• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இது காதல் காவியம் - 15

நிதனிபிரபு

Administrator
Staff member
“ரொஷான்….தொப்பிக்கல ஆப்ரேஷன் முடிவுக்கு வரும் போல இருக்கு.உன்னோட தலைமைல அங்க போனா இன்னும் பலமா இருக்கும்னு நான் உன்னத்தான் ரெக்கமன்ட் பண்ணிருக்கன்.
அநேகமா நீ இந்த மாசத்துக்குள்ள அங்க போக வேண்டி வரும்.” ஒரு தகவலாக மட்டும் சொன்னார் லெப்டினன் ஜெனரல் சில்வா.

“ஓகே சார்.பிரச்சினை இல்ல நான் போறன்.இங்க க்ளியர் ஆனாலும் எப்போவுமே அலெர்ட்டா இருக்கனும்.செக்கிங் பண்ற விஷயத்துல தளர்வா இருக்காம பார்த்துக்கனும் சார்.நான் சில இடங்கள் மைண்ட்ல வச்சிருக்கன்.அங்கல்லாம் செக் போஸ்ட் கட்டாயம் போட்டா நல்லாருக்கும்.நீங்க தான் அதுக்கு ஏற்பாடு பண்ணணும்.”

“சார்...இன்னொரு விஷயம் இதுல இறந்த ராணுவங்கள்ட குடும்பத்துக்கு அறிவிப்புக் கொடுத்திட்டம்.இந்த நிலமைல அவங்க வீட்டுக்கு போக முடியாட்டியும் ஒரு கால் பண்ணி பேசலாம். நீங்களோ இல்லாட்டி யாரோ ஒருத்தர் பேசினீங்கன்னா கொஞ்சமாவது ஆறுதலா இருக்கும்.”

“இங்க இனி பிரச்சினை வராதுன்னு நம்புவோம்.ஆனா நம்ம படையில இருக்கிறவங்க மற்ற இனங்களை எந்த சந்தர்ப்பத்திலயும் பாகுபாடு பார்க்க கூடாது.வீணாண வார்த்தைகள் தான் பல விஷயங்களத் தூண்டுது.பாதுகாப்பு வீரர்கள் கடமையே எல்லா இனத்துடனும் சமத்துவமா நடந்துக்கிறதில் தான் இருக்குது.நாளைக்கி மீடியா ரிப்போர்ட் கொடுக்கிறப்போ இந்த விஷயத்த சொல்லப் பாருங்க சார்.இதை நான் உங்களுக்கு சொல்லிருக்க கூடாது தான்.ஆனா சார் நாம சின்ன விஷயம் என்று நினைப்பதுதான் பெரிய பெரிய சம்பவமாகுது.”

“.குட்...ஓகே ரொஷான் நான் பார்த்துக்குறன்.நான் கூட சில விஷயங்களை கேள்விப்பட்டேன்.
நான் கட்டாயம் சொல்றன்” என்றார்.

“ம்ம்ம்….லெப்டினன் கடுமையான மன உளைச்சல்ல இருக்காரு போல.இனி உன் குடும்ப விஷயம்.நீ பார்த்துக்க.என்னோட தரப்புல இருந்து உன்மேல கேஸ் வராம பார்த்துகிட்டன்.அந்த பெண்,அதான் உன் மனைவிய புதன் கிழமை ஸ்டேசன் கூட்டிட்டு போ.விசாரணை இல்ல.சும்மா ஏதும் கேட்பாங்க.நீ கூடவே இரு.” என்றார்.

“ஓகே சார்..நான் எப்போ தொப்பிகல போகனும்.நீங்க கடிதம் அடிக்கிற ஏற்பாடுகள பண்ணுங்க.நான் என் டீம்கிட்ட சொல்லி தயாராக்குறன்” என்றான்.

கடமையில் நேர்த்தி என்பது அவனைப் பார்த்துக் கற்க வேண்டியது.இப்போது தான் கல்யாணம் வேறு.ஆனால் அவர் இடமாற்றம் பற்றி சொன்ன உடனேயே அதற்காக தன்னை மனதளவில் தயார்படுத்தி விட்டான்.தனக்குரிய பொறுப்புக்களை அவன் யாருக்காகவும் விட்டுக்கொடுப்பதில்லை.

