பொண்டாட்டி!" என்றபடியே அவளை வளைத்துப் பிடித்தவனோ ஒரு கையால் கதவைத் தாழிட, அந்த நேரம் கரண்ட்டும் கட் ஆனது.
அதிர்ச்சியில் இருந்தவளோ பாரியின் பிடியிலிருந்து விலக முயன்று கத்தினாள். ஆனால், வெளியே பேய் மழை பெய்ததால் அவள் சத்தம் யாருக்கும் கேட்கவில்லை. போதை மருந்தின் பிடியில் இருந்தவனுக்கு, கயலின் அங்க அசைவுகள் உணர்ச்சிகளைத் தூண்டிவிட, அவளது எதிர்ப்புகளை மீறி முழுவதுமாக அவளைக் கொள்ளையிட்டவன் அப்படியே படுத்துவிட்டான். உடலின் வலியிலும் நடந்ததை நம்ப முடியாமலும் அழுது அழுது ஓய்ந்தவளோ, அப்படியே உறங்கிவிட்டாள்.
நள்ளிரவு நேரம் மிகப்பெரிய இடிச் சத்தத்தில் தூங்கிக் கொண்டிருந்த பாரி, போதையோடே எழுந்து வெளியே வந்தான். அவனுக்கு அது எந்த இடம் என்று தெரியவில்லை. சொக்கும் கண்களோடு மழையில் நனைந்தபடி தட்டுத்தடுமாறிக் கொண்டு ரோட்டிற்கு வந்தவன், அங்கே தன் கார் நிற்பதைப் பார்த்து அதில் ஏறி ஸ்டார்ட் பண்ணித் தனது வீட்டிற்கு வந்து சேர்ந்தவனோ கார் சீட்டிலையே படுத்து உறங்கிவிட்டான்.
செம்புலம் தொடரும்...
Author: Vishakini
Article Title: செம்புலப் பெயல் நீர் - 25
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: செம்புலப் பெயல் நீர் - 25
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.