• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

குழலில் காற்றாகினாள் - 3

STN - 29

Member
‘உஃப்’ இடுப்பில் கை வைத்தபடி உதடு குவித்து மூச்சுவிட்டாள் திலோத்தமா.

இரு கைகளையும் பின்னங்கழுத்தில் வைத்து இடம் வலமாக திருப்பி நெட்டை எடுத்தாள்.

மேஜையில் ஓரமாகக் கிடந்த துப்பட்டாவை எடுத்து வழிந்த வியர்வையை துடைத்து களைந்து கிடந்த தலைமுடியை சரிசெய்து தூக்கி கிளிப் போட்டு பால்கனியில் வந்து நின்றாள்.

நினைத்தது போன்றே அமரவர்மனின் எதிர் வீட்டிற்கு குடி வந்து தன்னுடைய பொருட்கள் அனைத்தையும் அதனதன் இடத்தில் வைத்து இப்பொழுதுதான் ஆசுவாசமாக மூச்செடுக்கிறாள்.

அன்று ஒருநாள் வேலைக்கு விடுப்பு எடுத்திருந்தாள். அன்றைய நாளை விட்டால் வேறு நல்ல நாட்கள் அடுத்தடுத்து இல்லை என்பதை அறிந்துதான் அன்றே மூட்டை முடிச்சுகளை கட்டி இருந்தாள். ஓரளவு சம்பிரதாயங்களில் நம்பிக்கை கொண்டவள்தான் திலோத்தமா.

நிறைய பார்ப்பதில்லை… ஆனால் அமரன் விஷயத்தில் மனம் பார்க்கத் தூண்டுகிறது. புது வீட்டில் மட்டுல்ல… அமரனின் இதயத்திலும் இடம்பிடிக்க வேண்டிய அவசியத்தில்தானே அங்கு குடி பெயர்ந்திருக்கிறாள். அதற்காகவே நல்ல நாளை பார்த்து வந்து சேர்ந்திருக்கிறாள்.

ரஞ்சனிக்கு முக்கியமான ப்ராஜெக்ட் வேலைகள் சென்று கொண்டிருந்ததால் இவளுக்கு உதவ வர முடியவில்லை. இந்த வார விடுமுறையில் வருவதாக கூறியிருந்தாள். அவளைவிட்டு பிரியும்போது மெல்லிய கண்ணீர் கீற்று திலோவின் கண்களில் எட்டிப் பார்த்தது உண்மைதான்.

கடந்த சில ஆண்டுகளாக வெறுமையான அவள் மனதில் நட்பு என்னும் விதையை ஆழமாக தூவிவிட்டவள் ரஞ்சனி. வேலை முடித்து களைத்து வரும் பெண்கள் இருவரும் ஒன்றாக பேசி சிரித்து சமைத்து விளையாடி சில நேரங்களில் செல்லச் சண்டைகளிட்டு என்று அவர்களது நாட்கள் அழகாக நகர்ந்திருக்கின்றன.

இனி அவளும் தனியாக தனது நாட்களை நகர்த்த வேண்டும். தனது சுயநலத்தினால் தோழியை தனித்து விட்டுவிட்டோமே என்ற வேதனை எழாமல் இல்லை. ஆனால் இன்றைய நிலையில் அவளது லட்சியத்தை நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமே. அவன் மனதில் இடம் பிடிப்பதுதானே அவளது பெரும் லட்சியம்.

“எனக்கு உன்மேல எந்த வருத்தமும் இல்லடி. நீ சரியான முடிவுதான் எடுத்திருக்க. உன்னோட காதல்ல நீ இவ்வளவு ஸ்ட்ராங்கா இருக்கிறதை சமீப நாட்கள்லதான் நானே தெரிஞ்சுக்கிட்டேன். உன் காதலைப்பத்தி அந்த அமர் புரிஞ்சுக்கணும்னா நீ கிட்ட இருந்தாதான் உணர வைக்க முடியும். உன் காதலுக்காகவும் உன் எதிர்காலத்துக்காகவும்தானே இதெல்லாம்… தப்பில்லடி…”

அவள் மனதில் குற்ற உணர்ச்சி எழுந்துவிடாமல் தட்டிக் கொடுத்து தைரியப்படுத்தி இருந்தாள் ரஞ்சனி.

