• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

எந்தன் உறவுக்கொரு உயிர்கொடு - 2

Vishakini

Moderator
Staff member
அத்தியாயம்-2

வீடு பார்க்க நந்தனோடு சென்ற ரவிவர்மனுக்கு அந்த வீடு மிகவும் பிடித்துப்போனது. அப்போதுதான் பாவை அவனை கண்டாள்.

குருமன்காடு என்கிற இடத்தில், மக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதியில் அமைந்திருந்தது அந்த வீடு. தான் எப்போதும் வேலை என்று அலைவதால், தனியாக இருக்கும் தாய்க்கு, பொழுது நன்றாகப் போகும் என்பதே அவனுக்கு மிகுந்த நிறைவைக் கொடுத்தது. அதோடு வீட்டுப் பொருட்கள் வாங்கும் இடங்கள், தாயின் போக்குவரத்துக்கு என்று எல்லாம் வசதியாக உள்ளதா என்று பார்த்தவன், நந்தனை அந்த ஊரைச் சுற்றிக் காரைச் செலுத்தச் சொன்னான்.

"எதற்கடா இப்போது இந்த ஊரை சுற்றி ஊர்வலம் வரச்சொல்கிறாய்?" என்று கேட்ட நந்தனிடம், "இடம் மாறி வரப்போகிறோம். இந்த ஊர் எப்படி என்று தெரியவேண்டாமா நந்தா?" என்றான் ரவி.

"ஓ.. நான் நினைத்தேன், ஊரைப் பார்க்கிறேன் என்கிற பெயரில் இந்த ஊரில் இருக்கும் பெண்களைப் பார்க்கிறாயோ என்று, அப்படி இல்லையா?" என்றவனின் குரல், அப்படித்தானே என்று கேலி பேசியது.

"இப்போது எனக்கு அது ரொம்பவும் முக்கியம் பார்..." என்ற ரவியின் குரலில் இருந்த கசப்பைப் பார்த்து, “ஏன்டா இவ்வளவு வெறுப்பு? உனக்கும் எனக்கும் ஒரே வயது. எனக்குத் திருமணம் நிச்சயமாகிவிட்டது. ஆனால் நீ இன்னும் திருமணத்திற்கு சம்மதிக்காமல் இருக்கிறாயே, எனக்குத் தெரியாமல் ஏதாவது காதலாடா? சகுந்தலா ஆண்ட்டி மறுத்துவிட்டாரா? எதுவாக இருந்தாலும் சொல்லு. நான் பேசுகிறேன்ஆண்ட்டியிடம்..." என்று கேட்டான் நந்தன்.

காதல் என்ற சொல்லிலேயே ஒரு நொடி கல்லாக மாறிய ரவிவர்மன், "நான் காதலித்தால் உன்னிடம் சொல்லாமல் இருப்பேனா நந்தா. அப்படி எதுவும் இல்லையடா..." என்றான் தன்னைச் சமாளித்து.

"அப்படியானால் எதற்காக திருமணம் செய்யாமல் இருக்கிறாய்? ஆண்ட்டியும் பாவம் தானேடா." என்ற நந்தனின் பேச்சை கேட்ட ரவி சில நொடிகள் மௌனமாக இருந்துவிட்டு, "வவுனியாவுக்கு மாறியபிறகு திருமணத்திற்கு பெண் பார்க்கச் சம்மதித்திருக்கிறேன்..." என்றான் அக்கறை இல்லாக் குரலில்.

"அடப்பாவி! என்னிடம் ஒரு வார்த்தை சொன்னாயா...? சொல்லி இருக்க நீ வரும்போது அம்மா வீடு பார்த்து வைத்திருப்பதுபோல், நான் உனக்குப் பெண் பார்த்து வைத்திருந்திருப்பேனேடா..."

அவன் சொன்னதில் மெல்லச் சிரித்த ரவி, "உன் குணம் தெரிந்துதான் நான் சொல்லவில்லை. அம்மாவையும் சொல்ல விடவில்லை. இப்போது அவசரம் என்னடா. முதலில் வவுனியாவுக்கு மாறவேண்டும். பிறகு வேலை விடயங்களை இங்கு மாற்ற வேண்டும். அங்கிருக்கும் தேயிலைத் தோட்டத்தை யாராவது பொறுப்பானவர்களிடம் ஒப்படைக்கவேண்டும். இப்படி பல வேலைகள் இருக்கிறது பார்க்க. முதலில் இந்த வேலைகளை ஒதுக்கிவிட்டு பிறகு பெண் பார்க்கலாம்..." என்றான். திருமணத்திற்கு சம்மதம் சொன்னாலும், முடிந்தவரை அதை தள்ளிப்போடவே விரும்புகிறான் என்று புரிந்தது நந்தனுக்கு.