“ரொஷான்….உன் மனைவி லக்கியா? அன்லக்கியா ன்னு என்னால கெஸ் பண்ண முடியல்ல.உன்னோட கடமை உணர்ச்சி, பொறுப்புணர்ச்சி இரண்டும் உனக்கு சவால் தான்.நிறைய பேர் , ஏன் நான் கூட திணறிப்போற விஷயம்.குடும்பமா? கடமையான்னு.அதுக்குள்ளயும் சமனிலை தவறிடும்.உன் மனைவில நிறைய அன்பு இருக்குன்னு தெரியிது.ரெஜிஸ்ட்டர் பண்ணுற நாள் உன் வேகத்தைப் பார்த்தன்.அவள கைது பண்ணிடுவாங்க என்ற பயத்துல ஒரே நாள்ல எல்லாத்தையும் ஏற்பாடு பண்ணிட்ட. காட் ப்ளஸ் யூ போர்த்” என்றார்.

“நீ போ….ஏதும்னா இன்ஃபார்ம் பண்ணுவன்.நான் இப்ப கொழும்பு போகப் போறன்.இங்க வர்ர தேவை எனக்கு இனியில்ல.உனக்கு எப்போ என்ன உதவி வேண்டுமென்றாலும்என்ன கான்டக்ட் பண்ணு.பிறகு பார்க்கலாம்” என விடை கொடுத்து அனுப்பினார்.

செம்மண் வீதியில் ஜீப்பை வேகமாக செலுத்திக் கொண்டிருந்தான்.
அவனது மனதில் ஓடிக்கொண்டிருந்த எத்தனையோ கேள்விகளுக்கு இப்போதெல்லாம் பதிலே இல்லை.முதலெல்லாம் கேள்வி பதில் எல்லாம் அவன் மட்டும் தான்.இப்போது என்னாயிற்று? மீரா தனக்கு யார்?.உறவா? சில்வா சார் மனைவி என்றாரே.அது உண்மைதானா? மீரா மனைவியாகிவிட்டால் அவளைக் காப்பாற்றிடலாம்.தேவையில்லாத விசாரனையில் தானும் மாட்டத்தேவையில்லை என்ற காரணத்திற்கு மட்டும் தானா அவளைத் திருமணம் செய்ய சம்மதிச்சன்? அவளப் பார்த்தா மட்டும் என் அலைக்கழிப்புகள் எங்க போகுது? வளைந்த பாதையில் கவனத்தை செலுத்தி திருப்பினான்.

நான் தொப்பிக்கல போறப்போ அவள ஊருக்கு கொண்டுவிடனும் எனத் தீர்மானித்தவனால் அதுக்குப் பிறகு?? என கற்பனையும் பண்ண முடியாதிருந்தது. நாட்டின் சட்டப்படி உரிமையான மனைவி தான் என்றாலும் ஏனோ வலுக்கட்டாயமாக உரிமை எடுக்க அவனுக்குத் துணிவில்லை.அவனைப் பற்றித்தெரிந்தவர்கள் இதெல்லாம் கேள்விப்பட்டால் கட்டாயம் சிரிப்பார்கள்.ஜீப்பை கேம்ப்பிற்கு விட்டவன் தற்காலிகமாக மீராவின் சிந்தனையிலிருந்து வெளியேறி கடமைக்குள் தன்னை மூழ்கவிட்டான்.

மீராவுக்கு வயிறு காந்தியது.
பின்னே?.நேற்று இரவு ஒரே ஒரு ரொட்டி மட்டுமே.காலையில் ஒரு டீ கூட குடிக்கவில்லை.இரவு எட்டு மணியாகிவிட்டிருந்தது.தண்ணி மட்டும் குடித்து பசியை அடக்கிக் கொண்டிருக்கிறாள்.கிட்சனில் இருக்கும் உமி அடுப்பினை எப்படிக் கையாள்வதென்றே அவளுக்குத் தெரியவில்லை.இல்லாவிட்டால் டீயாவது குடித்திருப்பாள்.கேஸ் அடுப்பை பற்றவைக்க மட்டுமே தெரியும்.