நேரம் மதியத்தை நெருங்கி இருந்தது. வயிற்றுக்குள் போர் முரசு அறிவித்த சத்தம். காலையிலிருந்து ஒரு போத்தல் தண்ணீர் மட்டும்தான் பருகி இருக்கிறாள். இனி சமைத்து சாப்பிட உடலின் அசதி இடம் கொடுக்கவில்லை. தெருமுனையை தாண்டி சிறிது தூரம் பயணித்தால் ஒரு சிறு மெஸ் இருந்ததை வீடு பார்க்க வந்திருந்தபோதே கவனித்திருந்தாள்.

அந்தப் பகுதி ஓரளவு ஹைடெக் மனிதர்கள் வசிக்கும் பகுதி. பெரும்பாலும் ஆழ்ந்த அமைதியே குடி கொண்டிருக்கும். தேவையற்ற சத்தங்கள் எழாது. வீடுகளும் அதன் அமைப்புகளும் அத்தனை நேர்த்தியாக இருக்கும்.

முக்கியச் சாலையில் இருந்து தெருவுக்கு பிரிந்து செல்லும் இடத்தில் ஒரு பெரிய டிபார்ட்மெண்டல் ஸ்டோர் உண்டு. அவளுக்கு தேவையான அளவு மளிகை பொருட்களை முதல் நாளே வாங்கி வைத்திருந்தாள். இப்போதைக்கு அங்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. தற்போது வயிற்றுக்கு ஈய வேண்டும்.

இழுத்து பெருமூச்சு விட்டவள் எதிர் வீட்டை பார்த்தாள். அந்த வீட்டைகூட அவளது கண்கள் நேசமாக வருடின. அவளவன் வாழும் இடம். அவனது கார் அங்கு இல்லை. எந்நேரமும் இசையோடு பயணிப்பவன். அவளுக்கு தெரிந்தவரை அவன் வீட்டிலேயே ஒரு குட்டி ஸ்டூடியோ வைத்திருக்கிறான். youtube சம்பந்தப்பட்ட அனைத்து ரெக்கார்டிங்குகளும் அங்குதான் நடைபெறுகின்றன. அவனுக்கு வலது கை இடது கை என்று அனைத்துமே இளங்கோதான்.

வீட்டின் முன்னால் கார் இல்லை என்பதால் நண்பர்கள் இருவரும் ஏதேனும் சொந்த வேலையாகவோ அல்லது இசை நிகழ்ச்சிகளுக்கோ சென்றிருக்கலாம் என்று எண்ணிக் கொண்டாள்.

“திலோ பேபி… நாளையில இருந்து தெம்பா உன்னுடைய ஒவ்வொரு கட்ட அடிகளையும் எடுத்து வைக்கணும். முதல்ல சாப்பிட்டு உடம்பை வலுப்படுத்து. நல்லா தூங்கி ரெஸ்ட் எடு. நாளையில இருந்து பார்க்கலாம்…’

தனக்குத்தானே கூறிக் கொண்டவள் தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு உணவு வாங்கி வருவதற்காக அந்த குறிப்பிட்ட உணவு விடுதிக்கு கிளம்பி இருந்தாள்.

உண்டு முடித்தபின் உடல் அசதியாக இருந்தாலும் உறக்கம் வரவில்லை. போனை பார்த்தபடியே பால்கனியில் அமர்ந்திருந்தாள்.

இரவு 9 மணி வாக்கில் எதிர் வீட்டிற்குள் கார் நுழைவது தெரிந்தது. ஜிவ்வென்று இவள் உடலுக்குள் ஏதோ கிளர்ந்தது.

டிரைவர் இருக்கையில் இருந்து இளங்கோ இறங்கிக் கொள்ள பக்கத்து இருக்கையில் இருந்து வெளியேறி இருந்தான் அவளவன். அவள் விழிகள் அவனைத்தான் காதல் பொங்க பார்த்துக் கொண்டிருந்தன.