'இப்போது என்னிடம் சொல்லிவிட்டாய் அல்லவா. உன் வேலைகள் முடிந்து அடுத்தநாளே உனக்குத் திருமணம் என்கிற அளவுக்கு என் வேலையை நான் காட்டுகிறேன் உனக்கு' என்று மனதில் நினைத்துக்கொண்டான் நந்தன்.

நந்தாவின் வீட்டுக்கு வந்தவர்கள் காஞ்சனா சமைத்துவைத்திருந்த மதிய உணவினை ஒரு கை பார்த்தனர்.

"அம்மா, இது நீங்கள் சமைத்த சாப்பாடா, இல்லை கடையில் வாங்கினீர்களா?" என்றான் நந்தா.

"என்னடா சொல்கிறாய்? ரவி வந்திருக்கிறான், அவனுக்காக பார்த்துப்பார்த்து நான் சமைத்தது. கடையில் வாங்கியதா என்று கேட்கிறாய், உனக்கு என்ன ஆச்சுடா?" குழப்பத்துடன் கேட்டார் காஞ்சனா.

"இல்லைமா, இவ்வளவு சுவையாக உங்களுக்குச் சமைக்கத் தெரியும் என்று எனக்கு இன்றுதான் தெரியும்" என்றான் நந்தன் அடக்கமாக.

ரவி விழுந்து விழுந்து சிரிக்க, எதுவும் புரியாது சிறிது நேரம் முழித்த காஞ்சனாவுக்கு நந்தன் சொன்னது புரியவும், அவனை முறைத்துப்பார்த்தார்.

"என் சமையலின் சுவை தெரியாமல் சாப்பிட்டுத்தான் இப்படி எருமை மாடு மாதிரி வளர்ந்து இருக்கிறாயா நீ?" என்ற காஞ்சனாவின் கடுப்பான கேள்விக்கு,

"எருமை மாடும்தான் எருமையைப் போல வளர்ந்திருக்கிறது. அதற்காக அது உங்கள் சாப்பாட்டை சாப்பிட்டுத்தான் அப்படி வளர்ந்தது என்று சொல்வீர்களா அம்மா?"

நந்தனின் கேலியில் கண்களில் கண்ணீர் வரும்வரை சிரித்தான் ரவிவர்மன்

மகனைச் செல்லமாக முறைத்தபோதும், ரவியின் முகம் நிறைந்த சிரிப்பைப் பார்த்த காஞ்சனாவிற்கு, மனதைப் போலவே முகமும் மலர்ந்தது.

"அப்படியானால் நீ எருமை என்பதை ஒத்துக்கொள்கிறாயா நந்தா?" என்றார் அவரும் விடாமல்.

"உங்கள் மகன்தானே அம்மா..." என்றான் நந்தனும்.

"போதும்டா, ஆண்ட்டியை நீ ஒட்டியது போதும். பேசாமல் சாப்பிடு" என்றான் ரவி. அவன் முகத்தில் மலர்ச்சி குடியேறி இருந்தது. சிரிப்புடனே சாப்பாட்டினை முடித்தவர்கள் பழைய கதைகள் பேசியபடி இருந்தார்கள்.


கொழும்பில் இருந்து மின் சாதனப்பொருட்களை வவுனியாவுக்கு கொண்டுவந்து, அங்கிருந்து யாழ்பாணம், கிளிநொச்சி போன்ற இடங்களுக்கு விற்பனை செய்வதே நந்தனின் தொழில்.

அவனுடைய இன்னொரு நண்பன் வசந்தனுடன் சேர்ந்து இந்தத் தொழிலைச் செய்கிறான். தொழிலும் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே லாபத்தைக் கொட்டியது.

கொழும்பில் இருந்து பொருட்கள் வந்து இறங்கியிருப்பதாக நந்தனுக்கு வசந்தனிடமிருந்து அழைப்பு வரவே, "நான் அவசரமாக வெளியே போகவேண்டும் ரவி. கோபித்துக்கொள்ளாதே. நீ கொஞ்சம் தூங்கி எழு, நான் அதற்குள் வந்துவிடுகிறேன்" என்றான் நந்தன்.

