• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

பூவிழி வாசம் - 13

Vishakini

Moderator
Staff member
பாகம் 13.
நள்ளிரவு தாண்டியும் மொட்டை மாடியில் நடந்துகொண்டிருந்தான் பொற்செழியன்.
அவனுடைய மனதில் பூவிழிக்கான இடம் பெரியது, அதில் சின்னச்சின்ன அற்பத்தனங்கள் எதுவும் கிடையாது, அது உண்மையான காதலுக்கான அவனுடைய ஆராதரிப்பு...அவர்களின் தெய்வீக பந்தத்திற்கு அவன் கொடுக்கிற மரியாதை.
இரண்டு ஜோடி கால் சலங்கையின் ஒலி ஒரு சங்கீதமாய் இசைக்க, படிகளை ஒவ்வொன்றாய் கடந்து பூவிழியும் வண்ணமதியும் வந்து சேர்ந்தனர்.
"அண்ணா.....என்ன இன்னும் படுக்கபோகவில்லையா, பூவிழியம்மா சொல்லிக்கொண்டுதான் வந்தவா....அதுதான் உங்களுக்கும் சேர்த்து இஞ்சி தேநீர் கொண்டுவந்தம்" என்றாள்.
"என்...என்ன சொன்னா..பூவிழி அம்மா?" அவனுடைய வார்த்தையில் சிறிது அழுத்தம் தொனித்தது.
"நீங்கள் அறைக்குப் போன மாதிரி தெரியேல்ல, முழிச்சிருந்தாலும் இருப்பியள்,அதனால பாத்து இஞ்சி தேநீர் குடுத்திட்டு வருவம் எண்டு சொன்னா."
"இந்த நேரத்தில ஏன்???"
"இதோ... இவா தான் காரணம், ஆள் சாப்பிடவே இல்லை, அதனாலதான்,....." என்றாள் செல்லக்கோபத்துடன்.
"சாப்பிடுங்கோ எண்டு சொல்லிப்போட்டு நான் படுத்திட்டன், திடீரெண்டு முழிச்சு பாத்தா, ஆள், அறை வாசலில உலாத்திக்கொண்டு இருக்கிறா. என்ன, எண்டு கேட்டா தலை வலியாம்.....சாப்பிட்டியளோ எண்டு கேட்டதுக்கு சாப்பாடு வேண்டாம், ரீ மட்டும் போதும் எண்டு, சொன்னாச்சு, பிறகென்ன, ரெண்டுபேரும் கிச்சினில ரீ போட்டம், காத்தாட மொட்டைமாடிக்கு போகலாம் எண்டு இங்க கூட்டிவந்தாச்சு, அப்பிடியே உங்களுக்கும் ரீயோட ......"
நிமிர்ந்து பூவிழியைப் பார்த்தான் பொற்செழியன், உயிர் உருகிக் கரைந்தது அவனுக்கு, 'சே...உன்னோடு வாழ விடாமல் விதி சதி செய்துவிட்டதேடி......'அழுது புலம்பியது மனம்.
'அவனை அவனுக்காகவே காதலித்தவள், அவனுடைய சின்ன சின்ன சந்தோசங்களில் தன்னை முழுதுமாய் புதைத்துக் கொண்டவள், அந்த சின்ன வயதில் கூட பெரிய மனுஷி மாதிரி அவனுக்காக ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்தவள், இன்றுவரை அவனை மனதிலே சுமந்துகொண்டு வாழ்பவள்......
'அவளுக்கு நான் என்ன செய்யப்போகிறேன்???? '
உள்ளமோ ஊமையாய் அழுதது. விழிகளில் கூட நீர்த்துளிகள் கோர்த்து விட்டிருந்தது.
தங்கையிடம் இருந்து கப்பை வாங்கிக்கொண்டான்.
வானத்தில் தெரிந்த நட்சத்திரங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பூவிழியை தட்டி உலுக்கிய வண்ணமதி, "என்ன பேசாமல் இருக்கிறியள், ஏதாவது கதையுங்களன்" என்றவள்,
"அண்ணா, இன்னும் ரெண்டு மூண்டு நாளில போடுவார், அது மட்டும்தான் இப்பிடி ஒண்டா இருந்து கதைக்கப்போறம்......" என்றாள்.
