உன்னிடத்தில் மனம் மயங்குதே அத்தியாயம் -3
ராகவன் சாரலைப் பார்த்து முறைத்தபடி “எங்கே போனே சாரல்? உண்மையை சொல்லு” என்று கேட்டான்.
இவளோ திருதிருவென்று விழித்துக் கொண்டிருந்தாள்.அவனோ இன்னும் மிரட்டிக் கேட்கவும் வேறு வழியில்லாமல் தயங்கியபடி “அ…து அத்தை அன்னைக்கு பேசினாங்கல்ல” என்று இழுத்தாள்.
அவனோ “அம்மா பேசினது இருக்கட்டும் நீ எங்கே போனே? அதை சொல்லு?” என்று அவன் விரட்டினான்.
சாரல் “தையல் க்ளாஸ் முடிஞ்சதும் வேலைக்கு போறேன் ராகவன் போதுமா?” என்று அவள் சொன்னதும் அவனின் முகம் மொத்தமாக மாறிப்போனது.
அடுத்து என்னவென்று கேட்காமல் குடித்த தேநீரை அப்படியே வைத்துக் கொண்டு அங்கிருந்து எழுந்தவன் விதுனையும் தூக்கிக் கொண்டான்.
அடுத்து ராகவன் என்ன செய்வான்? என்று புரிந்துக் கொண்ட சாரல் வேகமாக அவனுடைய அறைக்கு வாசலில் உள்ளே செல்ல முடியாதவாறு அடைத்துக் கொண்டு நின்றாள்.
அவளின் இந்த சிறுபிள்ளைத் தனமான செயலைக் கண்டு புன்னகை வந்தாலும் அதை மறைத்தவன் “ஹேய் வழி விடு நானும் என் பையனும் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கனும்” என்று சொல்லி அவளை நகர்த்தப் போனான்.
உடனே சாரல் “நீ ரெஸ்ட் எடுக்கப் போனால் நானும் உன்கூட உள்ளே வருவேன்” என்று சொன்னாள்.
ஆனால் அவனோ “என் பேச்சை கேட்காதவங்க யாரும் என்னோடும் என் பையனோடு சேரக் கூடாது.அதனால நாங்க தனியா இருந்திருக்கிறோம்” என்று சொன்னான்.
சாரல் “ராகவா ஏன்டா என் உயிரை இப்படி வாங்குறே? நான் என்ன பண்ணேன்னு நீ முழுசா கேட்டாத் தானே நான் சொல்ல முடியும்.உடனே கோவிச்சுகிட்டு ரூம் கதவை சாத்தி நீயும் சாப்பிடாமல் என் செல்லத்தையும் சாப்பிட விடாமல் பட்டினி கிடந்து என்னையும் சாப்பிட விடாமல் சாகடிக்க பார்ப்பே அதனால முடியாது” என்று மல்லுக்கட்டிக் கொண்டிருந்தாள்.
ஆனால் அவனோ “ஹோ… அப்போ நாங்க சாப்பிடாமல் இருக்கிற கவலையை விட நீ பட்டினியா இருக்கிற கவலைத் தான் பெருசா இருக்கும் போல” என்று ராகவன் கிண்டலாகச் சொன்னான்.
அவன் சொன்னதைக் கேட்டு இவளோ சோம்பலாய் “ஹேய் ஏன் இப்படி பேசுற ராகவன் சாரிடா உனக்கு ஹெல்ப்பா இருக்கும்னு நினைச்சு தான் போனேன்,இனி உன்கிட்ட சொல்லாமல் எங்கேயும் போக மாட்டேன் சரியா?” என்று அவனிடம் கெஞ்சினாள்.
இவனும் வேறு வழியில்லாமல் “சரி இதுவே கடைசி முறை பிறகும் இதே தவறை செய்தால் நான் ஒத்துக்க மாட்டேன் சாரல்” என்று கொஞ்சம் கடுமையாகவே சொன்னான் ராகவன்.
*****
ஆதித்யா சொன்னதைக் கேட்ட பாலா “எதுக்கு வெளியூருக்கு போறே? வீட்ல கொஞ்ச நாள் ரெஸ்ட் எடு” என்றான்.