"நீ போய்வா நந்தா. முடிந்தால் உன் காரை எனக்கு தருகிறாயா? நான் கொஞ்சம் வெளியே போகவேண்டும். இன்று இரவே கிளம்பலாம் என்று இருக்கிறேனடா. அதற்கிடையில் எனக்கு சில வேலைகள் முடிக்கவேண்டும். உன் காரை மட்டும் நீ தந்தாலே போதும்." என்றான் ரவி.

"உனக்கு இங்கே எந்த இடமும் தெரியாதே ரவி...."

"தெரியாவிட்டால் என்னடா. விலாசம் இருக்கிறது. அதனால் தேடிக்கண்டுபிடித்துப் போய்விடுவேன். இனி இங்கே வந்து இருப்பது என்று முடிவாகிவிட்டது. அதனால் நானும் வவுனியாவைக் கொஞ்சம் அறிந்துகொள்கிறேனே...."

"அப்போ சரிதான். நான் வசந்தனுடன் போகிறேன். ஆனால் நீ இன்றே கிளம்ப வேண்டுமாடா?"

"அதுதானே ரவி. இன்னும் இரண்டு நாட்கள் இருந்துவிட்டு போகலாமே..." என்றார் காஞ்சனாவும் கெஞ்சலாக.

"ஆண்ட்டி, என்ன இது? என்னிடம் நீங்கள் கெஞ்சுவதா...? எனக்கும் இங்கே இருக்க ஆசைதான். ஆனால் அம்மா அங்கே தனியவே ஆண்ட்டி. அதனால் இன்றே கிளம்புகிறேன். ஆனால் முடிந்தவரை விரைவாக உங்கள் தோழியுடன் வருகிறேன். வீட்டையும் அம்மா பெயரில்தான் வாங்கவேண்டும்.." என்று ஒரு வழியாக அவர்களை சமாளித்தவன், நந்தனுடனேயே கிளம்பி அவனை அவன் இடத்தில் இறக்கிவிட்டு, காரை எடுத்துக்கொண்டு தன் வேலையைப் பார்க்கச் சென்றான்.

அந்த மதிய வெயிலில்,வாகன நெரிசலில் மாட்டி முழித்துக்கொண்டு நின்ற ரவி, தன்முன்னே நகராது நிற்கும் வாகனங்களைப் பார்த்துச் சலித்து, முகத்தை எதிர் பக்கமாகத் திருப்பி கடைகளைக் கவனித்தான்.

இடங்களைப் பார்த்துவைத்தால் அம்மாவுடன் வரும்போது அவரையும் அலைக்கழிக்கத் தேவையில்லை என்று எண்ணிக்கொண்டு பார்வையைத் திருப்பியவனின் கண்களில், நேற்று பேருந்து நிலையத்தில் கண்ட அதே சிறு பெண் இன்றும் கோபத்துடன் ஒருவனின் சைக்கிளின் மணியை உடைப்பதைப் பார்த்தவனுக்கு, மீண்டும் சினம் கொண்டது மனம்.

என்ன பெண் இவள்? நேற்று அவ்வளவு கடுமையாகத் திட்டியும் இப்படி நடக்கிறாளே. இவளைப் போன்றவர்களை என்ன செய்யலாம் என்று கோபத்தில் அவன் மனது, கண்டபடி அவளைத் திட்டியது.

நேற்று ஒருவனுடன் ஏதோ சண்டை. இன்று இன்னொருவனுடன். தினமும் யாரோ ஒருவனுடன் இப்படிச் சண்டையை பிடிக்கிறாளே, இவளின் பெற்றோர்கள் இவளை என்ன வளர்ப்பு வளர்க்கிறார்கள். இதில் அவள் அம்மாவைப் பற்றிச் சொன்னால் கோபம் வேறு.

வாகனவரிசை இப்போது நகரும் போல் தோன்றாது இருக்கவே, தனது காரை ஓரத்தில் நிறுத்திவிட்டுப் பாவையின் அருகே சென்றான்.