'உன் அண்ணாவிடம் நான் கதைத்தவைகள் ஏராளம், கதைக்கத் துடிப்பவைகளும் ஏராளம், ஆனால்...எதுவுமே கதைக்கமுடியாது என் நாவுகள் கட்டப்பட்டது போல கிடக்கிறதே, அவர் மனம் கலங்கிவிடக்கூடாதென்று வார்த்தைகள் ஒளிந்து கொண்டிருக்கிறதே.....'மனதோடு சொல்லிக்கொண்டவள், மெல்லிய முறுவலோடு, "என்ன கதைக்க?" என்றாள்.
"நீங்கள் , படிச்சது, வளந்தது, இப்பிடி எத்தினையோ சொல்லலாமே....." எனவும்
"அதுதான் உன் அண்ணாவுக்கு தெரியுமே....." என்றவள்,
"தெரியுமா?...என்ன சொல்றீங்க.?...." ஆச்சரியமாய் வண்ணமதி கேட்க,
தவறுதலாய் வாயை விட்டுவிட்டதை உணர்ந்த பூவிழி, "அதில்லை...அது..அன்று அப்பாவோடு கதைத்தபோது சொன்னதை அப்பா சொன்னதாகச் சொன்னார், வேறொன்றும் இல்லை" என்றாள்.
அவளது தடுமாற்றம்....பொற்செழியனுக்குள் வலியைத்தான் விதைத்தது, 'இவளைத் தான் காதலித்தேன் என்பதை அறிந்தால் இந்த வீட்டில், இவர்கள் எல்லோரும் சந்தோஷப்படுவார்களா, இவளை இழந்துவிட்டோமே என்று வருத்தப்படுவார்களா?'
மனம் கண்டபடி எண்ணமிட்டது அவனுக்கு,
'நீங்கள் கதையுங்கோ வாறன்,' என்றுவிட்டு தனது போனில் எதையோ நோண்டிக்கொண்டு சற்றுத் தள்ளிச்சென்று அமர்ந்துகொண்டாள் வண்ணமதி.
~சுரபி..ஏன் அப்பாட்டை அப்பிடிச் சொன்னனி, உனக்கெண்டு ஒரு வாழ்க்கை வேணும்தானே, காலம் பூராகவும் தனியாகவே வாழ்றது சாத்தியமா, நீ இப்படி தன-pயனாக நிக்க எனக்கு மனம் எப்பிடி வலிக்கிறதெண்டு தெரியுமே, அப்பாட்டை ஓமெண்டு சொல்லியிருக்கலாமே,| என்றான்.
அவனையே பார்த்தபடி இருந்த பூவிழி, சட்டென்று, பேச்சை மாற்ற நினைத்து,
"அங்க அமெரிக்காவில உங்களுக்கு வேலை எல்லாம் எப்படி?" என்றாள்.
"பரவாயில்ல, பக்கத்தில தான், கொஸ்பிற்றல், சமீபத்திலதான் அதை சொந்தமா வாங்கியிருக்கிறன்," என்றான்.
"சொந்தமாவா.....???" அவள் கேட்க,
"ம்...அப்பாட்ட சொன்னன், வாங்கு என்று சொல்லிட்டார், வாங்கிட்டன்" என்றவன்,
"ரொம்ப பணச்செலவாகியிருக்குமே....." என்ற அவளது கேள்விக்கு,
"கொஞ்சம் கடன்தான்" என்றான்.
"ஓ....உங்கட மனைவி நல்ல உதவியா இருப்பா போல, இல்லையெண்டா இப்பிடி பெரிய கொஸ்பிற்றல் வாங்கிற அளவுக்கு வராது தானே, அப்பிடியெண்டா ...இனிமே அங்கயேதானே இருக்கவேணும்?" என்றாள்.
"கேக்கிறா பார், அத்தனைக்கும் தானே காரணமா இருந்திட்டு..தெரியாத மாதிரி...." மனதிற்குள் அவளைச் செல்லமாய் திட்டிக்கொண்டான் பொற்செழியன். அவனது உதடுகளில் புன்னகை
"கொஸ்பிற்றலுக்கு என்ன பெயர் சொன்னீங்க," எனக்கேட்டாள்.
