• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நெஞ்சில் நிறைந்தவள் - 12

Vishakini

Moderator
Staff member
அத்தியாயம் 12


நந்தினி பெற்றோரோடு முன்னால் சென்று இருக்க அவர்களின் பின்னாலயே அதிவீரனும் ஷாலினியும் சென்றார்கள்.

" என்ன நடந்தது நந்தினி, ஏன் அந்த நேரத்தில் நீ வெளிய கிளம்பி போன அதுவும் ஒரு பையன் கூட, அப்படி போகும் போது கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா? இன்னைக்கு காலம் கிடக்குற கிடப்புல நீ செஞ்சது சரியா? " மெல்லிய குரலில் வள்ளியம்மை கேட்க,

நடந்த விஷயங்களை ஒன்று விடாமல் அப்படியே சொன்னாள் நந்தினி, அத்தோடு நில்லாமல் அதிவீரன் தனது காதலன் என்பதையும் சேர்த்து சொல்ல வள்ளியம்மையின் தலையில் இடி இறங்கியது போன்று இருந்தது.

" என்ன டி சொல்லுற இது மட்டும் வெளிய போன உங்க அப்பனுக்கு தெரிஞ்சது என்ன நடக்கும் தெரியுமா? " இவர்களோடு வீட்டிற்கு வந்த கந்தசாமியை உறவினர் ஒருவர் அழைக்க அப்படியே வெளியில் சென்று விட்டார், அவர் வரும் முன் மகளிடம் என்ன நடந்தது என்பதை விசாரித்து அறிந்து கொள்ளும் முனைப்பில் வள்ளியம்மை மகளிடம் பேச, அவள் கூறிய விஷயம் வள்ளியம்மையின் வயிற்றில் புளியை கரைத்து இருந்தது.

" உண்மையை சொல்லுறேன் மா.
அப்புறம் அப்பா வந்தா என்ன நடக்கும்ன்னு தெரியல ம்மா ஆனா என்ன நடந்தாலும் அத தைரியமா எதிர்கொள்ளுற முடிவுல இருக்கேன். ஏன்னா,
பொம்பள பிள்ளை ஒரு பையனோட வெளியில போய்ட்டு வந்துட்டேன் அடுத்து பெத்தவங்க என்ன செய்வீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும் ம்மா. " என்று சொல்லி இடைவெளி விட்டவள் ஒரு விரக்தி புன்னகையை விடுத்து,

" ஆசை இருக்கோ இல்லையோ, புடிக்குதோ புடிக்கலையோ எத பத்தியும் யோசிக்காம அவளை எவனோ ஒருத்தன் கையில பிடிச்சு குடுத்துரனும் நம்ம கடமையை முடிச்சிரனும்ன்னு மட்டுமே தான குறியா இருப்பீங்க? " நந்தினியின் பேச்சுக்கு வள்ளியம்மையிடம் பதில் இல்லை.
ஏனென்றால் அவரது யூகமும் அதுவாகவே தான் இருந்தது.

தாயும் மகளும் பேசி கொண்டிருந்த தருணத்தில் வீட்டின் உள்ளே வந்தனர் அதிவீரனும், ஷாலினியும், அவர்களை பார்க்கவும் இன்னும் திக்கென்று ஆனது வள்ளியம்மைக்கு, பாவம் அவரும் எத்தனையை சமாளிப்பார்,

வீட்டிற்கு வந்த இருவரையும் வாங்க என்று அழைக்க முடியாமலும்,
ஏன் வந்தீங்க என்று கேட்கமுடியாமலும் திணறி நிற்க்க, அந்த திணறலை அதிர்ச்சியாக மாற்றியது கந்தசாமியின் வருகை.

வீட்டிற்குள் வரும் கந்தசாமியை பார்த்து வணக்கம் வைத்தான் அதி, அவனது வணக்கம் கந்தசாமிக்கு எரிச்சலை கொடுத்தது.

" டேய் நீ ஏன் டா என் வீட்டுக்கு வந்த? ஏன் டி அவன் தான் வந்தான் உனக்கு எங்க டி போச்சு அறிவு வீட்டுக்குள்ள யாரை கேட்டு டி விட்ட, வெளிய போன்னு சொல்ல வேண்டியது தான " இன்னும் கொந்தளிப்பு அடங்காமல் பேசினார்.

" ஏங்க எப்பவுமே இப்படி கொதிக்க தான் செய்வீங்களா? கொஞ்சம் கூட நிதானமா இருக்க மாட்டீங்களா? இப்போ வரைக்கும் என்ன நடந்தது ஏது நடந்ததுன்னு யோசிக்கவும் இல்ல, கேட்கவும் இல்ல என்ன மனுசங்க நீங்க? " அறிந்தோ அறியாமலோ வார்த்தையை விட்டு விட்டான் அதி.