"சைக்கிளில் பெல் எதற்கு வைத்திருக்கிறார்கள்? பெல்லை அடித்தால் முன்னால் நடப்பவர்கள் வழி விடுவார்கள். அதைச் செய்யாமல் அவர்கள் மீது சைக்கிளைக் கொண்டுபோய் மோதுவீர்கள் என்றால், உங்கள் சைக்கிளுக்கு பெல் தேவையே இல்லை." என்று வாய் அந்த இளைஞனைத் திட்டியபோதும், பாவையின் கையோ அந்த பெல்லை உடைப்பதற்கு முயற்சி செய்துகொண்டிருந்தது.

"ஏய்! சைக்கிளை தொடாதே.. விடு!" என்ற சைக்கிள்காரனின் பேச்சை அவள் காதிலேயே வாங்கவில்லை.

"சைக்கிளையே உடைக்கவேண்டும். ஆனால் அதை உங்கள் பெற்றவர்கள் வேண்டித்தந்திருப்பார்கள் என்பதால், பெல்லை உடைகிறேன்..." என்றாள் தன் வேலையைத் தொடர்ந்தபடி.

வேகமாக அவளருகே வந்த ரவிவர்மன், அவளின் கைகளைப் பிடித்துக்கொண்டு, "நீ போ..." என்று அந்த சைக்கிள்காரனிடம் சொன்னான்.

பாவையை முறைத்துக்கொண்டே, "இந்த பெண்ணுக்கென்ன விசரா(லூசா)? கொஞ்சம் கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்..." என்று ரவிவர்மனிடம் சொல்லிவிட்டு நகர்ந்தான் அவன்.

அவன் சொன்னதைக் கேட்டுக் கோபம் கொண்டபோதும், தன் கைகளைப் பிடித்தது யார் என்று திகைத்து நிமிர்ந்து பார்த்தாள் பாவை. இவனைப் பார்த்துச் சற்றே அதிர்ந்தாலும், அவன் தன் கைகளைப் பிடித்திருப்பதை உணர்ந்து கோபத்துடன் அவனை முறைத்தாள்.

அவனும் அவளை முறைக்க, "கையை விடுங்கள்.." என்றாள் குறையாத கோபத்துடன்.

"இந்த கோபத்துக்கொன்றும் குறைச்சல் இல்லை. உன் பெற்றோர்களைப் பற்றிச் சொன்னால் மட்டும் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது. உன் அம்மா என்ன, இப்படித் தினமும் ஒருவனுடன் சண்டை பிடித்துப்பழகு என்று சொல்லித்தந்தாரா.." நக்கலுடன் கேட்டவனின் கேள்வியில், கோபத்தில் துடித்த மனதை அடக்கினாள்.

"நடு ரோட்டில் ஒரு சிறு பெண்ணின் கையைப் பிடி என்றா உங்கள் அம்மா உங்களுக்குச் சொல்லித்தந்தார்?" கேட்டவளின் கேள்வியில், அவனுக்குச் சற்றும் குறையாத நக்கலும் கூடவே கோபமும் கலந்துகிடந்தது.

நெருப்பை தொட்டவன் போல் கைகளை விலக்கியவன், "ஏய், என்ன பேச்சுப் பேசுகிறாய்? சின்னப்பிள்ளை நீ. என் அம்மாவைப் பற்றி உனக்கென்ன தெரியும்? அவர்கள் உன்னைப் போலவோ அல்லது உன் அம்மாவைப் போலவோ இல்லை. தெரியாமல் எதுவும் பேசாதே!" கடினக்குரலில் எச்சரித்தவன் தொடர்ந்து, "இப்போதே இப்படியெல்லாம் பேசுகிறாயே, வளர்ந்தால் எத்தனை பிரச்சனைகளை உருவாக்கப்போகிறாயோ தெரியவில்லை.." என்றான்.

"என் அம்மாவைப் பற்றிமட்டும் உங்களுக்கு தெரியுமா? அவர்களைப் பற்றி நீங்கள் பேசவில்லை? பார்த்தேயிராத பழக்கமில்லாத ஒருவரைப் பற்றி எவ்வளவு பிழையாக பேசினீர்கள். நீங்கள் சொன்னால் அது சரி. நான் சொன்னால் மட்டும் பிழையோ? சாத்தான் வேதம் ஓதுகிறது என்று கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? அப்படி இருக்கிறது நீங்கள் சொல்வது.முதலில் உங்களை நீங்கள் திருத்துங்கள். என்னை திருத்திக்கொள்ள எனக்குத் தெரியும்! வந்துவிட்டார் எனக்கு புத்திபுகட்ட...." என்று மனதின் கோபத்தை எல்லாம் வார்த்தைகளாக கொதிப்புடன் கொட்டியவள், அவன் திகைத்து நிற்பதைக் கணக்கில் எடுக்காது விறு விறு என்று நடந்துசென்றாள்.