பளீரென கண்களை பறிக்காத மெலிதான வீட்டின் முன் வெளிச்சம். அமரன் கதவை திறந்து கொண்டு வீட்டிற்குள் நுழைந்திருக்க காரை சுற்றி சுற்றி வந்து ஏதோ ஆராய்ந்து முடித்து தானும் உள்ளே நுழைந்திருந்தான் இளங்கோ. பூட்டிய கதவையே பார்த்தபடி நின்றிருந்தாள் திலோ.

நேர்த்தியான அழகான வீடு. முன் பகுதியில் இரண்டு கார்கள் நிறுத்தும் அளவிற்கு போர்டிகோ. கேட்டை தாண்டிய கார் ஓடுபாதையின் இருபுறமும் அழகாய் வெட்டி சீரமைக்கப்பட்ட புல்வெளிகள். வீட்டின் உள் அமைப்பு தெரியாது. ஆனால் பால்கனியின் அமைப்பில் அசந்து போனாள். இவள் பால்கனியில் இருந்து அந்த பால்கனியை தெளிவாக பார்க்கலாம்.

கேரளத்து மாடலில் நவீன ஓடுகள் அமைக்கப்பட்டு சரிந்த நிலையில் வீட்டின் பால்கனி அமைப்பு. அதுவும் பக்கவாட்டாக அமைக்கப்பட்ட பால்கனி. பார்க்கவே கூடுதல் அழகு. சுற்றிலும் இடுப்புவரை கூடிய கண்ணாடித் தடுப்புகள். பால்கனியின் பக்கவாட்டில் பர்கோலா அமைப்பில் அழகிற்காக குடுவைகளில் தொங்கவிடப்பட்டிருந்த செடிகள். ஓரளவு நீண்ட நெடிய பால்கனி. அதனை பால்கனி என்று சொல்வதைவிட ஒரு தனிக்கூடம் என்றுகூட கூறலாம். அங்கேயே உடற்பயிற்சி செய்வதற்கான அமைப்புகள் இருந்தன. மழை வெயில் தாக்காதவாறு உள்ளடங்கி அதே நேரம் பார்வைக்கு தெரியும்படியும் அமைக்கப்பட்டிருந்தன.

‘நம்மாள் ஏகபோக ரசனைவாதிதான் போல… எல்லாமே கண்ணை கட்டி இழுக்குது…’

சிறிது நேரத்தில் நண்பர்கள் இருவரும் பக்கவாட்டான பால்கனிக்குள் நுழைவது தெரிந்தது. மற்ற விளக்குகள் அணைக்கப்பட்டிருக்க பால்கனியில் ஸ்பாட் லைட் என்று சொல்லப்படும் கண்களை உறுத்தாத விளக்குகள் ஒளிர்ந்தன.

சாதாரண டி ஷர்ட் பெர்முடாஸ் அணிந்து எதிர் எதிர் நாற்காலிகளில் இருவரும் அமர்ந்து கொண்டனர். தனது வீட்டு பால்கனி விளக்கை சட்டென அணைத்திருந்தாள் திலோ.

இவள் ஆவென வாயை பிளந்து பார்ப்பதை அவர்கள் எளிதாக கவனித்து விடக்கூடும். சற்று உள்ளே இருக்கையை தள்ளிப் போட்டு இருட்டில் அமர்ந்து கொண்டாள். அவள் கண்கள் அமரனையே ஆழ்ந்த ஊடுருவிக் கொண்டிருந்தன.

பால்கனியின் திறந்தவெளிப் பகுதியில் காற்று அலைஅலையாக கேசத்தை தழுவிச் செல்ல தனது அடர்ந்து சிகையை ஒரு கையால் கோதியபடியே இதழ்கள் சிரிக்க இளங்கோவுடன் பேசிக் கொண்டிருந்தான் அமரன்.

அவனது இந்த பரிமாணம் அவளுக்கு முற்றிலும் புதிது. எந்நேரமும் ஒரு இசைக் கலைஞனாக மட்டும்தானே இதுவரை பார்த்திருக்கிறாள். இசையை கடந்த அவனது தனிப்பட்ட வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கற்பனையில் மட்டுமே வடிவமைத்திருக்கிறாள். இன்று அதன் ஒரு சிறு விள்ளலை பார்த்ததற்கே அவள் மனதில் புதிதாக ஓர் உணர்வு.

