• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

குழலில் காற்றாகினாள் - 17

STN - 29

Member
குழல் - 17

பேருந்தில் பயணிக்கும்போதே தனக்குள் நிறைய எண்ணங்களை வகுத்தபடிதான் பெங்களூர் வந்து சேர்ந்தாள் திலோத்தமா. கூகுள் ஆண்டவரையே மண்டை காயவைத்து நிறைய விஷயங்களை சக்கையாகப் பிழிந்து எடுத்து வைத்திருந்தாள். அதிலும் பார்வைத் திறன் பற்றிய அந்த கருத்தரங்கு உடனடியாக நடப்பதில் அவளுக்கு அத்தனை மகிழ்ச்சி.

தனது பல கேள்விகளுக்கு விடை கிடைத்து குழப்பங்கள் தீர்க்கப்பட்டு அமரனின் வாழ்க்கை முழுமையாக மாறக்கூடிய சூழல் தோன்றிவிட்டால்..??

நினைக்கும்போதே நெஞ்சம் பரவசம் அடைந்தது. அவளுக்குள் ஏதோ பெரிய நம்பிக்கை… எப்படியேனும் இருண்டு போன அவனது உலகத்தை ஒளிமயமாக்கிவிட முடியும் என்ற நம்பிக்கை. 10 சதவிகிதம் பார்வை உள்ளவன் என்பதே அவளது நம்பிக்கைக்கு ஒரு பெரிய காரணி.

ஒருமுறை இளங்கோ வற்புறுத்தலில் முழு பரிசோதனைக்காக அவனை அழைத்துச் சென்றபோது அவனது கண் சம்பந்தப்பட்ட ரிப்போர்ட் அடங்கிய ஃபைலை திலோவிடம் பேசியபோது அவளிடம் கொடுத்திருந்தான் இளங்கோ. அவன் கண்களில் உள்ள பாதிப்புகள் குறித்து இவள் ஆர்வமாக கேட்க அவற்றை அவளிடம் காட்டி விவரித்துக் கொண்டிருந்தான். அதன் பின்பு இன்னும் ஏதேதோ பேசி அவள் வீட்டிற்கு கிளம்பியபோது அந்த கோப்பினையும் தன்னோடு எடுத்துச் சென்றிருந்தாள். இளங்கோவும் அதனை மீண்டும் அவளிடம் இருந்து வாங்க மறந்தும் போயிருந்தான்.

இன்று அந்த கோப்பு அவளிடம் பத்திரமாக உள்ளது. தலைசிறந்த மருத்துவர்களிடம் நேரில் காட்டி உரிய ஆலோசனைகளை எளிதாகப் பெறமுடியும். நிறைய நம்பிக்கைகளை சுமந்தபடி அந்த கருத்தரங்கிற்குள் நுழைந்திருந்தாள் திலோ.

அவளே எதிர்பார்க்கவில்லை… ஒரு மாநாடுபோல் அந்த கருத்தரங்கில் அத்தனை கூட்டம். விதவிதமான கண் சார்ந்த குறைபாடுகளுடன் நோயாளிகளும்கூட நிறைய கலந்து கொண்டனர். இந்தியாவின் தலைசிறந்த கண் மருத்துவர்களுடன் உலகில் வெவ்வேறு பகுதிகளில் இருந்தும் திறமை மிக்க கண் மருத்துவர்கள் பங்கு கொண்டிருந்தனர்.

பெரிய திரையில் அனைவருக்கும் புரியும்படியாக செயல்முறை விளக்கங்கள், சாதகங்கள், பாதகங்கள் என்று அனைவருக்கும் புரியும்படி எளிய ஆங்கில வடிவை பயன்படுத்தி அந்த கருத்தரங்கு அவளுக்கு அத்தனை பயனுள்ளதாக அமைந்தது.

நிறைய குறிப்புகள் எடுத்துக் கொண்டாள்… நிறைய மருத்துவர்களின் பெயர்களையும் அலைபேசி எண்களையும் குறித்துக் கொண்டாள். மருத்துவர்கள் கொடுத்த விளக்கங்களை தாண்டி பார்வையாளர்கள் பகுதிகளில் பகுதியில் இருந்தும் கேள்விகளும் அதற்கான விளக்கங்களும் கொடுக்கப்பட்டன.