"நான் பெயர் என்னன்னு சொல்லவே இல்லையே,"
உதட்டோர புன்னகையோடு நாக்கை வளைத்து, கன்னம் குழியச் சிரித்தபடி, அவளைப் பார்த்தவன், "சுரபி மருத்துவ வளாகம்......"என்றான்.
அடிபட்ட வலியோடு நிமிர்ந்தாள் பூவழி.
"சு...சு...ரபி...யா?"
~ம்....எனக்கு அந்தப்பெயர் ரொம்ப பிடிக்கும், அதுதான் அதையே வைச்சிட்டன், தவிர அந்தப் பெயருக்கு ஒரு சக்தி இருக்கு, அன்பால அரவணைக்கிற சக்தி..அதே மாதிரி என்ரை வைத்தியசாலையும் இருக்கட்டும் எண்டுதான்...|என்றான்.
"இல்..லை....அதை எல்லாம் நீங்கள் மறக்கிறதுதான் நல்லது, போன விசயங்களை விட்டிட்டு நடக்கப்போறதை யோசியுங்கோ, எனக்கும் உங்களுக்குமானது கடந்த காலம், கடந்தகாலம் எப்பவுமே நிகழ்காலத்தைப் பாதிக்ககூடாது, நீங்கள் படிச்சவர்,.. உங்களுக்கு விளங்காதது இல்லை...|
~எவ்வளவு படிச்சாலும், எவ்வளவு வசதியாக வாழ்ந்தாலும் மனம் அன்பைத் தேடுறது இயல்புதானே, நினைவுகள், மன ஆழத்திலை புதைஞ்சு போனாலும் எப்படியோ ஒரு தருணத்திலை அது வெளியிலை வரத்தான் செய்யும், அதுக்காக, நான் இப்ப உங்களிட்ட பழையவைகளைப் பேசப்போறதோ, அதை நினைக்கப்போறதோ இல்லை...ஆனால் சுரபி என்ற பெயர் என்னாலை மறக்கமுடியாத ஒன்று...அது என் உணர்வுகளோடை கலந்து உறைஞ்சு போன பெயர்...|என்றவனை விசித்திரமாகப் பார்த்தாள் பூவிழி.
பேச்சை மாற்ற நினைத்தவளாய், ~ரெண்டுபேரும் வேலை...வேலை எண்டு ஓடிக்கொண்டிருக்கிறியள் போல, இனியாவது ஒரு குழந்தை வேணுமெண்டு யோசியுங்கோ| என்றாள்.
"என்னது....குழந்தையா?" அதிர்ச்சியாய் அவன் கேட்க,
"ம்...." கண்ணில் வலியும், நெஞ்சில் தவிப்புமாய் சொன்னவளை உற்றுப் பார்த்தான்,
"அதற்கெல்லாம் இப்ப வழி இல்லை, காலம் போகட்டும், பார்க்கலாம்" என்றான்.
அவளை நேசித்த காலத்தில் அவனுடைய கற்பனையில் அப்படியான சிந்தனைகள் வந்ததும், அதைப்பற்றி அவளிடமே சொல்லாமல் அவன் மறைத்ததும் உண்மைதான். ஆனால் இப்போது?
"ஏன்......?" விழிகளில் சின்ன மகிழ்வோடு அவள் கேட்டபோதுதான், முதல் முதலாய் அவனுக்குள் ஒரு யோசனை உதித்தது.
'தன்னைக் கல்யாணம் செய்யச்சொல்லி அவளைக் கேட்டால் என்ன' அப்படி ஒரு யோசனை தோன்றியதும், மனம் முழுதும் பூமழை பொழிவது போல இருந்தது அவனுக்கு, அவள் மட்டுமா அவனையே நினைத்துக்கொண்டு வாழ்கிறாள், அவனும்தானே,
சற்று நேரத்திற்கு முன்னர் இருந்த வலி காணாமல் போயிருந்தது அவனிடம்.