சமைக்க அறவே தெரியாது.பாட்டி எத்தனையோ தடவை திட்டியிருக்கிறார்.கழுதை வயசாகுது.சமையல் பழகுற எண்ணமே இல்லியா உனக்கு?? அப்போல்லாம் பார்த்துக்கலாம் பாட்டி.நான் ஊர்ல தானே இருக்கப்போறன்.இல்லாட்டி என்ன? போற இடத்துக்கு உன்னக் கடத்திட்டு போய்டுவன்.என சிரித்து வைப்பாள்.

“ஹய்யோ….பசிக்குதே.மாலாம்மா இல்லாட்டி நம்ம பட்டினி தானா?.அவன் போற இடத்துல கொட்டி இருப்பான்.வீட்டுல ஒருத்தி இருப்பாளே.பசிக்குமேன்னு அவனுக்கு நினைப்பா இருக்கப் போகுது.ரொட்டி சுடலாம்.அது பெரிய வேலை இல்லியே.மாலாம்மா செய்றப்போ ஈஸியா இருக்கு.ட்ரை பண்ணலாம்” என முழு மூச்சாய் இறங்கினாள்.மாவில் தண்ணி அதிகமாக இருந்ததால் பிசைய முடியவில்லை.மாவை கொட்டினாள்.தண்ணி போதவில்லை எனத்தோன்ற ஊற்றினாள்.இப்போது மாவு அதிகமாகிவிட்டிருந்தது.இப்படியாக மாறி மாறி இரண்டையும் கலந்து ஒரு வழியாக மா தீர்ந்துவிட்டிருந்தது.

ஆனால் சரியான பதம் மட்டும் வரவில்லை.சரி என மனதைத் தேற்றி ஒரு வழியாய் வடிவமற்ற ரொட்டியைத் தயாரித்தவள் அடுப்பைப் பற்ற வைக்கும் ஆராய்ச்சியில் இறங்கினாள்.
எண்ணை ஊற்றி நெருப்பை பற்ற வைத்து குச்சியை போட்டாள்.தீ அதிகமாகி அடுப்பைச் சுற்றி எரிந்தது.தண்ணியை அள்ளி ஊற்றி ஒரு வழியாக தீயை அணைத்தாள்.ஆனால் அடுப்பு ஈரளிப்பாகிவிட்டது.பசி ஒரு பக்கம்,தீச்சூடு பட்ட எரிச்சல் ஒரு பக்கம் என அவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.சிணுங்கினாள்.

என்ன நடந்த? என்ற சத்தத்தில் திரும்ப, அது ரொஷான் தான். அவன் வந்ததைக் கூட உணராதளவு சமையலில் இறங்கியிருக்கிறாள்.
அவனைக்கண்டதும் எல்லாமாக சேர்ந்து அவன் மீது கொலை வெறியே வந்தது. அவளின் தோற்றத்தில் பக்கத்தில் வந்தான்.முகம் முடி ஆடை என பாரபட்சம் பாராமல் மாவை பூசி வைத்திருந்தாளே.கண்கள் வேறு கலங்கியிருந்தது. அவளை நோக்கி கையை நீட்ட அவளோ பட்டென்று தட்டி விட்டாள்.அவன் கண்களில் இருந்த கனிவை கண்டுக்காமல் மாக்கலவையை எடுத்து அவன் மேல் விசிறியடித்தவள்

என்ன?? என்றபடி சலனமற்ற பார்வையுடன் பக்கத்தில் வந்தவன், அவள் திமிறத் திமிற கையைப் பற்றி அவனது அறைக்கு கூட்டி வந்தான்.அங்கிருந்த கண்ணாடிக்கு முன்னால் அவளை நிறுத்தி பின்னாலிருந்து அசையாதவாறு அவள் தோளைப்பற்றி நிறுத்தினான்.அவளால் இன்ச் கூட அசையமுடியவில்லை.காரணம் கண் முன்னே தெரிந்த அவள் விம்பம்.