சில வினாடிகள் அதிர்ந்து நின்றுவிட்டான் ரவிவர்மன். எப்படி எல்லாம் பேசுகிறாள். நல்லது சொல்லவந்த எனக்கு நன்றாக வேண்டும். யார் எப்படிப் போனால் எனக்கென்ன என்று இருந்திருக்கவேண்டும் என்று எரிச்சலுடன் நினைத்தவன், தனது வாகனத்தை எடுத்துக்கொண்டு மெதுவே நகரும் வாகன நெரிசலுக்குள் தன் காரையும் இணைத்துக்கொண்டான்.

பார்க்கவேண்டிய தனது வேலைகளை முடித்த ரவிவர்மன் அன்று இரவே மலையகத்துக்கு பயணமானான்.
 
Last edited:

Vishakini

Moderator
Staff member
பள்ளி முடிந்து வருகையில் கண்மணியின் அப்பா அவரின் தங்கை வீட்டுக்கு செல்லவேண்டும் என்று கண்மணியை அழைத்துச்சென்றுவிட்டார். மணியும் இல்லையே என்று தனியே நடந்துவந்துகொண்டிருந்த பாவையின் முன்னால் ஒரு சிறுவன் சென்றுகொண்டிருந்தான்.

இந்தச் சிறுவன் தனியே செல்கிறானே, பெரியவர்கள் யாரும் இவனுடன் வரவில்லையா என்று இவள் யோசித்து முடிப்பதற்குள், பின்னால் வந்த சைக்கிள் அந்த சிறுவனில் மோதிவிட்டது.

அடிபட்டு நிலத்தில் விழுந்த சிறுவனுக்கு காலில் கொஞ்சம் ஆழமாக கற்கள் குத்திவிட்டது போலும். வலியில் அவன் அழுதபோதும், அதைச் சாதரணமாக எடுத்த சைக்கிள்காரன், 'கண்ணில்லையா உனக்கு? பார்த்து நடக்கத்தெரியாதா? இனியாவது ஒழுங்காக வீதியில் நடக்கப்பழகு!" என்று அதிகாரமாகச் சொன்னவாறே சைக்கிளை தொடர்ந்து மிதிக்கவும், கோபம் வந்துவிட்டது பாவைக்கு.

பிழை செய்ததும் அல்லாமல் அழும் சிறுவனை தூக்கிக்கூட விடாமல் அவன் நகரப்பார்க்கவும், அவனின் சைக்கிளின் கைப்பிடியை எட்டி பிடித்தவள், "அவனை இடித்துவிட்டு நீங்கள் உங்கள் பாட்டிற்கு போகிறீர்களா?" என்று கேட்டாள் கோபம் பொங்க.

"தெரியாமல் நடந்துவிட்டது. அதுவும் இல்லாமல் அவனும் சாலையோரமாக நடந்துவரவில்லை. நடு ரோட்டில் நடந்தால் இப்படித்தான் நடக்கும்..." என்ற அவனின் திமிரான பதிலில், அவனை முறைத்தவளின் பார்வையில், சைக்கிள் பெல் பட்டது.

"இதையும் வைத்துக்கொண்டா அவனை இடித்தீர்கள்?" என்று பெல்லை காட்டி கேட்டவள், அதனை உடைக்கும் முயற்ச்சியில் ஈடுபடும்போதே ரவிவர்மன் அவளைப் பார்த்தது.

நேற்றும் நடந்தது என்ன என்று தெரியாது திட்டினார். இன்றும் அப்படித்தான். எதையும் விசாரிக்காது அவசர புத்தியில் என்னைத் திட்டிவிட்டு, எனக்கு புத்தி சொல்கிறார் என்று அவளின் பூ மனது ரவிவர்மனைத் திட்டியது.