ஆதித்யா அமைதியாக இருந்தான்.தாரா “அவனுக்கு பிடிச்சிருக்கு அப்படின்னா போயிட்டு வரட்டுமே அவனோடு நாமளும் ஒன்னாக போய்ட்டு வரலாம்” என்றாள்.
உடனே ஆதித்யா “நான் தனியாக இருக்கனும்னு நினைக்கிறேன் தாரா” என்று நேராகவே சொன்னான்.
இந்த பதிலை அவனிடமிருந்து அவள் எதிர்பார்க்கவில்லை.
முகமோ மொத்தமாக மாறிப் போனது.அவளது நிலைமையைப் பார்த்த பாலா “ஆதி ஏன் தாரா மனம் நோகும் படி பேசுறே? கொஞ்சமாவது ஒழுங்கா பேசு” என்று சொன்னான்.
ஆதித்யா கோபமாக “அதை எனக்கு சொல்றதுக்கு முன்னாடி நீ அவகிட்டே சொல்லி இருக்கனும் அவ இதே மாதிரி நடந்துக்கும் போது அமைதியாக இருந்துட்டு இப்போ என் மேல கோபப்படுறே?” என்று கேட்டான்.
பாலா வாயை மூடிக் கொண்டான்.தாரா “இந்த விஷயத்துக்காக நான் உன்கிட்டே எத்தனை முறை மன்னிப்பு கேட்டேன் நீ ஏன் இன்னும் பழசையே நினைச்சு பேசுறே ஆதி” என்று இயலாமையில் கேட்டாள்.
அவனோ “ஏமாற்றம் ஆனது உண்மை.மாறப் போறது இல்லை தாரா, அதுக்காக நீ எத்தனை முறை மன்னிப்பு கேட்டாலும் அன்றைக்கான நாள்ல முடிந்தது முடிந்தது தான்.தாரா நீ சொல்றது என்னவோ வேலை விஷயத்தை தவிர வேற எதிலும் சொல்ற படி நடந்துக்கிறது இல்லை” என்று ஏமாற்றமாக பதில் தந்தான்.
தாராவும் பாலாவும் அவன் பதிலைக் கேட்டு அதோடு வாயை மூடிக் கொண்டார்கள்.
இருவரையும் பார்த்த ஆதித்யா “நான் எங்கேயும் போகலை பாலா. நீ சொல்ற மாதிரி நான் வீட்லயே கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுக்கலாம்னு நினைக்கிறேன்” என்று சொன்னான்.
இதைக் கேட்டதும் தான் இருவருக்கும் ஓரளவு நிம்மதியாக இருந்தது.ஆதித்யாவிற்கு எடுக்க வேண்டிய சில பரிசோதனைகள் எல்லாம் எடுத்த பிறகு அன்றைய இரவு மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்தான்.அவனோடு பாலாவும் தங்கிக் கொள்ள எண்ணி இருந்தான்.
அதைப் புரிந்துக் கொண்ட ஆதித்யா “பாலா நீ வீட்டுக்குப் போ அம்மா கவலைப்படுவாங்க” என்று சொன்னான்.
பாலா “ப்ச் அம்மாகிட்டே பேசிட்டேன் ஆதி, அம்மாவும் உன்னை பத்திரமாக பார்த்துக்க சொன்னாங்க அதனால நானும் உன்னோடு தங்கிக்கிறேன்” என்று பிடிவாதமாக ஆதித்யாவுடன் தங்கினான்.
ஆதித்யாவின் சின்ன வயதிலேயே அவனுடைய அம்மா இறந்து விட்டதால் தன் பாட்டி வீட்டில் அவரிடம் வளர்ந்தான்.அம்மாவின் பாசத்தை அவர் கொட்டி வளர்த்தார்.ஆதித்யாவின் தந்தை இரண்டாவது திருமணம் செய்து அதில் குழந்தை அவர்களோடு தான் இருக்கிறார்.
ஆறு மாதத்திற்கு ஒருமுறை வந்து அவனை பார்த்து விட்டுச் செல்வார்.எல்லாம் நல்ல விதமாக சென்றுக் கொண்டிருந்த நேரத்தில் மூன்று வருடங்களுக்கு முன்னால் ஆதித்யாவின் பாட்டி இறந்து விடவும் அவனுக்கு தனிமையே வாழ்க்கையாகிப் போனது.