முகம் முழுக்க மாவு.அவள் அணிந்திருந்த கறுப்பு நிற ஆடை வெள்ளையாகி இருந்தது.கண்கள் விரித்து தன்னையே வியந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
வெட்கமாகிப் போனது.பைத்தியம் என்று நினைத்திருப்பான்.விழி உயர்த்தி அவன் விம்பத்தைப் பார்த்தாள்.அவனது சட்டையில் அவள் எறிந்து மாக்கலவை திப்பி திப்பியாய் இருந்தது.பயந்த பார்வையுடன் அவன் கண்களைப் பார்த்தாள்.

அவன் முகத்தில் துளி கோபம் இல்லை.அவன் கன்னத்தை அவள் கன்னத்தோடு வைத்து,அவள் கைகளில், தன் கைகளை வைத்து அவள் வயிற்றோடு சேர்த்து அணைத்துப் பிடித்தான்.ஒரு நிமிடம் அதிர்ச்சியானவள்,திமிறினாள். அவளால் எதையும் அசைக்க முடியவில்லை.அவன் கண்களை மூடியவாறு வேறு உலகத்தில் இருந்தான்.

“பைத்தியமா?.என்னை உடுங்க.நான் க்ளீன் ஆகனும்” என்றாள்.
“உடுங்க.ப்ளீஸ்”என கெஞ்சிப் பார்த்தாள்.கால்களால் அவன் காலை மிரித்துக்கூடப் பார்த்தாள்.”எரும மாடா நீ…நீங்க..? என கத்தினாள்.ஆம் என்பதைப் போல அவன் எதற்கும் அசையாமல் நின்றான்.ஒரு கட்டத்தில் அவளும் ஓய்ந்து போனாள்.

அவள் கண்ணீர், அவன் கைகளில் விழுந்த போதுதான் அவன் விழி திறந்தான்.பேபி…. என்று அவளை இன்னமும் தன்னோடு இறுக்கினான்.மீராவுக்கு மூச்சுத் திணறியது.

துளி விரசமில்லாத அந்தப் பார்வை எந்தப் பெண்ணையும் தடுமாற வைக்கும்.அவன் பார்வை மீராவை என்னவோ செய்தது.அந்த மெளனத்தைக் கலைக்க,

“பசிக்கிது” என்றாள்.

அவன் சட்டென்று அவளை விட்டான். சாப்பிடல்ல??? அவனது கேள்வியில் நின்றிருந்த பசி அதிகமாகத் தெரிய,பழய கோபத்திற்குத் திரும்பினாள் மீரா.இயன்ற பலம் கொண்டு அவனைத் தள்ளிவிட்டு
வேகமாகச் சென்று தன் அறைக் கதவை படாரென்று மூடினாள்.

முதலில் அவனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை.கிட்சனின் அலங்கோலத்தைப் பார்த்த பின்னர் தான் அவனுக்குப் புரிந்தது.அதே வேகத்தில் வெளியே சென்றவன் பார்சலுடன் வந்தான்.எவ்வளவோ தட்டியும் அவள் கதவைத் திறக்கவில்லை.
*******
ஈரத்தலையைத் துவட்டியவாறு வெளியில் நின்றாள் மீரா.கேம்பஸ் நாட்களில் நண்பர்களுடன் சேர்ந்து பேராதனைப் பூங்காவிற்குப் போனால் ஹாஸ்டல் வர இருட்டாகிவிடும்.வந்த உடனே குளிர் என்றும் பாராமல் குளித்து விடுவாள்.

“நம்மாள முடியாதுப்பா…
இருந்தாலும் நீ சுத்தமான பத்தினி தான் டி.என கேலி பண்ணுவார்கள்.”

“ஹேய்….இதெல்லாம் ஒரு குளிராடி?? ஊர்ல இரவு ஒன்பது தாண்டின பிறகு தான் ஆத்துல குளிப்போம்.தண்ணி எப்டி சில் தெரியுமா?? உடம்பு நல்லாருக்கும்.
இரவு தூக்கம் சுகமா இருக்கும்” என்பாள்.

இந்த ஊரில் வெட்கை அதிகம் என்றபடியால் மாலை நான்கு ஐந்து மணி வாக்கில் குளித்து விடுவாள்.தாமதமாகியும் குளிக்கலாம் தான் அதற்கிடையில் அவன் வந்தால்??? என இப்டி நேரத்தோடு ப்ரஷ்ஷாகி விடுவாள்.