" டேய் என்ன வார்த்தை தடிக்குது ஒழுங்கா வெளிய போயிரு, பெரிய இவன் மாதிரி பேசிட்டு இருந்த அப்புறம் குடலை உருவி போடுவேன் பாத்துக்கோ. என்ன டா ரொம்ப சத்தம் கொடுக்குற, உங்க வயசு வேகத்துக்கும் உடல் தேவைக்கும் பழகிட்டு அதுக்கு காதல்ன்னு நீங்களா பேர் வச்சுட்டு, காலம் அமையுற வரைக்கும் கூட சுத்துறது அந்த காலம் அமையவும் உடல் தேவையை தீர்த்துட்டு போயிற வேண்டியது " என்று கந்தசாமி பேசிக்கொண்டே போக இடை நிறுத்தினான் அதிவீரன்.

" கொஞ்சம் நிறுத்துங்க. பெரியவங்க ஆத்திரத்தில பேசுறீங்கன்னு நினைச்சா வரைமுறை இல்லாம பேசிட்டு இருக்கீங்க. உங்கள பேச விட்டு கேட்டுட்டு இருக்கோம்னா அது உங்களுக்கு கொடுக்குற மரியாதையே தவிர்த்து நீங்க பேசுறது எல்லாம் சரின்னு அர்த்தம் ஆகிடாது. " அதிவீரன் குரலும் சற்று உயர்ந்து இருந்தது. கந்தசாமி அலட்சிய பார்வை பார்த்தார்.

" என்ன சொன்னீங்க வயசு வேகமா, எங்க வயச கடந்து தான நீங்க வந்தீங்க அப்போ நீங்க வயசு வேகத்தில, உடல் தேவைக்காக என்ன எல்லாம் செஞ்சீங்க? " சற்று சூடாகவே கேட்க, கந்தசாமியும் சூடாகினார்.

" ஏய்..... " அவர் குரல் வெறியாக வர

" உங்கள கேட்ட உடனே இவ்ளோ கோபம் வருதே அதே போல தான எங்களுக்கும் வரும். " அதியின் பேச்சு கந்தசாமியை அடக்கியது.

" வயசு வேகம் வயசு வேகம்ன்னு எவ்வளவு புனிதமான விஷயத்தை கொச்சையா ஆக்குறீங்கன்னு புரிஞ்சு தான் பேசுறீங்களா? நீங்க பேசுன விஷயம் எத்தனை கொச்சையான அர்த்தம் உள்ளதுன்னு உங்களுக்கு வெளிப்படையா சொல்லி புரிய வைக்கவா? " அதி வரிந்து கட்டிக்கொண்டு நிற்க்க கந்தசாமி திகைத்து போனார்.

" காதல் அழகியல் நிறைஞ்சதுங்க, அதுல வெளிப்படுற ஒவ்வொரு உணர்வுமே சிறப்பானது, மனசுக்கு நெருக்கமானது " என்று புயலுக்கு பின் ஏற்படும் அமைதியை போல நிதானமாக சொல்ல கந்தசாமி அமைதியாக அவனை பார்த்து கொண்டே சொன்னார்,

" பெருசா பேச வந்துட்டான் என்னமோ காதலை பத்தி எல்லாம் தெரிஞ்சவன் மாதிரி, சும்மா எதுக்கு எடுத்தாலும் காதல் காதல்ன்னு சொல்லிட்டு "

" ஹும் காதலை பத்தி முழுசா எனக்கு தெரியுமான்னு தெரியாது, ஆனா நா பொறந்ததே என் அம்மா அப்பாவோட முழுமையான காதல்ல தான்னு தெரியும். எதுக்கு எடுத்தாலும் காதல் காதல்ன்னு சொல்லுறேனான்னும் தெரியாது ஆனா எல்லாத்துலயும் காதல் இருக்குன்னு என் அம்மா அப்பாவை பார்த்து வளர்ந்ததால தெரியும் " அசராமல் பதில் கொடுத்தான் அதிவீரன்.

" இவன் பேச ஒன்னும் இல்லன்னு இவன் அம்மா அப்பாவை இழுத்துட்டு வந்துட்டான் ஏதோ காதலோட முகவரி அவங்க தாங்குற மாதிரி. ஹும்ம்ம்... " கந்தசாமியிடம் ஏளனம்.

" நீங்க சொன்னாலும் சொல்லலைனாலும் காதலோட முகவரி என் அம்மா அப்பா தான் " சிரித்து கொண்டே சொன்னான் அதி.

" சும்மா பேசணும்ன்னு பேசாத டா, இந்த காதல் வயசு வேகத்தில தெரியுற ஒரு மாயை அவ்ளோ தான். " தீர்க்கமாக வந்த கந்தசாமியின் வாதத்தை திடமாக மறுத்த அதி காதல் ஆத்மார்த்தமானது என்பதை நிரூபிக்க தனது அன்னை தந்தையின் காதல் வாழ்கை பற்றி கூற ஆரம்பித்தான்.


நெஞ்சில் நிறைவாள்......
 
Top Bottom