இளங்கோதான் நிறைய பேசுவதுபோல் தெரிந்தது. அவனிடமிருந்து இதழ் விரிந்த புன்னகை, தலையாட்டல், அவ்வப்போது ஏதேனும் வார்த்தையாடல்கள், அவ்வளவே… என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதெல்லாம் அவள் காதில் விழவில்லை. ஏதோ பேசிக் கொள்கிறார்கள்.

அவனது ஒவ்வொரு அசைவையும் கைப்பேசியில் களவாடி விடவேண்டும் என்ற ஆசை அவளுக்கு.

‘இன்னைக்குதான் முதல்நாள். ஆர்வக்கோளாறுல ஏதாவது பண்ணி வச்சிராதடி. கொஞ்சம் கொஞ்சமா மூவ் பண்ணு… அடங்கு… அடங்கு… ரிலாக்ஸ்…’

தனக்குத்தானே கூறிக் கொண்டாள்.

சிறிது நேரத்தில் இளங்கோ எழுந்து உள்ளே சென்றிருந்தான். ஆனால் அமரன் இன்னும் அதே நிலையில்தான் அமர்ந்திருந்தான். கால்கள் இரண்டையும் எதிரில் இருந்த டீபாயில் நீட்டி தலையை அண்ணாந்தபடி கண்மூடி இருந்தான்.

எத்தனை முயன்றும் பொறுக்க முடியாமல் தனது அலைபேசியில் ஜூம் செய்து படக்கென அதனை படம் பிடித்துக் கொண்டாள் திலோ.

சிறிது நேரம் அதே நிலையில் அமர்ந்திருந்தவன் பின் தானும் எழுந்து உள்ளே நுழையும் முன் ஒரு நொடி மீண்டும் இரண்டடிகள் பின்னே வைத்து தலை திருப்பி அவளது வீட்டை பார்த்தான்.

‘ஆத்தி…’

நெஞ்சில் கை வைத்தபடி இருக்கையில் குறுகி அமர்ந்து கொண்டாள் திலோத்தமா.

பால்கனி விளக்கு மட்டுமே அணைக்கப்பட்டு இருந்தது. வீட்டிற்குள் விளக்குகள் ஒளிர்ந்து கொண்டுதான் இருந்தன.

‘போட்டோ எடுத்தது தெரிஞ்சிருச்சோ..?’

சில நொடிகள் கண்கள் சுருக்கி அங்கேயே பார்த்துக் கொண்டிருந்தவன் உள்ளே நுழைந்து விளக்கினை அணைத்திருந்தான்.

நின்ற மூச்சு அப்பொழுதுதான் வெளியே வந்தது.

நிச்சயமாக அவளது உருவம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

‘ஆனாலும் எப்படி பார்த்தார்..? எதுக்கு பார்த்தார்..?’

யோசித்தபடி அமர்ந்திருந்தவளுக்கு கொட்டாவி வர “குட் நைட் அமர்…” மெல்லிய குரலில் எதிர் வீட்டை பார்த்து கூறிக் கொண்டவள் உள்ளே நுழைந்து கதவடைந்து அறைக்குச் சென்று படுக்கையில் விழுந்தாள்.

இப்பொழுதெல்லாம் இறக்கை இல்லாத பறவையாக மாறி பறந்து கொண்டு இருந்தாள் திலோத்தமா. அவள் இருக்கும் இடத்திலிருந்து வேலை செய்யும் நிறுவனத்திற்கு இரண்டு மணி நேரங்கள் பயணிக்க வேண்டும். 9 மணிக்கு அலுவலகத்தில் இருக்க வேண்டும். காலை 7 மணிக்கு கிளம்பியாக வேண்டும். தன்னவனுக்காகவே வலிய ஏற்றுக் கொண்ட வலி.