கேம்பஸின் நினைவுகள் வந்து போனது.இன்டர்வியூக்கு நான் போகவும் இல்ல.இன்னேரத்துக்கு வேற யாரையும் செலெக்ட் பண்ணியிருப்பாங்க.எரிந்து போன சான்றிதளை நினைத்துப் பார்த்தவளுக்கு அவ்வளவு வலித்தது.ஒவ்வொன்றின் பின்னாலும் அப்பாவின் நம்பிக்கையும் அவளது முயற்சியும் மட்டுமே இருக்கிறது.பைக்கின் ஹார்ன் ஒலியில் சல்வாரின் மேலால் டவலை துப்பட்டா போல விரித்துப் போட்டுக் கொண்டு சென்றாள்.

“நன்றி அண்ணா” என்று பார்சலை வாங்கி உள்ளே வைத்தாள்.இரவு உணவு சரியாக ஐந்து மணி வாக்கில் அனுப்பி விடுவார்கள்.
ரொஷான் அந்த ரொட்டி சம்பவத்திற்குப் பிறகு இந்த ஏற்பாடு பண்ணி வைத்திருந்தான்.

வீட்டிலிருந்து யாரோ சமைத்த உணவு அனுப்பினார்கள்.
காலையிலும் ஒரு பெண் காய்ச்சிய பால் கொண்டு வந்தாள்.அவன் குடித்து மீதியை ப்ளாஸ்க்கில் ஊற்றி வைத்திருப்பான்.ஆனால்,ரொஷான் சென்ற பிறகே தான் எப்போதும் வெளியே வருவாள்.பகல்,இரவு என இரு வேளையும் அவன் சாப்பிட்டே வருவதால் அவளுக்கு மட்டுமே உணவு வரும்.

சிலுசிலுவென்று அடித்த காற்றை அனுபவித்தாள் மீரா.அந்தப் பகுதியில் எப்போதும் குரங்கின் நடமாட்டம் அதிகம்.அடர்ந்த புளிய மரமொன்று குவாட்டஸின் பின்பக்கம் இருந்தது.அந்த மரம் குரங்குகளின் உறைவிடமாய் இருக்கும்.அங்குமிங்கும் பாய்ந்தும் தாவியும் திரியும் குரங்குகளின் விளையாட்டைப் பார்ப்பதை பொழுதுபோக்காக வைத்திருந்தாள் மீரா.எவ்வளவு நேரம் தான் அழுவதும் யோசிப்பதும்.

கடவுள் சாட்சியாக வைத்து கழுத்தில் தாலி கட்டுவது தான் திருமணம் என்று சின்ன வயதிலிருந்தே பார்த்திருக்கிறாள்.எவ்வளவு படித்தாலும் நமக்கென்று இருக்கும் சில தனித்துவமான அடையாளங்களை மனதளவிலும் மாற்றிக்க முடியாதே.சட்டங்களை விட சில சடங்குகள் மேலானது.அவளுக்கும் ரொஷானுக்கும் நடந்ததை வலுக்கட்டாயமாக மறுத்துவிட்டாள்.
ஒரு சைன் பண்ணா அது கல்யாணமா?? ஆனா என்ன காரணத்துக்காக அப்படி பண்ணிணான் என்பது மட்டும் அவளுக்குத் தெரியவில்லை.

விதூ என்ற பெண் கத்திவிட்டுப் போனது,மாலாம்மாவின் பதட்டம்,அன்று நடந்த பதிவுத் திருமணம் இதெல்லாம் என்ன? அவனிடம் கேட்கலாம் தான்.ஏனோ பிடிக்கவில்லை.இதுவரைக்கும் தப்பான பார்வையைக்கூட அவன் பார்த்திருக்கமாட்டான்.பார்க்கவும் மாட்டான் என்ற நம்பிக்கை இருக்கு.அது என்ன காரணமாகவும் இருக்கட்டும்.நான் வீட்டுக்குப் போனா இவன் யாரோ நான் யாரோ.இதற்கிடையில் எதற்கு விளக்கங்கள்.