தன் மகளின் வழி பேரனுக்காக தனியாக மூன்று அறைக் கொண்ட வீட்டில் ஆதித்யாவுடன் வாழத் தொடங்கினார்.ஆதித்யாவின் அம்மாவுடன் பிறந்தவர்களாக ஒரு அண்ணனும் ஒரு தங்கையும் இருக்கிறார்கள்.அவர்கள் எப்போதும் எதாவது கேட்டு ஆதித்யாவின் பாட்டியை பிரச்சினை செய்வார்கள்.
அதனால் தனியாக தன் பேரனைப் பார்த்துக் கொண்டார்.அவனுக்காகவே அந்த வீட்டை வாங்கினார்.
அதனால் தன் பாட்டியின் நினைவோடு அந்த வீட்டில் இருக்கிறான் ஆதித்யா.
ஆதித்யாவிற்கு தூக்கம் வராததால் வீட்டின் பால்கனியில் அவன் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து இருந்தான்.அவனருகில் வந்து அமர்ந்த பாலா அவனின் தோளின் மீது கைத்தவன் “என்னாச்சு ஆதி ஏன் நீ சரியே இல்லை ஒருமாதரி யோசனையாகவே இருக்கே” என்று கேட்டான்.
“என்னன்னு தெரியலை பாலா ஒரே கவலையாக இருக்கு” என்று சொன்னான்.
பாலா “ஆதி நான் ஒரு விஷயத்தைப் பற்றி சொல்லுவேன்.எனக்காக அதைப் பத்தி நீ யோசிச்சு பார்க்கனும்” என்று சொன்னான்.
உடனே ஆதித்யா பாலாவைப் பார்த்து விரக்தியாக புன்னகை ஒன்றை சிந்தியவன் “தாராவைப் பத்தி தானே பேசப் போறே” என்று அவன் சொல்லவும் பாலா ஆதியைப் பார்த்து அதிர்ச்சியானான்.
பாலா “அ…து” என்று யோசிக்கவும் ஆதித்யா “பாலா தாரா என்னை விரும்புற அதானே” என்று கொஞ்சம் அசல்ட்டாக கேட்டான்.
“உனக்குத் தெரியுமா?”
“ம்ம்ம்…”
“எப்போது தெரியும்”
“ஆறு மாசத்திற்கு முன்னால”
உடனே அதிர்ச்சியான பாலா “அப்புறம் ஏன் எல்லாம் தெரிஞ்சும் தாராவை அவாய்ட் பண்றே?” என்று கவலையாகக் கேட்டார்.
அவனோ “பாலா உனக்கு தெரியாதது இல்லை.எனக்கு தாராவை ரொம்ப பிடிக்கும்.அவள் மேல சின்னதா விருப்பம் இருந்தது.ஆனால் அதை எல்லாமே மாத்தியது அவள் தானே.எப்போ நான் தாராவை சந்திக்கனும்னு நினைச்சாலும் எதாவது ஒரு காரணம் சொல்லி அவள் தான் அவாய்ட் செய்தாள்.இப்போ அவளுக்கு பிடிச்சிருக்குன்னு உடனே நான் அதுக்காக ஓகே சொல்லனுமா? இப்போ ஏற்றுக் கொள்ளும் நிலைமையில் நான் இல்லை” என்று தன் பதிலை முடிவாகச் சொன்னான்.
பாலா அவன் சொன்ன பதிலைக் கேட்டு தலையசைத்தவாறே அமர்ந்திருந்தான்.
பாலா மனதினுள் ‘தாராகிட்டே ஆதித்யாவுடைய எண்ணத்தை பற்றி சொன்னாள் தான் அவள் ஆதியிடம் பேசி அவளை சம்மதம் வாங்கச் செய்வாள்’ என்று நினைத்துக் கொண்டான்.
பாலா அவனுக்கான அறையில் படுக்க செல்லும் போது ஆதித்யாவிடம் “சீக்கிரம் எல்லாம் மாறும் ஆதி கவலைப்படாதே! உள்ளே போய் தூங்கு” என்று சொல்லி விட்டு சென்றான்.