அமரன் சம்பந்தப்பட்ட பிரச்சனையை கேள்வியாக எழுப்பி இருந்தாள் திலோ.

“பேஷன்ட் உங்ககூட வந்திருக்காங்களா..?”

“இல்ல சார்… ஆனா அவர் சம்பந்தப்பட்ட ரிப்போர்ட் ஃபைல் என்கிட்ட இருக்கு…”

எப்படி ஒரு சூழலில் அவன் பார்வை குறைபாடு ஏற்பட்டது இன்றைய நிலவரத்தில் அவன் பார்வையின் தன்மை என்ன என்பதை வாய்மொழி விளக்கமாக கூறியவள் அந்த ரிப்போர்ட் அடங்கிய ஃபைலையும் மருத்துவக் குழுவிடம் ஒப்படைத்தாள்.

“பொதுவான விளக்கங்கள் மட்டும்தான் இங்கு சொல்ல முடியும். தனிப்பட்ட முறையில் இதுபத்தி பேசணும்னா நீங்க தனியா காண்டாக்ட் பண்ணுங்க…”

“எப்போ சார் பாக்கலாம்..?”

“நாளைக்கு ஈவினிங் நாலு மணிக்கு வாங்க…”

மகிழ்வோடு தலையாட்டிக் கொண்டவள் கருத்தரங்கு முடிந்தபின் அங்கேயே ஒரு விடுதியில் தங்கி மறுநாள் அந்த மருத்துவர் சொன்ன நேரத்திற்கு அந்த குறிப்பிட்ட முகவரிக்கு சென்றிருந்தாள்.

நோயாளிகளோடு வந்தவர்களுக்கு கருத்தரங்கிலேயே சில பல விளக்கங்கள் எளிதாக கொடுக்கப்பட்டன. ஆனால் இவளுக்கு கோப்பினை கையில் வைத்து விளக்கம் கொடுக்க வேண்டிய கட்டாயம். அவளது கண்களிலும் பேச்சிலும் ஒரு பரிதவிப்பும் தேடுதலும் நிறைய தெரிந்தது. கூடுதலாக சம்பந்தப்பட்ட அந்த நோயாளி தான் திருமணம் செய்து கொள்ளப் போகும் நபர் என்றும் இதற்காகவே தான் வெகு தொலைவில் இருந்து வந்திருப்பதாகவும் அவள் கூறி இருந்ததால் அவளை தனிப்பட்ட முறையில் சந்திக்க இசைந்திருந்தார் அந்த இளகிய மனம் படைத்த மருத்துவர்.

அமரனின் ஸ்கேன் ரிப்போர்ட் எழுத்து வடிவக் குறிப்புகள் என்று அனைத்தையும் ஆழமாக ஆராய்ந்தார் அந்த மருத்துவர். பின்னர் யாருக்கோ தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். பின் வேறு ஒரு பெண் மருத்துவரின் முகவரி கொடுத்து அவரை சென்று பார்க்கும்படி கூறினார்.

அசராமல் அங்கும் சென்று அவரை சந்தித்தாள் திலோத்தமா. மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ரேஷ்மா பண்டிட் என்ற அந்த புகழ் பெற்ற பெண் மருத்துவரோடு அவரது வெளிநாட்டு மருத்துவத் தோழியான ரேச்சல் என்பவரும் உடன் இருந்தார்.

ஆங்கிலத்தோடு ஹிந்தியும் சரளமாக பேசவரும் என்பதால் ரேஷ்மாவுடன் ஹிந்தியிலேயே பேசத் தொடங்கி இருந்தாள் திலோ.

மருத்துவர்கள் இருவரும் அமரனின் அறிக்கையை தெளிவாக ஆராய்ந்தனர். மருத்துவ மொழியில் தங்களுக்குள் நிறைய பேசிக் கொண்டனர். ரேஷ்மா ஏதோ கூறுவதும் ரேச்சல் அதற்கு சங்கடமாக இடவலமாக தலையசைப்பதும் தெரிந்தது.

“டாக்டர்…”

ஆர்வ மேலீட்டில் அழைத்தவளை திரும்பிப் பார்த்தார் ரேஷ்மா.