கோபத்துடனேயே வீடு வந்தவள் தாயிடம் இதை பகிர்ந்துகொள்ளவில்லை. சொன்னால் பெரியவர்கள் நம் நன்மைக்குத்தான் சொல்லுவார்கள் என்று அம்மா சொல்வார் என்பது தெரிந்ததாலும், தாயைப் பற்றி அவன் சொன்னதைச் சொல்லி அம்மாவின் மனதை நோகடிக்க வேண்டாம் என்றும் நினைத்தவள் பெரும் முயற்சி செய்து நடந்தவைகளை ஒதுக்கினாள்.

அவருக்குத்தான் நான் நன்றாக திட்டிவிட்டேனே என்று நினைத்தபிறகுதான் அவளின் கோபம் ஓரளவுக்கு மட்டுப்பட்டது.


பள்ளி, பள்ளி முடிந்துவந்தால் தாய்க்கு தன்னால் ஆன உதவிகளை செய்வது, நேரம் கிடைக்கையில் கண்மணியுடன் அரட்டை அடிப்பது என்று மிக வேகமாக நகர்ந்தது பாவையின் நாட்கள்.

அன்று சனிக்கிழமை, சாந்திக்கு தெரிந்த குடும்பத்தினர் தங்கள் பிள்ளையின் பிறந்தநாளுக்கான மதிய உணவின் பொறுப்பை கவியிடம் ஒப்படைத்திருந்தனர். பாவை காலையில் எழுந்து படித்தவள், பின்னர் சமையலுக்கு தாய்க்குச் சிறு சிறு உதவிகளைச் செய்துகொடுத்துவிட்டு, மாலை கண்மணி வரவே அவளுடன் சேர்ந்து தாயம் விளையாடிக் கொண்டிருந்தாள்.

வீட்டின் முற்றத்தில் வேலிக்கரையோரமாக இருந்த மாமரத்தின் கீழ், பாயை விரித்து, அதிலிருந்து விளையாடிக்கொண்டிருந்த பாவை, வாசல் கேட் திறக்கும் சத்தம் கேட்கவே நிமிர்ந்து பார்த்தாள். வந்தவரைக் கண்டதும் மலர்ந்த முகத்துடன், "சாந்தி ஆண்ட்டி! வாருங்கள்.. வாருங்கள்.." என்றவாறே துள்ளிக்கொண்டு ஓடினாள்.

"ஹாய் பாவை. இன்று பள்ளி இல்லை என்றதும் விளையாட்டை ஆரம்பித்துவிட்டீர்களா? பெல்லும் இங்கே இருக்கிறாள் போலவே..." என்று கண்மணியின் 'மணி' யை பெல்லாக மாற்றி அவளையும் வம்புக்கு இழுத்துக்கொண்டு வந்தாள் சாந்தினி. கவிநயாவின் தோழி.

"ஆண்ட்டி, இப்போது எதற்கு என்னை வம்புக்கு இழுக்கிறீர்கள்?" என்று செல்லமாகக் கோபித்துக்கொண்டாள் மணி.

"என்ன மணி, பொய் பேசுகிறாய்? ஆண்ட்டி எங்கே உன்னை இழுத்தார்கள்? அவர்கள் இங்கே இருக்க, அங்கே இருக்கும் உன்னை எப்படி இழுக்க முடியும்..." என்று சாந்தியுடன் சேர்ந்து கண்மணியைக் கேலி செய்தாள் பாவை.

இவர்களின் பேச்சுச் சத்தத்தைக் கேட்டு வெளியே வந்த கவிநயா, சாந்தினியைப் பார்த்துவிட்டு, "வா சாந்தி, எங்கே உன்னை போனவாரம் கடையில் காணவில்லை?" என்று கேட்டாள்.

"வீட்டைக் கொஞ்சம் மாற்றி அமைக்கிறார் அப்பா கவி. வீட்டில் வேலை இருந்தது. அதனால்தான் வரமுடியவில்லை. உன்னைப் பார்த்தும் நிறைய நாட்களாகிவிட்டது, அத்தோடு அப்பாவும் ஒரு விடயம் கேட்கச்சொன்னார்." என்றவளின் முகம் பூரித்துப் பூத்திருந்தது.

"அடடா!அடடா! கல்யாணப்பெண்ணுக்கு இப்போதே கல்யாணக்களை வந்துவிட்டதே. மிகவும் அழகாய் இருக்கிறாய் சாந்தி..." சாந்தினியை அணைத்த கவியின் குரல் உண்மையான அன்பில் குளித்திருந்தது.