'அவனுக்கென்னவோ அவள் தனக்கென அனுப்பப்பட்டவள் என்ற எண்ணமே மேலோங்கியது. அப்படியென்றால் அவள், அவனுடன்தானே இருக்கவேண்டும். ஏன் அதற்கு அவன் முயற்சிக்கக்கூடாது, அதே காதல் அவளுக்குள்ளும் இருக்கிறது, அவனை நினைத்தபடியே வாழவும் துணிந்துவிட்டவள் அவள், அவளைக் கேட்பதில் என்ன தவறு?'
'இல்லை...என்ன இருந்தாலும் நான் திருமணமானவன், அவளுக்கு அப்படி ஒரு எண்ணம் வரவே வராது, நிச்சயமாக அவனைத் தவறாகவே எண்ணிவிடுவாள், இந்த உலகத்தில் அவனை யார் தவறாக நினைத்தாலும் அவனுக்கு கவலை இல்லை,....ஆனால்....அவனுடைய சுரபி தவறாக நினைத்தால் அவனால் தாங்கமுடியாது, இல்லை...இப்படியே ஒருவரை ஒருவர் பார்த்தால் கூட போதும்.....அவள் கோபப்பட்டு இந்த வீட்டை விட்டோ, அல்லது அவனுடைய உறவுகளை விட்டோ விலகிவிடக்கூடாது...|
இரண்டு விதமாய் அடம்பிடித்த மனதை சமாதானப்படுத்தும் வழிதெரியாது தவித்தவனின் தவிப்பு புரியாதவளாய்,
"குழந்தை என்றது கடவுள் கொடுக்கிற வரம், அதை சரியான வயசுக்குள்ள பெத்துக்கொள்றது தான் நல்லது, சம்பாத்தியத்தை எப்ப வேணுமெண்டாலும் பாத்துக்கொள்ளலாம்," என்றாள்.
~ம்ம்....|மௌனமாய் இருந்தவனின் முகத்தில் ஆயிரம் யோசனைகள் ஓடியது.
அப்போது அருகே வந்த வண்ணமதி, ~அண்ணா, நீங்கள் நிக்கேக்கை எவ்வளவு சந்தோசமாக இருந்தது, நீங்கள் போறதை நினைக்க...கவலையா இருக்கு| என்றாள்.
என்னம்மா செய்யிறது, நீங்கள் எல்லாரும் சந்தோசமா, வசதியா வாழவேணும் எண்டுதான் நான் வெளிநாடு போனன், பிறகு அப்பிடியே அங்க படிச்சு, தொழில் தொடங்கி,...காலம் அங்கயே ஒரு இடத்தை தந்திட்டுது, சட்டென்று அதையெல்லாம் உதறிக்கொண்டு இஞ்ச வரேலாதடா,| என்ற அண்ணனை வேதனையோடு பார்த்தாள்.
அவனுடைய நிலைமை பூவிழிக்கும் புரிந்தது.
~அப்ப நான் வந்த பிறகு மகிழ்ச்சியாக இருக்கிறதா சொன்னதெல்லாம் பொய்தான்...போல...என்ன வண்ணமதி| பூவிழி கேட்க,
~சீச்சீ..அப்பிடி எல்லாம் இல்லை பூவிழியம்மா..அண்ணா வந்த பிறகு சந்தோசம் வழமையை விட கொஞ்சம் கூடுதல் தானே...நீங்களே சொல்லுங்கோ...| வண்ணமதி இவளிடமே கேட்க,
சம்மதமாகத் தலையை ஆட்டிய பூவிழி, ~அதெல்லாம் சரியாகிவிடும்...| என்றாள் வண்ணமதியை தன்னருகில் அணைத்தபடி.
"அண்ணா....எனக்கு நித்திரை வருது, பூவிழியம்மா போகலாமா?" வண்ணமதி கேட்க, ~அட...அதற்குள் போகப்போகிறாளா? என்ன சொல்லி அவளை நிறுத்தலாம|; என யோசித்தவனுக்கு எதுவும் தோன்றவில்லை. அவளும் போக ஆயத்தமாகி தலையை ஆட்டியதும் தானும் தலையை ஆட்டிவைத்தான்.
 
Top Bottom