மரத்தில் புளியங்காய்களின் ஓடுகள் உதிர்ந்து பார்க்கவே எச்சில் ஊற வைத்தது.பழம்,உதக்காய் என பார்க்கப் பார்க்க சாப்பிட வேண்டும் என்ற ஆவலை மீராவால் கட்டுப்படுத்த முடியவில்லை.
கற்களை எடுத்து வீசிப் பார்த்தாள்.குரங்கு முறைத்துக் கொண்டு வந்தது.என்ன பண்ணலாம்?? ஜீன்ஸ் காலை மளமளவென்று மன்னியவள், சின்னச்சின்ன கிளைகளில் கால்வைக்கலாம் என்ற எண்ணத்துடன் ஏறினாள்.இன்னும் ஒரு கிளையில் கால் வைத்தால் அந்த புளி கையில தான்.என்ற எண்ணத்துடன் மேல் கிளையில் கால் வைத்தவளுக்கு அது குரங்குகள் முறித்த கிளை என்று கீழே விழுந்த பிறகு தான் தெரிந்தது.

“ஸ்ஸ்ஸ்...அம்மா…..மெல்ல எழும்பிப் பார்த்தாள்.முறிவுகள் இல்லை என்பதில் நிம்மதியுற்றவளுக்கு,
வலது கையில் அதிர்ச்சி காத்திருந்தது.உள்ளங் கையிலிருந்து மணிக்கட்டு வரை முறிந்திருந்த கிளையின் கூரான ஏதோ ஒரு பகுதி ஆழமாக கிழித்துவிட்டிருந்தது.அதிலும் மணிக்கட்டின் கீழ் தோல் மென்மை என்றபடியால் சிராய்ப்பு அதிகமாக இருந்தது.ரத்தம் அதிகமாக இருக்க கையை தூக்கிப் பிடித்தாள்.வலி தாங்க முடியாததால் அழுகையும் அவளுக்கு அதிகமாக வந்தது.என்னோட கை இனிமே பயனாகாதா? மற்றவர்களின் காயத்திற்கு மருந்து போடும் மனப்பக்குவம் தனக்கு காயம் வந்தால் மட்டும் எப்போதும் காணாமல் போய்விடும்.

ஐஸ் போடலாம் என்றால் அதற்கும் வழி இல்லை.டெப்பைத் திறந்து காயத்தின் மேலே சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி ஓரளவு கழுவியவள், கொடியில் தொங்கிக் கொண்டிருந்த அவனது டீசர்ட்டை எடுத்து கையைச் சுற்றி இறுக்கமாக கட்டினாள்.கொஞ்சம் ரத்தம் கட்டுப்பட்டதைப் போல் உணர்ந்தாலும் வலியில் உயிர் போனது.மெல்ல வந்து கதிரையில் உட்கார்ந்து விட்டாள்.

ஆறு மணி தாண்டிவிட்டாலே வெளியில் விளக்குகளைப் போட்டு விடுவாள்.அவளுக்கு இருள் என்றாலே அலர்ஜி.உயர் அதிகாரிகள் தங்கும் குவாட்டஸ் பகுதி என்பதால் அங்கு பாதுகாப்புப் பற்றிய பயமில்லை.இருந்தாலும் இருட்டுவதற்கு முன்னமே வெளிச்சமாக்கி விடுவாள் மீரா.ஆனால் இன்று ஏழு மணி தாண்டியும் இருள்மயமாக இருளாக இருந்தது.அவளை அறியாமல் கதிரையில் சாய்ந்தவாறே தூங்கிவிட்டாள்.

யாரோ….தன் கன்னத்தை தட்டி எழுப்பியது போலிருந்தது.
“அப்பா…..எனக்கு வலிக்குது.நான் முழிச்சா இன்னும் வலிக்கும்.தூங்க விடுங்க.” என இன்னும் புரண்டு படுக்கப் போனவளை சொரசொரப்பான கைகள் பிடித்துக்கொண்டது.திறந்தும் திறக்காமல் விழிகளை அசைத்தவளுக்கு மிக அருகில் ரொஷானின் விம்பம் தெரிய பதறியடித்து எழுந்து நின்றாள்.
 
Top Bottom