"போ கவி. கேலி செய்யாதே..." அழகாய் முகம் மலர்ந்தவள், பேச்சை மாற்றும் விதமாக, "கவி, எங்கள் திருமணத்தன்று கொடுக்கும் மதிய உணவை உன்னால் சமைக்க முடியுமா என்று அப்பா கேட்கச்சொன்னார். ஆனால் ஐநூறுக்கும் மேல் ஆட்கள் வருவார்கள்..." என்றாள் தொடர்ந்து.

"முதலில் உள்ளே வா சாந்தி. முற்றத்தில் நின்றுதான் நல்லகாரியத்தைப் பற்றிக் கதைக்க வேண்டுமா? தேசிச்சாறு இருக்கிறது. குடிக்கிறாயா? இந்த வெயிலுக்கு நன்றாக இருக்கும்.." என்றபடி சாந்திக்கு கவி தேசிச்சாறை பிழிந்து கொடுக்கவும், ஆர்வத்துடன் வேண்டிப் பருகினாள் சாந்தி.

அதை பருகிக்கொண்டே, "இன்று தேவி ஆண்ட்டி வீட்டுப் பிறந்தநாள் இல்லையா கவி? சமைத்துக்கொடுத்துவிட்டாயா?" என்று கேட்டாள் சாந்தி.

"ஆமாம் சாந்தி. இப்போதுதான் வேலை முடித்துவிட்டு வந்தேன். உன்னால் தான் பல விழாக்களுக்கு என்னை சமைக்க அழைக்கிறார்கள். அதற்கு நன்றி சாந்தி." என்றவளின் குரலில் உண்மையான நன்றி நிறைந்திருந்தது.

"என்னிடம் திட்டு வேண்டாதே கவி. நமக்குள் எதற்கு நன்றி உள்ளே வருகிறது. அதை நீயே வைத்துக்கொள்! எனக்கு வேண்டாம்..."செல்லக்கோபத்தோடு அதட்டியது சாந்தியின் குரல்.

அந்த அதட்டலில் கவியின் முகத்தில் அழகிய புன்னகை. பிரபலமான உணவகங்கள் பல இருக்க, சாந்தினி தன் திருமண உணவுப் பொறுப்பை கவியிடம் ஒப்படைக்க நினைக்கிறாள் என்றால், அதற்குக் காரணம் ஒன்றே ஒன்றுதான். தன் திருமணம் மூலம் வரும் வருமானத்தை தன் தோழி பெற்றுக்கொள்ளட்டும் என்கிற நல்ல எண்ணமே.

நல்ல நட்பு கிடைப்பது பெரும் தவமே!! அது கவிக்கு கிடைத்திருக்கிறது. இன்றுவரை அவளை வழி நடத்துவதும் ஒரு நட்பே. அதேபோல தன் நலனை நாடும் சாந்தினியின் நட்பும் எவ்வளவு அழகானது. மனம் நிறைந்தது கவிக்கு. தாய் தந்தை இன்றி, சொந்தம் என்று சொல்ல யாருமின்றி, கூடப்பிறந்த பிறப்புக்கள் இன்றி, தனித்து நின்று தவித்தவளுக்கு கடவுளால் கொடுக்கப்பட்ட வரம் இவர்களும் இவர்களது நட்பும்.

"நிச்சயமாக செய்கிறேன் சாந்தி. இன்று நான் நல்ல நிலையில் இருக்கிறேன் என்றால் அதற்குக் காரணமே நீதானே. உனக்குச் செய்யாமல் வேறு யாருக்கு செய்யப்போகிறேன்." என்றவளின் கண்கள், சாந்தியின் அன்பில் கலங்கிய போதும் மலர்ந்து சிரித்தது.

"எத்தனை பேர் என்றாலும் பரவாய் இல்லை. தேவைக்கு ஏற்ப வேலைக்கு ஆட்களை அமர்த்திக்கொள்வேன். அதனால் ஆட்களின் எண்ணிக்கையை யோசித்து நீ கவலைப்படாதே. ஆனால் இதற்கு நான் பணம் வாங்கிக்கொள்ள மாட்டேன். என் தோழிக்கு நான் தரும் திருமணப் பரிசாக இந்தச் சாப்பாடு இருக்கட்டும்.." என்றாள் கவி முகம் மலர.