பாலா சென்றதும் ஆதித்யா ஆழ்ந்த யோசனையில் அமர்ந்து இருந்தான்.அவன் நினைவு முழுவதும் அன்றைக்கு மருத்துவமனையில் அவன் பேசியதைப் பற்றியே நினைத்தான்.
‘நான் யாரைத் தேடுறேன்? எதுக்காக? ஏன்னு எனக்கே தெரியலை? அப்படி சொல்லும் போது ஏன் எனக்கு ரொம்ப அழுகை வந்துச்சு’ என்று தனக்குள்ளே எண்ணிக் கொண்டிருந்தான்.பாலா அதைப் பற்றி கேட்கும் பொழுது ஆதித்யா நினைவு இல்லை என்று பொய் சொன்னான்.
காரணம் இதில் யாரையும் தன்னோடு சேர்த்துக் கொண்டு கஷ்டப்படுத்த அவனுக்கு விருப்பமில்லை.அதனால் தானே இதைப் பற்றி தெரிந்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தவன் அப்படியே தூங்கிப் போனான்.
*****
ராகவன் விதுனை தூங்க வைத்து விட்டு வரவேற்பறையில் வந்து பார்க்கும் பொழுது கையில் ஒரு டப்பாவை கட்டியணைத்தப்படி இருக்கையில் சாய்ந்து அப்படியே தூங்கிக் கொண்டிருந்தாள்.
அதைப் பார்த்து மெலிதாக புன்னகைத்த ராகவன் சாரல் பிடித்திருந்த டப்பாவை மெதுவாக எடுத்தான்.அதை திறந்துப் பார்த்தான்.அதில் ஐநூறு ரூபாய் நோட்டுகள் நிறைய மடித்து வைக்கப்பட்டு இருந்தது.
அதை எடுத்து ஒவ்வொன்றாக விரித்து எண்ணிப் பார்த்தான்.மொத்தமாக பத்தாயிரம் ரூபாய் இருந்தது.அதைப் பார்த்ததும் அவன் விழிகளில் மொத்தமாக கண்ணீர் நிரப்பிக் கொண்டது.
ராகவனின் அம்மா ஒரு மாதத்திற்கு முன்பு அவனிடம் பேசும் பொழுது “ராகவா அம்மா ஹாஸ்பிடல் போய் கண்ணை செக் பண்ணேன் சின்னதா ஆபரேஷன் பண்ணணும் சொன்னாங்க கவர்மெண்ட் ஹாஸ்பிடல் தான் எல்லாமே ப்ரீ தான் இருந்தாலும் கையில சுத்தமா காசு இல்லை ஹாஸ்பிடல்ல இருக்கும் போது சாப்பிட சாப்பாடு வாங்க காசு வேணும் அதனால ஒரு பதினைந்தாயிரம் அனுப்ப சொல்லி இருந்தார்.
அதைக் கேட்டுக் கொண்டிருந்த சாரல் இவனுக்கு உதவியாக இருக்குமே என்று வேலைக்கு போய் பத்தாயிரம் வரை சம்பாதித்து வைத்து இருக்கிறாள்.
நடந்ததை நினைத்துக் கொண்டவன்
சாரலைப் பார்த்தவன் மெதுவாக “சாரல் நீ ஏன் இன்னும் மாறவே மாட்டேங்கிறே? இந்த குணம் உன்னை இன்னும் இன்னுமாய் காயப்படுத்துன்னு ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்கிறே? இனியும் யாருக்காகவும் உன்னை விட்டுக் கொடுக்க மாட்டேன் சாரல் அது மட்டும் உண்மை” என்று சொன்னவன் அந்த பணத்தை அதே டப்பாவில் வைத்து விட்டு சாரலின் தூக்கம் கலையாதவாறு அவளை மெதுவாக தூக்கியவன் அவளை இன்னொரு அறையில் உள்ள மெத்தையில் படுக்க வைத்து போர்வையை போர்த்தி விட்டு விதுனின் அருகில் போய் படுத்துக் கொண்டான்.
மறுநாள் விடியல் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான விடியலைத் தருவதற்காக காத்திருந்தது.அதை அறியாமல் எல்லோரும் நித்திரையில் ஆழ்ந்து இருந்தனர்.