“அவருக்கு பார்வை கிடைக்கிறதுக்கு வாய்ப்பு இருக்கா..? எனக்குள்ள பெரிய நம்பிக்கை... சாத்தியமே இல்லைன்னு தெரிஞ்சிருந்தா இந்த ரெண்டு நாளா மாறி மாறி என்னை வந்து பார்க்க சொல்லி இருக்க மாட்டீங்க. அப்ப ஏதோ வாய்ப்பு இருக்குதுன்னுதானே அர்த்தம். ரொம்ப செலவாகுமா..? எவ்வளவு செலவானாலும் என்னால சமாளிக்க முடியும்… அவருக்கு எப்படியாவது பார்வை கிடைச்சிடணும்… அதுக்கு என்ன பண்ண சொன்னாலும் நான் பண்ணுவேன்…”

முட்டி வந்த கண்ணீரோடு கூறியவள் தனது கைப்பேசியில் இருந்த அவனது சில வீடியோக்களை அவர்களிடம் காட்டினாள்.

மிகப்பெரிய இசை ஜாம்பவான் அவன் என்பது அவர்களுக்கு புரிந்து போனது. இளமையும் அழகும் திறமையும் கொண்ட ஒருவன் பார்வை குறைபாட்டினால் மனதளவில் எவ்வளவு பாதிக்கப்பட்டிருப்பான் என்பது மருத்துவர்களாக அவர்களுக்கும் புரிந்தது. அதிலும் குறிப்பாக 10 வயதுவரை உலகின் அழகை ரசித்தவன் இன்று இருண்ட உலகத்திற்குள் விழுந்து கிடப்பது என்பது மன ரீதியான எத்தனை வேதனைகளை அவனுக்குள் கொடுத்துக் கொண்டிருக்கும் என்பது அவர்களுக்கு தெரியாமல் இல்லை.

தானே அவர்களிடம் நிறைய கேள்விகளை எடுத்து வைத்தாள் திலோத்தமா… அவள் கேள்விகளும் விளக்கங்களும் அவர்களுக்கு ஆச்சரியமாககூட இருந்தன. நிறைய விஷயங்களை கிரகித்து வந்திருக்கிறாள் என்பதும் புரிந்தது.

“நீங்க கொடுத்த ரிப்போர்ட்படி சிவியர் ட்ரீட்மெண்ட் கொடுத்தாலும் பத்து சதவிகிதம் பார்வை வரத்தான் வாய்ப்பு இருக்கிறதாதான் இந்த ரிப்போர்ட்ல எல்லாமே இருக்கு. பார்த்தவரைக்கும் அவருக்கு அதற்கான சாத்தியங்கள் அவ்வளவுதான் தெரியுது. ஆனா வேற சில சிகிச்சைகள் மூலமா அவரோட பார்வையை திரும்ப கொண்டு வர சாத்தியங்கள் இருக்கு. ஆனா உறுதியா சொல்ல முடியாது. ஏன்னா இதுக்கு முன்னால அந்த மாதிரி சிகிச்சைகள் எடுத்து ஃபெயிலியர் ஆன ட்ரீட்மெண்ட்ஸும் நாங்க பார்த்திருக்கோம்…”

விளக்கங்கள் கூறிய ரேஷ்மாவிடம் நிறைய பேசினாள்… சில தர்க்கங்கள் செய்தாள்... முரண்பாடான விஷயங்கள் நிறைய ஆலோசிக்கப்பட்டன… நிறைய மறுக்கப்பட்டன.

மூன்று நாட்கள் அவர்கள் செல்லும் இடங்களுக்கெல்லாம் பின் தொடர்ந்து சென்று அவர்கள் முன் நின்றாள்… வாதிட்டாள்… கெஞ்சினாள்… சில பொழுதுகளில் அழுதாள்.

அவளது விடாத போராட்டத்தில் அவள் தனது வருங்கால கணவனின் மேல் கொண்டுள்ள காதலை கண்டு அயர்ந்துதான் போயினர் அந்த மருத்துவர்கள்.

“எங்களை விட மாட்டியாம்மா..?” அவளை பரிதாபமாக பார்த்தபடிதான் கேட்டார் ரேஷ்மா.