"அடி வாங்கப்போகிறாய் கவி. நமக்குள் என்ன பரிசு வேண்டிக்கிடக்கிறது. உனக்கு இதன்மூலம் பெரும் தொகை கிடைக்கும் என்று நான் நினைக்க நீ எனக்குப் பரிசாகச் செய்கிறாயா. அதெல்லாம் சரிவராது. என் திருமணத்திற்கு நீதான் சமையல் செய்கிறாய். நான் தரும் பணத்தைக் கண்ணை மூடிக்கொண்டு வாங்குகிறாய். அவ்வளவுதான்!" அன்போடு உரிமையாக அதட்டினாள்.

கவி ஏதோ சொல்ல வரவும், அதைத் தடுத்து, "நான் சொல்லி முடித்துவிட்டேன். இனி இதைப்பற்றி எதுவும் நீ பேசக்கூடாது...!" என்று உறுதியாகச் சொல்லி முடித்தவள் கவியை மேல பேச விடவும் இல்லை.

சாந்தியுடனேயே ஒட்டிக்கொண்டு இருந்த பாவை, "எப்போது சாந்தி ஆண்ட்டி உங்கள் திருமணம்? பள்ளி விடுமுறையின்போது வைத்தால் நானும் உங்கள் திருமணத்திற்கு உதவிகள் செய்வேனே..." என்றாள் ஆர்வத்துடன்.

"உன்னை நம்பித்தான் என் திருமணத்தையே வைத்திருக்கிறேன். இதில் நீ இல்லாமல் என் திருமணமா பாவை?" பாவையின் கன்னத்தைக் கிள்ளிப் பதில் சொன்னாள் சாந்தி.

அந்தச் செயலில் உண்டான சின்ன வெட்கச் சிரிப்புடன், "போங்க ஆண்ட்டி..." என்று சிணுங்கினாள் பாவை.


வவுனியாவில் சமையலை தொழிலாக கவிநயா ஆரம்பித்தபோது, கையில் பெரிதாகப் பணம் இருக்கவில்லை. கையில் இருக்கும் பணத்திற்கு மேலாக பலசரக்கு பொருட்கள் தேவைப்பட்டபோது, இவள் வழமையாக வாங்கும் கடைக்காரர் நம்பிக்கையின் பெயரில் கடனாக கொடுக்க மறுத்தபோது, அறிமுகம் இல்லாதபோதும் அந்த உதவியை செய்தவள் சாந்தினி.

சாந்தினியின் அப்பா நடத்தும் கடைகளில் பலசரக்கு கடையும் ஒன்று. அதை பொறுப்பாகக் கவனித்துக்கொள்பவள் சாந்தினி. கவிக்கு பணம் போதாமல் வந்தபோது, எந்த யோசனையும் இன்றி கடனுக்கு பொருட்களைக் கொடுத்தாள்.

ஏழ்மை தெரிந்தபோதும், கவியிடம் இருக்கும் நிமிர்வு, கண்ணைப் பார்த்துப் பேசும் நேர்மை, பேச்சில் இருக்கும் தெளிவு என்று, இப்படி பல விடயங்கள் சாந்தினிக்கு பிரமிப்பைக் கொடுத்தது. அந்த பிரமிப்பே அவளுக்கு உதவிசெய்யத் தூண்டியது.

அதேபோல செல்வந்தப்பெண்ணாக இருந்தாலும் அன்போடு வாடிக்கையாளர்களை நடத்தும் சாந்தினியின் இயல்பு கவிக்கு மிகவும் பிடிக்கும். மிக விரைவிலேயே இருவரும் நெருங்கிய நண்பர்களாகிப்போனார்கள்.

தங்கள் தெரிந்தவர்கள் வட்டத்தில் வரும் விசேசங்களுக்கான உணவுப்பொறுப்பை கவிக்குப் பெற்றுக்கொடுத்தாள் சாந்தினி. கவியின் நேர்மையான, சுவையான உணவு அவளுக்கு வாடிக்கையாளர்களையும் வருமானத்தையும் மிக விரைவாகவே தேடிக்கொடுத்தது.

"அம்மா, உங்களுக்கும் அப்பாக்கும் திருமணம் நடந்தபோது யார் சமைத்தார்கள் அம்மா?" என்று மகளிடமிருந்து வந்த கேள்வியில் விக்கித்து நின்றாள் கவிநயா.
 
Top Bottom