4:00 மணிக்கு எழுந்து இரு வேளைக்கும் தேவையான உணவினை தயார் செய்து 5 மணிக்கு பால்கனியில் ஆஜராகி விடுவாள். உடற்பயிற்சி செய்வதற்காக அல்ல… உடற்பயிற்சி செய்பவனை பார்ப்பதற்காக… அவள் ஒருத்திக்கு வேலை செய்து கிளம்ப 5 மணிக்குமேல் எழுந்தாலே போதுமானது. ஆனால் ஒரு மணி நேரம் மூச்சு முட்ட உடற்பயிற்சி செய்பவனை விழிகள் முட்ட ரசித்துப் பார்க்க வேண்டுமே. அதற்காகவே நான்கு மணிக்கு எழுந்து மற்ற வேலைகளை முடித்து ஆசுவாசமாக ஐந்து மணிக்கு பால்கனிக்கு வந்துவிடுவாள்.

எதிர் வீட்டு பால்கனியில் நண்பர்கள் இருவரும் வியர்க்க விறுவிறுக்க ஒவ்வொரு உடற்பயிற்சியாக செய்து கொண்டிருப்பர். வேலையில் முழு கவனமாக இருப்பவர்கள் எதிரில் தரையில் அமர்ந்து யோகாசனம் செய்வது போல் பாவ்லா காட்டிக் கொண்டு இருப்பவளை கவனித்துக் கொண்டதே இல்லை.

ஒரு அகலமான துண்டை விரித்துப் போட்டு சம்மணம் இட்டு அமர்ந்து ஆம்கட் பனியன், தொடையளவு ஷார்ட்ஸ், கேன்வாஸ் ஷூ அணிந்து விதவிதமான உடற்பயிற்சி எந்திரங்களைக் கொண்டு தன் உடலை செதுக்கி செதுக்கி வியர்வையில் மினுமினுக்க உழைத்துக் கொண்டிருப்பவனை கன்னத்தில் கை வைத்து பார்த்துக் கொண்டே இருப்பாள். இடையிடையே கைப்பேசியும் காட்சிகளை படமாக்குவதில் தனது வேலையை செய்து கொண்டிருக்கும்.

‘நம்ம ஆளுக்கு ஹெல்த் கான்ஷியஸ் ரொம்ப ஜாஸ்தி போல. ஒரு மணி நேரம் எப்படித்தானோ..? அதுல ரெண்டாவது கத்துக்கிட்டு நாமளும் கொஞ்சம் உடம்பை ஃபிட்டா வச்சுக்கணும். இப்போ ஓகேதான் கல்யாணத்துக்கு அப்புறம் கசமுசன்னு உடம்பு வந்துடக் கூடாதுல்ல இன்னும் கொஞ்சம் ஃபிட்டா வச்சுக்கோ. எனக்கும் எக்சர்சைஸ் பண்ண பிடிக்கும்னு தெரிஞ்சா அதுகூட அவருக்கு என்மேல பிரியம் வர்றதுக்கு இன்னொரு பாயிண்ட் எடுத்து கொடுக்குமே…’

மழுங்கிய மூளை இப்படியும்கூட யோசிக்கும்.

ஐந்து நாட்களாக இதுதான் அவளது வாடிக்கையான வேடிக்கை.

அமரன் அங்கிருந்து கிளம்பிச் சென்ற பின்புதான் அடுத்து தனது வேலையை பார்க்க எழுந்து ஓடுவாள். அதன்பின் வேகமாக தனது வேலைகளை முடித்து 7 மணிக்கெல்லாம் தனது இரு சக்கர வாகனத்தில் பயணித்து ஸ்டாண்டில் நிறுத்தி இரண்டு பேருந்துகள் மாறி அவளது நிறுவனத்திற்கு செல்ல வேண்டும். இதுவரை அனுபவிக்காத புது அனுபவம்.

‘என் அமரனுக்காக…’

மனம் இதையேதான் அடிக்கடி சொல்லி அவளை அமைதிப்படுத்தும்.

அன்றும் அதே போல்தான் பால்கனியில் சம்மணமிட்டு அமர்ந்து விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தவளை முன்னால் நகர்ந்து வந்து இடுப்பில் கை வைத்தபடி தலைசாய்த்து ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் இளங்கோ.

(தொடரும்)
 
Top Bottom