“கண்டிப்பா விடமாட்டேன் டாக்டர்… நீங்க ரெண்டு பேரும் என் கண்ணுக்கு தெய்வமா தெரியிறீங்க… என் அமருக்கு உங்களால பார்வையை திருப்பிக் கொடுக்க முடியும்…”

“நீ சொல்ற விஷயங்கள் இன்னும் சட்டப்படி அங்கீகரிக்கப்படவே இல்ல… அது பெரிய குற்றமா தெரியும்மா. நாங்க டாக்டர்ஸ்… எங்களுக்கும் சில நீதி நெறிமுறைகள் இருக்கு…”

“பார்வை இழந்த ஒருவருக்கு திரும்பவும் பார்வையை கொடுக்கிறது ஒரு உயிர் சக்திதானே… அதை கொடுக்கிற கடவுள் தானே நீங்க… உங்களை நான் கடவுளாதான் பார்க்கிறேன். எனக்காக எங்க காதலுக்காக என் அமரோட எதிர்காலத்துக்காக இந்த ட்ரீட்மெண்ட் பண்ணுங்க டாக்டர்… ப்ளீஸ்…”

அவர்கள் காலிலேயே விழுந்திருந்தாள் திலோத்தமா.

“என்னம்மா இது..?” என்றபடி அள்ளித் தூக்கி நிறுத்திய ரேஷ்மாவின் முகத்திலும் அவளை பார்க்க பார்க்க அத்தனை வேதனை.

“உன் காதலுக்காக எந்த எல்லைக்கும் போவியா நீ..?”

“என் அமருக்காக அவர் சந்தோஷத்துக்காக நான் போவேன் டாக்டர்…”

அவள் உறுதியில் அசந்து போய்தான் அவளை பார்த்தார் ரேஷ்மா.

“எனக்கு ஒரு நாள் டைம் வேணும்… நான் சில பேர்கிட்ட கலந்து கன்சல்ட் பண்ணி ஓகேன்னா மட்டும்தான் இதற்கு உடன்பட முடியும்…”

மகிழ்ச்சியாக தலையசைத்து அதற்கும் ஒப்புதல் தெரிவித்திருந்தாள் திலோ. அதன் பிறகு மறுநாளும் அவர் முன் சென்று நிற்க இழுத்து பெருமூச்சுவிட்டு அவளை ஏறிட்டார் ரேஷ்மா.

“ஏதோ ஒரு விஷயம் உன்கிட்ட என்னால மறுப்பு சொல்லவே முடியல... உனக்காக பண்றோம்… ஆனா ரொம்ப கான்ஃபிடன்சியலா இது இருக்கணும்… இன்னொரு முக்கியமான விஷயம்… இதுக்கு பேஷண்ட் முழுமையான சம்மதம் தெரிவிக்கணும்… அவரோட முழுமையான சம்மதம் கிடைச்சு கையெழுத்து போட்டு கொடுத்தா மட்டும்தான் இந்த சிகிச்சையை நாங்க ஆரம்பிப்போம்...”

திட்டவட்டமாக கூறியிருந்தார் ரேஷ்மா.

“ஓகே டாக்டர்… அவர் சம்மதிப்பார்… நிச்சயமா சம்மதிப்பார்… தேங்க்யூ டாக்டர்… தேங்க்யூ சோ மச்…” என்றவள் சாஷ்டாங்கமாக அவர் காலில் விழுந்திருந்தாள்.

இந்த நொடியே அமரனுக்கு பார்வை கிடைத்துவிட்டது போன்ற மகிழ்ச்சி. அவள் ஆராய்ந்தவரையில் ரேஷ்மா மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சைகளை கூட வெற்றிகரமாக முடித்து பல பேருக்கு உலகின் அழகை காட்டியவர்.

அவர் மேற்கொள்ள போகும் சிகிச்சையில் அமரனுக்கு உறுதியாக பார்வை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையோடு அதே மகிழ்ச்சியை மனதில் தேக்கி ஊர் வந்து சேர்ந்திருந்தாள் திலோ.

இளங்கோ மற்றும் அமரனின் எதிரில் அமர்ந்தவள் அவன் கண் சிகிச்சைக்காக அவள் மெனக்கட்ட விஷயங்களைப் பற்றி கூறியிருந்தாள்.

தெளிவாக சில விஷயங்களை மறைத்தும் இருந்தாள்.

அவள் அவர்களிடம் பேசியதுவரை அமரனின் சிகிச்சைக்காக பெரிய நிபுணர்களை சந்தித்து அவர்களிடம் திருப்தியான அறிக்கைகளை வாங்கி வந்திருக்கிறாள் என்றவரையில் அவர்களது மனதில் ஏறி இருந்தது. இருவருமே பேசும் சக்தியை இழந்து அமைதியாக அமர்ந்திருந்தனர்.

“ரேஷ்மா மேடம் இப்ப திரும்பவும் ஃபாரின் போயிட்டாங்க. அவங்க வர்றதுக்கு எப்படியும் இன்னும் நாலஞ்சு மாசம் ஆயிடும். டிரீட்மெண்ட் அதுக்கு அப்புறம் ஆரம்பிக்கலாம்னுதான் சொல்லி இருக்காங்க… உறுதியா கண் பார்வை திரும்ப கிடைச்சிடும்… எனக்கு நம்பிக்கை இருக்கு அண்ணா…”

இளங்கோவிடம் கூறியவள் அவள் பேசியவற்றை அமைதியாக கேட்டபடி சோபாவில் சாய்ந்து அமர்ந்திருந்த அமரனை திரும்பிப் பார்த்தாள்.

அவனது மௌனத்திற்குப் பின்னே மனதிற்குள் பேரிரைச்சல் நிகழ்ந்து கொண்டிருந்தது.

“அமர்…”

அவள் அழைப்பில் அசையாதவன் சில நொடிகளில் சிலீர் என உடலில் ஏற்பட்ட ஒருவித மின்சார பாய்ச்சலில் படக்கென நிமிர்ந்து அமர்ந்தான்.

அவன்முன் மண்டியிட்டு அவன் கைகளை பற்றிக் கொண்டு அமர்ந்திருந்தாள் திலோத்தமா.

“உங்களுக்கு பார்வை திரும்ப கிடைக்குது கிடைக்கல… அதெல்லாம் எனக்கு இரண்டாம் பட்சம்… இப்பகூட நான் இவ்வளவு மெனக்கெட்டு அங்க போனதுக்கு காரணம் எனக்காக இல்ல. உங்களுக்காக… உங்களுக்குள்ள நீங்க போட்டு வச்சிருக்கிற அந்த வேலியை உடைக்கணுமே அதுக்காக... எங்கிட்ட உங்களை நெருங்கவிடாம தடுக்குதே உங்களோட அந்த சுயஇரக்கம் அதை உடைக்கணும் அதுக்காக... உங்க மனசுக்குள்ள நான் நுழைஞ்சிட்டேன்… அது எனக்கு தெரியும் அமர். ட்ரீட்மெண்ட் பண்ண இன்னும் நாலஞ்சு மாசம் ஆகும்… அதை அப்புறமா பாத்துக்கலாம்… அவங்களும் 100% நம்பிக்கை கொடுக்கல. ஆனா வாய்ப்புகள் நிறைய இருக்குன்னு சொன்னதே பெரிய நம்பிக்கை இல்லையா..? இ..இப்போ எனக்கு அதெல்லாம் பிரச்சனை இல்ல. உங்களுக்கு பார்வை திரும்ப கிடைக்கணும்னு நான் நினைக்கிறதுகூட உங்களுக்காகத்தான். ஆ..ஆனா உங்களை இப்படியேதான் நான் நேசிக்கிறேன்… நேசிப்பேன்... எ..என் காதல் நிஜம் அமர்… உ..உங்களுக்காக உங்ககூட நான் எப்பவும் இருப்பேன்…”

குரல் அடைக்கப் பேசியவளின் விழிகளில் இருந்து இரு சொட்டு கண்ணீர் அவனது கைகளில் விழுந்தது.

அவளையே நெகிழ்வோடு பார்த்துக் கொண்டிருந்த இளங்கோவின் விழிகளிலும் கண்ணீர்.

கண்களை துடைத்தபடியே எழுந்தவள் இளங்கோவிடம் கிளம்புவதாக தலையை மட்டும் ஆட்டிக் கொண்டு இன்னும் கூடுதலாய் கிளர்ந்த அழுகையை அடக்கியபடி அங்கிருந்து சென்றிருந்தாள்.

அவளது விழிநீர் பட்ட பனிப்பாறை ஒன்று மொத்தமாய் உடைந்து உருகி தன் தன்மையை மாற்றி இருந்தது.

(தொடரும்)
 
Last edited by a moderator:

Gowri Karthikeyan

Well-known member
இது except பண்ணவே இல்ல....இவளோ மெனக்கெடல்.....simply awesome திலோ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️
 
Top Bottom